Friday, March 3, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா

****************************************************************************************************************
முந்தைய பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
****************************************************************************************************************
காரில் பயணம் செல்லும் பொழுது பலவித அனுகூலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பிரதிகூலமான பார்க்கிங் பிரச்சனை உண்டு. ஆடவருடன்  தங்கும்பொழுது விடுதியின் தரம் பெரிதும் இல்லாவிட்டாலும் பிகோவை பாதுகாப்பாக இரவு நிறுத்த இடவசதி கொண்ட விடுதியை தேனீ டௌனை நெருங்கியதுமே தேடத்தொடங்கினோம். மூவருக்குமே பரிட்சயம் இல்லாத நகரம், ஒரு விடுதியின் விளம்பரத்தை பின் தொடர்ந்து ஒரு குறுகிய சந்தினுள் பிகோ நுழைந்தது. அந்த விடுதி சற்று சிறியதாக தோன்றவே பார்க்கிங் வசதியை அலச நான் முதலில் சென்று பார்க்க, உளளே பத்து லாரிகளை நிற்கும் அளவு வசதி இருந்தது. எட்டு மணிநேர பயணத்திற்கு பின்பு  பிகோவிற்கு மட்டும் அந்த  ஒய்வு மிக அவசியமானதன்று வண்டியை பத்திரமாக கொண்டு வந்த ஓட்டுநர்களுக்கும் தான். கூகுள் மற்றும் OYO துணையின்றி ஒரு விடுதியில் தங்குவது இதுவே முதல் முறை என்றபொழுதும் சுத்தமான அறை மற்றும் சிக்கனமான கட்டணத்துடன் அன்றைய இரவு இனிதே முடிந்தது.

சூரியோதயத்துடன் விழித்து மூவரும், தேனீ கடந்து வழியில் ஒரு பேக்கரியில் காலை உணவை முடித்து கொண்டு கம்பம் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோவை சென்றபொழுது கண்டது போலே இங்கும் பேக்கரியில் தேநீர் முதல் உணவு வரை சகலமும் கிடைத்தது. வட தமிழகத்தில் வளர்ந்த எனக்கு பேக்கரி என்றாலே கேக் மற்றும் பப்ஸ் கிடைக்கும் கடை என்றுதான் பரிட்சயம். கம்பத்தை கடந்து கேரள எல்லையை அடையத் தொடங்கியதுமே பசுமை கண்ணை ஈர்த்தது. லோயர் கேம்ப் கடந்ததுமே, தரை வழிப் பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தத மலைப்பாதை, எங்கள் முன் வளைந்து உயர்ந்து இருந்தது. மலை ஏறும் வழியில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பெரியார் நிலையத்தை கடந்து செல்ல குமுளி வந்த தமிழ்நாட்டுப் பேருந்துகள் வரிசையாக நிற்க, அங்கு இருந்த ஒரு சோதனைச் சாவடியை கடந்தவுடன் குமுளி எங்களை அன்புடன் வரவேற்றது. தமிழகத்தையும் கேரளாவையும் பிரிப்பது அந்த சாவடியின் சிறு கம்பம் தான். பறந்து விரிந்து இயற்கை எழில் கொஞ்சும் உலகில் மனிதன் செய்த அக்மகிரமங்களில் இந்த எல்லைப் பிரிவுகளும் ஒன்று.

கேரளா வந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கட்டனும் பழம்பொறியும் சுவைக்க வேண்டும். கட்டன் பால் இல்லாத தேநீர், பழம்பொறி பதமாக தேர்வு செய்யப்பட்ட நேந்திர வாழைப்பழத்தில் செய்யப்படும் பஜ்ஜி. அங்கு பழம்பொறி சற்று சுமாராகவே இருக்க அடுத்து எங்கு செல்வது என்று கட்டன் குடித்துக்கொண்டே அலசினோம். எத்தனை முறை அடி வாங்கினாலும் கவுண்டமணியிடமே திரும்பி செல்லும் செந்தில் போலவே மீண்டும் கூகிளிடம் சென்றால், அது 'அடேய் முட்டாள் உன் அருகிலேயே தேக்கடி இருக்கின்றது' என்று நகைத்தது. குமுளியில் இருந்து பத்து நிமிட பயணத்தில் தேக்கடியை அடைந்தோம்.

தேக்கடி 


அரசு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சுற்றுலா தளத்திற்குச் சென்றாலும் மக்கள் கூட்டம் பொங்கி வழிந்து அந்த இடத்தின் அமைதியை கலைக்கும் வழக்கம் தெரிந்தாலும், சொந்த கல்யாணத்திற்கே நாட்களை எண்ணி விடுமுறை கொடுக்கும் இந்த அலுவலக சூழலில், அரசாங்க விடுமுறைகளில் வேறு வழியின்றி பயணிக்கும் கட்டாயம் எங்களையும் தொடர்ந்தது. அங்கும் மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டிருக்க பிகோவை நிறுத்த இடம் கிடைக்க சற்று நேரமானது. படகுத் துறையை அடைந்த பொழுது ஏற்கனேவே ஒரு படகு சென்று விட்டதும் அடுத்த படகு வர இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பது சற்று ஏமாற்றம் தந்தாலும், 'ச்சீ இந்த ஏரில தண்ணியே இல்ல, போன வருஷம் சென்னைல வந்த வெள்ளமே அதிகம்' என்று பிகோவை நோக்கி நடந்தோம். வழியில் சில பயண முகவர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு, 'உங்கள் கார்களாலும் செல்ல முடியாத இடங்களுக்கு ஜீப்பில் கொண்டு சென்று வன விலங்குகளைக் காட்டுகிறோம்' என்று எப்பொழுதோ டிஸ்கவேரி சானலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி எங்களை அழைத்துச் செல்ல விலை பேசத் தொடங்கினர். சொந்த வாகனம் இருக்கும் போது வேறு வாகனத்தில் செல்ல எங்களுக்கு பெரியதொரு ஈர்ப்பு தோன்றவில்லை. எங்கள் ரெஜித்தின் வசீகர பேச்சில் சிக்கிய அந்த முகவர்கள் சில நிமிடங்களிலேயே உண்மைகளை கக்க, ஜீப் பயணம் தேவையற்றது என்று அவர்களே சொல்லிவிட்டனர்.

அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு எங்களது அடுத்த இலக்கு 'பருந்தும்பாறா'வாக நிர்ணயமானது. முழுவதுமே மலைப்பாதை, வழி கேட்க ஒரு ஆத்மா கூட இல்லாத பாதை என்பதால் அந்த கூகிள் அம்மணி காட்டிய வழியில் சென்றோம். வழியில் ஒரு பாலத்தை கடந்து பொழுது அங்கு பெருகி ஓடிக் கொண்டிருந்த ஆற்று  நீரைக் கண்டதும் பிகோவை ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, மூவரும் நீரை நோக்கி துள்ளி ஓடினோம். ஆடவராகப் பிறக்க நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று அகமகிழ்த்தபடியே அங்கு ஒரு ஆனந்தக் குளியல் அரங்கேறியது. தமிழகத்திற்கு வர மறுக்கும் முல்லைப் பெரியாரின் ஓர் கிளையில் கொண்ட குளியல் தந்த உற்சாகத்துடன் எங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம்.

ஆனந்தக் குளியல் அரங்கேறியது இங்கு தான் 
வழி நெடுவிலும், இருபுறமும் மனிதனின் ஊடுருவல் பெரிதும் இல்லாத அந்த இடங்களின் பசுமையான இயற்கை அழகு தந்த மயக்கத்தில் கூகிள் அம்மணியின் மேப் வழியே அந்த சாலையின் முடிவிற்கே வந்துவிட்டோம். ஆனாலும் அந்த அம்மணி எங்களை இடது புறம் திரும்பி எங்கள் பயணத்தை தொடர சொன்னது. இடதுபுறம் ஒரு வீடு மட்டும் தான் இருந்தது. அந்த அம்மணி பின் சென்று கெடுவது இது ஒன்றும் முதல் முறை அன்று. மீண்டும் வந்த வழியே சென்று அந்த அம்மணி காட்டிய மாற்றுப் பாதையில் செல்ல, சில அடிகளிலேயே அந்தப் பாதை கூழாங்கற்கள் சாலையாக மாறியது. ஒரு வாகனம் மட்டுமே செல்லக் கூடிய அந்த குறுகிய பாதையில், நாங்கள் போவது சரியான பாதைதானா என்ற அச்சத்துடனே பயணித்தோம். சில நிமிடங்களுக்கு பின் எங்களை ஒரு ஜீப் பின் தொடர சற்றே நிம்மதி கொண்டோம். அந்தப் பாதையின் வழியே ஒரு அழகியே குளம் எங்களுக்காகவே வடித்தது போல் தன்னந்தனியே அமைதியாக ஈர்த்தது. பிகோவை நிறுத்திவிட்டு அங்கு சில படங்கள் எடுத்திக்கொண்டிருக்க, ஜீப் மட்டுமே செல்லக் கூடிய பாதையில் பிகோ ஓட்டிவந்த சாகச வீரரர்களைக் காண அந்த ஜீப் ஓட்டுநரும் அங்கு நின்று, எங்களுக்கு பருந்தும்பாறா செல்ல வழியும்  தானும் அங்கு தான் செல்வதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்தக் குளம் 
 இந்த இடத்தில இருந்து நாங்கள் ,மூன்று மணியளவில் புறப்பட, மதிய உணவு உண்ணாத பசியில் காரில் இருந்த கனிகளை புசித்துக் கொண்டே எங்கள் பயணத்தை தொடர்ந்து பருந்தும்பாறாவை அடைந்தோம். எங்களைக் கண்டதுமே, எங்களுக்கு வழிகாட்டிய அந்த ஜீப் ஓட்டுநர் மிகவும் ஆனந்தப்பட்டார். பருந்தின் தலைபோல் ஒரு பாறை மட்டும் மலையின் உச்சியில் தனியே நீண்டு இருக்க இந்த இடத்திற்கு பருந்தும்பாறா என்ற பெயர் வந்ததோ? நமக்கு சாகசங்கள் என்றால் தான் மிக பிடிக்குமே, அந்த பருந்தின் தலைக்கு சென்று அங்கு சில செல்பிக்களை எடுத்க்கொண்டு, உயரத்தை கண்டு பருந்தின் தலைக்கு வர பின் வாங்கிய ரெஜித் எடுத்த புகைப்படங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டு, பருந்தின் தலையில் இருந்து மீண்டும் மேல் ஏறும் பொது தான் உணவு உண்ணாததான் விளைவு நன்றாகவே தெரியத்தொடங்கியது. நேராக அங்கு இருந்த கடைகளை நோக்கி செல்ல, அந்த மாலை நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது வேகவைத்த வள்ளிக்கிழங்கும் மீன் குழம்பும் தான். குளிர்ந்த வானிலையில் லேசான மழை சாரல் அடிக்க அந்த மீன் குழம்பும் கிழங்கும் அமிர்தம் போலவே எங்கள் பசியை ஆற்றியது.

பருந்தும்பாரா 


பிரபாகரின் கைவண்ணம் 

பருந்தும்பாறாவில் இருந்து வாகமான் சென்று இரவு தங்கி மறுநாள் வாகமன் சுற்றி பார்ப்பது என்று முடிவு செய்தோம். கதிரவன் மறைந்தபின் அந்த இருண்ட மலைவழிப் பாதை சற்று திகில் உணர்வையே கொடுக்கத்தொடங்கியது. வாகமான் வந்ததுமே இரவு தங்க எந்த விடுதிக்குச் சென்றாலும் 'அறைகள் இல்லை' என்றதே பதிலாக இருக்க, அரசாங்க விடுமுறை தினத்தில் மக்கள் படையெடுப்பால், அந்த குளிரில்  எங்கள்  இரவின் நிலை கேள்விக்குறியானது. குளிர் அதிகரித்துக் கொண்டிருக்க  இறுதியாக ஒரு ரிசார்ட்இல் விசாரிக்க அவர்கள் இருவரும் செல்ல நான் பிகோவில் காத்திருந்தேன். இங்கும் அறை கிடைக்கவில்லை என்றால் அந்த இரவு பிகோவில் அந்தக் குளிரில் தான் என்று நான் எண்ணிக்கொண்டிருக்க, தோல்வியுடனே அவர்கள் இருவரும் வந்தாலும், அவர்களிடம் இருந்த தீர்வு தந்த நம்பிக்கையில், அந்த இரவின் எங்கள் நிலை தெரிய பிகோவின் ஓட்டம் மலையின்  இருளில் தொடர்ந்தது.
                                                                                                                    - பயணம் தொடரும்!

****************************************************************************************************************
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்
****************************************************************************************************************

4 comments:

  1. சுவாரஸ்யமான பயணம்தான்.

    என் கேள்விக்கென்ன பதில்?

    ReplyDelete
  2. இரவில் தொடரும் பயணம். சென்ற இடங்கள் ஒவ்வொன்றும் உங்கள் வார்த்தைகள் மூலம் நானும் சென்ற உணர்வு. தொடரட்டும் பயணம்.....

    ReplyDelete
  3. Nice pictures and writing style is completely different now.. (in a positive way) :)

    ReplyDelete
  4. Do read "Payana sarithiram" by Mukil. Only element i feel missing is humor. you can add little humor wherever possible. Otherwise this is coming out really good!

    ReplyDelete