Thursday, June 27, 2013

தேன் மிட்டாய் - ஜூன் 2013

வாலிப வயசு 
சக அலுவலர் திருமணத்திற்கு, அலுவலக நண்பர்களுடன் வேப்பேரி சென்றிருந்தோம், பச்சை பசேல் என்று சென்னையில் ஒரு செழிப்பான பகுதி. அந்த பச்சைகளை ரசித்தவாறு நான் சாலையை கடக்க, எதிரில் வந்த வண்டியை கவணிக்கவில்லை, அந்த வண்டியின் சக்கரம் என் காலணி மேல் பதிந்தது. அந்த வண்டியில் கணவன் மனைவி இருவருமே இருந்தனர், கணவன் ஒன்றும் சொல்லவில்லை, மனைவி முறைத்தாள். கணவன் பேசாததுக்கு காரணம் பின்னால் சிரித்துக்கொண்டே வந்த சீனு சொன்ன தகவலில் தான் புரிந்தது. 

மனைவி 'எப்படி வராங்க அறிவே இல்லாம, பராக்கு பார்த்துகுட்டு'.
கணவன் 'ஏன்டி திட்டற? பசங்கன்னா பிள்ளைங்கள பார்க்கத்தான் செய்வாங்க', என் இனமடா நீ.        

திடீர் மழை 
சென்னை புறவழிச் சாலையில், நம்ம ஐயா ஸ்ப்ளென்டரின் அனைத்து   பாகங்களையும் திரட்டி எண்பதுகளில் வேகம் பிடித்து பறந்து கொண்டிருக்க , வெய்யில் முடியை பொசுக்க, எதிர்பாராமல் வானிலை மாறி, மேகம்தார் சாலையை குளிப்பாட்டியது. புறவழிச் சாலையை விட்டு தாம்பரம் நோக்கி இறங்கும் போது, முன்னே ஒரு ஆல்டோ ஓரங்கட்ட, நீதானமின்றி நம்ம ஐயா அதை மோதச் செல்ல, என் இதயம் பயந்தாலும், மூளை வேகமாக செயல் பட்டு, கைகளுக்கு சிக்னல் விரைந்து அனுப்ப, நான் வண்டியை வலது புறம் வேகமாக சாய்த்து முன் செல்ல, என் இடது கால் வண்டியின் பின் பம்பரை பதம் பார்த்தது. வண்டியை முன் சென்று நிறுத்தினால் பம்பர் தனியே தெரிய, அய்யோ போச்சே என்று என் மனம் தவிக்க, கார்க்காரன் முதலில் திட்டினாலும், அவன் பம்பர் நான் கைவைத்தவுடன் வண்டியில் எதுவும் நடக்காதது போல் ஒட்டிக்கொள்ள, அந்த ஓட்டுனர் என் நலம் விசாரித்து சென்றான்.

ஓங்கி அடிச்சா


இதே போன்ற நாய்(?) தான் அது.

 அயர்லாண்டில் மேற்படிப்பு முடித்து விட்டு தாயகம் திரும்பிய என் நண்பனை காண அவன் வீடு சென்றிருந்தேன். அவன் வீட்டில் ஒரு செல்ல நாய் உண்டு, எனக்கு நாய் என்றால் பயம் கிடையாது, அன்றுவரை. நான் என் வண்டியை நிறுத்தி விட்டு, தலைகவசத்தை கழட்ட, படுத்து இருந்த அந்த நாய், என்னை நோக்கி வேகமாக பாய, நான் பின் நோக்கி செல்ல, இதயம் படபடக்க அதன் நாக்கு என் மூக்கை தொட, நல்ல வேளை வாட்ச்மேன் அதை பிடித்து நிறுத்தினான். க்ரேட் டேன் இனத்தை சேர்ந்தது அந்த நாய், ஒரு மினி கன்னுக்குட்டி போலத்தான் இருக்கும். உசிர் பயம்னா என்னான்னு காட்டுடிச்சி பரமா...             


ரசித்த (?) கம்மல்கள் 
இன்றைய மங்கைகளின் காதுகளை கவனிக்கும் பழக்கம் உண்டா? எனக்கு பெண்களின் அணிகலன்களில் மிகவும் பிடித்தது கம்மல் தான். மறைமுகமாக ரசிப்பது உண்டு. இப்போது எல்லாம் கண்டதை காதில் மாட்டிக்கொள்வது பேஷன் ஆகிவிட்டது, அப்படி நான் கண்டு ஆச்சரியப்பட்ட சில கம்மல்கள் 
 செருப்பு தொங்கும் கம்மல்,
மயில் இறகு வடிவக் கம்மல்,
பொத்தான் வடிவக் கம்மல்,
தோசை கல் வடிவக் கம்மல்,
தட்டு  வடிவக் கம்மல் என்று பட்டியல் நீளும்.  

சாவி தொலையாமல் இருக்க..
உங்களுக்கு மீனாட்சி கம்மல் தெரியுமா? விஜய் டிவியில் வெளியாகும் சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடிக்கும் அக்கா போடும் வகையான கம்மல்களுக்கு அவர் பெயரே வைத்து மார்க்கெட்டிங் பண்ணுகின்றனர். ஒரு காலத்தில் குஷ்பூ இட்லி போல. 

எங்கே போகணும்?  
வெள்ளிக்கிழமை மாலை ஆறுமணி, மக்கள் வெள்ளம் எனத் திரண்டு இருந்த சிறுசேரி பேருந்து நிலையம், சண்டை இட்டு ஒரு ஷேர் ஆட்டோவில் ஏற, அவனோ சோளிங்கநல்லூர் நெருங்க சட் என்று ஒரு சந்தினுள் நுழைய, எதிரில் இருந்த பெண் பயப்பட, பெண்களின் பாதுகாவலன் ரூபக் அந்த பெண்மணிக்கு ஆறுதல் சொல்லினாலும், என் மனதில் ' எங்கே போகணும்' என்று நான் பார்த்த ஒரு குறும்படம் நினைவில் வந்தது. அந்த குறும்படம் OMR சாலையில் IT மக்களை ஒரு சந்தினுள் கடத்தி பண அட்டைகளை பிடுங்கி, காசு எடுத்துக்கொண்டு பின் அவர்களை ஓட விடும் உண்மை சம்பவத்தை தழுவிய படம். நண்பர்கள் காண இங்கு சொடுக்கவும், எங்கே போகணும்.

 ஆடு மேயிது  
கான்கிரீட் காடாக மாறிய சென்னை மாநகரில், மாருதிக்கு நன்றி சொல்லிய ஆடுகள்.  

copyright @ கனவு மெய்ப்பட 2013
 
 L போர்டு 
இந்த L போர்டை பார்த்தவுடன் என் நினைவிற்கு வருவது நான் சாலையில் சமீபத்தில் ஒரு ஆல்டோவின் பின் எழுதி இருந்த ஒரு வாசகம். தான் பயிற்சி ஓட்டுனர் என்பதை நாசூக்காக சொல்லிய அந்த ஞானி யாரோ? இதோ அந்த வாசகம்.

                                                     ' Don't follow me

 'coz I am not

 Mahatma ' 

சமீபத்திய க்ரஷ் 
 தில்லு முல்லு படம் பல முறை பார்த்ததுண்டு, ஆனால் ஒரு முறையும் மாதவியை ரசித்தது இல்லை. ராஜ பார்வை படத்தை ஒரு முறை தான் பார்த்தேன், ஏனோ ஒரு காதல் மயக்கம் மாதவியின் மேல் தோன்றி விட்டது.  பின் அவர் வரலாறை ஆராய்ந்தால், தென்னிந்திய மொழிகளில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து,தமிழில் பெரும்பாலும் ரஜினி-கமல் இருவருடன், தில்லு முல்லு, ராஜ பார்வை, டிக் டிக் டிக், சட்டம், தம்பிக்கு எந்த ஊரு, காக்கி சட்டை, அதிசய பிறவி என்று பல வெற்றி படங்களில் நடித்து இருந்தாலும் இணையத்தில் இவரின் நல்ல படங்கள் இல்லாதது வருத்தமே.  மாதவி ரசிகர் மன்றத்தில் யாரேனும் உறுப்பினராக இணைய விரும்பினால் தயங்காமல் என்னை அணுகவும்.

எவ்வளோ அழகு !

திடங்கொண்டு போராடு - காதல் பரிசு போட்டியில் கலந்து கொள்கிறேன் என்று வீராப்பாக சொல்லிவிட்டாலும் இதுவரை எழுத சிந்தனை வர வில்லை. ஆனால் இப்போது மாதவியை என் நெற்றிப்பொட்டில் நிறுத்தி, கற்பனை கத்தியை தீட்டி சிந்தனை சிற்பி எழுத தொடங்கு..... 'என்னமா அங்க சத்தம்?' ....'சும்மா பேசிட்டு இருக்கேன் மாமா'...     

பதிவர் சந்திப்பு 
புலவர் இராமாநுசம் ஐயா வீட்டில், மஞ்சுவின் வருகையை ஒட்டி நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். கவியாழி, கோவை ஆவி, தென்றல் சசி கலா, இராமாநுசம் ஐயா, ஸ்கூல் பையன், மதுமதி, சேட்டைக்காரன் ஐயா உள்ளிட்ட எனக்கு முன் அறிமுகம் இல்லாதவர்களுடனும், இரண்டாம் முறை சந்திக்கும் மின்னல் வரிகள் (Remo) கணேஷ் மற்றும் நண்பர் சீனுவுடன் அந்த சந்திப்பு இருந்தது. பதிவுலகிற்கு புதியவன் என்றோ, அவர்களிடம் அறிமுகம் இல்லாதவன் என்றோ நான் அன்று அந்த சபையில் ஒரு போதும் உணரவில்லை. பதிவர்கள் தமிழால் வந்த உறவுகளோ என்ற கேள்வியுடன், அன்றும் இரவு(அடிமை)ப் பணி இருக்க, பிரியா விடை பெற்று பாதியில் சென்றேன்.


தமிழ்10 திரட்டி 
தமிழ்10 திரட்டியில் சேர முடியாமல் தடுமாறியபோது, அவர்களை தொடர்பு கொண்டு பதிவுகளை இணைக்க கிடைத்த தகவலை இங்கு பகிர்கிறேன், அறியாதவர்கள் பயன்படுத்திக்கொள்ள.


Monday, June 24, 2013

ராஜ பார்வை - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


தமிழில் எந்த படத்தை பற்றி எழுதுவது என்று சிந்தித்து கொண்டிருந்த போது, சென்ற வாரம் புலவர் ராமானுஜம் ஐயா வீட்டில், சேட்டைக்காரன் உடன் நிகழ்ந்த உரையாடல் நினைவிற்கு வர, அப்பொழுது பேசப்பட்ட படங்களில் ஒன்றான ராஜ பார்வை பற்றி இங்கு என் கருத்துக்களை பகிர்கிறேன்.

இந்த தலைமுறையில் பலருக்கு இப்படி ஒரு படம் இருப்பது தெரியாதது சற்று வருத்தம். பிரபல தெலுங்கு இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தமிழில் இயக்க, கமல்ஹாசன் கதை எழுத, கமலும் மாதவியும் நடித்து, 1981ஆம் ஆண்டு  கமலின் நூறாவது படமாக வெளிவந்தது 'ராஜ பார்வை'.

மாதவி.... 

இளமையில் டைப்பாய்டு நோயின் தாக்கத்தால் கண் பார்வை இழந்து, பணக்கார வாழ்கையை துறந்து, சொந்தக் காலில் ஒரு பின்னணி இசை குழுவில் வயலின் வாசிக்கும் ரகுவிற்கும் (கமல்), கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து, கதை எழுதும் ஆர்வம் கொண்ட நான்சிக்கும்(மாதவி) இடையில் மலரும் அழகிய காதலை சொல்லும் படம் இது.
       
படத்தில் நான் ரசித்தவை:

படத்தின் தொடக்கத்தில் எல்லோரும் தம் முன் இருக்கும் இசைக் குறிப்புகளை பார்த்துக்கொண்டு, தம்  இசைக் கருவிகளை வாசித்து கொண்டிருக்க, படத்தில் தொடர்புடையர்வர்களின் பெயர்கள் திரையில் செல்ல, இறுதியில் கமல் முன் இருக்கும் தாங்கி காலியாக இருப்பதை காட்டி, அவருக்கு பார்வை இல்லை என்பதை அழகாக காட்டியிருப்பார்.     



கண் பார்வை இல்லாதவர்கள் தம் அடியை கணக்கில் வைப்பதை மிக இயல்பாக சொல்லி இருப்பர். கண் பார்வை இல்லாத ரகுவாக கமல் நம் நெஞ்சில் வாழ்வார். எந்த ஒரு காட்சியிலும் கண் இமைக்காமல் நடித்து இருக்கும் கமலுக்கு சல்யூட்.

நான்சி மற்றும் ரகு, ரகுவின் வீட்டில் இருக்கும் பொழுது, மின்சாரம் தடை பட ' அய்யோ இருட்டு' என்று நான்சி பதற, 'எங்களுக்கு எப்பொழுதும் இருட்டு தான்' என்று ரகு நகைத்தாலும், அந்த வசனம் என்னை தாக்கியது.       

நானும் நான்சியை (மாதவியை) காதலித்தேன் என்பது மறுக்க முடியாத உண்மை. 



படத்தின் பெரிய பலம் பின்னணி இசைதான், பல வசனம் இல்லா காட்சிகளுக்கு இளையராஜாவின் இசை அழகு சேர்த்துள்ளது.

திரைக்கதை மற்றும் கேமரா மிகவும் சிறப்பாக கையாளப்பட்டு இருக்கும், ஒரு காட்சியின் முடிவிற்கும் அடுத்த காட்சியின் தொடக்கத்திற்கும் ஒரு இணைப்பு இருப்பது பல இடங்களில் ரசிக்க வைத்தது. குறிப்பாக ஒரு காட்சியில் நான்சி 'You fool' என்று முடிக்க, அடுத்த காட்சி பால் குண்டான் விசிலுடன் அந்த 'fool' ஓசையை ஒத்து தொடங்கும். இது போன்று பல இணைப்புகள் ரசிக்கும் படி இருக்கும்.  

நான்சி தன் தந்தை வீட்டை விட்டு வெளியே செல்ல காத்திருக்கும் காட்சி வசனமே இல்லாமல், பின்னணி இசையால் பல எண்ணங்களை சொல்லும்.



வீட்டை கல்யாணத்துக்காக தயார் செய்யும் காட்சி மிகவும் பிரமாதமாக இருக்கும், அதிலும் வசனம் கிடையாது, திரைகள் இசையுடன் விரைவாக நகரும் காட்சி அது.    

காதல் படம் என்றால் முடிவு சுபமாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது வழக்கம், ஆனால் இந்த படத்தில் ரெண்டுமே இல்லாமல் பகுதி இரண்டு எடுக்கலாம் என்பது போல் அமைந்து இருக்கும். எப்படி என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

'அந்தி மழை பொழிகிறது' என்று SPB பாடிய பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 'அழகே அழகு' என்ற பாடல், கேட்ட நொடி முதல் மனதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. 

இப்படி பத்து இருபது ஆண்டுகள் பின் வர வேண்டிய கதையையும் தொழில்நுட்பத்தையும்  கொடுத்தனாளோ என்னவோ படம் பெரும் அளவில் வெற்றி பெற வில்லை என்றாலும், இது எல்லா காலத்திற்கும் பொருந்தும், அனைவரும் காணவேண்டிய ஒரு காதல் காவியம்.      

*****************************************************************************************
ஆண்டு : 1981
மொழி : தமிழ்
என் மதிப்பீடு : 4.5/5
*****************************************************************************************

Monday, June 17, 2013

களவு - பகுதி ஐந்து

*******************************************முன் குறிப்பு *********************************************
இதுவரை என் தொடரை படித்து ஆதரித்து வரும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. புதிய வாசகர்கள் இப்பகுதியை படிக்கத் தொடங்கும் முன், சுவாரசியம் குறையாமல் இருக்க, சிரமம் பாராமல் முதல் நான்கு பகுதிகளை படித்து விட்டு, பின் தொடரவும். படிக்க கீழ் உள்ள வரிகளை சொடுக்கவும், நன்றி.
களவு - பகுதி ஒன்று
களவு - பகுதி இரண்டு
களவு - பகுதி மூன்று
களவு - பகுதி நான்கு

*********************************************************************************************************

இதுவரை :
கம்பத்துக்காரரின் பெயரன் வேலுவை என்ஜின் மோகன் கடத்தி, இருபது லட்சம் பணம் கேட்க, கம்பத்துக்காரர் பவன் மற்றும் கே.கே. உதவியுடன், வேலுவின் GPS வாட்ச் மூலம் அவன் இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்றார். அங்கு கம்பத்துக்கரர் அருகில் வந்து, பவன் சிங் 'உங்க பேரன் இங்க இல்லையாம், அவனோட டிரஸ், வாட்ச் மட்டும் தான் இருக்கு' என்று கூற, உள்ளே சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கம்பத்துக்கரர் படியில் இறங்கும்போது, படியின் முனையில் இருந்த தாமரை போன்ற கை பிடியை பிடிக்க, அது அவர் கையுடன் வர, ஒரு கையால் தன் இடது மார்பை பிடித்த படி மயங்கி விழுந்தார்.

இன்று - 2013 

மயங்கி விழுந்த கம்பத்துக்காரரை, பவன் சிங் மற்றும் கே.கே. அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில், ICUவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. சீப் டாக்டர், 'இது ப்ர்ஸ்ட் அட்டாக், அவர கரெக்ட் டைம்ல அட்மிட் பண்ணதுனால பிழைத்துவிட்டாரு இனிமேல் தான் கவனமா இருக்கணும்' என்று தன் கண்ணாடி பிரேமில் இருந்த தூசியை துடைத்தவாறு சொல்லி முடித்தார்.              

கே.கே. தன் கைபேசியை பார்த்துக்கொண்டே பவன் சிங்கை நோக்கி வந்து, அவர் காதை கடித்தார், கம்பத்துக்காரர் மனைவி, மற்றும் மகன் வர, இருவரும் பிகோவில் பறந்தனர். ஆவடி வழியாக, பூந்தமல்லி நோக்கி அறுபதில் சென்று கொண்டிருந்த வண்டி, NH45ஐ தொட்டவுடன் , ஸ்பீடோமீட்டர் நூறை காட்டியது, எந்த மனித அடையாளமும் இன்றி இருவருமே மௌனமாகத்தான் இருந்தனர்.                     

வாலாஜா கடந்தவுடன், சாலை ஓரம் சும்மா இருந்த  காவல் துறை 'சுமோ', பவன் சிங் வந்த பிகோவைக் கண்டவுடன், தன் கொண்டை சிவப்பு விளக்கு எரிய சைரன் ஒலி வீச, கே.கே. வின் பிகோ முன் சீறிக்கொண்டு செல்ல, காட்பாடி வழியே காந்தி நகரை அடைந்தனர். காந்தி நகர் 'முதல் கிழக்கு மெயின் ரோட்டில்' இருக்கும் டாஸ்மாக் அருகில் சுமோவின் பின் பகுதியை முத்தமிட்டவாறு வண்டி நின்றது. சுமோவில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் சிவா, பிகோவின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த பவன் சிங்கிற்கு புன்னகையுடன் சலாம் வைத்தார். 

இந்த சிவா துணிவு நேர்மை என்று இருப்பதால் பல ஊர்களுக்கு மாற்றப் பட்ட வாலிபர், பவன் சிங்கின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பவன் 'என்னய்யா சிவா? இந்த முறை சொதப்பிவிடாதே' என்று சலிப்புடன் கேட்க, சிவா தன் தொப்பியை சரி செய்து கொண்டு ' ஸ்ட்ராங் லீட்ஸ் சார். இந்த டாஸ்மாக்ல தான் நேத்து 'என்ஜின்' மோகனோட மச்சான் கோபால ஸ்பாட் பண்ணி இருக்காங்க, ரொட்டின் செக்ல அவன் பயந்து ஒலரிட்டான்' என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மூலையில் இருந்த ஸ்டோர் ரூமில் இரு காவலர் கண்காணிப்பில் இருந்த கோபாலிடம், கே.கே. வேலுவின் புகைப்படத்தை தன் டாப்லட்டில் காட்டி 'இவனா?' என்று கேட்க, 'ஆம்' என்றபடி  அவன் தன் தலையை ஆட்டினான்.   

சிவா 'செகண்ட் மெயின் ரோட்ல இருக்கற பழைய பங்களா வீடு, இவங்க மொத்தம் ஆறு பேர், அந்த பயன கட்டி ஒரு அறையில பூட்டி வைத்துவிட்டு, காலை-மாலை  சாப்பாடு தரப்ப மட்டும் உள்ள பொவாங்களாம். சோ தி ஹாஸ்டேஜ் ஸ் செக்யூர்.' என்று விபரங்களை பவன் முன் கொட்டினார். கே.கே. பவனை நோக்கி 'பிரேக் இன்' என்றார், சிவா குறுக்கிட்டு 'அதில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம், அந்த பங்களாவின் அருகில் ஒரு ஸ்கூல் இருக்கு' என்றார். பவன் 'ஸ்கூல் முடியும் வரை காத்திருப்போம், பிரிங் இன் தி ஷூட்டர்ஸ்' என்று ஆணையிட்டார். ஒய்வு பெற்றவர் என்றபோதும், காவல் துறையில் பவன் சிங்கிற்கு என்று தனி செல்வாக்கு உள்ளதை, சிவாவின் அடிபனியலில் கே.கே. கண்டு வியந்தார்.

மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடி உற்சாகமாக தம் வீடுகளை நோக்கி பயணத்தை தொடங்ககினர். அருகில் இருந்த பங்களா பராமரிப்பு இன்றி செடி கொடிகள் சூழ, பெயிண்ட் உதிர்ந்து, மிகவும் மோசமாக இருந்தது. கே.கே. அந்த பங்களாவின் வரலாறை ஆராய்ந்த போது, அந்த வீட்டு மருமகள், மாமியார் கொடுமையினால் தூக்கில் தொங்கி இறந்து, பேயாக வந்து அந்த குடும்பத்தை அழித்ததாக அந்த தெரு வாசிகள் பயத்துடன் சொல்லியதை எந்த வித ஆச்சரியமும் இன்றி கேட்டார். அந்த பங்களாவை ஒட்டி இருந்த மாமரத்தின் வழியே மாடி சென்று, அவர்களை சுற்றி வளைப்பது என்று முடிவானது. வாசல் வழியே யாரேனும் தப்பினால் சுடுவதற்கு இரு ஸ்னைபர்கள் தயார் நிலையில் ஸ்கூல் மாடியில் இருந்தனர்.


கதிரவன் அடுத்த பாதி உலகை சுட்டெரிக்க செல்ல, இருள் இந்த பாதி உலகை சூழ, ராக்காலச் சிறப்பு  கண்ணாடிகளுடன் அதிரடிப்படை சிவா தலைமையில், வீட்டினுள் இறங்கியது. பத்து நிமிட தொடர் துப்பாக்கி சத்தத்தின் பின், கயிலி அணிந்த ஒருவன் மட்டும் முன் வாசல் வழி வர, ஆகாயத்தில் இருந்து வினாடிக்கு எழுநூற்று தொண்ணூற்று ஏழு மீட்டர் வேகத்தில் பறந்து வந்த தோட்டா அவன் துடையை துளையிட்டது. சிவா வலுவிழந்த வேலுவை தன் தோளில் தூக்கியபடி வெளியே வர, தொடையில் சுடப்பட்ட 'என்ஜின்' மோகன் கையில் விலங்கிடப்பட்டு, காவல் துறை வண்டியில் ஏற்றப்பட்டான்.

பவன் சிங் மற்றும் கே.கே. வேலுவை CMC அழைத்துச் சென்று தேவையான முதலுதவி வழங்கி, அவனை சென்னை அழைத்து வந்தனர். அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனையில் மூன்றாம் மாடியில் இருந்த  கம்பத்துக்காரரை காண, மின் தூக்கியினுள் சென்று  வேலு மூன்றாம் எண் பதிந்த பொத்தனை அழுத்த, அது அவன் கையுடன் வர, அவன் உடலினுள் மின்சாரம் புக, பவனும் கே.கே. வும் செய்வதறியாது அவன் அருகில் நின்றனர்.

களவு தொடரும்........                                                                                

Wednesday, June 12, 2013

VITயில் நான்

VIT என்ற பெயரில் பல குழப்பங்கள் இருப்பதால், முதலில் இந்த தலைப்பை தெளிவு செய்ய விரும்பிகிறேன். நான் வேலூரில் இருந்த போது வேலூர் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி செல்ல நேர்ந்த அனுபவம் குறித்த ஒரு கட்டுரை இது.





நான் L.K.G முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தது வேலூர் காந்தி நகரில் உள்ள வில்லியம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில். ( ஒன்பது ஆண்டுகளுக்கு முன், வகுப்பு கடிதங்களில் என் பள்ளியின் பெயரை எழுதிய நினைவு). 1960 ஆம் ஆண்டு 'டவுன்ஷிப் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்' என்ற பெயரில் தொடங்கப் பட்ட இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது நான் சேர்ந்த போது. நான் வளர வளர பள்ளியும் பிளஸ் 2 வரை உயர்ந்தாலும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாய் குறைந்து கொண்டு  இருந்தது. பல புது பள்ளிகள் ஆடம்பரமாக மக்களை இழுத்தபொழுதும் என் பள்ளி கல்வி சேவையையே மையமாகக் கொண்டு செயல்பட்டதால் பெரும் அளவில் பொருளாதார வளர்ச்சி பெற வில்லை.

வெறும் ஐந்து நிமிட நடையில் இருக்கும் தெருமுனையில் தான் எனது ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி.பின் இடப் பற்றாக் குறை காரணமாக புதிதாய் இடம் வாங்கி, ஆறாம் வகுப்பு முதல் வெள்ளைக்கல் மேடு நோக்கி சென்றது எனது பழைய புதிய பள்ளி. இந்த வெள்ளைக்கல் மேடு VITக்கு மிக அருகாமையில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் ஸ்கூலில் இருந்து ஹை ஸ்கூல் தினமும் பள்ளி பேருந்தில் செல்வது வழக்கம், செல்லும் வழியில் VECஐ (அன்றைய  VIT ) தரிசித்து , அடுத்து வரும் இடது புற சந்தில் திரும்பி சற்று தூரம் சென்றால், வயல்வெளிகளுக்கு நடுவில், முள் வேளி சூழ, ஒரு கால்பந்து மைதானத்துடன் அமைதியாய் காட்சி தரும் இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய எனது பள்ளி.

என் பள்ளியை பற்றி நினைத்தாலே எனக்கு நினைவில் வருது எங்கள் தாளாளர் செரீனா வில்லியம்ஸ் அவர்கள் தான். ஆங்கிலத்தில் 'Dynamic leadership' என்று ஒரு கோட்பாடு உண்டு, அதை நான் இந்த பெண்ணில் தான் முதன் முதலில் கண்டேன். இவரை சாதித்த பல பெண்களுடன் ஒப்பிட முடிந்தாலும், எங்கள் பள்ளியை பொறுத்த வரை அவர் ஒரு லேடி ஹிட்லர் தான். 

சிலரை பார்த்தால் பயம் வரும், ஆனால் இவரை போன்ற சிலரை நினைத்தாலே மரியாதை கலந்த பயம் வரும். ஒரு சின்ன உதாரணம் சொன்னால் உங்களுக்கு புரியும்.  பள்ளியில் ஒரே ஆட்டம் பாட்டம் கூச்சல் என்று இருக்கும் சமயம், அவரது  பியட் கம்பெனியின் ப்ரீமியர் சீருந்து பள்ளியை நெருங்கும் ஓசை கேட்ட அடுத்த நொடி, 'என்னப்பா இங்க இருந்த ஸ்கூலக் காணம்' என்று ஆச்சரியப்படும் படி தலை கீழாக ஒழுக்கமா மாறி இருக்கும்.  அப்படி ஒரு பயம் அவர் மீது, மாணவர் முதல் ஆசிரியர் வரை.  

வகுப்பு தலைவன் என்பதால், யாருக்கு என்ன வேண்டுமானாலும் என்னைத்தான் அவரிடம் தூது அனுப்புவர், இப்படி பல சமயங்களில் அவருடன் உரையாடியதுண்டு. ஒரு முறை அரையாண்டு தொடங்க இருக்கும் சமயம், PT வகுப்பில் விளையாட வேண்டும் என்று அனைவரும் என்னை அவரிடம் அனுமதி கேட்க அனுப்பினர். அவர் அறையில் நாற்காலியில் அமர்ந்து எதோ பைல்களை அலசிக்கொண்டு இருந்தார் , நான் உள்ளே சென்றவுடன், சற்று நிமிர்ந்து தன் மூக்கின் நுனியில் இருக்கும் வெள்ளை அரை ப்ரேம் கண்ணாடி வழியே ஒரு பார்வை பார்த்தார் பாருங்கள், அந்த தருணம் என் அத்தனை நாடிகளும் அடங்கி விட்டது. What a powerful woman! எப்படியோ எதையோ நடுக்கத்துடன் உளறி, வந்த காரணத்தை கூறி விளையாட அனைவருக்கும் அனுமதி வாங்கி விட்டேன்.  

இப்படி ஒரு புஜபல பராகிரமம் நிறைந்த செரீனா வில்லியம்ஸ் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்றாலும், இப்போதைக்கு நம் தலைப்பிற்கு திரும்ப சென்று விடலாம். நான் போடும் மொக்கை தமாஷ்களை கேட்டு ரெட்டை சடை அசைந்தால் என் உள்ளம் விமானத்தில் பறந்து இந்திரலோகம் சென்று ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு வகுபிற்கு திரும்பும், ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இனி. 

எல்லா மாலையும் பள்ளி முடித்து, இரண்டு தெரு தள்ளி இருக்கும் என் நண்பன் S.நவீன் (இங்கு நமக்கு தேவை S என்ற initial கொண்டவன்) வீட்டில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படிப்பட்ட அன்றைய தினத்தில்   பக்கத்துக்கு வீட்டு நாயை யார் ஏமாற்றி பந்தை எடுப்பது என்று கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருந்த போது என்றுமே என்னைத் தேடி வராத என் அம்மா அங்குவந்தது ஆச்சரியம் என்றால் வந்ததும் என்னிடம் கூறிய செய்தி அதைவிட ஆச்சரியம், அதாவது என் இனிய தாலாளர் செரீனா வில்லியம்ஸ் என் வீட்டு தொலைபேசிக்கு அழைத்து, உடனே என்னை அவர் வீடு வரச் சொல்லி இருந்தார் என்ற செய்தியை சொன்னார். நவீன் அண்ணன் எனக்கு வழி சொல்ல, என் மிதி வண்டியில் அவர் வீடு சென்ற போது, வாசலில் ஸ்டீவ்  சார் எனக்காக காத்திருந்தார். 

என்னை அழைத்து உள்ளே சென்றார். கணவனை இயற்கை அழைத்து கொள்ள, மகன்களை வெளி நாட்டு மோகம் அழைத்து செல்ல அவர் மட்டும் தனிமையில் வாழ்ந்து வந்தார். 'VITல நடக்கும் maths model போட்டிக்கு நீ ஏன் கலந்துக்கல...உம்... இப்பவே இவன அழைச்சிட்டு ஸ்கூல்க்கு போங்க, ஏதாவது மாடல் இருக்கும், அத சாம்பிள்கு கொடுங்க. இவன் நாளைக்கு கலந்துப்பான்' என்ற அந்த ஆசிரியர் ஸ்டிவை நோக்கி ஆங்கிலத்தில் சொன்னார்.சிலரிடம் முடியாது என்று சொல்ல நம் வாய் வராது, அவரிடமும் அப்படித்தான், தலையாட்டிய படியே சிலையாக நின்றேன். 'It's late but never to late' என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு, அதையே என் மனதில் சொல்லிக்கொண்டு என்னை நானே சமாதானம் செய்து, ஸ்டிவ் சாரின் டி.வி.எஸ். இல் பள்ளி சென்றோம்.

யாரும் இல்லாமல் பூட்டப்பட்டு, மிகவும் அமைதியாய் என் பள்ளியைக் கண்டது அதுவே முதல் முறை. அப்பொழுதே அமைதியின் பால் ஒரு காதல் கொண்டேன். ஸ்டீவ் சார் எனக்கு 'Pythagoras  Theorem' வரைந்து இருந்த மாடல் ஒன்றை கொடுத்தார். வீடு திரும்பி என் அத்தையின் உதவியுடன் அந்த மாடலுக்கு தெர்மோகோல் உருவம் கொடுக்க, வண்ணக் காகிதங்கள் ஆடை கொடுக்க. அது உயிர் பெற்று VIT செல்ல தயாரானது.                                             

மறுநாள் காலை வழக்கம் போல் ஹை ஸ்கூல் செல்லும் பள்ளி பேருந்தில் ஏறி, VIT வாசலில் சக பள்ளி மாணவர்களுடன் இறங்கிக் கொண்டேன். என்னை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான், பெயர் கொடுக்காதவன் எப்படி வந்தேன் என்று, முழு கதை கேட்டவுடன் அவர்கள் காதில் புகை தான். நான் கால் பதித்த முதல் கல்லூரி VIT, உள்ளே சென்றவுடன் எல்லா கட்டிடங்களையும் இணைக்க தார் சாலை, பல வடிவங்களில் இருந்த பிரம்மாண்ட கட்டிடங்கள், வண்டிகள் பல உலா வர, ஆடை வரம்பு இன்றி பல அக்காக்களும் வர, அந்த நாள் இனிதே தொடங்கியது.



ஒரு வகுப்பில் எங்கள் மாடல்களை வைக்க ஏற்பாடு செய்திருந்தனர், அங்கு சென்று எல்லாம் தயார் செய்து பார்வையாளர்களுக்காக காத்திருந்தோம். ஒரு வர் பின் ஒருவர் வந்து பார்வையிட, அனைவருக்கும் Pythagoras தியரத்தை மீண்டும் மீண்டும் விளக்கினேன். இன்று கூட நீங்கள் என்னை தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் பிழை இன்றி ஒப்பித்து விடுவேன். பார்வை நேரம் முடிந்து மாலை அரங்கில் முடிவுகள் அறிவிக்க படும் என்று சொல்லினர், அங்கு இருந்த பிற மாடல்களை கண்டபொழுது  எனக்கு முடிவு தெரிந்து விட்டது.



மத்த பிரிவுகளில் கலந்து கொண்ட என் பள்ளி மாணவர்களை பார்க்க சென்றேன். முதல் ஆச்சரியம் கான்டீன், என்ன சாப்படற எல்லா வகைகளும் உள்ளே கிடைக்குதா?, என் பள்ளியில் ஒரு பொட்டி கடை கூட இருக்காது. அங்கு அந்த மத்திய நேரத்தில் உலா வந்தவர்கள் யாருமே தனித்து இல்லை,  ஜோடியாக எல்லா மர நிழல்களிலும் காதல் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். சின்ன பையன எப்படி கெடுத்து இருக்காங்கன்னு பாருங்க மை லார்ட்.

இங்கு வெளி நாட்டு நீக்ரோக்கள் சற்றே அதிகம். நான் முடி திருத்தும் கடையில், அமட்டன் அவர்களின் இரண்டு மில்லி மீட்டர் நீள முடியை வெட்ட போராடும் காட்சிகளை நான் கண்டு வியந்ததுண்டு.  மாலை அரங்கம் சென்றோம், ஒரு திரை அரங்கம் போல், மேல் இருந்து தாழ்வாக, ஒலி-ஒளி வசதிகளுடன்  மிரட்டலாக இருந்தது. கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று என் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால் நான் படித்த வேலம்மாள் கல்லூரியோ, இங்கு சொல்லி மாளாது.

நான் எதிர்பார்த்த படி வெற்றி கிடைக்கா விட்டாலும், ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது என்பது மறுக்க முடியா உண்மை. என் தோழி VITயில் முதுகலை படிக்க போகிறாள் என்ற செய்தியே என் நெஞ்சில் புதைந்து இருந்த அத்தனை நினைவுகளை தட்டி எழுப்ப காரணமாக அமைந்துவிட்டது,  அவள் உதவியுடன், திருமணம் ஆகும் முன், ஒரு நாள் மீண்டும் VIT செல்ல வேண்டும் என்ற பேராசையுடனும், என் வாழ்க்கை பாதையை அமைத்து தந்த என் பள்ளியையும், செரீனா வில்லியம்ஸ்சையும் காண வேண்டும்  என்ற ஆசையுடனும் இந்த பதிவை எழுதிவிட்டேன்.                                              

Friday, June 7, 2013

Duel - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************


சீருந்து என்ஜின் ஓசையுடன், வாகனக்கூடத்தில் இருந்து வெளிவர படம் தொடங்குகிறது. படத்தில் தொடர்புடயவர்களின் பெயர்களை திரையில் காட்டியவாறு சிவப்பு சீருந்து தன் பயணத்தை தொடர்ந்து, நகரத்தை கடந்து நெடுஞ்சாலையை அடைய, ரியர் வியுவ் மிர்ரர் வழியாக கேமரா நம் ஹீரோவை முதன் முதலில் கெத்தாக அறிமுகம் செய்கிறது. தனிமையில் வண்டி ஓட்டிச்செல்லும் நம் ஹீரோவுக்கு பேச்சுத் துணையாக இருந்தது அந்த வானொலி தான், அதவாது வில்லனாகிய அவன் காட்சியினுள் வரும் வரை..

நெடுஞ்சாலையில் ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கருப்பு ஆயில் டாங்க் கொண்ட நெடுநீள டிரக் வேகமாக நம் சீருந்து பின் வந்து முந்தி செல்வதற்காக வழி  கேட்க, நம் ஹீரோவும் பெருந்தன்மையுடன் வழிவிட, அந்த நொடி தொடங்கும் இந்த டூயல், நம்ம  பாஷையில சொல்லனும்னா ' ஒண்டிக்கு ஒண்டிசண்டை '. ஆமாங்க அந்த   துரு பிடித்த டிரக் தான் இந்த படத்தின் வில்லன்.


சீருந்து ஓட்டும் ஹீரோ அந்த டிரக்கினால் நெடுஞ்சாலையில் சந்திக்கும் போராட்டங்களை எந்த நொடியிலும் வேகம் குறையாமல் காட்சிகளாக அமைத்து இருப்பார் இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க். எப்படி அந்த டிரக்கிடம் ஹீரோ வசமாக மாட்டி தவிக்கிறார், எப்படி இறுதியில் தப்பிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   

படத்தில் நான் ரசித்தவை:

ஒரு காருக்கும் டிரக்குக்கும் இடையில் நெடுஞ்சாலையில் நடக்கும் போராட்டத்தை தொண்ணூறு நிமிட படமாக எடுப்பது என்பதே ஒரு சவால். 

படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ஹீரோ, அவர் சீருந்து மற்றும் நெடுநீள டிரக், இந்த மூன்று மட்டுமே படம் முழுவதும் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த டிரக் ஓட்டுனர் யார் என்று படம் முடியும் வரையும் நமக்கு தெரியாது. முழுக்க முழுக்க ஒரு டிரக்கை மட்டும் வைத்து மிரட்டியிருப்பார் இயக்குனர். 

படத்தில் வசனங்கள் மிக குறைவு என்றாலும், சீட் நுனிக்கு நம்மை கொண்டு செல்லும் வேகமான திரைக்கதை வசனங்களை மறக்க செய்கிறது.

படத்தின் மிக பெரிய பலம் கேமரா தான், பல கோணங்களில் நெடுஞ்சாலையில் ஓடும் இரு வாகனங்களை படமாக்கி இருப்பர்.   

ஒரு உணவகத்தில் நம் ஹீரோ இருக்கும் போது, அந்த டிரக் உணவகம் வெளியே நிற்பதைக் கண்டு, அதன் ஓட்டுனர் உள்ளே இருப்பவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும், அந்த ஓட்டுனர் யார் என்று அவர் ஆராயும் காட்சிகள் அருமையாக இருக்கும். 

ஹீரோ ஓரு போன் பூத் சென்று காவல் துறைக்கு தகவல் சொல்ல முயற்சிக்கும் போது, அந்த டிரக் வேகமாக வந்து அந்த பூத்தை உடைக்கும் காட்சியின் பொழுது  உங்கள் இதயம் கண்டிப்பாக ரத்தத்தை சற்று வேகமாகவே வெளியேற்றும்.

    
ஸ்டீவென் ஸ்பீல்பெர்கின் தலைசிறந்த இந்த படைப்பை ரோட் மூவீஸ் என்ற பிரிவில் என்றுமே முதல் இடம் தான் என்பது என்னைப் போன்ற பலரின் ஒருமித்த கருத்து. 

*****************************************************************************************
ஆண்டு : 1971
மொழி   : ஆங்கிலம் 
என் மதிப்பீடு : 4.7/5
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும் imdb
*****************************************************************************************

Tuesday, June 4, 2013

புதுவையில் அஜித்தின் வரலாறு

நான் உயற்கல்வி பயில புதுவை செல்ல வேண்டிய கட்டாயம்.  பத்து, 11, 12 ஆம் வகுப்புகளை அங்கு தான் பயின்றேன். புதுவையில் யார் இருந்தாலும் மூன்று விசயத்துக்கு கண்டிப்பாக அடிமையாக வேண்டும், அதில் ஒன்று ஊர் அறிந்த உண்மை. அதற்கு நான் அடிமை ஆகாவில்லை, சைட் டிஷ் மட்டும் சாப்பிடும் கூட்டத்தின் 'கொ. ப. செ'வாகவே, கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறேன் .

இரண்டாவது நம்மை சுண்டி இழுக்கும் சாலை ஒர உணவுகள், முதலில் நான் அடிமை ஆனது அவற்றிக்கு தான். பானி பூரி, காளான் போண்டா, முட்டை போண்டா, சிக்கன் போண்டா, மட்டன் போண்டா, பஜ்ஜி வகைகள், குல்பி, சூப் வகைகள் என்று பட்டியல் நீளும். ஒரு தெருவில் ஒரு தள்ளு வண்டியாவது இருந்து விடும். சனிக்கிழமைகளில் பள்ளி முடித்து மத்திய வேளையில்   லாஸ்பேட்டை கள்ளுக்கடை வழியாக செல்லும் போது, அங்கு இருக்கும் ஒரு தள்ளு வண்டியில் வெங்காய பகோடா வாங்குவது வழக்கம். மந்தாரை இலையில் மடித்து ரூ. 2.50 க்கு ஐம்பது கிராம் பகோடாவுடன், தன் பகோடா பிரான்ஸ் வரை சென்ற புகழையும் சேர்த்து கொடுப்பார். அந்த அளவு சுவை இருப்பதை சாப்பிட்ட யாரும் மறுக்க முடியாது. என்ன செய்வது எல்லோருக்கும் குரு ஒன்பதில் இருப்பது இல்லையே, தள்ளு வண்டியிலேயே அவர் காலம் சென்றுவிட்டது.
  
மூன்றாவது விசயம்தான் சினிமா. புதுவையில் என்னைப் போன்று சினிமா வெறியர்களே அதிகம். 1970களில் மொத்தம் முப்பத்து ஆறு திரையரங்குகள் அங்கு இருந்து இருக்கின்றன, அக்கம் பக்கம் இருக்கும் எல்லா ஊர்களில் இருப்பவர்களும் சினிமா காண (அன்றைய) பாண்டி செல்வதுதான் வழக்கம். ஏன், என் தாத்தா கூட அங்கு சினிமா கண்ட பல கதைகளை என்னிடம் கூறியதுண்டு. இப்படி 'திரையரங்க' நகரமாக இருந்த புதுவை, மற்ற நகரங்களின் வளர்ச்சியால், சினிமா காண வரும் கூட்டம் குறையை, காலப்போக்கில்  பெரும்பாலான திரையரங்குகள் மக்களை ஈர்க்கும் விதமாக உல்லாச மற்றும் நட்சத்திர விடுதிகளாக மாறி, நான் இருந்த காலகட்டத்தில் வெறும் ஏழு திரையரங்குகள் மட்டுமே இருந்தன.

ஒரு நாள் சாலை உணவுகளை வேட்டையாட சென்றபோது, தலை முடியை கொண்டை போட்ட படி நடிகர் விக்ரம் எங்கள் சாலை ஓரம் நிட்க, அதை கண்டு ஆச்சரியத்தில் நான் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டேன். அந்நியன் படத்தில் துவக்க காட்சிகளில், ஒரு சாலை விபத்தில் அடி பட்டவனை வைத்து 'அம்பி' விக்ரம் போராடியது எங்கள் தெருவில் தான் என்று பின் படம் பார்த்த போது புரிந்தது. தமிழகத்தில் கேளிக்கை வரி அதிகமானதால், பல படங்களின் படப்பிடிப்பு புதுவைக்கு வந்த காலம் அது. கன்னத்தில் முத்தமிட்டால், மௌனம் பேசியதே, காக்க காக்க, ஆயுத எழுத்து, அறிந்தும் அறியாமலும், பட்டியல், சிவாஜி, பீமா , வாரணம் ஆயிரம், யாரடி நீ மோகினி என்ற ஏகப்பட்ட படங்களின் படப்பிடிப்பு அரங்கேறியது இங்கு தான்.

ஒரு முறை பத்தாம் வகுப்பில் வசூல் ராஜா காண வாய்ப்பு கிட்டியபோதும் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அன்று செல்ல முடியவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த பின்பு, அது வரை ரஜினி படம் பார்க்க மட்டுமே திரையரங்கம் சென்றவன், பதினோறாம்  வகுப்பில் அந்நியன் படத்துடன் என்  கணக்கை தொடங்கினேன், பார்த்த படங்களின் எண்ணிக்கையில் இன்று வரை காற்புள்ளி கூடிக்கொண்டே இருக்கிறது. 

அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு என்று பல படங்களை பதினோறாம் வகுப்பில் ஆனந்தா திரையரங்கில் பார்த்தேன். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சென்னைக்கு எப்படி ஒரு சத்தியமோ அப்படித்தான் புதுவைக்கு ஒரு ஆனந்தா. ஆனால் அந்த ஆனந்தா திரையரங்கமும் இன்று இடிக்க பட்டு ஒரு விடுதியாக உருமாறிவிட்டதைப் பார்க்கும் பொழுது, கவசம் இல்லாத கர்ணன் போலத் தான் பாண்டி எனக்கு காட்சியளிக்கிறது.

புதுவையின் திரையரங்குகளில், நான் அங்கு வசித்தபொழுது, ஐந்து  வகையான சீட் வரிசைகள் இருக்கும். 

பாக்ஸ்                         - 50 ரூபாய் 
பால்கனி                     - 33 ரூபாய் 
ப்ர்ஸ்ட் கிளாஸ்      - 25 ரூபாய் 
செகண்ட் கிளாஸ்  - 15 ரூபாய்
தேர்ட் கிளாஸ்         - 10 ரூபாய் 

நமக்கு என்றுமே தேர்ட் கிளாஸ் தான், அன்றைய நாள் கொஞ்சம் செழிப்பாக இருந்தால் மட்டும் செகண்ட் கிளாஸ். இந்த இரண்டுக்குமே சீட் நம்பர் கிடையாது, முந்தி சென்று இடம் பிடிக்க வேண்டும். என் வீட்டை விட்டு வெளியே வந்தால், தெரு முனையில் இருக்கும் பாலாஜி திரையரங்கிலே தான் பெரும்பாலான படங்களை பார்த்ததுண்டு. படம் வெளியாகின்ற முதல் வாரம் என்றுமே கவுன்டரில் டிக்கெட் வாங்கியதே கிடையாது, எல்லாமே பிளாக் டிக்கெட் தான். என்னதான் ஆன்லைன்ல புக் பண்ணிட்டு ஹாயா போய் படம் பார்த்தாலும்,  பிளாக்ல பேரம் பேசி, ஓடிப்போய் சீட் பிடித்து, விசில் சத்தத்துல  படம் பார்க்கற சுகமே தனி.

இப்ப உங்களுக்கு, புதுவையும் சினிமாவும் எந்த அளவு நெருக்கம் என்று கொஞ்சமாவது புரிந்து இருக்கும் என்று நம்பி நம்ம 'வரலாறு' நிகழ்வுக்கு செல்கின்றேன். ஆஞ்சநேயா, ஜனா, ஜீ, பரமிசிவன், திருப்பதி என்று தொடர் தோல்விகளை சந்தித்த அஜித், வில்லன் படத்தில் வெற்றி கூட்டணி தந்த கே.எஸ். ரவி குமாருடன் இணைந்து உருவானது 'Godfather'. சில பல காரணங்களுக்காக அதிக நாட்கள் பெட்டியிலேயே தூங்கி, தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற அறிவிப்பால், 'வரலாறு' என்று பெயர் மாறி அக்டோபர் இருபது 2006இல், என் கால் ஆண்டு பரிட்சையின் போது  வெளியானது.


கால் ஆண்டுத் தேர்வு, பிளஸ் 2 என்று பல காரணங்களால் கால்கள் கட்ட பட்டன. பெரிதும் எதிர் பார்த்த படம், முதல் நாளே நண்பன் பார்த்துவிட்டு 'படம் செம மாஸ் டா, அஜித் பட்டய கெளப்பிட்டாரு' என்று கதை  சொல்ல ஆரம்பித்தவனின் வாயை மூடி, தூரம் ஓடி விட்டேன். டி.வி. யில் எந்த காட்சியோ அல்லது பாடலோ வந்தால் மாற்றி விடுவேன்,எல்லா காட்சிகளையும் திரையில் தான் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன்.

பத்து நாட்கள் நரக வேதனைக்கு நடுவில், தேர்வுகளை வெற்றிகரமாக முடித்து விட்டு, அன்று மாலையே என் மிதி வண்டியில் ஆனந்தா திரையரங்கம் நோக்கி சென்று, செகண்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கி, உள்ளே அடித்து பிடித்து நடுவில் ஒரு இருக்கையில் அமர்ந்து பொறுமையின்றி காத்துக்கொண்டிருந்தேன். புதன் கிழமை என்றபோதும், கள்ள சிடிக்கள் மலிவு விலையில் கிடைத்தபோதும் அரங்கம் நிரம்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. வழக்கமான லக்ஷ்மி விலாஸ், ரஜினி சுபாரி விளம்பரங்களின் மொக்கைக்கு பின் படம் தொடங்கியது. முதல் பத்து நிமிடம் எந்த வசனமும் கேட்காவிட்டாலும், அந்த விசில் சத்தத்தில் எத்தனை ஆனந்தம். 


இடைவேளைக்கு முந்தைய காட்சியில், ஊனமாக இருந்த அப்பா அஜித், தன் காலை எடுத்து கீழே வைத்து நிற்கும் போது, அணு குண்டு வெடித்தால் இவ்வளவு சத்தம் கேட்குமா என்று எனக்கு தெரியவில்லை, அரங்கம் அதிர்ந்தது, பேப்பர் பிட்டுக்கள் பறந்தன. ஒரு அஜித் இருந்தாலே தாங்காது, இதில் மூன்று அஜித் என்றால் சொல்லவா வேண்டும், தனியாக வந்த எண்ணமே வெளியில் வரும் வரை தோன்றவில்லை. பல நாள் பட்டினியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு அசைவ விருந்தாக அமைந்தது.

ஐந்து பேர் சினிமா பற்றி பேசுகையில் இருவர் விஜய் பக்கம் என்றால், மற்ற மூவர் கண்டிப்பாக அஜித் பக்கம் இருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்க்க முடியும். தொடர் தோல்வியை சந்தித்து, பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹிட் கொடுக்கும் போதே இவருக்கு இப்படி ஒரு ஆதரவு என்றால், தொடர்ந்து ஹிட் கொடுத்தால் இவரை அசைக்க ஆளே இருக்காது என்று எண்ணியபடியே வீட்டிற்கு சென்றேன்.
    
அதன் பின் பல படங்களை சென்னையில் பார்த்து விட்டேன். பில்லா, மங்காத்தா படங்களை சென்னையில் முதல் நாளே பார்த்தபோதும், புதுவையில் அன்று கேட்ட சத்தம் இந்த சென்னை மாநகரத்தில் எந்த திரையரங்கிலும் கேட்கவில்லை.  அடுத்து வெளி வர இருக்கும் 'வலை' படத்தை புதுவையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், மே ஒன்று எழுத நினைத்த பதிவை ஜூன் ஒன்று எழுதி இன்று வெளியிடுகிறேன்.

ஐ மிஸ் யூ பாண்டி!