Thursday, May 30, 2013

Rashamon - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு  பிற மொழி படங்களின் மீது ஈர்ப்பு வர முக்கிய காரணம் இந்த படம். ராஷோமோன் என்பது ஜப்பானிய மொழியில் ஒரு நகரின் வாயிலை குறிக்கும். படம் தொடங்குவதும் முடிவதும் அங்கு தான், மழைக்காக ஒதுங்கும் ஒருவன் அங்கு இருந்த சாமியார் மற்றும் மர வெட்டி இருவரிடம் பேச்சு கொடுக்க கதை ஆரம்பிக்கிறது.

ஒரு கொலையின் முக்கிய சாட்சி தான் இந்த மர வெட்டி, அவன் வழக்கு விசாரணையில் நடந்த ஆச்சரியங்களை சொல்ல, மழைக்கு ஒதுங்கியவன் முழு கதையை கேட்பான். அந்த பிணத்தை முதலில் கண்ட மர வெட்டி காவல் ஆட்களுக்கு தகவல் சொல்லியவுடன், விசாரணைகள் தொடங்கும். 

ஒரு கணவன் மனைவி இருவரும் காட்டு வழியில் செல்ல, அதைக் கண்ட ஒரு கள்ளன் அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு அந்த கணவனை கொன்றான் என்பதே கதை. ஆனால், எப்படி அந்த கொலை நடந்தது, அதை சுற்றிய நிகழ்வுகள் என்ன என்பதை நான்கு பேர் நான்கு கதையாக விசாரணையில் சொல்வர். ஒரு கதைக்கு நான்கு கோணங்கள், இதுவே இந்த படத்தின் சிறப்பு அம்சம்.    

அந்த கள்ளன் ஒரு கதை சொல்லுவான், அந்த இளம் மனைவி ஒரு கதை சொல்லுவாள், இறந்தவன் ஆவியாக வந்து ஒரு கதை சொல்லுவான். எதுதான் உண்மை என்று நாம் குழம்பி இருக்கும் நிலையில், நான்காவதாக ஒரு கதையும் வரும். யார் அந்த கதை சொல்கிறார்கள் என்பதை நான் சொன்னால் உங்களுக்கு சுவாரசியம் கிட்டாது. நான்கில் எது உண்மை கதை என்று படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் நான் ரசித்தவை:

ஒரே காட்சியை திரும்பத் திரும்ப காட்டினாலும்,சலிக்காத விதத்தில் திரைக்கதை அமைத்து இருப்பதே படத்தின் பலம்.


கேமரா ஆட்களின் பின் அவர்களை வேகமாக தொடர்ந்து செல்வது போல் இருப்பதும், பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை  கூட்டும் விதம் இருப்பதும் கதைக்கு வலிமை சேர்க்கின்றன.    
  
அந்த இளம் மனைவியின் நடிப்பு, நான்கு முறையும் மூன்று விதமாக இருப்பது நமக்குள் ஏற்படும் குழப்பத்திற்கு மூல காரணம்.
மனைவி 

அந்த கள்ளனின் கதாபாத்திரம் மிகவும் எதார்த்தமாக சித்தரித்து இருப்பார் இயக்குனர் அகிரா. அவன் உடல் மொழிகள், பேச்சு, நடை எல்லா வற்றிலும் கள்ளனுக்கு ஏற்ற ஒரு திமிர் இயல்பாக அமைந்து இருப்பது அருமை. இந்த கள்ளன் கதாப்பாத்திரத்தில் நடித்தவரை மற்ற அகிரா படங்களிலும் நான் கண்டு ரசித்ததுண்டு. 
   
கள்ளன் 

படத்தில் மொத்தம் ஆறு பேர் தான், முக்கிய கதாபாத்திரங்கள் மூன்று மட்டுமே, மூவரை மட்டும் வைத்து கதையை நகர்த்துவது இயக்குனரின் தனித்திறமை. 

விசாரணை காட்சிகளின் போது கதாபாத்திரங்கள் நம்மை பார்த்து, நம் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது போல் படமாக்கப்பட்டு இருப்பது நம்மை கதையுடன் இணைக்கும்.

உண்மைக்கு என்றுமே பல கோணங்கள் உண்டு என்பதே இந்த படத்தின் மூலம் நான் புரிந்தது. 

நீங்க கேட்களாம் 'ஒரு கதையை பல கோணத்தில் சொல்லும் விதத்தில் ஆயுத எழுத்து, Vantage Point போன்ற  எத்தனையோ படங்கள் வந்து விட்டன, இதில் என்ன சிறப்பு இருக்க போகுது?' என்று.

என் பதில், நகல் எத்தனை வந்தாலும் அசல் என்றுமே ஒசத்தி தான், இந்த பாணியில் கதையை நகர்த்த முதன் முதலில் 1950களிலேயே   விதை போட்டவர் அகிரா.
அகிரா குரோசோவா 
*****************************************************************************************
ஆண்டு : 1950
மொழி   :  ஜப்பானிய மொழி
என் மதிப்பீடு : 4.4/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

Monday, May 27, 2013

தேன் மிட்டாய் - மே 2013 (அனுபவங்கள்)

தேன் மிட்டாய் 
 நாகரீக மாற்றத்தில் காணாமல் போன பல போக்கிஷங்களுள் ஒன்றான 'தேன்  மிட்டாய்'யை நினைவூட்ட, இந்த தலைப்பில் என் வாழ்வில் நான் கண்டு ரசித்த சிறு அனுபவங்களை ஒரு தொகுப்பாக எழுத உள்ளேன். படித்து கருத்துரையிட்டு மின்னல் வரிகள் பால கணேஷ் சார்  சொல்ற மாதிரி 'தோள்ல தட்டிக் கொடுக்கறதோ..தலையில குட்டுறதோ...உங்க இஷ்டமுங்க!'.


வைரஸ் அட்டாக் 
இம்மாதம் என் கணினிக்கு சனி உக்கரத்தில் இருக்கிறது. கணினியை 'மால்' வைரஸ் பதம் பார்த்து விட்டது. எப்படியோ அலசி ஆராய்ந்து, மென்பொருளில் வல்லமை பெற்ற என் அண்ணன் உதவியுடன், வைரஸை நீக்கினாலும், நோயின் பின் விளைவாக கணினி பல சைடு எபக்ட்டுகளுக்கு உள்ளானது. மிகவும் மந்தமாகவே செயல் படுகிறது. எனவே 'safe mode' இல் உபயோகப் படுத்துவதால், திண்டுக்கல் தனபாலன் பகிரும் அருமையான பாடல்களை கேட்க இயலாத நிலை. நண்பர்களே usb சாதனங்களை உபயோகிக்கும் போது சற்று உஷார்.    

அக்னியில் அக்னி சாட்சி  
என்னவென்று தெரியவில்லை, மே மாதத்தில் ஏகப்பட்ட திருமணங்கள். சொந்தம், நட்பு, அலுவலகம் என்று பத்திற்கும் மேல் அக்னி வெய்யிலில் அக்னி சாட்சியை தேடும் விசித்திர மனிதர்கள். அட ஏன்யா இந்த அக்னி வெய்யில்ல கல்யாணத்த வைக்கறிங்க? என்று என்னால் கேட்க முடியவில்லை. காரணம் எந்த கல்யாணத்துக்கும் நான் செல்ல வில்லை. ஹி.. ஹி... ஒரே நாளில் மூன்று திருமணங்கள் வைத்தால், யாரை விடுவது, எதற்கு செல்வது என்ற குழப்பத்தில், அமெரிக்க அடிமை வேலையை தொடருவதே மேல் என்று அலுவலகம் சென்று விட்டேன்.

மே மாதம் திருமணக் கோலம் கண்ட அனைத்து நண்பர்களுக்கும் இல்லறம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

அடுத்த பதிவு தயார் 
ஒரு நாள் தங்கையை கல்லூரியில் விட சென்ற போது, தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள், (மாணவர்கள் அப்போது கண்ணில் படவில்லை, நம்புங்கள்)  'டூ மார்க், 16 மார்க்' என்று பேசி சென்றது காதில் விழ, கல்லூரியில் அடித்த பிட்டுக்கள் நினைவில் வந்தது. அடுத்த பதிவிற்கு கதையும் சிக்கியது.   

அண்ணாச்சி பேசாதிங்க 
தமிழ் மணத்தில் என் வலைப்பூவை இணைத்த செய்தியை மின் அஞ்சலில் பார்த்து,  'அப்பாட இனிமேலாவது நமக்கு கொஞ்சம் ஹிட்ஸ் அதிகம் ஆகும்'  என்று  வானில் பறந்து கொண்டிருந்த சமயம், என் அம்மா பச்சை மிளகாய் வாங்கி வரச் சொன்னாள். ஒரு முக்கிய பிரமுகர் மிளகாய் வாங்கவா என்று பற்களை கடித்து, வண்டி எடுத்து சென்றேன். தெரு முனையில் உள்ள கடை என்றாலும், நடப்பது நமக்கு கடிது.

மணி 5: 35
'அண்ணாச்சி அஞ்சி ருபாய்க்கு பச்சை மொளகா'  என்று சொல்லி அவரையே நான் பார்த்து கொண்டிருந்தேன். பணிவாக, பொறுமையாக கடைக்கு வந்த பெண்கள் கூட்டத்தை சமாளித்து கொண்டிருந்தார். 

மணி 6:45 
வெறும் ஐந்து ரூபாய்க்கு பச்சை மிளகாய் வாங்கி நான் வீடு திரும்பும் போது 'இதுக்கு நானே போய் வாங்கி இருப்பேன்' என்று என்னை திரும்பிக்  கடித்தார். 

இயக்குனர் மற்றும் நடிகர் மணிவன்னன் பல முறை கூறியதுண்டு, நான் தான் முட்டாள் தனமாக இருந்து விட்டேன். 'பொம்பளைங்க இருக்கற கடைக்கு காய் வாங்க போகாத, நம்மள மதிக்க மாட்டாங்க'.                
                                
இறக்கும் வரை உழைத்த உத்தமன் 
நாடே (தமிழ் நாடே) டி.எம்.எஸ். மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த வேளையில், என் தெருவில் சென்ற வாரம் காலமான பால் கடை தாத்தாவிற்கு நான் அஞ்சலி செலுத்த விரும்பிகிறேன். தள்ளாத என்பதுகளிலும் கடையில் பாக்கெட் பால் விற்றவர், தான் இறந்த நாள் காலை வரை பால் விற்று கொண்டுதான் இருந்தார் அந்த உன்னத மனிதன்.   

தோற்ற விஞ்ஞானம் 
நண்பரின் பத்து மாத குழந்தை வாந்தி, பேதி என்று அவதிக்கு உள்ளானது. சென்னையில் உள்ள பல முன்னணி மருத்துவமனைகளில் மொய் எழுதியும் பயனின்றி, சொந்த ஊரான நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். என்னடா இந்த நேரத்துல ஊருக்கு அழைத்து போகிறார்களே என்று வருந்திய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நாட்டு வைத்தியம் அந்த குழந்தையை காப்பற்றியது, அவன் சாவியில் இருந்து விழுங்கிய பாசியை அவன் வாய் வழியே உருவி எடுத்து விட்டனர். ஆச்சரியம் ஆனால் உண்மை.

இது போன்று எவ்வளோ கலைகள் நம் நாட்டில் சரியான முறையில் மற்றவர்களுக்கு கற்று தராததாலும் ஆவணங்களாக மாறாததாலும் அழிந்து போகின்றன.

பூச்சாண்டி 
நண்பர் வீட்டிற்கு சென்ற போது, ஒரு பெண் குழந்தை அடம் பிடிக்க, 'தம்' வருது என்று அந்த குழந்தையை பயம் காட்டினார், அந்த குழந்தையும் அடங்கி விட்டது. இது என்ன 'தம்' என்று கேட்டபோது, தூரத்தில் இருந்த கிரேனை காட்டி, அந்த குழந்தையை நோக்கி 'இந்த தம் அடம் பிடிக்கற குழந்தைகள தூக்கிட்டு போகும்' என்றார்.

ஆமாம் என்ன பண்ண முடியும், சன்னலை திறந்தா  அதுதான் தெரியுது, அத காட்டி தான் பயம் காட்ட முடியும். இப்ப எல்லாம் எங்க இந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் வர்றாங்க.          

கியர் பிரச்சனை 
உறவினர் வீடு சென்ற போது, கடைக்கு செல்ல அவர் வண்டியை எடுக்க வேண்டிய கட்டாயம். இதுவரை நம் ஐயா ஸ்ப்ளென்டர் தவிர வேறு வண்டியை தொட்டது கூட கிடையாத ஏக வண்டி விரதன், பஜாஜ் டிஸ்கவர் ஓட்ட எடுத்தால், நியுட்ரல் கொண்டு வரவே முடியலை, என் வியர்வை துளி வண்டி டாங்கை நனைக்க, என் அண்ணன் குரல் மேலிருந்து 'கியர் குறைக்க லீவரை பின்னாடி தள்ளு, ஸ்ப்ளென்டர்க்கு அப்படியே ஆப்போசிட் ', அட ஸ்டார்ட் ஆயிடுச்சி.

என்னைப் போல பயிற்சி ஓட்டுனர்களை ஏனப்பா இப்படி குழப்புரிங்க, எல்லாம் இரு சக்கர வண்டி தான, ஒரே மாதிரி தயாரிக்க கூடாதா?

மாச கடைசி
நேராக பல சரக்கு கடைக்கு சென்றேன், வழக்கம் போல் பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ். இந்த ஹார்லிக்ஸ் கொடுக்கற பழக்கத்த கொஞ்சம் மாத்துங்கப்பா, ப்ளீஸ்.

பில் 368 என்றாள்  அந்த பெண், சற்று சுமார் தான். கார்டை எடுத்து நீட்டினேன்.
இந்த கவருக்கும் காசு வாங்கறாங்களே, பிளாஸ்டிக் பையை ஒழிக்கவா இல்லை அதிலும் இலாபம் பார்க்கவா? என்று என்னுள் எண்ணிக் கொண்டிருக்க 'கார்டு டிக்லைன், வேற கார்டு கொடுங்க' என்றாள்.

வேற கார்டுக்கு நான் எங்க போக, திரும்ப தேய்க்க சொன்னேன். திரும்பவும் டிக்லைன், அவள் ஏக்கத்துடன் என்னை பார்க்க, பின்னால் வரிசையில் இருந்தவன் என்னை மொறைக்க, என் மூளையில் மின்னல் மின்னியது. '300 ரூபாய் என்டர் பண்ணுங்க, மீதி கேஷ் தரேன் ' என்றேன், என் நிலைமை புரிந்த ஓரக்கண்ணில் புன்னகைத்தாள்.

உங்க வங்கி இருப்பு இப்ப முப்பத்து நான்கு ரூபாய் நாற்பத்து ஒன்பது பைசா என்று குறுந்தகவல் வந்தது. ஜூன் வர இன்னும் ஐந்து நாட்கள்!

பானி  பூரி  
பானி பூரி வாங்க மேடவாக்கம்-தாம்பரம் சாலையில் காமராஜபுரத்தில் இருக்கும் கையேந்தி கார்னருக்கு சென்றேன். அங்கு மொத்தம் நான்கு தள்ளு வண்டி கடைகள் இருக்கும், எல்லா வகையான சாலை ஒர உணவுகளும் ஒரே இடத்தில கிடைக்கும் இடம் அது என்பதால், நான் வைக்கும் பெயர் இது.

'அண்ணே மூனு பானி  பூரி பார்சல்'

'இல்ல தம்பி .ஒடைஞ்ச பூரி தான் இருக்கு.'

'பரவா இல்லனா, இருக்கரத கொடுங்க.'

'இல்ல தம்பி இன்னைக்கு நான் கொடுத்துடுவேன். நாளைக்கு நீங்க வரணும் இல்ல. எந்த பக்கம் வீடு?'

'கேம்ப் ரோடு போகணும். அட நீங்க எத கொடுத்தாலும் நான் திரும்ப வருவேன்னா'

'எனக்குனு மனசாட்சி இருக்கு, கொஞ்சம் இருங்க ஆள் அனுப்பி கொண்டு வரச் சொல்றேன்' என்று சொல்லி தன் கடை பையனை அனுப்பி, என்னை காக்க வைத்து, நல்ல பூரி கொடுத்து அனுப்பினார்.

சென்னையில் காசுக்கு ஆச படாத நல்லவங்களும் இருக்காங்க, என்ன மழை தான் வருதில்லை .                                 

Tuesday, May 21, 2013

களவு - பகுதி நான்கு



*******************************************முன் குறிப்பு *********************************************
இப்பகுதியை படிக்கத் தொடங்கும் முன், சுவாரசியம்  குறையாமல் இருக்க முதல் மூன்று  பகுதிகளை படித்து விட்டு, பின் தொடரவும். நன்றி. 
*********************************************************************************************************

அன்று - 1983 

மலையில் இருந்து கீழே இறங்கிய எட்டி, ஒரு குகைக்குள் நுழைந்தான். தீப்பந்த ஒளியில் கம்பத்துக்காரர் சம்மணம் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார், கேழ்வரகு களி போல் தெரிந்தது அரை போதையில் இருந்த எட்டிக்கு. 'எசமான் நீங்க சொன்ன மாதிரியே ஒருத்தன் வீரபாபுவ பார்க்க போனான். நானும் பின்னாடியே போனேன். மொத்தம் எட்டு கூரை வீடுங்க, இருபது ஆம்பள, நாலு பொம்பள, ஏழு பசங்க, பக்கத்துல ஒரு அருவி இருந்துச்சி, ஒரு காவலாளி மரத்து மேல இருந்து காவ காக்கரான்', என்று எட்டி கூறியதை ஆராய்ந்த அவர் மூளையின் நியுரான்கள் செயல் படத்தொடங்கின.

இருவரும் ஏறிக்கரை செல்ல, சின்னவர் எட்டு மாட்டு வண்டிகளுடன் தயார் நிலையில் இருந்தார். நான்கு வண்டிகளில் நெல் மூட்டைகள் நிறைந்திருந்தன, மற்ற நான்கு வண்டிகளில் ஆற்று மணல் நிரம்பிய மூட்டைகள் ஏற்றப்பட்டன. அங்கு வந்த பெரியவர்   'என்னையா, இவன்மணல் கொள்ளையனா இருப்பன்போல?' என்று சின்னவரை பார்த்துகேட்க, கம்பத்துக்காரர் 'பின்னாடி உங்க சமாதி கட்ட உதவும்னு, இப்பவே எடுத்து வைத்துகொள்கிறோம்.' என்று ஏளனம் செய்தார்.

பெரியவர் அழைத்து வந்த எட்டு பணியாட்கள் வண்டிகளை நகர்த்த, கம்பத்துக்காரர் எட்டியுடன் காட்டு வழியில் மலை ஏறத் தொடங்கினார். தேய் பிறை நிலாவும், மின்னலும் வழி காட்ட, இடி ஓசையுடன் இருவரும் அருவியை அடைய, வீரபாபு தன் படையுடன் குதிரையில் செல்வதைக் கண்டனர்.

எட்டி அந்த காவலாளி இருந்த மாமரத்தின் மேல், சிறிதும் சத்தம் இன்றி, உடும்பு போல், விறு விறு என்று, அந்த காவலன் காணும் முன் ஏறி, பின்னால் இருந்து அவன் கழுத்தை இருக்கி, தன் கையில் இருந்த துணியால் அவன் வாயை கட்டினான். அந்த காவலனை ,மற்ற பெண்கள் குழந்தைகளுடன் சேர்த்து ஒரு வீட்டினுள் கட்டி வைத்து, இருவரும் ஒரு புதரினுள் ஒழிந்தனர்.

(முந்தைய பகுதியில்) சின்னவர்கொடுத்த பையை கம்பத்துக்காரர் திறந்து அதனுள் இருந்த டார்ச்லைட்டை எடுத்து, ஏறிக்கரையை நோக்கி அதன் பொத்தனை மூன்று முறை இருபது நொடி இடைவெளி விட்டு அழுத்த, ஏறிக்கரையில் இருந்து மறு ஒளி வந்தது.

மண் சாலையில் இரு புறமும் அடர்ந்த காடு சூழ, ராந்தல் விளக்கு நிலவொளிக்கு பலம் சேர்க்க, சலங்கை ஒலியுடன் நான்கு வண்டிகள் வந்தன. வீரபாபு தன் சேனைகளுடன் சாலையை மறைத்து, அவனது இரு-தோட்டா துப்பாக்கியை வான் நோக்கி ஒரு முறை சுட, வண்டி ஒட்டி வந்தவர்கள் வந்த வழியே ஓடினர். இரண்டு வண்டிகளை விற்க எடுத்து செல்லவும், மற்ற இரண்டு வண்டியில் இருக்கும் மூட்டைகளை மேலே எடுத்து வரவும் ஆணையிட்டு மேலே சென்றான்.

பதினாறு பேரும் ஆளுக்கு ஒரு மூட்டையை சுமந்துமேலே ஏற, இருவர் வண்டி ஒட்டி செல்ல,ஒருவன் குடிசைக்குள் அடைக்க பட்டிருக்க, மற்றொருவன் எங்கே?. மூட்டை ஏந்தி வந்தவர்கள் அருவியை கடக்கும் போது, சின்னவர் தலைமையில் வந்த  ஊர் மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர், தோளில் இருந்த சுமையால் அவர்களால் தப்ப முடிய வில்லை.

வீரபாபு அவன் மறைவிடம் வந்த போது அங்கு இருந்த அமைதி அவன் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த, குதிரையை விட்டு கீழே இறங்கி மரத்தின் மேல் பார்த்த போது, எட்டி அவன் பின் வந்து, குதிரையில் இருந்த வீரபாபுவின் துப்பாக்கியை தன் வசமாக்கினான்.

கம்பத்துக்காரர் அவன் முன் தோன்றி 'இனி நீ தப்ப முடியாது' என்றவுடன் வீரபாபு 'முட்டாள்களே, உங்களால் என்னை பிடிக்க முடியாது' என்று கூறி முடிப்பதற்குள் 'தொப்' என்று ஒரு சத்தம் கேட்டது. எட்டி கீழே கிடந்தான், வீரபாபுவின் தம்பி வீரவேலு கையில் கட்டையுடன் இருந்தான். வீரபாபு துப்பாக்கியை எடுத்து, குதிரையில் ஏறி, கம்பத்துக்காரரை நோக்கி சுட, இடியின் ஓசை அந்த தோட்டாவின் ஓசையை விழுங்க, மின்னல் வேகத்தில் கம்பத்துக்காரர் செயல்பட்டு விளக, அவர் இதயத்தை நோக்கி வந்த அந்த தோட்டா அவர் இடது  மார்பில் முத்தமிட்டது.

வீரபாபு அவன்தம்பியுடன் இருளில் மறைய, அனைவரும் அங்கு வர, பெரியவர்  'குருட்டு கபோதி வீரபாபு! நெஞ்ச பார்த்து சுட கூட தெரியலை' என்று அவன் சென்ற திசையை பார்த்து உறுமினார்.

இன்று - 2013

மூவரும் அந்த கிடங்கை அடைந்த போது, அங்கு காவல் துறை வந்து தயாராக இருந்தது. அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் பவன் சிங் காதை கடிக்க, பவன் சிங் முகம் மாறியது. கம்பத்துக்கரர் அருகில் வந்து , பவன் சிங் 'உங்க பேரன் இங்க இல்லையாம், அவனோட டிரஸ், வாட்ச் மட்டும் தான் இருக்கு' என்று கூற கம்பத்துக்கரர் தான் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று செல்ல, அவர் முகத்தில் வியர்வை வடிவதை கே.கே. கண்டார். உள்ளே சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கம்பத்துக்கரர் படியில் இறங்கும்போது, படியின் முனையில் இருந்த தாமரை போன்ற கை பிடியை பிடிக்க, அது அவர் கையுடன் வர, ஒரு கையால் தன் இடது மார்பை பிடித்த படி மயங்கி விழுந்தார்.



Tuesday, May 7, 2013

கையேந்தி பவன் - வசூல் மன்னர்கள் (அனுபவங்கள்)

இரவு பத்து மணி, மனித நடமாட்டம் குறைந்து நாய்கள் வீதிகளை ஆக்ரமிக்கும் நேரம், என் சிறு குடல் பெருங்குடலை விழுங்க தயாராக இருந்தது, பையில் இருந்தது அறுபத்து ஆறு ரூபாய், எங்கும் மினு மினுக்கும் உணவு விடுதிகள், ராஜாவாக அல்ல சாணக்கியனாக சாப்பிட வேண்டிய தருணம், 'மனம் தளராதே இன்னும் தூரம் போ'  என்று என்னுள் ஒருவன் சொல்ல, வண்டியை ஒரு சந்துக்குள் விட்டேன்.


சற்று தூரத்தில் வெள்ளை விளக்கு எரிய, என் தேடல் முடியும் நேரம் வந்தது. நீல நிற வண்ணம் பூசிய நான்கு சக்கர தள்ளு வண்டி, ஒரு அடுப்பின் மேல்  இட்லி குண்டான்,  மற்றொரு அடுப்பின் மேல் தோசை கல், நான்கு பேர் பிளாஸ்டிக் கவர் மூடிய தட்டில் தோசையை பதம் பார்த்துக் கொண்டிருக்க, அந்த தோசை எப்பொழுது கீழே விழும் என்று இரண்டு நாய்கள் காத்துக் கொண்டிருந்தன. மாவு தீர்ந்து விட்டதால் கடை முதலாளி தன் கடை சிறுவனை மாவு கொண்டு வர அனுப்பினார். கடை மூடும் சமயம் என்பதால் இட்லியும் இல்லை, மாவு வர காத்திருந்தேன்.         

நான்கு நாட்கள் பின்னே சென்றால், மே ஒன்று உழைப்பாளர் தினம், இரண்டு தமிழ் படங்கள் எதிர்பார்ப்புடன் வெளியாகிய தினம் அது,நான்   அமெரிக்காவுக்கு உழைப்பதால் அன்று எனக்கு விடுமுறை இல்லை, உழைத்து கொண்டே உழைப்பாளர் தினம் கொண்டாடும் பல அடிமைகளில் நானும் ஒருவன், மறுநாள் வியாழன் முதல் தொடங்கியது என் சினிமா வேட்டை.  

எதிர் நீச்சல்: 
(அச்சம் வேண்டாம், இது சினிமா விமர்சனம் இல்லை.)
இந்த படத்தை உடன் பணிபுரிவோருடன் நாவலூர் AGSஇல் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, பைக்கை பார்க் செய்ய சீட்டு வாங்க எப்பவும் போல் இருபது ரூபா தாளை நீட்டினேன், 'முப்பது ரூபா சார்' என்று சொல்லி சுவரில் கட்டண மாற்றம் பற்றி எழுதியிருந்த பலகையை காட்டினான். மூன்று மணி நேரத்திற்கு முப்பது ரூபாய் சற்று அதிகம் தான், என்ன செய்வது வண்டியை வெளியே விட்டால்,போக்குவரத்து காவல் சில பல சித்துவிளையாட்டுக்கள் செய்துவிடுகின்றனர். 'அவன் மட்டும் எப்பவுமே நல்லவன் தான்' என்று என் மனம் சொல்லியது.

சூது கவ்வும்:
இந்த படத்தை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் எஸ்கேப் திரையரங்கில் பார்க்க சந்தர்பம் கிடைத்தது. பைக்கை பார்க் செய்ய செல்லும் போது, ஒரு நான்கு அடி உயர கம்பத்தின் தலையில், பொத்தானை அழுத்தினால் சீட்டு கக்கும் இயந்திரம் இருந்தது, அது வாயால் கக்கிய என் சீட்டை பையில் போட்டு உள்ளே சென்றேன். படம் முடிந்து வண்டியை சற்று சிரமத்துடன் கண்டுபிடுத்து வெளியே வரும்போது, வசூல் அதிகாரி என் சீட்டை கேட்டான், கொடுத்தேன். சீட்டில் இருந்த பார் கோடை ஸ்கேன் செய்தவுடன் 'நூற்று இருபத்து ஐந்து ரூபாய்' என்று அவன் திரையில் காட்டியது, நான் அவ்வளோ ரூபாய்க்கு பெட்ரோல் கூட போடவில்லையே என்று கேட்ட போது, வெளியில் இருந்த கட்டண பட்டியலை காட்டினான்.

அதில் வார நாட்களுக்கு ஒரு கட்டணம் என்றும்  சனி-ஞாயிறுக்கு ஒரு கட்டணம் என்றும் பிரித்து எழுதி இருந்தது. மேலும்  முதல் ஒரு மணி நேரம் ஒரு குறிப்பிட்ட கட்டணம் என்றும், அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூடுதல் கட்டணம் என்றும் எழுதி இருந்தது.  முக்கியமான குறிப்பு ஒன்று, அந்த இயந்திரம் கக்கிய சீட்டை தொலைத்தால் நூற்று எழுபது ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இரண்டு சக்கரத்துக்கே இந்த நிலைமை என்றால், நான்கு சக்கரம் கொண்டு வருபவர்களின் நிலை, அப்பப்பா! கணக்கு போடவே தலை சுற்றுகிறது, பேருந்தில் செல்வது உசிதமென்ற நிலையை அடைந்தாலும், 'அவன் மட்டும் எப்பவுமே நல்லவன் தான்' என்று என் மனம் சொல்லியது.            

அயர்ன் மேன் - 3:
ஊரில் இருந்த அந்த ஒரு நல்லவனைத் தேடி போன பொழுது, இப்படமும் சேர்த்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பல ஆண்டுகளாக பத்து ரூபாய் மட்டுமே பார்க்கிங் கட்டணமாக வசூல் செய்து கொண்டிருந்த சத்யம் திரையரங்கில். ஆனால் எனக்கு அங்கும் ஏமாற்றம் தான், சமீப காலமாக இங்கும் பார்கிங் கட்டணம் இருபது ரூபாயாக மாறி இருந்தது. 'அவன் மட்டும் எப்பவுமே நல்லவன் தான்' என்பதை இனி சொல்ல முடியாது. காரணம்- இருந்த ஒரு நல்லவனையும் மாத்திட்டாங்க, நாடு வாழ்க!

 
சத்யவாக்கு: 
அப்போது தான் நினைவுக்கு வந்தது 'சத்யவாக்கு'நாடகம் சக பதிவர்களுடன் நாரத கான சபாவில் கண்டது.அங்கு பார்கிங் கட்டணம் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே. நாடக விமர்சனம் எழுதிய கணேஷ் சாரின் கருத்துரை மறுமொழியில் 'என்ன அங்க பார்கிங் கட்டணம் எல்லாம் வாங்கனாங்களா?' என்று அதிர்ச்சி கொண்டார். சென்னையில் காசுக்காக அலையாத சில நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று என்னுள் எண்ணி முடித்த பொழுது மாவும் வந்து சேர்ந்திருந்தது.

உடன் உணவருந்தி கொண்டிருந்த ஒரு சீருந்து ஓட்டுனர் என்னிடம் 'முப்பது ரூபாய்க்கு தயிர் சாதம் சாப்டவனும், மூவாயிரம் கொடுத்து சோலா ஓட்டல்ல தயிர் சாதம்  சாப்டவனும் காலயில  கக்கூசுக்கு தான் போகணும் தம்பி.' என்று ஆவேசமாக சொன்னார், அவர் சொல்லியதில் ஒரு உண்மை இருந்தது. அவர் கஸ்டமர் ஒருவர் சோலா ஓட்டலில் சாப்பிட்டு விட்டு தன் காரில் ஏறிய போது தயிர் சாதத்தின் விலையை தன்னிடம் கூறியதாக ஒரு விளக்கமும் தந்தார்.  மாவு தோசையாக மாற, ஆறு தோசை மற்றும்  இரண்டு ஹாப் பாயில் சண்டையில் மடிய, என் குடல்களுக்குள் சமாதான சால்னா பரவ, மனமும் வயிறும் நிறைய மொத்தம் ஐம்பத்து ஆறு ரூபாய்  கொடுத்தேன் கடைக்காரரிடம். ஹாப் பாயில் தொண்டையில் இறங்கும் போது கிடைக்கும் உணர்வு எந்த ஸ்டார் ஓட்டலிலும் கிடைக்காது. 

நான் கொடுத்த காசை எடுத்துக்கொண்டு கடைக்காரர் வேகமாக சென்றார், அவரை என் கண்கள் பின் தொடர, கொஞ்ச தூரத்தில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒரு காக்கிக் சட்டையிடம் இருபது ரூபாய் தாளை அவர் நீட்டியவுடன் காக்கி சட்டை பறந்தது. நான்  அவரை பார்த்து 'என்ன அண்ணே தினமும் இருபதா?' என்றேன். 'அப்படி எல்லாம் கணக்கு கிடையாது தம்பி, அவுக இந்த பக்கம் வர்றப்ப எல்லாம் கைல சொறியனும், காவல் தொர நம்  நண்பர்கள் இல்லையா?' என்று கூறி ஏளனமாய் சிரித்தவரின் மனதில் எத்தனை புரிதல், ஏழையின் சிரிப்பில் எந்த இறைவன் தான் தெரிவார்?

சென்னை வெய்யிலின் தாக்கம் இரவிலும் வாட்டிக் கொண்டிருக்க, வீடு வந்து அடைந்தவுடன்  தண்ணீர் பருக குளிர் சாதனப்பெட்டியை நான் திறக்க, உள்ளே ஒரு கரப்பான் பூச்சி தன் உவ்ர்ச்சியுறுப்பை என்னை நோக்கி ஆட்டியது. அக்னி நட்சத்திரம் யாரைத்தான் விட்டு வைக்கிறது!  

*******************************************விளம்பரம்****************************************************
காணவில்லை :
 கோலி சோடாவும் அவன் இளைய சகோதரி பன்னீர் சோடாவும்.

காணாமல் போன இடம் : கிழக்கு தாம்பரம்.      

கண்டுபுடிப்போர் இந்த தளத்தில் முகவரி இட்டு செல்லவும். (வெளி நாட்டு கம்பெனி சோடாக்கள் வருகையால் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாமோ என்று பரவலாக அஞ்சப்படுகிறது.)

Saturday, May 4, 2013

12 Angry Men - உலக சினிமா


****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************



ஆங்கில கருப்பு வெள்ளைப் படங்களின் மேல் எனக்கு ஈர்ப்பு வர முதல் காரணம் '12 ஆங்ரி மென்' என்கிற படம், அதன் பின் தான் எனக்கு எல்லா கிளாசிக் படங்களின் மேல் ஒரு காதல் வந்தது. இந்த படத்தை விமர்சிக்கும் முன்னோ அல்லது காணும் முன்னோ அமெரிக்க நீதித்துறை பற்றி அறிந்துகொள்வது அவசியம் என்பதால், சில முக்கிய நடை முறைகளை முதலில் கண்டு, பின் படத்தை பற்றி காணலாம். (பின் வரும் தவல்களும் எனக்கு உலக சினிமா கற்பித்தவையே.)

ஒரு வழக்கு நீதி மன்றத்தில் நடுக்கும் போது பன்னிரண்டு பேர் கொண்ட 'jury' நீதிபதிக்கு வலதுபுறம் அமர்ந்து எல்லா விசாரணை நிகழ்வுகளையும் கவனித்துக்கொண்டு இருப்பர். இவர்களை தேர்வு செய்வதே ஒரு பெரிய முறை தான், குற்றவாளிக்கு எந்த வித சம்மந்தமும் இல்லாத, சாதாரண மக்களையே தேர்வு செய்வர். வழக்கு விசாரணை நடக்கும் சமயம் அவர்களுக்கு எந்த வித வெளி உலக தொடர்பும் இருக்காது. விசாரணை முடிந்த பிறகு, அவர்களை ஒரு அறையில் அடைத்து பூட்டி விடுவர். குற்றம் சாட்ட பட்டவர் 'குற்றம் செய்தவர்' என்றோ அல்லது 'குற்றம் அற்றவர்' என்றோ அவர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும், அவர்கள் செய்யும் அந்த தேர்வே நீதிபதியின் தீர்ப்பாக அமையும். 

இப்போது உங்களுக்கு இந்த படத்தின் தலைப்பு சற்று விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். முதல் இரண்டு நிமிடங்கள் நீதிபதி அந்த வழக்கில் தந்தையைக் கொன்றதாக மகன் மீது சாற்றிய குற்றங்களை சுருக்கமாக கூறுவார், பின் அந்த பன்னிரண்டு jury உறுப்பினர்களும் ஓர் அறைக்குள் அடைக்க படுவர். படம் நடப்பது முற்றிலும் அந்த அறையில் தான். ஒரு அறைக்குள் பன்னிரண்டு பேருக்கு இடையில் நூற்று இருபது நிமிடங்கள் நடக்கும் வசனங்கள் தான் இந்த படம்.



நான் படத்தில் ரசித்தவற்றை பட்டியலிடுகிறேன் :

ஒரு அறைக்குள் படமாக்கப்பட்ட கதை என்றாலும், எந்த ஒரு நொடியிலும் விருவிருப்பு குறையாதபடி வசனங்கள் அமைந்திருக்கும்.

ஒருத்தரை மட்டும் சில இடங்களில் 'Mr. Foreman' என்று அழைப்பர், படத்தில் மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்காமலே கதை முடிந்து விடும்.          

கருப்பு வெள்ளை படம் என்றாலும், வெளியில் மழை பொழியும் போது உள்ளே விளக்குகளை ஆன் செய்வதும், அந்த சுவிட்சில் மின்விசிறியும் இணைந்து ஓடும் போது தான், வியர்வையால் சட்டை நனைந்தவர்களுக்கு மின்விசிறி முதலில் ஓடாத காரணம் விளங்குவதும் ரசிக்க வைத்த சிறு விஷயங்கள்.                       

அறைக்குள் அனைவருக்கும் வியர்வை வரும், ஒருத்தரை தவிர. ஆனால் அந்த ஒருத்தருக்கு வியர்வை வரும் தருணம் உங்கள் வாய் தானாக விசில் அடிக்கும்.



பன்னிரெண்டில் பதினொன்று பேர் மட்டும் உடனே அவன் குற்ற்றவாளி என்று முடிவு செய்துவிடுவர், ஆனால் ஒருவர் மட்டும் அவன் குற்றவாளியாக இல்லாமல், சந்தர்ப்பமும் சாட்சியங்களும் அவனுக்கு எதிராக இருந்தால்?, என்று தனித்து நின்று வாதாட தொடங்குவார்.

ஓர் இடத்தில 'He don't know how  to speak English.' என்று ஒருவர் சொல்லும் போது, மற்றொருவர் 'He doesn't know how to speak English.' என்று சொல்லி மிக அழகாக அவர் பிழையை சுட்டிக்காட்டுவார்.

முதல் வாக்கு பதிவு 11/1 'குற்றவாளி' என்று பதிவாகும், வாதங்கள் தொடரும், பின் 9/2 என மாறும். வாதங்கள் சூடு பிடிக்கும், சமன் நிலையை அடையும் 6/6. அதன் பின் சக்கரம் திசை மாறி சுற்ற 2/9 என்று மாறும், இறுதியில் 1/11 'குற்றவாளி இல்லை' என்றே மாறும். 

என்னடா கதையை சொல்லிவிட்டானே என்று  மனதிற்குள் கேக்கறிங்களா, அந்த வசனங்களில் தான்  சுவாரஸ்யமே இருக்கு. உறுதி செய்யப்பட்ட சாட்சிகள் வாதத் திறமையால எப்படி உடைக்க படுகின்றது என்பதை நீங்க படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

'கோர்ட் ரூம் சினிமா' என்று ஒரு பிரிவு உண்டு, என் பார்வையில், அந்தப் பிரிவில்  '12 ஆங்ரி மென்' படத்திற்கே முதலிடம். 

*****************************************************************************************
ஆண்டு : 1957
மொழி : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.6/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் IMDB
*****************************************************************************************