Showing posts with label சாப்பாடு. Show all posts
Showing posts with label சாப்பாடு. Show all posts

Monday, December 8, 2014

சாப்பாட்டு ராமன் - நாயர் மெஸ் (சேப்பாக்கம்) & சோழிங்கநல்லூர் பானி பூரி

நாயர் மெஸ் (சேப்பாக்கம்)

உயிரின்றி இருபத்து ஏழு நாட்கள் செயல்படமால் இருந்த எனது கணினியை, உயிர்பிக்கும் பொருட்டு சில சாதனங்கள் வாங்க என் நண்பனுடன் ரிட்சி ஸ்ட்ரீட் சென்றிருந்தேன். அன்று தான் என் நண்பன், பல மாதங்கள் செயல்படாமல் இருந்த ராமனை மீண்டும் அவதரிக்கச் செய்தான். 'இங்க நாயர் மெஸ்னு ஒரு கடை இருக்காம், அங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அங்க போய் சாப்பிடுவோமா?' என்று கேட்டவுடன், பல நாள் சுவை மறந்திருந்த நாக்கு துடிக்க, உடனே ராமனும் வழிமொழிந்தான். 

வாலாஜா சாலை வரை சென்று, சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கிற்கு முன், வலது புறம் இருந்த முஹம்மத் அப்துல்லா சாலையில் திரும்பினோம். என் நண்பன் அந்தக் கடைக்கு சென்றதும் கிடையாது, அது எங்கிருக்கும் என்றும் தெரியாது. அவனுக்கு தெரிந்த வாய் வழி ஞானம் அந்தச் சாலை வரை தான். அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் வழி கேட்க, ஒரு கார் சென்றால் வேறு வாகனங்கள் செல்ல கூட வழியில்லாத ஒரு சின்ன முட்டுச் சந்தை எங்களுக்கு காட்டினர். சில அடிகள் அந்த சந்தினுள் சென்றவுடனே எங்கள் இரு சக்கர வண்டியை, ஏற்கனவே  ஓரமாக நிறுத்தப் பட்டிருந்த வண்டிகளுடன் நிறுத்திவிட்டு மெல்ல நடந்தோம்.

அந்த சந்தின் இறுதிக்கு வந்த போது, ஒரு சிறிய உணவகம் தென்பட்டடது,  அங்கு எந்த ஒரு விளம்பரப் பலகையும் இல்லாததால் சற்று தயங்கி, எதிரில் வந்த ஒருவரிடம் விசாரிக்க, அவர் உடனே  'இதுதாங்க நாயர் மெஸ்' என்று சிரித்தார். கீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி இருக்க, மேலே குளிர் சாதன அறைக்கு சென்றோம். உள்ளே நுழைந்தவுடன் பல அரசு அலுவலகத்தில் இருப்பது  போன்ற உணர்வு தானாகவே வந்து விட்டது. காரணம், இஸ்த்ரி போட்டு இன் செய்யப்பட்ட சட்டைகளுடன், நரைக்க தொடங்கியும், நரைத்து விட்ட முடிகளுடனும் அங்கு நிறைந்திருந்த அதிகாரிகள். 'வழக்கமாக அரசு அதிகாரிகளை மதிய உணவு வேளைகளில் அங்கு காண முடியுமாம். பல பெரிய தலைகளும் இங்குதான் உணவு வாங்குவார்கள்' என்ற தனது செவி வழி ஞானத்தை என் நண்பன் என்னுடன் பகிர்ந்து கொண்டான்.

Image courtesy - Google

மேசைப் பணியாளர், தலை வாழை இலையை மேசை மேல் விரித்தவுடனே எனக்கு அந்த இடத்தின் மீது ஒரு மதிப்பு தோன்றியது. பொதுவாக சென்னையில் வாழை இலையில் உணவு பரிமாறும் இடங்கள் மிகக் குறைவு. மிகப் பெரிய சைவ உணவகங்கள் கூட தட்டில் இலையை வெட்டி வைத்து தான் உணவு பரிமாறுகின்றனர்.  என் நண்பன் தனக்கு ஒரு அசைவ சாப்பாடு சொல்ல, நான் எனக்கு ஒரு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தேன். மெனு கார்ட் என்று ஒன்று அங்கு இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Image courtesy - Google

ஒரு பொரியல், கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், மோர் என்று வழக்கமான வகைகளுடன், மீன் குழம்பு அல்லது கோழி குழம்பு அல்லது மட்டன் குழம்பு தேர்வு செய்து கொள்ளலாம். இவைகளுடன் அளவில்லா சாப்பாடு. என் நண்பன் தனக்கு ஒரு வஞ்சரம் மீன் ப்ரை ஆர்டர் செய்திருந்தான். வீட்டு சாப்பாடு போல் அனைத்தும் சுவையாக இருந்தது.

வஞ்சர மீனுடன் சாப்பாடு
நாயர் மெஸ் என்பதால் கேரளா வகை பிரியாணி வந்து விடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் காத்திருந்த பொழுது, தமிழக மட்டன் பிரியாணியாக உள்ளே ஒரு முட்டையுடன் வந்தது. மட்டன் பிரியாணிக்கும் கோழி முட்டைக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியாதபோதும், பல கடைகளில் காரணம் தெரியாத இந்த வழக்கம் தொத்திக்கொண்டு விட்டது. பிரியாணி சுவையும் நன்றாகவே இருந்தது. இங்கு என்னை ஆச்சரியப் படுத்திய விசயம் அந்த பிரியாணியுடன் வந்த ஒரு லெக் பீஸ் தந்தூரி சிக்கன். அங்கு இருந்த கூட்டத்தில் சற்றும் ஒட்டாத இரு வாலிபர்களாக, தந்தூரி சிக்கனைக் கண்டு நான் 'ழே' என்று முழிக்க, 'அது பிரியாணியுடன் வரும் காம்போ' என்று அந்த மேசைப் பணியாளர் விளக்கினர்.        

சிக்கன் தந்தூரியுடன் பிரியாணி 

சுவையான தரமான உணவை உண்ட ஒரு திருப்தி இருந்தபொழுதும், அந்த கம்போ தந்தூரியால் பில் எவ்வளவு வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.  பில் வந்தவுடன் எனக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மட்டன் பிரியாணியின் காம்போ விலை வெறும் நூற்று அறுபது ரூபாய். பொதுவாக எல்லா உணவகங்களிலும் இருக்கும் மட்டன் பிரியாணியின் விலை தான் என்பதால் எனக்கு அந்த தந்தூரி சிக்கென் இலவசமாக வந்தது போல் தோன்றியது. நண்பன் உண்ட அசைவ சாப்பாடு எழுபது ரூபாய். வஞ்சரம் ப்ரை நூற்று என்பது ரூபாய். 

பில் செலுத்தியபோழுது அனைவருக்கும் போல் எங்களுக்கும் ஒரு மலை வாழைப்பழமும் ஒரு பீடாவும் இலவசமாக வழங்கினர். சாப்பாடு மற்றும் பிரியாணி பிரியர்களுக்கு சுவையுடன் கூடிய தரமான மலிவு விலை உணவு இங்கு உண்டு.       

சோழிங்கநல்லூர் பானி பூரி 
பொதுவாக தமிழகத்தில் கிடைக்கும் பானி பூரியில் அசல் வடக்கு சுவை இருப்பது இல்லை என்று பல நாள் குறை பட்டிருந்த ராமனுக்கு, அந்தக் குறையை தீர்க்கும் விதத்தில் பானி பூரி கிடைக்கின்றது என்றால், ராமன் செல்ல மறுப்பானா? 

சோழிங்கநல்லூர் சந்திப்பின் அருகில் கரூர் வைஸ்யா வங்கி செல்லும் சர்விஸ் சாலையில் ஒரு பானி பூரி கூடையுடன் இன் செய்த சட்டையுடன் ஒரு ஆபிசர் போல கம்பிரமாக காட்சி தந்தார் அந்த வடக்கு நண்பர்.  கடை தொடக்க நேரத்திலேயே நாங்கள் சென்றதால், அவர் தயார் செய்துகொண்டிருந்த பொழுது  ஹிந்தியில் பேசியதை என் நண்பர் மொழி பெயர்த்தது: 

சென்னையில் அசல் பானி பூரி சுவையுடன் தினமும் மாலை  நான்கு மணி முதல் இரவு  பத்து மணி வரை வியாபாரம் செய்துவருகிறேன்.  சாலையின் மறுப்பக்கம் accenture கம்பெனி வாசலில் இவருக்கும் அந்தக் கடையும் என்னுடையது தான்.


ஒரே இடத்தில இரண்டு கடைகள் இருக்கும் பொதும், இவர் கடையில் பானி பூரி வாங்க மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று பெருமையுடன் கூறினார்.   அவரது அந்த பாணி, மிகவும் காரமாக அசல் வடக்கு சுவையுடன் இருப்பது தான் அவரது கைவண்ணம். பத்து ரூபாய்க்கு ஆறு பூரிகள். ராமனால் ஒரு ரவுண்டுடன் நிறுத்த முடியவில்லை. மற்றுமொரு ரவுண்டு சென்றான்.

சுக்கா பூரி தயார் நிலையில் 
வடக்கு ஸ்பெஷல் பானி பூரி என்றாலே கடைசியாக கொடுக்கப் படும் சுக்கா பூரி தான். சுக்கா பூரி என்பது தண்ணி இல்லாமல் வெறும் பூரியின் உள் உருளை மசாலா கலப்பு சேர்ந்து தரப்படுவது. இவர் அந்த சுக்கா பூரியில் உருளை மசாலாவுடன், மேலும் சில மசாலா வகைகளை இணைத்து பினிஷிங் டச்சாக எலுமிச்சை சாரை பிழிந்து தந்து ராமனை தன் வசப்படுத்திவிட்டார். 

Thursday, March 6, 2014

சாப்பாட்டு ராமன் - புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்லில் விழுங்கியதும் : சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்ததும்

புதுக்கோட்டை பழநியப்பா மெஸ்

இம்மாதம் அரசன் வீட்டு கல்யாணதிற்காக அரியலூர் செல்கையில், அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சரித்திர கோவில்களை பார்த்துவிட்டு செல்வது என்று முடிவுசெய்தோம். காலையில் குடுமியான் மலை குடவரைக் கோவிலில் குடுமியானுடன் துவார பாலகர்களை தரிசித்து விட்டு, பின் சித்தன்ன வாசல் சிற்பங்களின் வர்ண ரகசியங்களை அலசிவிட்டு, உச்சி வெய்யில் வேளையில் நார்தாமாலை சோழ கோவிலை கண்ட பின் மலையில் இருந்து கீழே  இறங்கும் பொழுது ராமனின் வயிர் சத்தம் போடத் தொடங்கிவிட்டது. 

நார்த்தாமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செல்லும் போது, கைபேசியில் அழைத்த நண்பர் 'சிவகாசிக்காரன்' ராம் குமார், புதுக்கோட்டை வந்து உண்ணும் படி பணித்தார். (சில அலுவல்களால் அவர் வரமுடியாமல் போனது ). புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பழநியப்பா மெஸ் தான் அவர்  எங்களுக்கு பரிந்துரை செய்தது.


உணவகத்தின் பார்கிங் இடம் ஒரு நூறு மீட்டர் முன்பே இருக்க, வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, 'பழநியப்பா மெஸ்' என்று தெரிந்த பெயர் பலகையை நோக்கி நடந்தோம். பிரதான சாலையில் சற்று சிறிய வாசலுடனே இருக்க, சின்ன உணவகம் என்று எண்ணிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே  உணவகம் எதிர்பார்த்ததை விசாலமாக இருக்க, கூட்டமாக இருந்த மேசைகளைக் கடந்து உள்ளே இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே, குளிர் சாதன அறைக்கு அருகில் சென்றுவிட்டோம்.

இரண்டு குளிர் சாதன அறைகளுக்கு நடுவில் இருள் சூழ்ந்த குகை போன்று வடிவமைக்கப்பட்ட அறை ஒன்று இருந்தது. உள்ளே அனுமதிப்பார்களா என்று நாங்கள் சற்று தயங்க, எங்களை மேசைப்பணியாளர் உள்ளே அழைத்து அமர வைத்தார். அந்த செயற்கை குகையினுள் அவர் மின் விளக்கை உயிர்பிக்கும் பொழுது மணி நான்கு.         

பொதுவாக இந்த நேரத்தில் பெரும்பாலான உணவகங்கள் மதிய உணவை நிறுத்தும் நேரத்தில் கடைசி ஆட்களாக உள்ளே சென்று விட்டோம். சாப்பாடு மற்றும் பரோட்டா மட்டும் தான் உள்ளது மற்ற அனைத்தும் முடிந்து விட்டது என்று தெளிவாக சொல்லிய பின்னே ஆர்டர் எடுக்கத் தொடங்கினர். பிரியாணி இல்லாதது ராமனுக்கு ஏமாற்றம் என்றாலும் பரோட்டா இருந்தது அவனுக்கு மனம் ஆறுதல் தந்தது.

பரோட்டா வர காத்திருந்த சமயம் சீனுவின் இலையில் இருந்து சுவைத்த மீன் குழம்பின் சுவையானது,  பரோட்டா வேண்டாம் என்று சொல்லிவிட்டு  சாப்பாடு வாங்க ஆவியைத் தூண்டியது. .பரோட்டா  வர காத்திருக்க பொறுக்காமல், சைட் டிஷ் ஆர்டர் செய்யலாம் என்று அழைத்த பொழுது மேசைப்பணியாளர் சட்டென்று வெளியே சென்று விட்டார். ஒரு வேலை என்னென்ன வகைகள் காலியாகாமல் இருக்கின்றன என்று பார்க்கச் சென்றாரோ என்று தன்னுள் எண்ணிக்கொண்டு காத்திருந்தான்  ராமன்.



குகைக்குள் திரும்ப வந்த மேசைப்பணியாளர், தன கையில் ஒரு பெரிய செவ்வக வடிவ தட்டை ஏந்தி ராமனின் அருகில் வந்தார். அந்தத் தட்டில் பல வகை உயிரினங்கள் மசாலாக் கலைவையுடன் நாவில் உமிழ் நீர் சுரக்கச் செய்தன. இரால், மீன், கோழி, காடை என     எந்த ஒரு ஜீவனுக்கும் பங்கம் வராத விதத்தில், அனைத்து​ வகைகளிலும் ஒவ்வொரு சைட் டிஷ் ஆர்டர் செய்தான்.


பரோட்டா சாதாரணமாக இருந்தாலும், அந்த பசியில் அது கிடைத்தால் போதும் என்று உண்டுகொண்டிருந்த ராமனுக்கு ஜீவன் தந்தது முதலில் வந்த துண்டு மீன் வறுவல். அந்தச் சிறிய துண்டு மீன் வறுவல் ராமன் வீட்டில் சமைப்பது போன்ற சுவையை தந்ததால் அவன் அதை மேலும் ஒரு ப்ளேட் வாங்கிக்கொண்டான். அடுத்து வந்த கோழியும் காடையும் செட்டிநாடு பாணியில் சுவையாக இருந்தன.       

அங்கு சுவையில் முதல் இடத்தை பிடித்தது இரால் வறுவல் தான். மோறுமொறுவென சரியான மசாலாக் கலவையுடன் சுவை அரும்புகளுக்கு விருந்தாக அமைந்தது. வழக்கம் போல் ஒரு ஹால்ப் பாயிலை அப்படியே முழுசாகத் தன் உணவுக் குழாய் வழியாக வயிரினுள் இறக்கி தன் மத்திய உணவை ராமன் முடித்துக்கொண்டான். ஐவர் மனதார உண்டதற்கு பில் தொகை 834 ரூபாய் தான்.  

சென்னை அசோக் நகர் அஞ்சப்பரில் நொந்தது

அஞ்சப்பர் உணவகம் எனக்கு முதன் முறை அறிமுகமானது பாண்டி பஜார் சென்றபொழுதுதான். அங்கு அவர்களின் சேவையும் உணவின் சுவையும் செட்டிநாடு பாணியில் அருமையாக இருக்க என் மனதில் நன் மதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் அசோக் நகரில் ஒரு நிகழிச்சியில் பங்குபெற்று வீடு திரும்பும் பொழுது உணவு உண்ண உணவகம் தேடினோம்.  அசோக் நகர் வட்டாரத்தில் இருக்கும் பிரதான உணவகங்கள் சரவண பவன், கே.எப்.சி. , மெக்.டொனால்ட்ஸ், அஞ்சப்பர், திண்டுக்கல் தலப்பாகட்டி.           

அஞ்சப்பரில் உன்பது என்று ஒரு மனதாக முடிவு செய்து அந்த உணவாக வாசலை அடையும் பொழுது மணி 9:35. கீழ் தளத்தில் கூட்டம் மிகுதியாக இருந்ததால், முதல் மாடிக்கு சென்று அமர்ந்தோம். மேசைப் பணியாளர் மற்ற மேசைகளை கவனித்துக் கொண்டிருக்க, என்ன உணவு ஆர்டர்  செய்வது என்று முடிவு செய்துகொண்டோம். எங்கள் மேசைக்கு அவர் வரும் பொழுது மணி 9 : 45. இருவர் மட்டும் தவிர்த்து மற்றவர் அனைவரும் பிரியாணியும்தந்தூரியும் ஆர்டர் செய்தோம். இருவர் தோசை மற்றும் நான் ஆர்டர் செய்தனர்.   

9:52க்கு மேசைப் பணியாளர் மீண்டும் திரும்பி வந்து பிரியாணி தீர்ந்து விட்டதாகவும், ப்ரைட் ரைஸ் மட்டும் தான் இருப்பதாக கூறினார். நண்பர் ஒருவர்  கோபம் கொண்டு 'ஆர்டர் எடுக்கும் முன்னாடி எது இருக்கு இல்லை என்று பார்க்க மாட்டிங்களா?' என்று சினங்கொள்ள , மேசைப் பணியாளர் 'நான் ஆர்டர் எடுக்கும் போது இருந்தது, அதற்குள்ளேயும் வேறு டேபிள்கு போயிடுச்சு' என்றார். வேறு வழியின்றி மீண்டும் ஆர்டர் கொடுத்தோம்.        

மணி 10:01. மீண்டும் அவர் திரும்பி வந்து 'பரோட்டா, இடியாப்பம், நான் மட்டும் தான் இருக்கிறது' என்றார். மெனு கார்டில் இருக்கும் ஒரு உணவு வகை ஆர்டர் கொடுத்த பின் இல்லை என்று மறுமொழி சொல்லியதில் அவருக்கு துளியும் வருத்தம் இல்லை. ஒரு மக்கள் சேவை வேலையில் இருப்பவருக்கு, மக்கள் நோகாமல் பணிவாக பதில் சொல்லவும் தெரியவில்லை. 'அது இல்ல. இதுதான் இருக்கு. என்ன வேணும்?' இது போலத் தான் இருந்தது அவர் கொடுத்த பதில்கள். எங்கள் கோபம் பசியுடன் போட்டியிட்டு,  இந்நேரத்தில் வேறு உணவகம் தேடிச் செல்ல முடியாததால் இறுதியில் பசியே வென்று,  பரோட்டா, இடியாப்பம், நான் வகைகளை மீண்டும் ஆர்டர் செய்தோம். 

முதலில் ஆர்டர் செய்த தோசையும், ஒரு நானும்,  இரு தந்தூரிகளில்  ஒன்று மட்டும் முதலில் 10 15க்கு வந்தது. அடுத்து இடியாப்பமும் பரோட்டாவும் 10:20 க்கு வந்தது. இருவர் மட்டும் இடியாப்பம் பரோட்டா ஆர்டர் செய்தோம், மற்றவர்கள் நான் தான் ஆர்டர் செய்தனர். அனைவரின் பசியும் அடங்கத் தொடங்கிய 10:27 க்கு நான் வந்தது. நான் வந்து பத்து நிமிடங்கள் கடந்தே இரண்டாவது    தந்தூரி வந்தது. 

உணவு தாமதமாக வந்தாலும், அதன் சுவை படு கேவலமாக இருந்தது. அந்த நான்கள் சைக்கிள் சக்கரம் செய்யும் ரப்பரின் பதத்தில் இருந்தன. அஞ்சப்பரில் நான் இதவரை இவ்வளவு மோசமான சுவையும் சேவையும் கண்டதில்லை.   அசோக் நகரில் இருக்கும் அஞ்சப்பர் செல்லும் நண்பர்கள் தங்கள் பொறுமையை சோதனை செய்ய நல்ல உணவகமாக இருக்கும் என்பது ராமனின் எண்ணம்.         ​

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் வாசகர் கூடத்தில் எழுதிய பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும் :

முகில் கண்ணா அசத்திட்டடா நீ!


Thursday, December 26, 2013

சாப்பாட்டு ராமன் - முட்டை காளான் பிரை

பல நாட்கள் அலுவல் மிகுதியால் பட்டினியாக இருந்த ராமனுக்கு அவன் நண்பன் மூலம் இந்த மாதம் ஒரு கையேந்தி பவன் அறிமுகமானது. 

பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் சாலையில், செந்தில் நகர் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் இருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கை ஒட்டியது போல் செல்லும் விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருப்பது தான் யெகோவா பாஸ்ட்புட். நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், மற்றும் சில சிக்கென் சைடுகள் கிடைப்பது விலைப்பட்டியலுடன், வண்டியில் ஜொலித்தது.     



 ராமன் அவன் நண்பனுடன் ஆர்டர் செய்தது, சிக்கன்  ப்ரைட் ரைஸ், பெப்பர் சிக்கென், சிக்கென் லாலிபாப் மற்றும் முட்டை காளான். ஆர்டர் தயாராகும் நேரத்தில் கடையை சற்று நோட்டமிட நேரம் கிடைத்தது. உள் பக்கம் மிகவும் சுத்தமாக இருந்தது. பொதுவாக மக்கள் தள்ளு வண்டிக் கடைகளை  விரும்பாதது சுத்தம் இல்லை என்று தான். ஆனால் இந்தக் கடை ஒரு விதி விளக்கு தான். பார்சல் வாங்குபவர்களுக்கு கூட அலுமுனியம் பாயில் கொண்டு, தரமான உணவகங்களில் தருவது போலவே உணவு கொடுக்கப் பட்டது கூடுதல் சிறப்பு. 



முதலில்   ப்ரைட் ரைஸுடன், ஆறு துண்டுகளுடன் சிக்கென் லாலிபாப் வந்தது.  இரண்டும் திடமான சூட்டுடன் சுவைக்க நன்றாக இருந்தது. அடுத்து வந்த முட்டை காளான் பிரை, எழுதும் பொழுதும் சுவை நினைவில் தோன்றி நாவை ஊறச் செய்கின்றது. 

சிக்கென் லாலிபாப் + முட்டை காளான் ப்ரை

முன்பே வேக வைத்த சிறிய காளான் துண்டுகளை, வெங்காயம், உப்பு, காரம், சில மசாலாக்கள், சேர்த்து ஒரு கடாயில் முட்டை உடைத்து ஊற்றி செய்த அந்த உணவு வகை, ஒரு மாறுபட்ட முட்டை பொடிமாஸ் போலவே இருந்தது. முட்டை, காளான், வெங்காயம் இவற்றின் கலவை நாவிற்கு புத்துணர்ச்சி தந்தது.இதை பார்சல் வாங்கிக்கொண்டு சப்பாத்தி,தோசை போன்ற டிபன்களுக்கு சைடாகவும் சுவைக்கலாம்.        
        
பெப்பர் சிக்கென் 

இறுதியாக வந்த பெப்பர் சிக்கென் மீது தான் இம்முறை ராமன் கொண்ட தீராக் காதல். காளான் போலவே சிறிதாக வெட்டப்பட்ட சிக்கென் துண்டுகள், மசாலாக் கலவையுடன், பெப்பர் சேர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மெதுவாக இருந்த எலும்பு இல்லாத அந்த சிக்கென், மேலே இருந்த மிளகுத் தூள் கலவை மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட கருவேப்பிலை, இவை மூன்றும் சேர்ந்து சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவையை அளித்தன. 



விலை விவரங்கள் படத்திலேயே இருக்கும். அந்தப் பக்கம் சென்றால்,   யெகோவா பாஸ்ட்புடில் சுவைத்துவிட்டு ராமனிடம் சொல்லுங்கள்.

ராமன்ஸ் காம்போ

நீங்கள் பெருமாள் கோயில் புளியோதரை உண்டதுண்டா! அதன் சுவையே தனி. என்னதான் நாஸ்திகம் பேசினாலும் நம் ராமன் பிரசாதங்களை விடுவதில்லை! பயணங்களின் சிறந்த உணவான புளியோதரையுடன் அவித்த முட்டை சேர்த்து உண்டு பாருங்கள். அவித்த முட்டையும் புளியோதரையும் ஒரு விசேஷமான கூட்டணி.            
   

Monday, November 25, 2013

சாப்பாட்டு ராமன் - Paradise பிரியாணி (ஹைதராபாத்)

இந்த வருடப் பிறந்தநாள் அன்று முதல் முறை ஹைதராபாத் சென்ற ராமனுக்கு, இதுவரை Paradise பிரியாணி பற்றி தன் வாழ்வில் அறியாதது சற்றே வருத்தம் தான்.  உள்ளூர் நண்பர் உதவியுடன் Paradise ஹோட்டல் சென்றடைந்து, இரண்டாவது மாடி செல்லும் வழியில் காத்திருப்பவருக்கு என்றே சுமார் ஐம்பது இருக்கைகள் இருப்பதைக் கண்டு திகைத்தான். அன்பான புன்னகையுடன் வரவேற்று, தனி மேசை நாற்காலியில் அமரவைத்த அந்த மேசைப் பணியாளர்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதில் இருந்து அங்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவது தெரிந்தது.    

பிரியாணி தான் வாங்குவது என்று முடிவான போதும், Paradise special, supreme என   எந்த வகை வாங்குவது என்ற குழப்ப நிலை எங்களிடையில் நிலவ, மேசை பணியாளர் எங்களுக்கு ஆர்டர் செய்ய உதவினார். தனியே மட்டன் மட்டும் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு, பொறுமையின்றி காத்திருக்கும் பொழுது பக்கத்துக்கு மேசைக்கு paradise special  பிரியாணி செல்வதைக் கண்டபொழுது 'நல்ல வேலை அதை ஆர்டர் செய்யவில்லை என்றே எண்ணத் தோன்றியது. சராசரியாக உண்பவர்கள் ஐந்து பேர் நிறைவாக உண்ணும் அளவு இருந்தது அந்த paradise special  பிரியாணி. அப்போ supreme பற்றி யோசிக்கவே தேவையில்லை.     

ஐந்தில் இருந்து பத்து நிமிடத்திற்குள் எங்கள் பிரியாணி வந்தது. தமிழ் நாட்டில் இருப்பது போன்ற பிரியாணி இல்லை அது. அந்த பிரியாணி வெள்ளை  நிற சாதத்தில்   ஆங்காங்கே மஞ்சள் நிறம் எட்டிப் பார்க்க, கிண்ணத்தின் அடியில் சாதம் அதன் மேல் மசாலா கிரேவி அதன் மேல் மீண்டும் சாதம் என்று இருந்தது. மேசைப் பணியாளர் சரியான அளவு சாதத்தையும்  அந்த கிரேவியையும் ஒரு சேர கலந்து தட்டில் பரிமாறினார். இங்கு வெங்காய பச்சடி மற்றும் ஒரு வகை குருமா போன்ற கிரேவி தான் சைடு டிஷ், கத்திரிக்காய் சைடு கிடையாது.  


ஆவி பறக்க, அந்தச் சாதத்துடன் இணைந்த அந்த மசாலாக் கலவையும், வாயினுள் ஒரு சேர கலந்து, பற்கள் அதை அறைக்கும் பொழுது தோன்றும் அந்த சுவை நாவிற்கு குதூகலத்தை கொடுத்தது. அடுத்த வாய் உண்ணும் பொழுது சுவை மேலும் மேலும் கூடிக் கொண்டுதான் சென்றது.         

பணியாளர்களின் அன்பான உபசரிப்பு கூடுதல் சிறப்பு. நான் என் உணவை புகைப்படம் எடுப்பதைக் கண்டு, எங்கள் மேசைப் பணியாளர் அந்த ஹோட்டலின் வரலாறு அடங்கிய அட்டையை என்னிடம் கொடுத்தார். ஒரு திரையரங்கினுள் சிறு கடையாக துவங்கி, பல மாடிகள் என மாறி, மூன்றுக் கிளைகளுடன் ஹைதராபாத்தின் ஒரு முக்கிய சின்னமாக விளங்குகிறது Paradise பிரியாணி.       

இவ்வளவு பெரிய ஹோட்டல்லா அப்போ விலையும் கூட இருக்கும் என்று நினைக்கும் உங்கள் எண்ணம் தவறு. மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பிரியாணி இரண்டுமே விலை ரூபாய் 210. ஒரு சிக்கன் பிரியாணி இருவர் உண்ணும் அளவு இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சாதாரண குளிர்சாதன உணவகங்களிலே விலை 150 ரூபாய் தாண்டி விடுகிறபொழுது, தரமும் அளவும் நிறைந்து கிடைக்கும் இந்த 210 ரூபாய் paradise பிரியாணி விலை குறைவாகத் தான் தோன்றியது. நீங்கள் ஹைதராபாத் சென்றால் இந்த பிரியாணி சுவைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்பது ராமனின் வேண்டுகோள். 

ராமன்ஸ் காம்போ 

ஆட்டுக் கால் சூப்பும் அவித்த  முட்டையும்: 
சாலையோரக் கடைகளில் ஆட்டுக் கால் சூப் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அடுத்த முறை குடிக்கும் பொழுது அந்தக் கடையில் அவித்த முட்டை இருந்தால் அதை அந்த சூப்பில் துண்டாக்கி போடச் சொல்லி சுவைத்து பாருங்கள். அதன் ருசியே தனி. பெரும்பாலான ஆட்டுக் கால் சூப் கடைகளில் இந்தக் காம்போ இருக்கும். இந்தக் குளிர் காலத்தில் அடிக்கடி பிடிக்கும் சளிக்கு மருந்தாகும் உணவு.      

Friday, November 8, 2013

சாப்பாட்டு ராமன் - முட்டை தோசை (வேளச்சேரி)

ஒரு திங்கட் கிழமை, இரவு மணி பதினொன்று இருக்கும். கையில் இருந்த காசை பார்க்கிங் கட்டணமாக ஒரு மாலில் கொடுத்து விட்டு, பணப் பையில் ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களுடனும், வயிற்றில் பசியுடனும், ராமன் தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போலீஸ் கெடுபிடியால் பெரும்பாலான கையேந்தி பவன்கள், இரவு பத்தரை மணி முதலே மூடத் தொடங்கிவிடுமையால், அண்ணா சாலையில் அவனுக்கு எந்தக் கடையும் தென்படவில்லை. வயிற்றில் தொடங்கிய பசி இப்பொழுது காதுகளை அடைக்கச் செய்து கொண்டிருந்தது.        

வேளச்சேரி நூறடி சாலையில், முருகன் கல்யாண மண்டப பேருந்து நிறுத்தத்தின் எதிர் புறத்தில் இருந்த தள்ளு வண்டியை ஆடவர் கூடம் சூழ்ந்திருந்ததை ராமன் கண்டான். நம்  வகுப்பிற்கு அழகான பெண் ஒருத்தி இடையில் வந்து சேர்ந்து அவளும் அழகாக இருந்தால், அந்த அழகை முதல் முறை பார்க்கும் பொழுது ஏற்படும் ஒரு திடீர் உற்சாகம். அந்த உற்சாகத்துடன் நம் ராமன், U வடிவில் திரும்பி, கடையின் அருகே சென்று வண்டியை நிறுத்தினான். முருகன் கல்யாண மண்டபத்தின் மிக அருகில் இருந்த அந்தக் கடையில், இட்லி மற்றும் மூன்று  வகை தோசைகள் மட்டும் இருப்பதை  சில குறிப்பால் உணர்ந்தான்.     

கணவன் மனைவி மற்றும் உதவியாளர் மட்டும் இருந்த அந்தக் கடையில், அந்தக் கணவன் தான் தோசை மாஸ்டர். வீடுகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சிறந்த சமையல் கலை வல்லவர்களாய் ஆண்கள் மட்டுமே விளங்குவதில் ராமனுக்கு ஆச்சரியம் தான். செவ்வக வடிவில் இருந்த   அந்த தோசைக் கல்லில், இரண்டு தோசை மட்டுமே ஊற்ற முடிந்த நிலையிலும், காத்திருப்பவர் வரிசை மாறமால், எந்த வித சலிப்புமின்றி அவர்கள்  கூட்டத்தை சமாளிப்பது சிறப்பு.    

கல்லில் நீர் ஊற்றி, 'உஷ்' என்ற ஓசை கிளம்ப,  தென்னந் தொடப்பத்தின் அடியால் அந்தக் கல்லை கழுவிய பின், டபரா கப்பில் மாவு எடுத்து, முட்டை வடிவில் கல்லில் பரப்பி, நன்கு அடிக்கப் பட்ட முட்டையை அந்த தோசையின் மத்தியில் ஊற்றி, தோசை கரண்டியால் அந்த முட்டையை தோசையின் பரப்பளவு  முழுவதும் பரப்பி, அதன் மேல் மிளகு போடி தூவி, தோசை வெந்தவுடன் சிறிதாக கிள்ளப் பட்ட கொத்தமல்லி இலைகள் தூவப்பட்டு தயாரானது ராமன் ஆர்டர் செய்த முட்டை தோசை.      
படம் : கூகுள்


சட்னி சாம்பார் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, சிக்கன் செர்வையுடன் முட்டை தோசையை உண்ட ராமனுக்கு, அந்த பசியில், அது ஒரு வரப் பிரசாதம் போல் இருந்தது. தோசை உண்ட பின் ஒரு ஹால்ப் பாயிலுடன் தன் கணக்கை ராமன் முடித்தான். நாற்பத்து ஐந்து ரூபாய் (மு.தோசை - 35)  செலுத்தி விட்டு பதினைந்து ரூபாய் மீதம் இருக்க, வயிறு மற்றும் மன நிறைவுடன் ராமன் வீடு திரும்பினான்.         

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு ராமனுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. 'ஒரு வேளை பசியில் சாப்பிட்டதால் தான் அந்த முட்டை தோசை சுவையாக இருந்ததோ?' என்று. இந்த சந்தேகத்தை தீர்க்க கோவை ஆவி மற்றும் சீனுவுடன் ராமன் இரண்டாவது முறை அதே கடைக்கு சென்றான். இறுதி முடிவு என்ன என்பதை அவர்களே கருத்துரையில் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.         

ராமன்ஸ் காம்போ :

நீங்கள் மெலிதாக வலை போல் இருக்கும் இடியாப்பம் உண்டதுண்டா?. சூடான அந்த இடியாப்பத்துடன், தள்ளு வண்டிகளில் கிடைக்கும் சிக்கன் பகோடாவுடன் இணைத்து உண்டு பாருங்கள். ராமன் முதலில் இது போல் உண்டது வேலூர் 'சில்க் மில்' அருகில் இருந்த தள்ளு வண்டிக் கடையில் தான்.  ஆவியில் வெந்த இடியாப்பமும், எண்ணெயில் பொறிக்கப் பட்ட சிக்கனும் உங்கள் நாவில் இணையும் பொழுது அருமையான சுவை தோன்றும்.     

Monday, October 21, 2013

சாப்பாட்டு ராமன் - அம்மு கௌசோ கடை(தஞ்சை)

சென்னையில் நண்பர் வீட்டில் முதல் முறை (அவர் சித்தி சமைத்த) பர்மா வகை உணவுகளை சென்ற ஆண்டு உண்ட போதே ராமனுக்கு மிகவும் பிடித்து விட்டது. இம்மாதம் தஞ்சை சென்றபோது அவர் கடையிலேயே பர்மா வகை உணவுகளை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.தஞ்சையில் பர்மா காலனியில் பர்மா வகை உணவுக் கடைகள் மிகவும் பிரபலம். இதில் நம் நண்பரின் 'அம்மு கௌசோ கடை' இருப்பது அன்பு நகர், பூக்கார விளார் ரோடு. 


இந்த உணவு வகைகளை தயார் செய்ய காலை ஒன்பது மணிக்கு துவங்கினால் கடை திறக்கும் மாலை ஆறு மணி வரை வேலை சரியாக இருக்கும். மைதா மாவு கொண்டு நூடுல்ஸ் பிழிந்து அதை ஆவியில் வேக வைப்பது,தேவையான காய் கறிகளை நறுக்குவது, மசாலா கலவைகளை தயார் செய்வது என்று பல செய்முறைகளை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது.



ராமன் தன் கணக்கை துவங்கியது முதலில் அத்தோவுடன்.மேல் கூறிய வேகவைத்த மைதா மாவு நூடுல்ஸுடன் ( அதன் பர்மா பெயர் கௌசோ), மெலிதாக நறுக்கிய முட்டை கோஸ், பச்சை வெங்காயம், பொன்னிறமாக வருத்த வெங்காயம், பூண்டு எண்ணெய், புளி கரைசல் இறுதியாக அவரவர் விருப்பத்திற்கேற்ப காரம் சேர்த்து பரிமாறும் கலவை தான் அத்தோ. இதில் பொறிக்கப் பட்ட உணவு எதுவுமே இல்லாதது கூடுதல் சிறப்பு.

அத்தோ 
உள்ளூர் வாசிகள் இந்த கௌசோவுடன் பர்மா முறையில் சமைக்கப் படும் வாழைத் தண்டு குழம்பை ஊற்றியும் உண்கின்றனர். மேலும் அந்த வாழைத் தண்டு குழம்பை சூப் போலவும் பருகுகின்றனர். அந்த வாழைத் தண்டு குழம்பில் பொறிக்கப் பட்ட வெங்காயம், வேகவைத்த முட்டை, சிறிது கொத்தமல்லி, மசால் வடை சேர்த்து குடித்தால் கிடைக்கும் சுவையே தனி.வாழைத் தண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லவே தேவையில்லை.

வறுக்கப் படும் உணவுப் பிரியர்களுக்ககவே செய்யப் படும் உணவு வகை தான் சீஜோ. கெளசோவுடன் முட்டை கோஸ், வெங்காயம்,மசாலா வகைகள் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, கடாயில் வறுத்து, இறக்கியவுடன் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, கொத்தமல்லி தூவி உருவாகுவது சீஜோ. 


இதையெல்லாம் முடித்து இறுதியில் எண்ணெய் முட்டை என்று ஒரு வகை உண்டு. வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி, அதற்கு இடையில் எண்ணெயில் பொறிக்கப் பட்ட வெங்காயம், புளி கரைசல், எலுமிச்சை சாறு, பூண்டு பொறிக்கப் பட்ட எண்ணெய், இவற்றை வைத்து, அப்படியே வாயினுள் (பாணி பூரி போல்) இறக்க வேண்டும். இந்த கலவைகள் முட்டையுடன் இணைந்து, சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவை அனுப்பும், அதை நினைத்தால் இந்த கணமும் நாவில் உமிழ் நீர் சுரக்கிறது. இந்த எண்ணெய் முட்டை மேல் ராமன் தீராக் காதல் கொண்டதால், மீண்டும் சுவை அரும்புகள் நடனமாடும் அந்த நொடியை எதிர் நோக்கி காத்திருக்கிறான். 

இந்த வகை உணவு மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். இத்தனை ஆண்டுகள் சென்னையில் இருந்து இதை தவற விட்டது சிறிது வருத்தமே. மலிவான விலையில் உடல் நலனுக்கு ஏற்ற உணவை நீங்களும் உண்டு மகிழுங்கள். 

ராமன்ஸ் காம்போ
இந்த தஞ்சை பயணத்தில் ராமனுக்கு அறிமுகமாகிய ஒரு சிறிந்த காம்போ உங்களுக்காக. ஐந்து ரூபாய்க்கு தஞ்சையில் கிடைக்கும் நான் ரொட்டியின் மேல் தேனை நன்கு தடவி, அதை மெத்தை போல் சுருட்டி, வாயில் கடிக்கும் பொழுது, 'ஆஹா... அமிர்தத்தின் சுவை இப்படித் தான் இருக்குமா' என்று எண்ணத் தோன்றியது. உங்கள் வட்டாரத்தில் கிடைக்கும் ரொட்டியை வாங்கி இதேபோல் சுவைத்து பாருங்கள், என்னைப் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். 

Wednesday, September 25, 2013

சாப்பாட்டு ராமன் - ஆலு டிக்கி

பல நாட்களாக, உணவு வேட்டைக்கு செல்லாமல் அமைதியாக இருந்த ராமனுக்கு தான் சென்ற ஆண்டு டில்லியின் சாலைகளில் உண்ட ஆலு  டிக்கியின் சுவை சில நாட்களாக அவனை தூங்கவிடாமல் தவிக்கச் செய்தது. அவனும் பல இடங்களில் சென்னையில் அதை உண்டு, திருப்தி இல்லாமல் சோர்ந்து போய் இருந்த வேளையில், சௌகார்பேட்டையில் சுவையான ஆலு டிக்கி கிடைக்கும் தகவல் அறிந்து, துள்ளி குதித்து தயாரானான்.    

ப்ராட்வே பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் சௌகார்பேட்டைக்கு செல்ல ராமன் பீச் ரயில் ஏறி 'போர்ட்' (Fort)இல் இறங்கி, பேருந்து நிலையம் வழியே, உயர் நீதி மன்றத்தின் எதிர் திசையில் நடந்து, ஒரு காவல் துறை பூத்தை கடந்தால் அதைத் தொடர்ந்து வரும் வலது பக்க சந்து தான் 'மின்ட் ஸ்ட்ரீட்' (Mint Street). அந்த வீதியில் நுழைந்தவுடன் அவனுக்கு சென்னையில் தான் இருக்கிறோமா என்ற பெரும் சந்தேகம் தோன்றியது. பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல், குஜராத்தி ஆண்களும் பெண்களும் அந்தச் சாலையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர்.                  

தெரு எங்கும் சேலைக் கடைகள் தான், அதன் பின் தான் இந்தச் சாலையோர உணவுகள். இங்கு குஜராத்திய வகை சேலைகளை, ஹிந்தி தெரிந்தால் பேரம் பேசி மலிவு விலையில் வாங்கலாம். இந்தத் தெருவில் உள்ள சீலைக் கடைகளின் சிறப்பு என்ன வென்றால், நம்மைத் தரையில்  மெத்தையின் மேல் அமரவைத்து தான் சேலையை விரித்து காண்பிப்பார்கள். புருஷர்கள், ஸ்திரீகள் (சிவகாமியின் சபதம் படித்துக் கொண்டிருக்கும் தாக்கம்)  சேலை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு குட்டி தூக்கம் போட்டு ஓய்வெடுக்கலாம். ரங்கநாதன் தெரு போல் கால் வலிக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுன்னு ஆரம்பிச்சிட்டு சேலைன்னு போய்ட்டனேன்னு நீங்க திட்டறது எனக்கு கேட்கறது, இதோ வந்துட்டேன்.           

அப்படியே சேலை பொம்மைகளை பார்த்துக் கொண்டு, அந்தக் சாலையில் நடக்கையில், இடது புறம் வரும் 'காக்காடா ராம்பிரசாத்' ஸ்வீட் கடை தான் நம் ராமன் தேடிச் சென்றது. இந்த கடை இனிப்பிற்கு பெயர் போனது என்றாலும், இங்கு கிடைக்கும் ஆலு டிக்கியின் சுவை அருமை என்ற செய்தி ராமனை வந்து சேர்ந்ததால், ஆலு டிக்கியும் பானி பூரியும் மட்டும் ஆர்டர் செய்தான். ஆலு டிக்கி ஐம்பது ரூபாய், பானி பூரி இருபத்து ஐந்து ரூபாய். விலை அதிகம் என்று உங்களைப் போலத்தான் ராமனும் முதலில் ஷாக் ஆனான்.   




ஆலு எண்ணையில் பொறிக்கப் படுகையிலே, பானி பூரி கொடுக்கப் பட்டது. கையில் ஒரு சிறிய தொன்னை கொடுத்து, முதலில் 'புதின்' என்று எழுதி, சிவப்பு துணியால் மூடப் பட்டிருந்த மண் பானையில், பூரியை நனைத்து கொடுத்தான். இரண்டாவது 'ஜல் ஜீரா' (புளி) என்று எழுதியிருந்த பானையில் இருந்தும், 'ஹிங்' (பெருங்காயம் என்று சுவையில் இருந்து யூகித்தேன்)  என்று எழுதியிருந்த பானையில் இருந்தும் இரண்டு இரண்டு பூரி,  மொத்தம் ஆறு பூரி. எப்பொழுதும் புதினா ரசத்திலேயே பானி பூரி சாப்பிட்டு பழகிய நாவிற்கு இது புது சுவையாக இருந்தது. ராமன் ஒரு பூரி சாப்பிட்டு முடித்த பின் தான், கடைக்காரன் அடுத்த பூரி தயார் செய்வதால் எந்த அவசரமும் இன்றி நிதானமாக சுவைக்க முடிகிறது.                   

இதற்கிடையில் பொறிக்கப் பட்ட ஆலு, பிட்சா போல் ஆறு துண்டாக வெட்டப் பட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் தயிர் ஊற்றி, சாட் மசாலா மற்றும் வேறு பெயர் தெரியாத வாசனைப் பொருட்கள் மழைச் சாரல் போல் தூவப் பட்டு, ஓமபொடி மற்றும் துருவிய காரெட், பீட்ரூட், கௌஸ் முதலிய காய்கறிகள் மேலே அலங்கரிக்கப் பட்டு, கிரீடத்தில் பன்னீர் துண்டு ஒன்று வைத்து கைக்கு வந்தது. புகைப்படம் எடுக்கும் வரை ராமனை கட்டுப் படுத்துவது, ஒரு குழந்தையை சாக்லேட் சாப்படாமல் தடுப்பதை விட பெரும் பாடானது.


அந்த ருசி நாவில் உள்ள சுவை அரும்புகளுக்கு, மாமல்லனைக் கண்ட சிவகாமி கொண்டது போல், புத்துணர்ச்சியும் குதூகளமும் கொடுத்தது. தாகம் தீர்க்க பாதாம் பால் என்பது ரூபாய் கொடுத்து வாங்கிய ராமன், பாதாம் பருப்பு சற்று அதிகமாக இருந்தது என்றே இறுதியில் முடிவுக்கு வந்தான். இங்கு கிடைக்கும் பாதாம் பாலும் சற்று பிரபலம் தான். வயிறும் மனமும் நிறைந்தது. விலை கூடுதலேனும், கிடைத்த சுவை திருப்தி அளித்தது. அருகில் ஒருவர் வாங்கிய பிரட் சான்ட்விச் பார்க்க வித்யாசமாக இருந்தது. மாதக் கடைசி என்பதால்,  மேலும் எதுவும் சுவைக்க முடியாமல், அடுத்த மாத முதல் வாரத்திலே மீண்டும் வர வேண்டும் என்ற சபதம் செய்து கொண்டு, சாலையோர பொம்மைகளை ரசித்த படியே வீடு திரும்பினான் ராமன்.

           

Friday, August 9, 2013

சாப்பாட்டு ராமன் - திருவான்மியூர் RTO பார்க் (ரோட்டோர உணவுகள்)

திருவான்மியூர் RTO ஆபீஸுக்கு அருகில் இருக்கும் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ள சாலையில், வித விதமான ரோட்டோர உணவுகள் கிடைக்கும் என்பதை அங்கு தங்கி இருக்கும் நண்பர்கள் மூலம் அறிந்த நாளில் இருந்தே அந்த ரோட்டோரக் கடைகளுக்கு செல்ல வேண்டும் என்பது ராமனின் நெடு நாள் அவா. இந்நிலையில் அங்கு ட்ரீட் தருவதாக ஒரு அழைப்பு வந்ததால், மறுக்க முடியுமா? முடியாது. பல அலுவல்களுக்கும் இடையில் அங்கு சென்றான் நமது ராமன்.

மற்றவர்கள் வரும் முன் அந்த சாலையை அலசி எல்லாக் கடைகளையும் நோட்டம் விட்டு குறிபெடுத்துக் கொண்டான். எட்டு பேர் கொண்ட (அவன் அடங்கிய) அந்த குழு முதலில் சென்ற இடம் 'பிஸ்மில்லா சிக்கன் பகோடா கடை'. நூறு கிராம் சிக்கன் பகோடா 33 ரூபாய், 150 கிராம் 50 ரூபாய், 250 கிராம் 80 ரூபாய் என்று எழுதி இருந்த விலைப் பட்டியலும் எண்ணையில் வறுபடும் சிக்கனும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தன. 

வாழ்வில் முதன் முறையாக முக்கால் கிலோ சிக்கன் பகோடா வாங்கி, அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து, அந்த சிக்கன் சூட்டில் வதங்கிய பச்சை வெங்காயத்துடன், ஆவி பறக்க வாயில் செலுத்தி, அடுத்தவர் கை தட்டிற்கு வரும் முன் வேகமாக சாப்பிட வேண்டிய கட்டாயம். மீண்டும் ஒரு கால் கிலோ வாங்கி, அடித்து பிடித்து உண்டு, மொத்தம் ஒரு கிலோவுக்கு பில் தொகை 320 ரூபாய் செலுத்திவிட்டு அடுத்த கடையைத் தேடிச் சென்றோம்.

சிக்கன் சூட்டை தணிக்க, பாணி பூரி உண்ண சென்றோம். பாக்கு மட்டையில் செய்த தொண்னையில், மசாலா உடன் கலந்த உருளை கிழங்கை, கட்டை விரலால் உடைத்த சிறிய பூரியினுள் வைத்து, தண்ணீர் ஒழுகும் முன், அதனை வாயினுள் விழுங்குவதே ஒரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. 

மற்ற ஊர் உணவுகளை உண்டாலும், கையேந்தி பவன் என்றாலே நம்ம ஊர் உணவுகள் தானே. அதற்கும் அங்கு கடையுண்டு. உருளை, வெங்காயம், மிளகாய், வாழக்காய் பஜ்ஜி வகைகளுடன், சுண்டலும் சூடாக கிடைக்கிறது. இந்த பஜ்ஜி கடை அந்த பூங்காவில் இருந்து தள்ளி, சற்று தூரத்தில் IOB பேங்க் எதிரில் இருந்தது. இங்கு சுண்டல் கொதிக்கும் குழம்பில், போண்டாவையும் வேகவைத்து,சாம்பார் வடை போல் சுண்டல் போண்டா என்று ஒன்று தருகிரார்கள்.

இப்படி ஸ்டார்டர்ஸ்சை முடித்து விட்டு டிபன் கடையை நோக்கி சென்றோம். டிபன் கடை பூங்கா அருகிலேயே இருந்தது. பிளாஸ்டிக் தட்டு என்றாலும், அந்த தட்டில் வட்ட வடிவில் வெட்டப் பட்ட வாழை இலையுடன் உணவை தந்தது சிறப்பு. இடியாப்பத்தில் தொடங்கி, 'நைஸ்' தோசை, முட்டை தோசை, பரோட்டா என பதம் பார்த்து, கலக்கி, ஹாப் பாயிலுடன் முடிந்த எங்கள் உணவு வேட்டையின் பில் தொகையோ வெறும் 267 ரூபாய். நாவிற்கு நல்ல சுவை வயிற்றின் எடையை கூட்டினாலும், பணப் பையின் எடை கம்மியாகவே குறைந்தது.

அடுத்து ஒரு சிக்கன் ப்ரைட் ரைஸ் வாங்கி வயிற்றில் இடம் பாக்கி இருதவர்கள் மட்டும் அதை உண்டு, வயிற்றை நிரப்பினோம். அங்கு அருகில் இருந்த ஆவின் பூத்தில் நன்கு குளிர்ந்த பாதாம் பால் மற்றும் ரோஸ் மில்க் பருகி அன்றைய இரவு உணவு இனிதே நிறைவடைந்தது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை அந்தப் பக்கம் சென்று வாருங்களேன்.  

Monday, July 29, 2013

சாப்பாட்டு ராமன் - ஹலீம் (ஹைதராபாதி அசைவ உணவு)

ஹலீம் என்பது மட்டனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு. பெரும்பாலும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் அதிகம் சமைக்கப் படுவது, அதிலும் குறிப்பாக இந்த ரம்ஜான் நோன்பு காலங்களில் அதிகம் செய்யப்படுவதாக கேள்வி பட்டுள்ளேன்.      


கோதுமையுடன் நன்கு வேகவைத்த மட்டன், பட்டை, லவங்கம், பிரிஞ்சு  இலை, மிளகு போன்ற வாசனைப் பொருட்களை சேர்த்து, பல மணி நேரம் சமைத்து உருவாகும் கலவை தான் ஹலீம். இதை உண்ணும் பொழுது உங்கள் நாவில் உள்ள சுவை அரும்புகள் தானாக இசை பாடும், உங்கள் வயிறில் ஒரு விதமான முழுமை உணர்வு பிறக்கும்.         

இந்த உணவை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது என் நண்பன் தான். அவன் தந்தை ஹைதராபாத் சென்று வந்த பொழுது, அவர் வாங்கி வந்த இந்த ஹலீமை எனக்கு சுவைக்க கொடுத்தான். முதல் வாயிலேயே அந்த ஆட்டுக் கறியின் மென்மை ராமனை ஈர்த்து விட்டது,அந்த டப்பா முழுவதையும் அவனே  உண்டு தீர்த்தான். 

பின் பல நாட்கள் இதை தேடி அலைந்தான், தெரிந்த முஸ்லிம் நண்பர்களிடமும் விசாரித்தான், ஒரு பயனும் இல்லை. சென்ற ஏப்ரல் மாதம் இந்த உணவை சுவைக்க ஹைதராபாத் செல்ல, ரயில் டிக்கெட்டும் வாங்கினான், சில அலுவல்களால் அந்த டிக்கெட்டை ரத்து செய்ய நேரிட்டது. இருப்பினும் ராமன் ஓயவில்லை, முஸ்லிம் பெயருடன் யாரை முதலில் சந்தித் தாலும் அவன் கேட்கும் முதல் கேள்வி 'உங்க வீட்ல ஹலீம் செய்வாங்களா?' என்பதுதான். 

இப்படியே நாட்கள் செல்ல, ஜூன் 24ஆம் தேதி தன் சக அலுவலக நண்பர்களுடன் உரையாடுகையில், ஒருவன் எதார்த்தமாக, அவன் ஹலீமை OMRஇல் எதோ ஒரு உணவகத்தில் கண்டதாக சொல்ல, அவனை நச்சரித்து, அவன் மூளையை பிசைந்து, அந்த உணவகத்தின் பெயரை கக்க வைத்தான். கூகிள் உதவியுடன் அந்த இடத்தையும் கண்டு அவர்களின் தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டு, மறு நாள் எழுந்தவுடன் அவர்களை தொடர்புகொண்டு, ஹலீம் கிடைப்பதை உறுதி செய்தான்.

கிடைக்கும் இடம் :
                        Rasavid Multi Cuisine Restaurant, காரப்பாக்கம், OMR  (opp. to Aravind theatre)

விலைப் பட்டியல்: 
                                       பேமிலி பேக்   : 175 + VAT
                                       ஜம்போ  பேக்  : 275 + VAT             

ஜூன் 25, மதியம் 12 45 மணிக்கு(வரலாறு மிக முக்கியம்) அந்த உணவகம் சென்றடைந்தான். இவனுக்கு வேற வேலை இல்லையா என்று கேக்கறிங்களா, நம்ம ராமனுக்கு சாப்பாடு தாங்க முக்கியம். அங்கு இருப்பவன் 'பேமிலி பேக் ஆர் ஜம்போ பேக்?' என்று கேட்க, மாசக் கடைசி என்பதால் பேமிலி பேக் வங்கினான். எந்தக் குறையும் இன்றி முதல் முறை உண்ட சுவை நாவில் மீண்டும் இசை பாட, மூவர் சாப்பிட வேண்டிய அந்த பேமிலி பேக்கை ஒற்றை ஆளாக ஆசை அடங்க, ராமன் உண்டு தீர்த்தான். 

Monday, July 22, 2013

சாப்பாட்டு ராமன் - பார்டர் பரோட்டா & ருசி பரோட்டா

பார்டர் பரோட்டா 

'குற்றாலம் சென்று குளித்து, பார்டர் பரோட்டா சாப்டா தான் அந்த பயணம் நிறைவடையும்' என்று பலர் சொல்லக் கேட்டு என்னுள் இருக்கும் ராமன், கண்டிப்பாக செங்கோட்டை சென்று அந்த பரோட்டாவை சுவைக்க வேண்டும் என்று அடம் பிடிக்க, என் நெல்லை நண்பனோ' ருசி பரோட்டாவிற்கும் அதற்கும் பெரிதும் வித்யாசம் இல்லை' என்று அடம் பிடித்தான். இறுதியில் ராமனே வென்று, ஐந்தருவியில் குளித்த ஈரத்துடன், செங்கோட்டை 'பார்டர்  ரஹ்மத் பரோட்டா' கடையை நோக்கி சென்றோம். 

இந்த இடம் கேரள-தமிழக பார்டரை ஒட்டி இருப்பதால், இந்தப் பெயர் வந்தது என்று எம் ஓட்டுனர் சொல்லினார், டெம்போ ட்ராவெலரில் பரோட்டா சாப்பிட செல்வது நாங்கள் மட்டும் தான் என்று எண்ணிய எனக்கு அங்கு கடை முன் நின்றுகொண்டிருந்த சீருந்துகளை பார்க்கும் பொழுது என் எண்ணம் மாறியது.

சாதாரண மர டேபிள்-பெஞ்ச் கொண்ட, மின் விசிறி சுற்றும் கடை தான் என்றாலும் உள்ளே ஏக்கக் செக்க கூட்டம். கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்ததும், எல்லார் முன் தலை வாழை இலை விரிக்கப் பட்டு, டம்லரில் தண்ணீர் ஊற்றப் பட்டது. உணவு பரிமாறுபவன் ஒரு சின்ன அன்னக் கூடை நிறைய பரோட்டக்களுடன் வந்து, எல்லா இலையிலும் தலா நான்கு பரோட்டா, நாங்கள் கேட்காமலே வைத்து விட்டுச் சென்றான். அதே போல் நாங்கள் கேட்காமலே, ஒரு தட்டு நிறைய ஆம்லட்டுடன் வந்து, எல்லார் இலையிலும் ஒன்று வைத்தான். பின் ஒரு பெரிய தட்டில் நாட்டுக் கோழி வறுவலுடன் வந்தான், எம் வடக்கு நண்பர்கள் இம்முறை சுதாரித்து வேண்டாம் என்று அவனை நிறுத்திவிட, எங்கள் இலையில் மட்டும் கோழி குடியேறியது. 

உபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, கூட்டம் அலைமோத அவர்களும் என்ன செய்வர். அடுத்து எதை கேட்டாலும் வர சற்று தாமதமானது, அவன் வரும்போது நம் இலைகளை நிரப்புவது உசிதம் என்று அனுபவித்து உணர்ந்தோம். காடை வறுவலுக்காக என் நண்பன் காத்திருக்க, நாங்கள் உண்ட இலையை நாங்களே அகற்ற, எங்கள் பின் நின்று நாங்கள் சாப்பிடுவதை இதுவரை முறைத்துக் கொண்டிருந்தவர்கள், எங்கள் பெஞ்சை கைப்பற்றினர். 

நாங்கள் ஆறு பேர் (என்றாலும் நன்றாக சாப்பிட்டது மூவர் மட்டுமே) உண்டதற்கு பில் தொகை 531 ரூபாய். அங்கு கிடைத்தது மொத்தமே காடை வறுவல், நாட்டுக் கோழி வறுவல், ஆம்லட், பரோட்டா இவை மட்டும் தான். உணவில் எந்த குறையும் இல்லை என்றாலும் உண்ட திருப்தி இல்லை.

ருசி பரோட்டா

மறுநாள் மதியம் நெல்லையில் ருசி உணவகத்தில் சாப்பிடுவது என்று முடிவானது. நெல்லையில் எத்தனை சாந்தி ஸ்வீட்ஸ் உண்டோ அதை விட அதிகம் 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்கள். ஓர் இடத்தில நியூ ருசி என்றிருக்கும், ஒரிஜினல் ருசி என்றிருக்கும், ஒரு இடத்தில 'ruci' என்றிருக்கும், வேறு ஒரு இடத்தில 'ruchi' என்று கூட இருந்தது. இப்படி பல ருசிகளுக்கு இடையில் என் நெல்லை நண்பன், பாளை மார்க்கெட் அருகில், செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரில் இருக்கும் ருசி தான் முதலில் தோன்றிய ஒரிஜினல் என்று அங்கு அழைத்துச் சென்றான்.



நேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம், இங்கும் தலை வாழை இலைதான். சென்னை உணவகங்களில் காணப் படாத ஒன்று. பரோட்டா, சிக்கன் சாப்பாடு, மட்டன் சாப்பாடு, சைவ சாப்பாடு, மஜீரா, ஹாப் பாயில், ஆம்லட், கலக்கி என நாங்கள் ஆறு பேர் உண்டதற்கு பில் வெறும் 715 ரூபாய். அனைத்தும் சுவையில் பர்ஸ்ட் கிளாஸ். 

மஜீரா என்பது சிக்கனில் தந்தூரி போல் செய்வது. தந்தூரியை கரி சூட்டில் சுடுவர், மஜீரா எண்ணையில் பொறிக்கப்படுவது. மஜீரா சென்ற முறை நெல்லை சென்ற போதே என்னை கவர்ந்த ஒன்று. 


முன்னோட்டம் 

எங்களுக்கு உணவு பரிமாறியவர் மிகவும் பொறுமையாய், அன்பாய், புன்னகையுடன் உணவு கொடுத்தது, உணவிற்கு சுவை கூட்டியது. அவருக்கு டிப்ஸ் வெறும் இருபத்து ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம், அதைக் கண்டு அவர் முகத்தில் எழுந்த சிரிப்பில் எத்தனை ஆனந்தம். காசின் மதிப்பை நன்கு அறிந்த அவரின் சிரிப்பில் இறைவன் அழகாய் தெரிந்தார்.

பார்டரில் கிடைக்காத மன நிறைவு ருசியில் கிடைத்த மகிழ்ச்சியுடன், திருநெல்வேலி அல்வாவை வேட்டையாட புறப்பட்டான் ராமன்.

Thursday, July 4, 2013

சாப்பாட்டு ராமன் - மழை சாரலில் பஜ்ஜி

தாம்பரம் சென்ற பின் அம்பத்தூர் பக்கத்து ஊர் போல் ஆகிவிட்டது. திங்கட் கிழமை,   எனக்கு விடுப்பு என்பதால் உறவுகளை சந்திக்கலாம் என்று புறப்பட்டு, சென்னை புறவழிச்சாலை வழியே முகப்பேரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு ஸ்ப்ளென்டரில் சென்றேன். என் ஏழு வயது அத்தை மகன் ஆண்டிராய்ட் ஸ்லேடில் (அதுதான்பா இந்த tablet) சில பல மாயங்களை காட்டினான். இதுவரை டச் போன் கூட பயன்படுத்த முடியாத என் இயலாமையை எண்ணி அங்கிருந்து விடைபெற்று அம்பத்தூர் அருகில் திருமுல்லைவாயலில் இருக்கும் என் பாட்டி வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினேன்.  

முகப்பேரின் அடையாளங்களான மேடும் பள்ளமும் நிறைந்த சாலைகளை கடந்து, திருமங்கலம் டு வாவின் செல்லும் பிரதான சாலையை நெருங்கும் போது, அம்புகள் போல் நீர்த்துளிகளை வருணன் பூமியின் மேல் தாக்க, அனைவரையும் போல் வண்டியை ஓரங்கட்டி விட்டு, மூடியிருந்த ஒரு கடையின் முன் இருந்த சிமெண்ட் சீட்டின் கீழ் மழைக்கு ஒதுங்கினேன். மழையின் வேகம் சற்று குறைந்தது, என் மூளையில் இருந்து ராம் பேசினான் "முட்டாள் ரூபக் ! மழை + வண்டி + பையில் பணம் இந்த நிலை எப்பொழுதும் வராது, நம் கையில் என்ன ஸ்மார்ட் போனா இருக்கு மழையை கண்டு அஞ்ச, விடுறா வண்டிய அந்த பஜ்ஜி கடைக்கு" .

நீங்கள் மழையில் நனைந்து, அந்த ஈரத்துடன் பஜ்ஜி சுவைத்ததுண்டா? இல்லை என்றால் உம் வாழ்வில் பெரும் சுகத்தை இழந்து உள்ளீர். சில ஆண்டுகளுக்கு முன், அம்பத்தூரில் இருந்த போது, என் நண்பன் ஒரு தள்ளு வண்டி கடைக்கு அழைத்து சென்றதுண்டு, நான் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். அந்த கடையை நோக்கி, மழையில் நனைந்த படி, சாலைகளில் சக்கரத்துடன் நீந்தி, ஆடை நனைய கடையை அடைந்தேன். அங்கு எல்லா தட்டுகளும் காலியாக இருந்தன, உருளைக் கிழங்கு போண்டா இரும்புச் சட்டியில் தயாராகிக் கொண்டிருந்தது, காத்திருந்தேன்.



அம்பத்தூர் தொழிற் பேட்டையில் இருக்கும் AMBIT IT பார்க் எதிரே செல்லும் முதல் குறுக்கு தெரு வழியாக, முருகன் இட்லி கடையை கடந்து சென்று, வலது புறம் திரும்பினால் இந்த கடை இருக்கும். அல்லது திருமங்கலத்தில் இருந்து வரும் போது, மங்கல் ஏறி பூங்காவை தாண்டி வலது புற பாரத் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் சந்தில் திரும்பி சுமார் 500 மீட்டர் சென்றாலும், இடது புறத்தில் இந்த கடைக்கு வரலாம்.



இங்கு சமோசா, உ. கிழங்கு போண்டா, வாழக்கா பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி, காலி பிளவர் பகோடா முதலியவை கிடைக்கும். காலி பிளவர் பகோடா நூறு கிராம் 15 ரூபாய், மற்றவை எது சாப்பிட்டாலும் ஐந்து ரூபாய். கடையில் மொத்தம் ஐந்து பேர், மூன்று சப்ளை சிறுவர்கள், ஒரு பஜ்ஜி மாஸ்டர், ஒரு காஷியர் கம் உரிமையாளர்.





சூடான உ. கிழங்கு போண்டா வந்து இறங்கிய அடுத்த நொடி, இவளோ நேரம் எங்கு இருந்தார்கள் என்று யோசிப்பதற்குள் அனைவரும் வந்து சூரையாடினர், கடைசியில் அந்த தட்டில் மிஞ்சியது மூன்று போண்டா, அதிலும் ஒருவருடன் சண்டை போட்டு, இரண்டு நான் வாங்கினேன், அவருக்கு ஒன்று மட்டுமே. அடுத்து மிளகாய் பஜ்ஜி தயாராகிக்கொண்டிருக்க, உருளைக் கிழங்கு போண்டாவை இருவகை சட்னியுடன் நான் சுவைதுக்கொண்டே சில புகைப் படங்களை க்ளிக் செய்தேன்.



அடுத்து வந்த மிளகா பஜ்ஜிக்கு, போட்டி அதிகம் இருந்தாலும், என் ஹெல்மெட் கொண்டு அனைவரையும் அடித்து தள்ளி முந்தி விட்டேன். நம் தேவை அறிந்து மிளகா பஜ்ஜியை இரண்டாக வெட்டி கொடுப்பது சிறப்பு. காத்திருந்து, சண்டையிட்டு, எல்லா வகைகளையும் சுவைத்த பின் தான் அங்கிருந்து கிளம்ப மனம் வந்தது. சமோசா மட்டும் மாலையுடன் முடிந்தது ஏமாற்றம். மொத்த பில் நாற்பது ரூபாய் தான், ஆனால் நனைந்த சட்டையுடன் மழை சாரலில் சூடான-சுவையான பஜ்ஜியை சாப்பிட்டதில் எத்தனை ஆனந்தம்.

இந்த கையேந்தி பவன் செயல்படும் நேரம் மாலை மூன்று மணி முதல் இரவு 8 30 மணி வரை. உரிமையாளரிடம் பேசியதில் அவர் சொந்த ஊர் மருதூர் என்று தெரிந்தது, ' ஏன் சார் என் ஊர் எல்லாம் கேட்கறிங்க' என்று அவர் கேட்க 'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்' என்று நான் கூற, 'அட உங்க எழுத்தால, என் தலையில எழுதனது மாறவா போகுது?' என்று ஏளனமாய் அவர் கேட்டார். கூட்ட நெரிசலில் அவரிடம் தொடர்ந்து  பேச முடியவில்லை, முக்கியமாக கடையின் பெயர் கேட்கவில்லை, நண்பர்கள் அந்த பக்கம் சென்றால் கடையின் பெயரை கேட்டு சொல்லுங்களேன். இருபது நிமிட பயணத்திற்கு பின் நான் என் பாட்டி வீடு சென்றடையும் பொழுது, மழையில் நனைந்ததற்கான எந்த தடையமுமின்றி, இஸ்திரி போட்டது போல் விறைப்பாக இருந்தது என் சட்டை, இதுதான் சார் சென்னையின் உஷ்ணம்!