இந்த வருடப் பிறந்தநாள் அன்று முதல் முறை ஹைதராபாத் சென்ற ராமனுக்கு, இதுவரை Paradise பிரியாணி பற்றி தன் வாழ்வில் அறியாதது சற்றே வருத்தம் தான். உள்ளூர் நண்பர் உதவியுடன் Paradise ஹோட்டல் சென்றடைந்து, இரண்டாவது மாடி செல்லும் வழியில் காத்திருப்பவருக்கு என்றே சுமார் ஐம்பது இருக்கைகள் இருப்பதைக் கண்டு திகைத்தான். அன்பான புன்னகையுடன் வரவேற்று, தனி மேசை நாற்காலியில் அமரவைத்த அந்த மேசைப் பணியாளர்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதில் இருந்து அங்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவது தெரிந்தது.
ஐந்தில் இருந்து பத்து நிமிடத்திற்குள் எங்கள் பிரியாணி வந்தது. தமிழ் நாட்டில் இருப்பது போன்ற பிரியாணி இல்லை அது. அந்த பிரியாணி வெள்ளை நிற சாதத்தில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் எட்டிப் பார்க்க, கிண்ணத்தின் அடியில் சாதம் அதன் மேல் மசாலா கிரேவி அதன் மேல் மீண்டும் சாதம் என்று இருந்தது. மேசைப் பணியாளர் சரியான அளவு சாதத்தையும் அந்த கிரேவியையும் ஒரு சேர கலந்து தட்டில் பரிமாறினார். இங்கு வெங்காய பச்சடி மற்றும் ஒரு வகை குருமா போன்ற கிரேவி தான் சைடு டிஷ், கத்திரிக்காய் சைடு கிடையாது.
ஆவி பறக்க, அந்தச் சாதத்துடன் இணைந்த அந்த மசாலாக் கலவையும், வாயினுள் ஒரு சேர கலந்து, பற்கள் அதை அறைக்கும் பொழுது தோன்றும் அந்த சுவை நாவிற்கு குதூகலத்தை கொடுத்தது. அடுத்த வாய் உண்ணும் பொழுது சுவை மேலும் மேலும் கூடிக் கொண்டுதான் சென்றது.
பணியாளர்களின் அன்பான உபசரிப்பு கூடுதல் சிறப்பு. நான் என் உணவை புகைப்படம் எடுப்பதைக் கண்டு, எங்கள் மேசைப் பணியாளர் அந்த ஹோட்டலின் வரலாறு அடங்கிய அட்டையை என்னிடம் கொடுத்தார். ஒரு திரையரங்கினுள் சிறு கடையாக துவங்கி, பல மாடிகள் என மாறி, மூன்றுக் கிளைகளுடன் ஹைதராபாத்தின் ஒரு முக்கிய சின்னமாக விளங்குகிறது Paradise பிரியாணி.
இவ்வளவு பெரிய ஹோட்டல்லா அப்போ விலையும் கூட இருக்கும் என்று நினைக்கும் உங்கள் எண்ணம் தவறு. மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பிரியாணி இரண்டுமே விலை ரூபாய் 210. ஒரு சிக்கன் பிரியாணி இருவர் உண்ணும் அளவு இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சாதாரண குளிர்சாதன உணவகங்களிலே விலை 150 ரூபாய் தாண்டி விடுகிறபொழுது, தரமும் அளவும் நிறைந்து கிடைக்கும் இந்த 210 ரூபாய் paradise பிரியாணி விலை குறைவாகத் தான் தோன்றியது. நீங்கள் ஹைதராபாத் சென்றால் இந்த பிரியாணி சுவைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்பது ராமனின் வேண்டுகோள்.
ராமன்ஸ் காம்போ
ஆட்டுக் கால் சூப்பும் அவித்த முட்டையும்:
சாலையோரக் கடைகளில் ஆட்டுக் கால் சூப் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அடுத்த முறை குடிக்கும் பொழுது அந்தக் கடையில் அவித்த முட்டை இருந்தால் அதை அந்த சூப்பில் துண்டாக்கி போடச் சொல்லி சுவைத்து பாருங்கள். அதன் ருசியே தனி. பெரும்பாலான ஆட்டுக் கால் சூப் கடைகளில் இந்தக் காம்போ இருக்கும். இந்தக் குளிர் காலத்தில் அடிக்கடி பிடிக்கும் சளிக்கு மருந்தாகும் உணவு.
| Tweet | ||
