Saturday, October 4, 2014

தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2014 ( தி.நகர் - ஆடி ஸ்பெஷல்)

எனக்கு நினைவு தெரிந்து, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இருந்தே ஆடித் தள்ளுபடி விற்பனை ஆண்டு தோறும் தமிழகமெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வேலூரில் இருந்த பொழுது ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இந்த ஆடி விற்பனையின் போது தான் அப்பா 'சர்க்கார் ரெடிமேட்ஸ்' என்ற கடைக்கு அழைத்துச் சென்று புதுத் துணிகள் வாங்கித் தருவார். ஆடி மாதம் வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த காலம் அது. உடலும் பகுத்தறிவும் வளர, இந்த ஆடி மோகம் என்னை விட்டுச் சென்றது. சென்னையில் கல்லூரி சேர வந்த பொழுது  சென்னையின் ஆடைகள் தலைநகரான தியாகராய நகருக்கு செல்லாமல், அண்ணா நகரிலேயே புதுத் துணிகள் வாங்கினோம். கூட்டமாக இருக்கும் கடைக்கு சென்று, அங்கு நசுங்கி கசங்கி துணிகள் வாங்குவதில் எனக்கு என்றுமே ஈடுபாடு கிடையாது என்பதால் எல்லா ஆண்டும் ஆடி விற்பனை என்பது எனக்கு ஒரு கடந்து செல்லும் மேகமாகவே இருந்து விட்டது. இந்த ஆண்டு, சில தவிற்க முடியாத கட்டாயத்தினால், ஆடி மாதத்தில் பல முறை தி.நகர் செல்ல நேர்ந்த பொழுது எனக்கு கிடைத்த அனுபவங்கள் இந்த பதிவிற்கு வித்திட்டன. 

தாம்பரத்தில் இருந்து தி.நகர் செல்ல ரயில் மற்றும் பேருந்து இரண்டுமே இருந்தாலும், நான் எப்பொழுதும் விரும்புவது ரயில் பயணம் தான். இரு சக்கர வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ரயில் ஏறுவது தான் வழக்கம். தாம்பரம் சானடோரியம் டு தி.நகர் - இருபது நிமிட ரயில் பயணம் அது. நமது வாழ்க்கையில் நாம் தினமும் சராசரியாக செய்து கொண்டிருக்கும் ஒரு விசயம் கூட, நாம் சிறிது காலம் செய்யாமல் விட்டு விட்டு மீண்டும் அதன் பக்கம் சென்றால் மாறிவிடுகிறது என்பதை எனக்கு உணர்த்தியது அம்மை தான். மூன்று வாரங்கள் இயல்பு வாழ்கையை விட்டு ஒதுங்கி, மீண்டும் என் வாழ்க்கைக்கு திரும்பிய பொழுது எத்தனை மாற்றங்கள். அந்த மாற்றங்களில் ஒன்று தான் இந்த பைக் பார்க்கிங் கட்டணம், பத்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாயாக உயர்ந்து இருந்தது. தி.நகர் சென்று வர ரிடர்ன் டிக்கெட்டே பத்து ரூபாய் தான் :). இதைவிட கொடுமை என்னவென்றால் என் வீட்டில் இருந்து ரயில் நிலையம் ஆட்டோவில் வந்தால் நாற்பது ரூபாய். எங்கள் ஏரியா ஆட்டோக்களில் மீட்டர் ஓடியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.                       

ரங்கநாதன் தெரு 

ஆடி மாதத்தில் மொத்த ரயில் பயணிகளும் இறங்குவது மாம்பலம் ரயில் நிலையத்தில் தான். ரயில், மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றவுடன், அந்த கூட்டத்தின் மத்தியில் உங்களை நீங்கள் பொருத்திக்கொண்டால் மட்டும் போதும், அடுத்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் ரங்கநாதன் தெருவில் இருப்பீர்கள்.   பீச் பக்கம் இருந்து வரும் மக்கள் கூட்டமும் தாம்பரம் பக்கம் இருந்து வரும் கூட்டமும் சங்கமமாகுவது ரங்கநாதன் தெருவில். 'அங்காடித் தெரு' படத்தில் வருவது போல் மக்கள் கூட்டத்தின் நடுவில் பல சில்லறை வியாபாரிகள் தத்தம் பொருளை வியாபாரம் செய்யக் கூவிக் கொண்டிருப்பர். இரண்டு பக்கமும் இருக்கும் சிறு கடை வியாபாரிகள் மக்களை உள்ளே இழுக்க அவர்களது வியாபாரக் கூவலை ஒரு பக்கம் இசைத்துக் கொண்டிருப்பர். மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து உஸ்மான் வீதியில் வந்து சேரும் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் உள்ள ரங்கநாதன் தெருவில் ஒரு கடையை மட்டும் பெயர் பலகையில் சில மாற்றங்களுடன் திரும்பத்திரும்ப காண முடியும். இம்முறை அந்தக் கடைகளை மட்டும் நான் விரல் விட்டு எண்ணிய பொழுது 'ரங்கநாதன் தெரு' என்ற பெயரை 'சரவணா வீதி' என்று மாற்றுவது தான் உசிதம் என்றுத் தோன்றியது.      

உஸ்மான் சாலை 

ரங்கநாதன் தெருவில் இருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு உஸ்மான் சாலையை அடைந்து, மேம்பாலத்தின் அடியில் போத்தீஸ் நோக்கி நடந்தேன். இந்த மேம்பாலம் கட்டும் முன் இந்த சாலையில் தானே மொத்த வாகன போக்குவரத்தும் நடந்திருக்கும், ஆனால் இப்போது மக்கள் நடப்பதற்கு கூட இங்கு இடம் இல்லை. உஸ்மான் வீதியில் நடக்கும் போது, ஒவ்வொரு பிரம்மாண்டமான கடையை கடக்கும் பொழுதும், உங்கள் வீட்டு ப்ரிட்சை திறக்கும் போது கிடைக்கும் அந்த குளிர்ந்த காற்றின் சுகத்தை  உணர முடியும். அழகு சேர்க்கும் வண்ண விளக்குகளும் தேவைக்கு அதிகமாக இயங்கும் குளிர் சாதனங்களும் இங்கு இருக்க, தமிழகத்தில் பல வீடுகளும் தொழிற்சாலைகளும் இருளில் மூழ்கி தவிக்கின்றன. இந்த வீதியில் பைக் பார்க்கிங் செய்வதே கடினம், பண்டிகை வேளையில் சீருந்தில் வந்துவிட்டால் நீங்கள் பார்க்கிங் தேடி கண்டுபிடிப்பதற்குள் உங்கள் குடும்பம் ஷாப்பிங் செய்து முடித்து விடும். ஏதோ ஒரு கடையின் பார்க்கிங் இடத்தில இடம் இருந்து நீங்கள் உங்கள் வண்டியை நிறுத்தி விட்டாலும், திரும்பி எடுக்கும் பொழுது அந்தக் கடையின் பொருள் வாங்கிய  ரசீது இல்லை என்றால் உங்களிடம் இருந்து ஒரு தொகையை (பெரும்பாலும் நூறு ரூபாய்) அபராதமாக வாங்கிவிடுவர். போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, இந்த இடத்தில் இருக்கும் கட்டிடங்கள் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கட்டப்படாததுதான் காரணம்.              

போத்தீஸ்

போத்தீஸ் கடையின் பார்க்கிங் இடத்தில், குறைந்த இடத்தில நிறைய சீருந்துகளை நிறுத்த, சமீபத்தில்  நவீன முறையில் வடிவமைத்து உள்ளனர். போத்தீஸ் கடையின் வாசலை அடைந்த பொழுது, டாட்டா ace வெள்ளை நிற ஷேர் ஆட்டோ வகைகள் 'போத்தீஸ் டு போத்தீஸ்' என்ற எழுத்துக்களுடன் இருந்தன. இது உஸ்மான் சாலையில் இருக்கும் போத்தீஸில் இருந்து GN. Chetty சாலையில் இருக்கும் போத்தீஸ் boutique வரை செல்ல வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இயக்கும் இலவச சேவை. போத்தீஸ் உள்ளே சென்றால் பெண்கள் கூட்டம் ஏக்க செக்கம். அங்கு இருக்கும் பத்து சதவீத ஆண்கள் பில் செலுத்தவும், துணிகளை தூக்கவும், குழந்தைகளை கண்காணிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் பட்ட வேதனை தரும் காட்சிகள் கண்டு என் மனம் எதிர்காலத்தை நினைத்து கனத்தது. இங்கு ஐந்து முதல் ஐம்பது சதவீதம் வரை நீங்கள் வாங்கும் துணியின் MRP விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்படுகிறது.

பாண்டி பஜார்

தி.நகர் என்றாலே ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைக்கு பிறகு ஒரு முக்கிய அங்கம் வகிப்பது பாண்டி பஜார் தான். (இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று அறிந்தவர்கள் சொல்லவும்). பாண்டி பஜாரில் மிகவும் பிரபலமானது நடைபாதையில் இருக்கும் கடைகளும் அங்கு கிடைக்கும் மலிவு விலை பொருள்களும். இதிலும் இருபது கடைகளில் ஒரு கடை மட்டும் தான் ஆண்கள் சம்மந்தமானா பொருட்கள் இருக்கும். அனைத்து கடைகளிலும் பெண்களுக்கு தேவையான உடைகள், காதணிகள், காலணிகள், என குவிந்து கிடக்கும். பனகல் பார்க்கில் நடக்கத் தொடங்கினால் கடைகளை பார்த்துக்கொண்டும் சில அழகுப் பொம்மைகளை ரசித்துக்கொண்டும் சென்றால் நடப்பதின் அலுப்பே தெரியாது. ஆனால் சமீபத்தில் அரசாங்கம் இந்த நடைபாதை கடைகளை அகற்றிவிட்டு, அங்கு இருந்த வியாபாரிகளுக்கு பாண்டி பஜார் பேருந்து நிலையம் அருகில் ஒரு புதிய வணிக வளாகம் கட்டிக்கொடுத்தது. வசந்த காலம் வீசிய பாண்டி பஜார் வீதியை இன்று வெறிச்சோடி காண்பதில் மனம் வலிக்கின்றது.    

சென்னை சில்க்ஸ்

அடுத்து சென்னை சில்க்ஸ் உள்ளே சென்றவுடன் நுழைவு வாயிலில் இருந்த பணியாளர் வரவேற்று 'சார் இங்க புதுசா ஜெவல் செக்ஷன் துறந்திருக்கோம். வந்து பார்கரின்களா' என்று அழைக்க, நான் 'ழே' என்று விழித்ததை கண்ட அவர் 'நீங்க சும்மா பார்த்தா மட்டும் போதும். எதுவும் வாங்கத் தேவையில்லை' என்று புன்னகைத்தார்.  அவர்,  அவரது மேற்பார்வையாளர் காணும் வகையில்  அங்கு இருந்த புதிய வகை நகைகளை எனக்கு விளக்க, நான் அவரை பின் தொடர்ந்தேன். ஒரு இடத்தில இருந்த ஒரு தங்க சங்கிலியும் டாலரும் என்னை நகர விடமால் தடுத்து. எங்கள் வீட்டு நாயை கட்டி வைத்திருக்கும் சங்கிலியை விட அது கனமாக இருந்தது. அந்த டாலரும், ஒரு மூன்று சென்டி மீட்டர் வட்டளவில் தங்கத்தில், நடுவில் ஒரு ஒட்டப்பட்ட படத்துடன் இருந்தது. அந்த படத்திற்கு உரியவர் தமிழக  முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அன்று 'இவ்வளோ காசு கொடுத்து இதயெல்லாம் யாருடா வங்கப் போறாங்க' என்று எண்ணினேன். ஆனால் இன்று மேடையேறிய சில ஒத்திகை பார்க்காத நாடகங்கள் மூலம் இதை வாங்க இங்கு நிறைய கைகள் உண்டு என்பதை உணர்ந்தேன்.  

சென்னை சில்க்ஸில் நடக்கும் தள்ளுபடி சற்று வித்தியாசமாக இருந்தது. உதாரணத்திற்கு இங்கு 15% தள்ளுபடி கொண்ட ஒரு 800 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கினால், உங்களுக்கு    120 ரூபாய் ( 15% of 800) மதிப்புள்ள மூன்று மாத வேலிடிட்டி கொண்ட ஒரு வௌச்சர் கொடுப்பார்கள். அதைக் கொண்டு நீங்கள் அடுத்து சென்னை சில்க்ஸில் வாங்கும் பில்லில் 120 ரூபாயை தள்ளுபடி செய்துகொள்ளலாம்.

புத்தகமும் சிறுமியும்

சென்னை சில்க்சை விட்டு வெளியில் வந்தவுடன், அழுக்கான சட்டையும், அரை பாவடையும், பல நாள் குளிக்காத தலையுடனும் ஒரு எட்டு வயது சிறுமி    தன் கையில் இருந்த கலர் அடிக்கும் புத்தகம் ஒன்றை நீட்டி 'அண்ணா. பத்து ரூபாய் தான். ஒன்னு வாங்கிக்கோங்க' என்றாள். எனது வீட்டில் சிறுவர்கள் குழந்தைகள் யாரும் கிடையாது என்பதால் அந்தப் புத்தகம் வாங்கி எந்தப் பயனும் இல்லை என்று தோன்றவே 'வேண்டாம்' என்று மறுத்து விட்டு. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். நான் வேண்டாம் என்ற போதும் அந்தப் பெண் விடாமல் என்னையே பின் தொடர்ந்து கெஞ்சத் தொடங்கினாள். அவள் என்னை தொட்டு தொட்டு கெஞ்சியது சற்று அறுவெறுப்பாக இருக்க எனக்கு கோவம் அதிகமாகி, 'வேண்டாம் கூட வராத' என்று சற்று கனத்த குரலில் திட்டினேன். அப்பொழுதும் அவள் சலிக்காமல், என்னைக் கெஞ்சிக்கொண்டே தொடர்ந்தாள். எனது பிடிவாதம் என் மனதை மாற விடமால் செய்தது. இப்படியே என்னைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸில் இருந்து தி.நகர் பேருந்து நிலைய சிக்னல் வரை வந்தவள், சட்டேன்று அவள் கையில் இருந்த புத்தகத்தை என் கையில் வைத்து விட்டு, வேகமாக திரும்பி சென்று விட்டாள். அந்த சம்பவம் என்னுள் எதோ ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டிவிட, அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மனமின்றி  ரயிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.  

'ஆடி தள்ளுபடி' என்று   ஒரு மோக அலையை மக்கள் மனதில் வீசி, மற்ற 335 நாட்களில் நடக்கும் வியாபாரத்தை இந்த 30 நாட்களிலேயே சம்பாதித்து, ஆண்டிற்கு ஒரு புதிய கிளை திறந்து விடுகின்றனர் இந்த ஆடை உலகின் முதலைகள். விலைகளை உயர்த்தி  பின் தள்ளுபடி என்ற பெயரில் விலைகளை குறைத்து விற்கும் உக்திக்கு இந்த மக்கள் எத்தனை காலம் தான் விழுவர் என்று தெரியவில்லை. 

Wednesday, October 1, 2014

தேன் மிட்டாய் - ஜூன் & ஜூலை 2014

மே மாதத்திற்கு பின் மூன்று மாதங்கள் தேன் மிட்டாய் ஏன் தடை பட்டது என்பதற்கு என்னால் பல காரணங்கள் சொல்ல முடியும். சில சம்பவங்களின் மீது பழி சுமத்தி விட்டு நான் கருணை கோரப் போவதில்லை. எனது பாதையை விட்டு சற்று தடுமாறினேன், மீண்டும் உங்கள் ஆதரவுடன் உற்சாகமாய் எனது எழுத்தை தொடருவேன் என்ற நம்பிக்கையில்....    


தநஉஉஇதசநுகஉ

இது என்ன என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை இந்தப் பதிவின் முடிவில்....


பேருந்து நிழற்குடை 

சென்ற தேன் மிட்டாயில்(மே 2014) நான் OMR சோழிங்கநல்லூரில் பேருந்து நிழற்குடை இல்லாததை பற்றி எழுதியிருந்தேன். அம்மை குணமாகி ஜூன் மாதம் அலுவலகம் செல்லத் தொடங்கிய பொழுது OMR சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் நடப்பதைக் கண்டு வியந்தேன். 'நம்ம தேன் மிட்டாயை யாரோ பெரிய ஆள் படிக்கராங்கப் போல' என்று என்னுள் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. துரைப்பாக்கம் முதல் சிறுசேரி வரை OMR சாலையின் இரு புறமும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரு நிழழ்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இது வரவேற்கக் கூடிய மாற்றம் என்றாலும், நான்கு கம்பங்களை எழுப்பி நான்கு அடி அகலத்தில் அதன் மேல் தகரத்தை வைத்து விட்டால் மக்களுக்கு நிழல் கிடைக்குமா என்ற கேள்வி வலுக்கிறது. கதிரவன் உச்சியில் இருக்கும் வேளை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த நிழற்குடைகள் தம் பணியை செய்யாதது வருத்தமே.   

டாஸ்மாக் எலைட்       

நாவலூரில் 'கோரமண்டல் பிளாசா' என்று ஒரு மால் உண்டு. ஐந்து மாடிகள் கொண்ட இந்த மாலில் நான்கு ஆண்டுகளாக இயங்கிவருது AGS திரையரங்கம் தான். சில ஆண்டுகளுக்கு முன்  Dominos  மற்றும் சில மாதங்களுக்கு முன் KFC, மற்றும் நான்காவது தளத்தில் உள்ள பூட் கோர்ட்டில் சில பிரபலமாகாத உணவகங்கள் இவை மட்டும் தான் இங்கு இருப்பவை. மீதம் உள்ள கடைகள் அனைத்தும் கட்டுமான வேலை மட்டும் முடிந்த நிலையில் கண்ணாடிக் கதவுகளுடன் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. ஒரு நாள் அலுவலகம் முடித்து விட்டு, படம் பார்க்க அங்கு நுழைவாயிலில் அடி வைத்த பொழுது, நான்கு பெண்கள் ஒரு கடையில் இருந்து வெளியேறுவதைக் கண்டு என் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. அவர்கள் வெளி வந்த வாசலில் 'TASMAC' என்ற எழுத்துக்கள் மின் ஒளியில் ஜொலித்தன. இந்த டாஸ்மாக் தெருமுனையில் இருக்கும் மற்ற டாஸ்மாக்களை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் போல் பல வெளி நாட்டு இறக்குமதி ரக சரக்குகள் அடிக்கி வைக்கப் பட்டிருந்தன. வரிசையாக பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டு விண்டோ ஷாப்பிங் செய்த பொழுது சில வற்றின் விலைகளையும் கவனித்தேன். சற்று அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுது எனக்கு விளங்கியது இது ஏன் 'டாஸ்மாக் எலைட்' என்று. இதே போல் ஒரு கடையை சமீபத்தில் ஸ்பென்சர் பிளாசாவிலும் கண்டேன். வளர்க குடி ! வாழ்க குடிமக்கள்!                 

களவானிகளும் காவல் துறையும்

நண்பர் ஒருவர் தனது குடும்ப விழாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் அவரது இல்லம் கொள்ளையடிக்கப்பட்டது. சில ஆயிரம் ரொக்கம் மற்றும் சில சவரன் நகைகள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தன. மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் எதையும் தொட வில்லை. காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சினிமாவில் வருவது போல் அவர்கள் வலை வீசி தேடி கொள்ளையர்களை பிடிப்போம் என்று வசனம் எல்லாம் பேசவில்லை. அடாவடியாக கண்டுபிடிக்க லஞ்சமும் கேட்கவில்லை. 'அவர்கள் பிடிபட்டாலும் உங்கள் பொருள் மற்றும் பணம் கிடைக்காது' என்று நேர்மையாக பதில் சொல்லி விட்டனர். இன்றளவும் அந்த கொல்லையர்கள் பிடிக்கப் படவில்லை. சம்பவம் நடந்த வீடு அந்த வட்டார காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் என்பது குறிப்பிடத்தக்கது.    

உணவு

என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இருக்கும் பண்புகளில் மிகவும் உயர்ந்தது விருந்தோம்பல். மற்றவர்களின் பசியை போக்கும் பொழுது  நமக்கு கிடைக்கும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. எங்கு சென்றாலும் நானாக முன் சென்று பரிமாறும் வேலையை எடுத்துக்கொள்வேன். நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்கு நான் சென்றிருந்த பொழுது அங்கு பந்தியில் பரிமாறும் வாய்ப்பு கிட்டியது. நான் எங்கும் காணாத ஒரு நிகழ்வு அங்கு நடந்தது.   ஒரு 100 பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட ஒரு உணவுக் கூடம். வந்தவர்கள் அனைவரும் உணவருந்தி விட, கடைசி பந்தி நடந்து கொண்டிருந்த வேளை. பந்தியின் எல்லையில் இருவர் மட்டும் அந்தக் கூட்டத்துடன் சற்றும் ஒட்டமால் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதுவும் அசுர வேகத்தில். முதலில் அவர்கள் அங்கு திருமணக் கூடத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும் என்று எண்ணினேன். கடைக் கண்ணால் அவர்களை கவனிக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆட்களிடம் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு ஓரமாக நின்றுகொண்டு அவர்களையே கவனித்தேன். அவர்கள் இலைக்கு வந்து உணவில் இரு கை உண்டு விட்டு, மீதம் இருந்த அனைத்தும் அவர்கள் மடியில் இருந்த பழைய டால்டா டின்னிற்குள்  சென்றது. அடுத்து இரண்டு முறை அவர்கள் போதும் என்ற அளவிற்கு நான் பரிமாறினேன். நான் கவினத்ததாக அவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. 

அப்பா ஊட்டு ரோடு 

தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி மார்ஜியானவில் சென்று கொண்டிருந்தேன். பல்லாவரம் கடந்து திருசூலம் அருகில் செல்லும் பொழுது, பழைய ஹீரோ ஹோண்டா CD 100 இல் ஒருவர், வெள்ளை பனியனுடன் அழுக்கான தலை முடியுடன் எனக்கு முன் வந்தார். அவருக்கு முன் ரோட் காலியாக இருந்த பொழுதும் அவர் ஓரம் ஒதுங்காமல் சாலையின் மத்தியிலே சென்றுகொண்டிருக்க, நானும் ஓயாமல் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தேன். வேண்டுமென்றே அந்த ஆசாமி சாலையின் மத்தியில் சென்று கொண்டிருக்க எனக்குள் உஷ்ணம் தலைக்கு ஏறியது. அப்படியே அவனை அடித்து தூக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோபத்தை அடிக்கி நானும் ஒரு வேஷதாரியாக, சாலை சற்று அகலமான பொழுது அவனை முந்தி சீறிப் பாய்ந்தேன்.

கல்வி      

'நான் அந்த காலத்து SSLC தான், ஆனா அது  இந்த காலத்து B.Scக்கு சமம்' என்று என் தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. நீங்களும் எங்காவது சில பெரியவர்கள் இப்படி பேசிக் கேட்டிருக்கலாம். இதன் அர்த்தம் எனக்கு விளங்கியதே இல்லை. சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து பார்த்த பொழுது நான் படித்ததற்கும் அதில் தற்போது இருப்பதற்கும் எவ்வளோ மாற்றங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி சற்று எளிமையாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. நான் பள்ளி பயின்ற காலத்திலேயே SSLC முறைக்கும்  CBSE கல்வி முறைக்கும் அத்தனை வித்யாசங்கள் இருக்கும். தற்பொழுது இந்த தரத்தை கொண்டு CBSE மாணவர்களுடன் தமிழக மாணவர்கள் போட்டியிடுவது மிகவும் கடினமாகி விடும். இயற்கையாக இருக்கும் மனித ஆற்றலை வளரவிடாமல், மனப்பாடம் செய்து ஒரு மாணவனின் மூளையை சோம்பேறியாக்கும் இந்த கல்வி முறையை பற்றி என்னவென்று சொல்வது. பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு செய்தி தவறு என்று தெரிந்த போதிலும், அந்த தவறான செய்தியையே பொதுத் தேர்வில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் வற்புறுத்தும் கொடுமைகளும் இங்கு உண்டு.   

        
தநஉஉஇதசநுகஉ

இது நான் அலுவலகம் செல்லும்பொழுது கண்ட ஒரு சுமோ ரக வாகனத்தில் நம்பர் ப்ளேட்டில் எழுதியிருந்தவை. சத்தியமா எனக்கு புரியலைங்க. தமிழ் பற்று தேவைதான். அதற்கென்று  இப்படியா?