Wednesday, March 8, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி

****************************************************************************************************************
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்
****************************************************************************************************************

இடுக்கி செல்ல எலப்பாரா-கட்டப்பன்னா வழியை கூகிள் அம்மணி வகுக்க, இடுக்கி பற்றி நான் அறிந்ததை இருவருக்கும் சொல்லிக்கொண்டே வந்தேன். முதலில் எனக்கு இடுக்கி பரிட்சயமானது மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் தான். அந்த படத்தில் வரும் காட்சிகள் முழுக்க முழுக்க இடுக்கியில் நடப்பதாகவும், பெரும்பாலான காட்சிகளின் பின்புறம் இடுக்கி அணை தெரியுமாறு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும்.  எனக்கு இடுக்கி மீது காதல் பிறந்தது, தந்தையின் வசீகரக் குரலை வரமாக வாங்கி வந்த விஜய் யேசுதாஸின் குரலில் 'மலை மேலே திரி வச்சு பெரியாரின் தலையிட்டு' எனத் தொடங்கும் அந்த இடுக்கி பாடல் தான். பாடலின் வரிகளும் அதன் காட்சியமைப்பும் விஜய் யேசுதாஸின் குரலும் யாரையும் ஈர்க்க வல்லது. ஆங்கிலேயர் காலத்தில் குறவன் மற்றும் குறத்தி மலையின் இடையில் பாரபோலா வடிவில் பெரியாரின் குறுக்கே கட்டப் பட்டது தான் இந்த இடுக்கி அணை. நான் சொல்லிய தகவல்கள் இருவருக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று சொல்ல முடியாது, ஆனால் மூவருக்கும் பசி வயிற்றை கிள்ளத் தொடங்கியது. அடுத்து வந்த எலப்பாராவில் ஒரு கேரள பிரியாணியை உண்டதன் மயக்கத்தில் என்னை அறியாமல் நானே சற்று இளைப்பாறிவிட்டேன். இந்த பயணத்தில் நான் பகலில் தூங்கிய ஒரே கணம் அதுதான்.



கண்விழித்தால், 'இடுக்கி வந்து விட்டதா?' என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, ஒரு டீ கடை முன் பிகோ ஓரம் ஒதுங்க, ஒரு கட்டனும் சில பழம்பொறிகளையும் கொறித்து விட்டு, மீண்டும் இடுக்கி நோக்கி தொடர்ந்தோம். அப்பொழுதுதான் அலுவலக நண்பர் பிஜூ, இடுக்கி அணை பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை என்று சொல்லியது நினைவிற்கு வந்தது. த்ரிஷா இல்லனா நயன்தாரா என்பது போல், இடுக்கி இல்லாவிட்டால் இரவு அங்கு தங்கிவிட்டு, காலை தளசேரி பக்கம் வண்டியை திருப்பி தளசேரி இட்லியை சுவைத்துவிட்டு பாலக்காடு வழியே தமிழக எல்லையை அடைந்து கோவை  வழியாக சென்னை செல்ல மாற்றுத் திட்டத்தையும் வகுத்துக்கொண்டோம். நாங்கள் இடுக்கி நெருங்க நெருங்க அந்த மனிதன் வடித்த பாரபோலா அழகிற்கு பின்னே கதிரவன் மறையத் தொடங்கிக்கொண்டிருந்தான். சாலையின் ஒரு இடத்தில பல வாகனங்கள் நின்றிருக்க, இடுக்கி அணை பின்புறம் தெரியும்படி மக்கள் கூட்டம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தில இறங்கி நாங்கள் இடுக்கி அணை செல்ல வழிகெட்க, 'அது மாலை ஐந்து மணியுடன் மூடப்பட்டிருக்கும் இனி நாளை காலை தான் காண முடியும்' என்ற செய்தி ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படாத இடுக்கி அணை இந்த விஜயதசமி விடுமுறை தினத்தில் திறக்கப்பட்டிருந்தது எங்களை கவுரவிப்பதற்காகவே போல் இருந்தது. விடுமுறையில் பயணிப்பதால் பல சிக்கல்கள் இருந்தாலும் இதுபோல் சில சந்தோஷங்களும் எதிர்பாராமல் நடப்பதுண்டு.

மாலை ஐந்து மணியே ஆனாலும், அங்கு பார்ப்பதற்கு வேறு எந்த இடமும் இல்லாததால், விடுதியை தேட தொடங்கினோம். வழியில் சிலர் அந்த வட்டாரத்தில் நல்ல விடுதி என்று சொல்லி அனுப்பிய இடத்தில எங்களுக்கு அறைகள் இல்லாமல் ஏமாற்றம் கிடைத்தாலும் அந்த விடுதி மூலம் வேறு ஒரு இடத்தில இடம் கிடைக்க, அந்த விலாசத்தை தேடி நகர்ந்தோம். அந்த விடுதி மேலாளரின் கைபேசி எண்ணில் அவர் காட்டிய வழியே சென்றாலும் பாரமடா சென்றவுடன் எங்களுக்கு வழி குழம்ப, தொடுபுழா செல்லும் சாலையில் நாங்கள் காத்திருக்க, அவர் எங்களுக்கு வழிகாட்ட ஒருவரை அனுப்புவதாக சொன்னார். இங்கு அனைத்து மலையாள உரையாடல்களின் புகழ் ரெஜித்தையே சாரும். தொடுபுழா செல்லும் வழிப்பலகைகளை கண்டதும் திரிஷ்யம் படம் தான் நினைவிற்கு வந்தது.

வழிகாட்ட வந்தவர் சில நிமிடங்களில் நடந்தே வந்து எங்களைக் கண்டதும் நாங்கள் அந்த விடுதிக்கு எத்தனை அருகில் வந்த பின் தடுமாறினோம் என்பது புரிந்தது. அவரை பின் தொடர்ந்து அந்த இடத்தை அடைந்த பின் தான் அது விடுதி அல்ல சர்ச்சின் அறைகள் என்றும் அவர் விடுதி மேலாளர் அல்ல சர்ச் பாதர் என்பதையும்  உணர்ந்தோம். எனது ஓட்டுநர் உரிமத்தை பணயமாக வைத்து முன்பணத்தை செலுத்தி விட்டு, மூன்றாவது நாளும் குறைந்த கட்டணத்தில் சிறப்பான அறை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தோம். அந்த அறையில் நான்கு கட்டில்கள் மெத்தையுடன் இருக்க, ஏசி மற்றும் மின்விசிறி இல்லாமலேயே இயற்கையின் குளிர் எங்களை சிலுக்கிடச் செய்தது. அந்த குளிருக்கு முக்கிய காரணம் அறைக்கு பின் புறமாக ஓடிய ஒரு கால்வாய் தான் என்பதை மறுநாள் காலை கண்டோம். நாங்கள் கைகால் கழுவிக் கொண்டு இரவு உணவு உண்ண செல்லும் பொழுது மணி ஏழு பத்து தான் என்றாலும், அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. வந்த வழியில் ஒரு உணவகத்தைக் கண்ட நினைவில் பிகோவில் அந்த உணவகத்திற்கு சென்று, அங்கு அடுப்பங்கரையில் தூங்கிக்கொண்டிருந்த பூனையை எழுப்பினோம். எங்களுக்காகவே பிரத்தியேகமாக சிக்கனை வறுத்து பரோட்டாவுடன் தந்தனர். சுமாரான சுவை என்றாலும் வேறு வழியின்று உண்டு, சில ஒம்லெட்டுகளுடன் பசியாற்றினோம்.

ஒரு கட்டனுடன் அங்கு இருந்தவர்களுடன் உரையாடும் பொழுதுதான் இடுக்கியில் சுற்றுலா சரிவர சீர் செய்யாததால் மக்கள் வரத்து குறைந்து இங்கு சுற்றுலாவை நாடி இருக்கும் பலரும் சிரமப்படுவதை அறிந்தோம். இயற்கை எழில் கொஞ்சும் இடுக்கியில் மக்கள் அறியாத பல 'வல்லிய ஸ்தளங்கள்' உண்டு என்று அவர்கள் பெருமிதத்துடன் கூறினர். இரவை குளிரில் போர்வையின்றி கழித்து, காலைப் பனியில் ஐஸ் கட்டி போல் வந்த நீரில் குளித்து விட்டு, வழியில் ஒரு கடையில் புட்டு கிடைக்காவிட்டாலும் பிரபாகருக்கு பரோட்டாவுடன் கடலைக்கறி வாங்கி கொடுத்து, மூன்றாவது பார்க்கிங் வாகனமாக பிகோவை இடுக்கி அணை அருகே நிறுத்தினோம். காலை ஒன்பது மணி தான் என்றபொழுதும் அங்கு வெய்யில் சுளீரென்று தன் பற்களை இளித்துக் கொண்டிருக்க அங்கு இருந்த குடை மற்றும் தொப்பி கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது.

அனுமதி சீட்டு வாங்க ஏற்கனவே ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்த வரிசையில் நாங்களும் சென்று நின்றோம். அணையை நடந்து சுற்றிப்பார்பது அல்லாமல் மின்சார ஊர்தியில் சுற்றிக்காட்டவும் ஒரு கட்டணம் இருந்ததைக் கண்டு, வெய்யிலின் தாக்கத்தை மனதில் கொண்டு, கூடுதல் கட்டணம் கொடுத்து அந்த மின்சார வாகன டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, நுழைவு வாயில் செல்ல வரிசையில் நின்றால் 'கேமெரா மற்றும் கைபேசிகள் உள்ளே அனுமதி இல்லை' என்ற செய்தி வரிசையில் தீ போல பரவ, நானும் பிரபாகரும் பிகோவிற்கு சென்று கைப்பேசிகளை வைத்து விட்டு திரும்புவதற்குள் வரிசை நீண்டிருந்தது. இனி அணையை பார்வையாலேயே மட்டும் தான் புகைப்படம் எடுக்க முடியும் என்ற சோகத்தில், அருகில் நிறுத்தியதனால் ஒரு அலைச்சல் மிச்சமானது என்று மனதை தேற்றிக்கொண்டு செல்ல, கடும் சோதனையை தாண்டி நுழைவு வாயிலினுள் அனுமதிக்கப்பட்டோம்.

அங்கு இருந்த பல காவலர்களுள் ஒருவர் மட்டும் எங்களை ஒரு இடத்தை சுட்டிக்காட்டி வாகனம் வரும்வரை காத்திருக்கச் சொன்னார். அணையின் வாயிலில் நின்றதால் அடித்த குளிர்ந்த கற்று எங்களை அணையை சுற்றி பார்க்கும் ஆசையை மேலும் தூண்ட அப்படியே நடக்கத் தொடங்கினோம். நாங்கள் நுழைந்த இடமும் மலை மீது தான், அணை சென்ற பாதையும் ஒரு மலையை நோக்கி இருக்க இது இரண்டும் தான் குறவன் குறத்தி மலை என்று நினைத்துக்கொண்டு நடந்த எஙகளுக்கு அந்த அணையின் முடிவிற்கு வந்த பின் தான் அது தவறு என்று புரிந்தது. நாங்கள் முதலில் கடந்தது அந்த பாரபோலா அணை இல்லை, இப்பொழுது தான் குறத்தி மலையின் தொடக்கத்தை அடைந்துள்ளோம் அடுத்து தான் அணை பின் குறவன் மலை என்பது விளங்கியது. கூட்டமாக சென்ற மக்களின் பின் அந்த தார் சாலையில் அப்படியே பேசிக்கொண்டே நடந்தோம், நடந்தோம், இருபது நிமிடத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தோம்.

குறத்தி மலையை முழுதும் சுற்றி வரும்போது எங்களைக் கடந்து சென்ற அந்த மின்சார வாகனங்களில் இருந்த மக்களைக் கண்டு பொறாமை பட்டுக்கொண்டே நடந்து ஒரு வழியாக அணையை அடைந்தோம். அத்தனை பெரிய ஆற்றின் குறுக்கே இரு மலைகளுக்கு நடுவில் பாரபோலா வடிவில் அந்த அணையை வடித்திருப்பது மனிதனின் ஆற்றலுக்கு சிறந்த சான்று. நான் இதுவரை கண்ட அணைகள் அனைத்துமே நிலப் பரப்பில் இருந்தவை, ஆனால் இந்த அணையின் இரு பக்கங்களும் மலையில் சொருகப்பட்டிருந்தன. இயற்கையையும் செயற்க்கையையும் இணைத்து ஒரு சொட்டு நீர் கூட கசியாதபடி அந்த அணை வடிவமைந்திருந்ததைக்கண்டு வியந்து கொண்டே அங்கு இருந்த ஒரு குகையின் உள்ளே நுழைந்தோம். அப்பொழுது ரெஜித் 'வைஷாலி, என்று ஒரு படம் இங்கு காட்சி செய்யப்பட்டதால் இங்கு இருக்கும் ஒரு குகைக்கு வைஷாலி குகை என்று பெயர் வந்தது. அது இதுதானா என்று தெரியவில்லை' என்று சொல்லிக் கொண்டு செல்ல அந்த குகையின் மறுமுனைக்கே வந்துவிட்டோம்.

அந்த முனையில் அணைக்கு கீழே இருந்து வர மற்றொரு பாதை இருந்தது. அந்த முனைக்கு ஒரு மின்சார ஊர்தி வந்து மக்களை இறக்கி விட, மூவருக்குமே நடந்த அயர்ப்பு இருந்ததால் அந்த ஓட்டுநரிடம் சென்று நாங்கள் பயன்படுத்தாத டிக்கெட்டை காட்டி எங்களை கொண்டு செல்லமுடியுமா என்று கேட்க ரெஜித்தை முன்நிறுத்தினோம். ரெஜித்தின் வசீகர வலையில் விழுந்த ஓட்டுநருடன் அதன்பின் மலையாளத்தில் நடந்த உரையாடல்கள் தமிழில்,

'வண்டில ஏறாமல் காணாமல் போன அந்த மூணு பேரு நீங்கதானா. உங்களுக்காக ரொமப் நேரமா காத்திருந்து வேறு ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தேன்' என்று சோகத்துடன் அவர் கூறினார்.

'திரும்ப போகும்போது எங்களை கொண்டு செல்ல முடியுமா' என்று ரெஜித் கேட்க, 'அது முடியாது, கொண்டு வந்தவர்களை தான் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும். சேரி ஏறுங்க அப்படியே அந்த முனைல விட்டுட்டு வரேன்' என்று எங்களை ஏற்றிக்கொண்டு, எங்களது விபரங்களை மற்றும் நாங்கள் இந்த மூன்று நாட்கள் செய்த சாகசங்களை கேட்டு அறிந்துக்கொண்டார். மேலும் இந்த அணையில் இருக்கும் ஒவ்வொரு அடி நீரினாலும் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகின்றது என்றும் இந்த அணை நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டால் எத்தனைக் கோடி ரூபாய் வருவாயை கேரள அரசு இழக்கும் என்ற அரசியலும் பேசினார். பாரபோலா அணையின் மறுமுனைக்கு வந்தவுடன் அந்த வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு, அந்த அணையின் அடியில் இருக்கும் மின்சாரம் உற்பத்தி ஆகும் முறைகளையும் அவர் மின் வாரியத்தில் பணிபுரிந்த பொழுது மின் தூக்கியில் அணைக்கு அடியில் சென்று நீரைக் கண்ட அனுபவங்களையும் சொன்னார்.

'நீங்கள் இடுக்கி போல் ஒரு இடத்தை எங்கும் காண முடியாது. இங்கு பலரும் அறியாத சில அருமையான ஸ்தளங்கள் இருக்கின்றன' என்று தன் கைபேசியில் இருந்த அவரது பழைய புகைப்படங்களை காட்டினார். உண்மையிலே அந்த புகைப்படத்தில் இருந்த இடங்கள் வெளிநாடுகளில் சினிமா பாடல்கள் காட்சி செய்யும் இடம் போல இருந்தது. குறிப்பாக ஒரு மலை மீது இருந்த படத்தில் மேக கூட்டங்கள் அவர் காலுக்கு அடியில் செல்வது போல் இருந்தது. அடுத்த முறை இடுக்கி மட்டுமே மூன்று நாட்கள் வரவேண்டும் என்று தீர்மானித்தோம், எங்களுக்கு வழிகாட்டியாக அவர் வர சம்மதிக்கும் பொழுது அவர் இறக்கி விட்ட பயணிகள் அணையை சுற்றி பார்த்து விட்டு திரும்பியிருந்தனர். எங்களுக்கு வைஷாலி குகைக்கு செல்லும் சரியான வழியை காட்டிவிட்டு, எங்களை அதுவரை அழைத்து செல்ல அந்த பயணிகளிடம் அனுமதியும் வாங்கினார். அவர்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல் நடந்தே செல்ல முடிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்து வழி அனுப்பினோம். குறத்தி மலையில் ஒற்றை அடி பாதையில் சென்ற மக்கள் கூட்டத்தை பின் தொடர்ந்து பத்து நிமிட பயணத்திற்கு பின் அந்த வைஷாலி குகையின் ஒரு முனையை அடைந்தோம். ஒரு பெரிய கனரக லாரி சிரமம் இன்றி செல்லக் கூடிய அளவிற்கு அகன்று சுரண்டப் பட்டிருந்த அந்த இருள் சூழ்ந்த குகையின் மறுமுனையில் இருந்த வந்த அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தோம். நீருக்கு பல அடிகளுக்கு மேல் மலையில் முடிந்த அந்த முனையில் இருந்து அணையின் நீரைக் கண்ட காட்சி சொர்கத்தை கண்டது போலே மனதிற்கு ஒரு வித அமைதியை தந்தது.    

அந்த இடத்தில் சில நிமிட அமைதி தியானத்திற்குப் பின், பல உள்ளூர் காதல் ராஜா ராணிக்களின் பெயர்கள் அந்த பாறைகளில் அம்புகளுடன் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே வந்த வழியே திரும்பினோம். முதல் அணையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கடையில் சுட சுட சில பழம்பொறிகளையும் ஆளுக்கு ஒரு லெமன் சோடாவையும் உண்ட பின்தான் மூவருக்கும் இளமை திரும்பியது.  அணையின் வாயிலுக்கு வரும் பொழுது அவர் தனது பயணிகளை இறக்கி விட்டு அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார், அங்கு கைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை என்பதால் திருட்டுத்தனமாக அவர் ரெஜித் கைபேசிக்கு அழைத்து மிஸ்டு கால் கொடுத்தார். பிகோவை வந்தடையும் பொழுது மணி 12 30. அதன் பின் தான் ரெஜித் தன் கைபேசி உயிரின்றி கிடப்பதையும் அந்த மனிதரின் எண்ணை நாங்கள் தவறவிட்டதையும் எண்ணி சில நொடிகள் வருந்தினோம். அணையில் இருந்து கீழே வந்த பின் அணை பின் தெரியும்படி சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.



கம்பம் செல்ல கூகிள் அம்மணியின் துணையை நாடிச் சென்று, தேனி வந்தவுடன் 'கேரளா சிப்ஸ்' கேட்டவர்களுக்கு, பிரபாகர் தேனியில் சிப்ஸ் வாங்கினார் என்பதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். அவருக்கு கேரளா புட்டு கிடைக்க வில்லை என்ற வருத்தம் இருந்தாலும் ஒரு நல்ல பயணத்தின் திருப்தி இருந்தது. சிறுசேரியில் இருந்த ரெஜித் வீட்டில் மூவரும் பிரிந்து, நான் ரெஜித் வண்டியில் மேடவாக்கம் வந்தடையும் பொழுது மணி 12 20.

மூன்று நாட்கள், மூன்று வாலிபர்கள், 1400 கிலோ மீட்டர்கள், சரக்கு இல்லை, பாட்டு இல்லை ஆனால் அடுத்த தலைமுறைக்கு சொல்லும் அளவிற்கு பல நினைவுகளுடன் இந்த பயணத்தை பதிய வேண்டும் என்ற உறுதியுடன் உறங்கச்சென்றேன்.

Sunday, March 5, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்

****************************************************************************************************************
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா
****************************************************************************************************************
வாகமானில் குளிர்ந்த இரவை தங்கும் அரை இல்லாமல் எப்படி கழிப்பது என்ற குழப்பத்தில் இருந்த எங்களுக்கு அந்த ரிசார்ட் மேலாளர் அருமையான யோசனையைக் கூறி வழிகாட்டினார். அவர் மலையாளத்தில் என் நண்பர்களிடம், 'இங்கு தங்க ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக கட்டணத்தில் அறை கிடைத்தாலும், அது சுத்தமின்றி குப்பை போலத்தான் இருக்கும். இங்கிருந்து ஒரு இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் சிரமம் பாராமல் பயணித்து இரெட்டுபேட்டா சென்றால், இங்கு செலவிடும் காசிற்கு அங்கு குறைந்த கட்டணத்தில் சுத்தமான அறையுடன் சிறப்பான உணவையும் அனுபவித்து விட்டு டீசல் செலவும் அதற்குள் அடங்க சுகமாக காலை திரும்பலாம்' என்று கூறி அனுப்பினார். நாள் முழுக்க மலைப் பாதையில் பிகோவை செலுத்தி பிரபாகர் அயர்ந்திருக்க, அங்கு ஓட்டுநர் பொறுப்பை நான் ஏற்று, அந்த கும் இருட்டில் பிகோவின் சோடியம் துணை கொண்டு இரெட்டுபேட்டா நோக்கி, வழியில் சாலை நடுவே இருந்த பல குழிகளில் பிகோவை செலுத்தி ஒரு வழியாக இலக்கில் கொண்டுசேர்த்தேன். இரெட்டுபேட்டா அந்த கணம், மக்கள் மற்றும் வாகன ஓட்டம் அதிகம் இல்லாத அமைதியான டௌனாக எங்களுக்கு தோன்றியது.    

நான் பிகோவில், பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ரௌண்டானாவின் அருகில் நிற்க, அவர்கள் இருவரும் அருகில் இருந்த சந்துகளில் ஏதேனும் விடுதிகள் உண்டா என விசாரிக்கச் சென்றனர். நான்கு சக்கர வாகனங்களின் மற்றொரு பிரதிகூலம் இது. எல்லா சந்துகளிலும் யோசிக்காமல் நுழைந்து விட்டால் பின் திரும்பிவர மிகவும் சிரமப்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தான் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களின் மேல் ஓங்கி நிற்கின்றன.  இருவரும் பார்க்கிங் வசதியுடன் கொண்ட ஒரு விடுதியை கண்டு வர, பிகோவை அந்த விடுதி நோக்கி செலுத்தி, அதன் வாயிலில் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவு இருந்த இடத்தின் நடுவே பிகோவை நிறுத்தி விட்டு, மேலே சென்றோம். சுண்ணாம்பின் வாசம் கூட குறையாமல் புதிதாய் நிறுவப்பட்டிருந்த அந்த விடுதியில், தேனியில் தங்கியதை விட குறைந்த கட்டணத்தில், புத்தம் புதியதாய் ஒரு அறை கிட்டும் என்று அந்த குளிரில் நடுங்கியபோது நாங்கள் எண்ணவே இல்லை. நல்லதொரு உறக்கம் தந்த உற்சாகத்துடன், காலை ஆப்பம், நூலாப்பம், பரோட்டா, பக்ரி,  முட்டை கரி, என சகலமும் சுவைத்த பின்பு, கட்டணம் எவ்வளவு என்று நினைக்கறீர்கள்? ஹ்ம்ம், இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கு கூட அங்கு அவசியமில்லாமல் போனது. அனைத்திற்கும் எங்களுக்கு வழிகாட்டிய அந்த பெயர் தெரியாத நல்ல உள்ளத்திற்கு நான் நன்றி சொல்லியபோதும், பிரபாகருக்கு ஒரு மிகப் பெரிய குறை இருந்துகொண்டே இருந்தது. புட்டும் கடலைக்கறியும் கிடைக்காத குறை தான் அது.

மீண்டும் வாகமான் நோக்கி எங்கள் பயணம் தொடர, இரவு இருட்டில் நான் கடந்து வந்தப் பாதையின் ஆபத்தை கதிரவன் தெள்ளந்தெளிவாக ஒருபுறமும் இருந்த மிகப் பெரும் பள்ளத்தாக்கை எங்களுக்கு காட்டியது. மேலும் இங்கு எல்லாப் பாதையுமே குறுகிய ஒற்றை வழிப் பாதைகள் தான், கவனம் தப்பினால் மரணம். வாகமான் செல்லும் வழியில் முதலில் வந்த இடமான கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் பிகோவை ஓரமாக நிறுத்திவிட்டு, பிரபாகரின் dslr காமிராவிற்கு வேலை கொடுத்தோம்.
கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் நான் கிளுக்கியது
சில புகைப்படங்களை கிளிக்கி விட்டு கிளம்பும் முன் அங்கு சாலையோரம் இருந்த ஒரு கடையில் லெமன் சோடா இருப்பைதைக் கண்டவுடன் ப்ரேமம் பட 'கஸ்கஸ்' நினைவிற்கு வந்த பின் லெமன் சோடா குடிக்காமல் செல்ல முடியுமா (லெமன் vs லைம் என்று ஆவி அவர்கள் வாதத்திற்கு வர நினைத்தால் இந்தச் சிறுவனின் பிழையை மன்னிக்கவும்). இருவரும் பெரிதும் நாட்டம் காட்டாததால் எனக்கு மட்டும் ஒன்று சொன்னேன். கார் டிக்கியில் ('ட்ரங்க்' என்று குறிப்பிடாததிற்கு மீண்டும் ஆவீ அவர்கள் மன்னிக்கவும்) தேவையான பொருட்களை வைத்துக்கொண்டு, சாலை மேல் ஒரு சிறு மேசையை விரித்து வைத்துக்கொண்டு, அதேன் மேல் பல விதமான ஊறவைத்த காய் மற்றும் கனிகளை அந்த இளைஞன் விற்பனை செய்துகொண்டு இருந்தான். வெள்ளைக் கண்ணாடி டம்ளரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, சர்க்கரை பாகு நீரை லேசாக கலந்து, அரைத்த பச்சை மிளகாய் இஞ்சு பூண்டு ஆகியவற்றையும் சிறிதளவு கலந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, ஒரு சோடா பாட்டிலை உடைந்து, நுரை பொங்க விடமால் அந்த சோடாவை கலந்து, ஒரு தேக்கரண்டி கஸ்கஸ் சேர்த்து, பின் ஒரு வெள்ளி டம்பளரை அந்த கண்ணாடி டம்ளர் மீது மூடி, பார்டெண்டரிடம் ஜேம்ஸ் பாண்ட் 'shaken and not stirred' என்று கூறுதுஎன் நினைவிற்கு வருமளவுக்கு தேர்ந்த  பார்டெண்டர் போல் அதை நன்கு குலுக்கி கொடுத்தான். இதன் மேல் அதன் சுவை பற்றி சொல்லவா வேண்டும், இப்பொழுது அதை நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் சுரந்து சாப்பாட்டு ராமனை தட்டி எழுப்புகின்றது. பிறகு இரு நண்பர்களும் ஆளுக்கு ஒன்று வாங்கி சுவைத்துவிட்டு, ஒரு நல்ல மாக்டைல் குடித்த திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

அந்த எலுமிச்சை ரச  சோடா  

எங்களது வழிகாட்டி 
அங்கு இருந்த சுற்றுலாத் தளங்களிற்கு என்று அமைக்கப்பட்டிருந்த வரைபடத்தின் உதவி கொண்டு வாகமானை சுற்றத் தொடங்கினோம். முதலில் சென்றது அதில் இருக்கும் 'டீ லேக்', எதோ வித்தியாசமாக இருக்கும் என்று சென்றால், தேநீர் பயிர் செய்யப்பட்டிருந்த இரு குன்றுகளுக்கு நடுவில் இருந்தது அந்த ஏரி. அங்கு சில பெடல் போட்டுகள் மற்றும் சிறுவர்களுக்கான zorbing பலூன் இருந்தது. மூவருக்குமே அந்த இடம் பெரிதும் ஈர்ப்பு தராததால் வீணாக கொடுத்த பார்க்கிங் கட்டணத்தை காந்தி கணக்கில் போட்டுவிட்டு அடுத்த இடத்தை, அந்த வரைபடத்தில் இருந்த அருவியை தேர்வு செய்து விட்டு, அதன் பாதையில் சென்றோம்.


டீ லேக் 


நமக்கும் நீருக்கும் பத்து பொருத்தமும் உண்டு, மலை அருவி நீரில் தொடங்கி குளம், குட்டை, ஏரி, ஆறு, கடல், மழை ஏன் மோட்டார் பம்ப் நீரைக் கூட விடுவது இல்லை. இருமலைகளுக்கு நடுவில் குடைந்து சென்ற அந்த சாலை சினிமா பட கார் சேஸ் லொகேஷன்களை நினைவுபடுத்த, ஒரு தூரத்தில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, சற்று நேரத்தில் மலை மீது இருந்து ஓடும் அந்த அருவியும் கண்ணில் பட்டது. பெயரைப் போலவே அது பாலொழுகும் அருவியாகத்தான்  காட்சியளித்தது. அந்த அருவிக்கு செல்ல சாலை அந்த இடத்துடன் முடிய, 'இந்த அருவியில் குளிக்க அனுமதி இல்லை' என்று ஒரு எச்சரிக்கை பலகையும் இருந்தது. ஆனால் நால்வர் அந்த அருவியின் அடிவாரத்தில் குளிப்பதைக் கண்டவுடன் எங்களுக்கும் நீர் அரிப்பு ஏற்பட, அந்த மலை வழியில் தண்ணீரை நோக்கி இல்லாத பாதையை தேடி நடந்து, ஒரு வீட்டின் முன் சென்றோம். அந்த வீட்டில் இருந்தவர்கள் 'அருவிக்கு போக வழியில்லை இது தனியார் இடம்' என்று எங்களை விரட்ட, ஏமாற்றத்துடன் மீண்டும் பிகோவை நோக்கி மலையேறினோம். அப்பொழுது எங்களுக்கு எதிரில் வந்த தமிழர்கள் எங்கள் எச்சரிக்கையையை நம்பாமல் அந்த அருவியை தேடி நடக்க, சில நிமிடங்களில் நாய்கள் குறைக்கும் சத்தம் எங்களுள் ஒரு நைய்யாண்டியை தூண்டியது.

பாலொழுகும் அருவி 

அருவியில் இருந்து திரும்பும் வழியில் இருந்தது 'மொட்டக்குன்னு', நம் ஊரில் சொல்லும் மொட்டை மலை போல் ஒரு மரம் கூட இல்லாமல் மொத்தம் புல்வெளி படர்ந்து இருந்தது. அந்த இடத்தில மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்க, பிகோவை நிறுத்த இடம் கிடைக்காது என்பது உறுதியாக எங்களுக்கு பட்டது. பல சினிமா பாடல்களில் கண்ட இடம் என்பதால் பெரிதும் வருத்தம் இல்லாமல், அடுத்து பைன் பாரஸ்ட் சென்றோம். கொடைக்கானலில் இருப்பதைப் போல் ஒரு அடர்ந்த பைன் மறக்காடு.

வெற்றிக் கூட்டணி 

நம் நாட்டில் எங்கும் இல்லாத ஒரு வகை மரத்தை, ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டில் இருந்து வரவழைத்து குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் அவற்றை வளர்த்து, ரயில் தடங்கள் அமைக்க பயன்படுத்திய அந்தப் பைன் மரங்கள் தற்காலத்தில் சுற்றுலா காட்சிப் பொருளாக உள்ளது. வந்ததிற்கு சில பழம்பொறிகளை உண்டுவிட்டு அடுத்து சூசைட் பாயிண்ட் நோக்கி நகர, அங்கு பாரா கிளைடிங் இருப்பதாக சில விளம்பரங்களைக் கண்டு ஆர்வத்துடன் சென்றோம். பிகோவை நிறுத்திவிட்டு, பாராச்சூட் தெரிந்த அந்த மலைக் குன்றின் மேல் வேகமாக ஏறினோம். மேலே ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெறிச்சோடி இருக்க, ஏறிய களைப்பில் பேசமுடியாமல் மூவரும் அப்படியே சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். நீரும் காரிலே இருக்க, வந்த வழியே திரும்பலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கோம் போது, கண்ணில் தென்பட்ட மூன்று வாலிபர்களிடம் நாங்கள் பாரா கிளைடிங் பற்றி விசாரிக்க அவர்கள் அடுத்து இருக்கும் மலையில் தான் அது இருப்பதை எங்களுக்கு சுட்டிக்காட்டினார். மேலும் இந்தப் பயணத்தில் எங்கள் மூவருக்கும் சேர்த்து ஆகும் செலவின் அளவிற்கு அதில் ஒருவரின் கட்டணம் என்று அவர்கள் சொல்லிய பின் அந்த திசை நோக்கி செல்வோமா என்ன.

வாகமானில் அடுத்து எங்கு செல்வதென்று அந்த வரைபடத்தை ஆராய்ந்து வேறு இடங்கள் இல்லாமல் நாங்கள் விழிக்கும் பொழுது மணி ஒன்று. அடுத்து மதிய உணவுதானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மீண்டும் சில பழம்பொறிகளை வாங்கிச் சுவைக்கும் பொழுதுதான் அந்த வரைபடத்தில் 'வாகமான் இடுக்கி மாவட்டம்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வர, 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் வரும் 'இடுக்கி' பாட்டு எனது  மண்டையில் ஒலிக்க 'நாம் ஏன் இடுக்கி செல்லக்கூடாது' என்று நான் கேட்க, பிரபாகர் 'எனக்கு புட்டும் கடலைக்கறியும் கிடைத்தால் போதும் எங்கு வேண்டுமானலும் செல்லலாம்', ரெஜித் 'எனக்கு எங்கனாலும் ஒகே',  என்று அவர்கள் இருவரும் உடனே சம்மதிக்க, இடுக்கி நோக்கி பிகோவை செலுத்தினோம். அந்த வினாடி நாங்கள் எடுத்த அந்த முடிவு தான் இந்த பயணத்தை எங்கள் மூவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பயணமாக மாற்றும் என்பது அந்த நொடி எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

                                                                                                                                   - பயணம் தொடரும்!

****************************************************************************************************************
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி
****************************************************************************************************************

Friday, March 3, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா

****************************************************************************************************************
முந்தைய பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
****************************************************************************************************************
காரில் பயணம் செல்லும் பொழுது பலவித அனுகூலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பிரதிகூலமான பார்க்கிங் பிரச்சனை உண்டு. ஆடவருடன்  தங்கும்பொழுது விடுதியின் தரம் பெரிதும் இல்லாவிட்டாலும் பிகோவை பாதுகாப்பாக இரவு நிறுத்த இடவசதி கொண்ட விடுதியை தேனீ டௌனை நெருங்கியதுமே தேடத்தொடங்கினோம். மூவருக்குமே பரிட்சயம் இல்லாத நகரம், ஒரு விடுதியின் விளம்பரத்தை பின் தொடர்ந்து ஒரு குறுகிய சந்தினுள் பிகோ நுழைந்தது. அந்த விடுதி சற்று சிறியதாக தோன்றவே பார்க்கிங் வசதியை அலச நான் முதலில் சென்று பார்க்க, உளளே பத்து லாரிகளை நிற்கும் அளவு வசதி இருந்தது. எட்டு மணிநேர பயணத்திற்கு பின்பு  பிகோவிற்கு மட்டும் அந்த  ஒய்வு மிக அவசியமானதன்று வண்டியை பத்திரமாக கொண்டு வந்த ஓட்டுநர்களுக்கும் தான். கூகுள் மற்றும் OYO துணையின்றி ஒரு விடுதியில் தங்குவது இதுவே முதல் முறை என்றபொழுதும் சுத்தமான அறை மற்றும் சிக்கனமான கட்டணத்துடன் அன்றைய இரவு இனிதே முடிந்தது.

சூரியோதயத்துடன் விழித்து மூவரும், தேனீ கடந்து வழியில் ஒரு பேக்கரியில் காலை உணவை முடித்து கொண்டு கம்பம் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோவை சென்றபொழுது கண்டது போலே இங்கும் பேக்கரியில் தேநீர் முதல் உணவு வரை சகலமும் கிடைத்தது. வட தமிழகத்தில் வளர்ந்த எனக்கு பேக்கரி என்றாலே கேக் மற்றும் பப்ஸ் கிடைக்கும் கடை என்றுதான் பரிட்சயம். கம்பத்தை கடந்து கேரள எல்லையை அடையத் தொடங்கியதுமே பசுமை கண்ணை ஈர்த்தது. லோயர் கேம்ப் கடந்ததுமே, தரை வழிப் பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தத மலைப்பாதை, எங்கள் முன் வளைந்து உயர்ந்து இருந்தது. மலை ஏறும் வழியில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பெரியார் நிலையத்தை கடந்து செல்ல குமுளி வந்த தமிழ்நாட்டுப் பேருந்துகள் வரிசையாக நிற்க, அங்கு இருந்த ஒரு சோதனைச் சாவடியை கடந்தவுடன் குமுளி எங்களை அன்புடன் வரவேற்றது. தமிழகத்தையும் கேரளாவையும் பிரிப்பது அந்த சாவடியின் சிறு கம்பம் தான். பறந்து விரிந்து இயற்கை எழில் கொஞ்சும் உலகில் மனிதன் செய்த அக்மகிரமங்களில் இந்த எல்லைப் பிரிவுகளும் ஒன்று.

கேரளா வந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கட்டனும் பழம்பொறியும் சுவைக்க வேண்டும். கட்டன் பால் இல்லாத தேநீர், பழம்பொறி பதமாக தேர்வு செய்யப்பட்ட நேந்திர வாழைப்பழத்தில் செய்யப்படும் பஜ்ஜி. அங்கு பழம்பொறி சற்று சுமாராகவே இருக்க அடுத்து எங்கு செல்வது என்று கட்டன் குடித்துக்கொண்டே அலசினோம். எத்தனை முறை அடி வாங்கினாலும் கவுண்டமணியிடமே திரும்பி செல்லும் செந்தில் போலவே மீண்டும் கூகிளிடம் சென்றால், அது 'அடேய் முட்டாள் உன் அருகிலேயே தேக்கடி இருக்கின்றது' என்று நகைத்தது. குமுளியில் இருந்து பத்து நிமிட பயணத்தில் தேக்கடியை அடைந்தோம்.

தேக்கடி 


அரசு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சுற்றுலா தளத்திற்குச் சென்றாலும் மக்கள் கூட்டம் பொங்கி வழிந்து அந்த இடத்தின் அமைதியை கலைக்கும் வழக்கம் தெரிந்தாலும், சொந்த கல்யாணத்திற்கே நாட்களை எண்ணி விடுமுறை கொடுக்கும் இந்த அலுவலக சூழலில், அரசாங்க விடுமுறைகளில் வேறு வழியின்றி பயணிக்கும் கட்டாயம் எங்களையும் தொடர்ந்தது. அங்கும் மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டிருக்க பிகோவை நிறுத்த இடம் கிடைக்க சற்று நேரமானது. படகுத் துறையை அடைந்த பொழுது ஏற்கனேவே ஒரு படகு சென்று விட்டதும் அடுத்த படகு வர இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பது சற்று ஏமாற்றம் தந்தாலும், 'ச்சீ இந்த ஏரில தண்ணியே இல்ல, போன வருஷம் சென்னைல வந்த வெள்ளமே அதிகம்' என்று பிகோவை நோக்கி நடந்தோம். வழியில் சில பயண முகவர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு, 'உங்கள் கார்களாலும் செல்ல முடியாத இடங்களுக்கு ஜீப்பில் கொண்டு சென்று வன விலங்குகளைக் காட்டுகிறோம்' என்று எப்பொழுதோ டிஸ்கவேரி சானலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி எங்களை அழைத்துச் செல்ல விலை பேசத் தொடங்கினர். சொந்த வாகனம் இருக்கும் போது வேறு வாகனத்தில் செல்ல எங்களுக்கு பெரியதொரு ஈர்ப்பு தோன்றவில்லை. எங்கள் ரெஜித்தின் வசீகர பேச்சில் சிக்கிய அந்த முகவர்கள் சில நிமிடங்களிலேயே உண்மைகளை கக்க, ஜீப் பயணம் தேவையற்றது என்று அவர்களே சொல்லிவிட்டனர்.

அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு எங்களது அடுத்த இலக்கு 'பருந்தும்பாறா'வாக நிர்ணயமானது. முழுவதுமே மலைப்பாதை, வழி கேட்க ஒரு ஆத்மா கூட இல்லாத பாதை என்பதால் அந்த கூகிள் அம்மணி காட்டிய வழியில் சென்றோம். வழியில் ஒரு பாலத்தை கடந்து பொழுது அங்கு பெருகி ஓடிக் கொண்டிருந்த ஆற்று  நீரைக் கண்டதும் பிகோவை ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, மூவரும் நீரை நோக்கி துள்ளி ஓடினோம். ஆடவராகப் பிறக்க நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று அகமகிழ்த்தபடியே அங்கு ஒரு ஆனந்தக் குளியல் அரங்கேறியது. தமிழகத்திற்கு வர மறுக்கும் முல்லைப் பெரியாரின் ஓர் கிளையில் கொண்ட குளியல் தந்த உற்சாகத்துடன் எங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம்.

ஆனந்தக் குளியல் அரங்கேறியது இங்கு தான் 
வழி நெடுவிலும், இருபுறமும் மனிதனின் ஊடுருவல் பெரிதும் இல்லாத அந்த இடங்களின் பசுமையான இயற்கை அழகு தந்த மயக்கத்தில் கூகிள் அம்மணியின் மேப் வழியே அந்த சாலையின் முடிவிற்கே வந்துவிட்டோம். ஆனாலும் அந்த அம்மணி எங்களை இடது புறம் திரும்பி எங்கள் பயணத்தை தொடர சொன்னது. இடதுபுறம் ஒரு வீடு மட்டும் தான் இருந்தது. அந்த அம்மணி பின் சென்று கெடுவது இது ஒன்றும் முதல் முறை அன்று. மீண்டும் வந்த வழியே சென்று அந்த அம்மணி காட்டிய மாற்றுப் பாதையில் செல்ல, சில அடிகளிலேயே அந்தப் பாதை கூழாங்கற்கள் சாலையாக மாறியது. ஒரு வாகனம் மட்டுமே செல்லக் கூடிய அந்த குறுகிய பாதையில், நாங்கள் போவது சரியான பாதைதானா என்ற அச்சத்துடனே பயணித்தோம். சில நிமிடங்களுக்கு பின் எங்களை ஒரு ஜீப் பின் தொடர சற்றே நிம்மதி கொண்டோம். அந்தப் பாதையின் வழியே ஒரு அழகியே குளம் எங்களுக்காகவே வடித்தது போல் தன்னந்தனியே அமைதியாக ஈர்த்தது. பிகோவை நிறுத்திவிட்டு அங்கு சில படங்கள் எடுத்திக்கொண்டிருக்க, ஜீப் மட்டுமே செல்லக் கூடிய பாதையில் பிகோ ஓட்டிவந்த சாகச வீரரர்களைக் காண அந்த ஜீப் ஓட்டுநரும் அங்கு நின்று, எங்களுக்கு பருந்தும்பாறா செல்ல வழியும்  தானும் அங்கு தான் செல்வதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்தக் குளம் 
 இந்த இடத்தில இருந்து நாங்கள் ,மூன்று மணியளவில் புறப்பட, மதிய உணவு உண்ணாத பசியில் காரில் இருந்த கனிகளை புசித்துக் கொண்டே எங்கள் பயணத்தை தொடர்ந்து பருந்தும்பாறாவை அடைந்தோம். எங்களைக் கண்டதுமே, எங்களுக்கு வழிகாட்டிய அந்த ஜீப் ஓட்டுநர் மிகவும் ஆனந்தப்பட்டார். பருந்தின் தலைபோல் ஒரு பாறை மட்டும் மலையின் உச்சியில் தனியே நீண்டு இருக்க இந்த இடத்திற்கு பருந்தும்பாறா என்ற பெயர் வந்ததோ? நமக்கு சாகசங்கள் என்றால் தான் மிக பிடிக்குமே, அந்த பருந்தின் தலைக்கு சென்று அங்கு சில செல்பிக்களை எடுத்க்கொண்டு, உயரத்தை கண்டு பருந்தின் தலைக்கு வர பின் வாங்கிய ரெஜித் எடுத்த புகைப்படங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டு, பருந்தின் தலையில் இருந்து மீண்டும் மேல் ஏறும் பொது தான் உணவு உண்ணாததான் விளைவு நன்றாகவே தெரியத்தொடங்கியது. நேராக அங்கு இருந்த கடைகளை நோக்கி செல்ல, அந்த மாலை நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது வேகவைத்த வள்ளிக்கிழங்கும் மீன் குழம்பும் தான். குளிர்ந்த வானிலையில் லேசான மழை சாரல் அடிக்க அந்த மீன் குழம்பும் கிழங்கும் அமிர்தம் போலவே எங்கள் பசியை ஆற்றியது.

பருந்தும்பாரா 


பிரபாகரின் கைவண்ணம் 

பருந்தும்பாறாவில் இருந்து வாகமான் சென்று இரவு தங்கி மறுநாள் வாகமன் சுற்றி பார்ப்பது என்று முடிவு செய்தோம். கதிரவன் மறைந்தபின் அந்த இருண்ட மலைவழிப் பாதை சற்று திகில் உணர்வையே கொடுக்கத்தொடங்கியது. வாகமான் வந்ததுமே இரவு தங்க எந்த விடுதிக்குச் சென்றாலும் 'அறைகள் இல்லை' என்றதே பதிலாக இருக்க, அரசாங்க விடுமுறை தினத்தில் மக்கள் படையெடுப்பால், அந்த குளிரில்  எங்கள்  இரவின் நிலை கேள்விக்குறியானது. குளிர் அதிகரித்துக் கொண்டிருக்க  இறுதியாக ஒரு ரிசார்ட்இல் விசாரிக்க அவர்கள் இருவரும் செல்ல நான் பிகோவில் காத்திருந்தேன். இங்கும் அறை கிடைக்கவில்லை என்றால் அந்த இரவு பிகோவில் அந்தக் குளிரில் தான் என்று நான் எண்ணிக்கொண்டிருக்க, தோல்வியுடனே அவர்கள் இருவரும் வந்தாலும், அவர்களிடம் இருந்த தீர்வு தந்த நம்பிக்கையில், அந்த இரவின் எங்கள் நிலை தெரிய பிகோவின் ஓட்டம் மலையின்  இருளில் தொடர்ந்தது.
                                                                                                                    - பயணம் தொடரும்!

****************************************************************************************************************
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்
****************************************************************************************************************