Sunday, March 5, 2017

ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - வாகமான்

****************************************************************************************************************
முந்தைய பகுதிகளை படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா
****************************************************************************************************************
வாகமானில் குளிர்ந்த இரவை தங்கும் அரை இல்லாமல் எப்படி கழிப்பது என்ற குழப்பத்தில் இருந்த எங்களுக்கு அந்த ரிசார்ட் மேலாளர் அருமையான யோசனையைக் கூறி வழிகாட்டினார். அவர் மலையாளத்தில் என் நண்பர்களிடம், 'இங்கு தங்க ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக கட்டணத்தில் அறை கிடைத்தாலும், அது சுத்தமின்றி குப்பை போலத்தான் இருக்கும். இங்கிருந்து ஒரு இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் சிரமம் பாராமல் பயணித்து இரெட்டுபேட்டா சென்றால், இங்கு செலவிடும் காசிற்கு அங்கு குறைந்த கட்டணத்தில் சுத்தமான அறையுடன் சிறப்பான உணவையும் அனுபவித்து விட்டு டீசல் செலவும் அதற்குள் அடங்க சுகமாக காலை திரும்பலாம்' என்று கூறி அனுப்பினார். நாள் முழுக்க மலைப் பாதையில் பிகோவை செலுத்தி பிரபாகர் அயர்ந்திருக்க, அங்கு ஓட்டுநர் பொறுப்பை நான் ஏற்று, அந்த கும் இருட்டில் பிகோவின் சோடியம் துணை கொண்டு இரெட்டுபேட்டா நோக்கி, வழியில் சாலை நடுவே இருந்த பல குழிகளில் பிகோவை செலுத்தி ஒரு வழியாக இலக்கில் கொண்டுசேர்த்தேன். இரெட்டுபேட்டா அந்த கணம், மக்கள் மற்றும் வாகன ஓட்டம் அதிகம் இல்லாத அமைதியான டௌனாக எங்களுக்கு தோன்றியது.    

நான் பிகோவில், பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ரௌண்டானாவின் அருகில் நிற்க, அவர்கள் இருவரும் அருகில் இருந்த சந்துகளில் ஏதேனும் விடுதிகள் உண்டா என விசாரிக்கச் சென்றனர். நான்கு சக்கர வாகனங்களின் மற்றொரு பிரதிகூலம் இது. எல்லா சந்துகளிலும் யோசிக்காமல் நுழைந்து விட்டால் பின் திரும்பிவர மிகவும் சிரமப்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தான் இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களின் மேல் ஓங்கி நிற்கின்றன.  இருவரும் பார்க்கிங் வசதியுடன் கொண்ட ஒரு விடுதியை கண்டு வர, பிகோவை அந்த விடுதி நோக்கி செலுத்தி, அதன் வாயிலில் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவு இருந்த இடத்தின் நடுவே பிகோவை நிறுத்தி விட்டு, மேலே சென்றோம். சுண்ணாம்பின் வாசம் கூட குறையாமல் புதிதாய் நிறுவப்பட்டிருந்த அந்த விடுதியில், தேனியில் தங்கியதை விட குறைந்த கட்டணத்தில், புத்தம் புதியதாய் ஒரு அறை கிட்டும் என்று அந்த குளிரில் நடுங்கியபோது நாங்கள் எண்ணவே இல்லை. நல்லதொரு உறக்கம் தந்த உற்சாகத்துடன், காலை ஆப்பம், நூலாப்பம், பரோட்டா, பக்ரி,  முட்டை கரி, என சகலமும் சுவைத்த பின்பு, கட்டணம் எவ்வளவு என்று நினைக்கறீர்கள்? ஹ்ம்ம், இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கு கூட அங்கு அவசியமில்லாமல் போனது. அனைத்திற்கும் எங்களுக்கு வழிகாட்டிய அந்த பெயர் தெரியாத நல்ல உள்ளத்திற்கு நான் நன்றி சொல்லியபோதும், பிரபாகருக்கு ஒரு மிகப் பெரிய குறை இருந்துகொண்டே இருந்தது. புட்டும் கடலைக்கறியும் கிடைக்காத குறை தான் அது.

மீண்டும் வாகமான் நோக்கி எங்கள் பயணம் தொடர, இரவு இருட்டில் நான் கடந்து வந்தப் பாதையின் ஆபத்தை கதிரவன் தெள்ளந்தெளிவாக ஒருபுறமும் இருந்த மிகப் பெரும் பள்ளத்தாக்கை எங்களுக்கு காட்டியது. மேலும் இங்கு எல்லாப் பாதையுமே குறுகிய ஒற்றை வழிப் பாதைகள் தான், கவனம் தப்பினால் மரணம். வாகமான் செல்லும் வழியில் முதலில் வந்த இடமான கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் பிகோவை ஓரமாக நிறுத்திவிட்டு, பிரபாகரின் dslr காமிராவிற்கு வேலை கொடுத்தோம்.
கரிக்காடு டாப் வியூ பாயிண்டில் நான் கிளுக்கியது
சில புகைப்படங்களை கிளிக்கி விட்டு கிளம்பும் முன் அங்கு சாலையோரம் இருந்த ஒரு கடையில் லெமன் சோடா இருப்பைதைக் கண்டவுடன் ப்ரேமம் பட 'கஸ்கஸ்' நினைவிற்கு வந்த பின் லெமன் சோடா குடிக்காமல் செல்ல முடியுமா (லெமன் vs லைம் என்று ஆவி அவர்கள் வாதத்திற்கு வர நினைத்தால் இந்தச் சிறுவனின் பிழையை மன்னிக்கவும்). இருவரும் பெரிதும் நாட்டம் காட்டாததால் எனக்கு மட்டும் ஒன்று சொன்னேன். கார் டிக்கியில் ('ட்ரங்க்' என்று குறிப்பிடாததிற்கு மீண்டும் ஆவீ அவர்கள் மன்னிக்கவும்) தேவையான பொருட்களை வைத்துக்கொண்டு, சாலை மேல் ஒரு சிறு மேசையை விரித்து வைத்துக்கொண்டு, அதேன் மேல் பல விதமான ஊறவைத்த காய் மற்றும் கனிகளை அந்த இளைஞன் விற்பனை செய்துகொண்டு இருந்தான். வெள்ளைக் கண்ணாடி டம்ளரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, சர்க்கரை பாகு நீரை லேசாக கலந்து, அரைத்த பச்சை மிளகாய் இஞ்சு பூண்டு ஆகியவற்றையும் சிறிதளவு கலந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, ஒரு சோடா பாட்டிலை உடைந்து, நுரை பொங்க விடமால் அந்த சோடாவை கலந்து, ஒரு தேக்கரண்டி கஸ்கஸ் சேர்த்து, பின் ஒரு வெள்ளி டம்பளரை அந்த கண்ணாடி டம்ளர் மீது மூடி, பார்டெண்டரிடம் ஜேம்ஸ் பாண்ட் 'shaken and not stirred' என்று கூறுதுஎன் நினைவிற்கு வருமளவுக்கு தேர்ந்த  பார்டெண்டர் போல் அதை நன்கு குலுக்கி கொடுத்தான். இதன் மேல் அதன் சுவை பற்றி சொல்லவா வேண்டும், இப்பொழுது அதை நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் சுரந்து சாப்பாட்டு ராமனை தட்டி எழுப்புகின்றது. பிறகு இரு நண்பர்களும் ஆளுக்கு ஒன்று வாங்கி சுவைத்துவிட்டு, ஒரு நல்ல மாக்டைல் குடித்த திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

அந்த எலுமிச்சை ரச  சோடா  

எங்களது வழிகாட்டி 
அங்கு இருந்த சுற்றுலாத் தளங்களிற்கு என்று அமைக்கப்பட்டிருந்த வரைபடத்தின் உதவி கொண்டு வாகமானை சுற்றத் தொடங்கினோம். முதலில் சென்றது அதில் இருக்கும் 'டீ லேக்', எதோ வித்தியாசமாக இருக்கும் என்று சென்றால், தேநீர் பயிர் செய்யப்பட்டிருந்த இரு குன்றுகளுக்கு நடுவில் இருந்தது அந்த ஏரி. அங்கு சில பெடல் போட்டுகள் மற்றும் சிறுவர்களுக்கான zorbing பலூன் இருந்தது. மூவருக்குமே அந்த இடம் பெரிதும் ஈர்ப்பு தராததால் வீணாக கொடுத்த பார்க்கிங் கட்டணத்தை காந்தி கணக்கில் போட்டுவிட்டு அடுத்த இடத்தை, அந்த வரைபடத்தில் இருந்த அருவியை தேர்வு செய்து விட்டு, அதன் பாதையில் சென்றோம்.


டீ லேக் 


நமக்கும் நீருக்கும் பத்து பொருத்தமும் உண்டு, மலை அருவி நீரில் தொடங்கி குளம், குட்டை, ஏரி, ஆறு, கடல், மழை ஏன் மோட்டார் பம்ப் நீரைக் கூட விடுவது இல்லை. இருமலைகளுக்கு நடுவில் குடைந்து சென்ற அந்த சாலை சினிமா பட கார் சேஸ் லொகேஷன்களை நினைவுபடுத்த, ஒரு தூரத்தில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, சற்று நேரத்தில் மலை மீது இருந்து ஓடும் அந்த அருவியும் கண்ணில் பட்டது. பெயரைப் போலவே அது பாலொழுகும் அருவியாகத்தான்  காட்சியளித்தது. அந்த அருவிக்கு செல்ல சாலை அந்த இடத்துடன் முடிய, 'இந்த அருவியில் குளிக்க அனுமதி இல்லை' என்று ஒரு எச்சரிக்கை பலகையும் இருந்தது. ஆனால் நால்வர் அந்த அருவியின் அடிவாரத்தில் குளிப்பதைக் கண்டவுடன் எங்களுக்கும் நீர் அரிப்பு ஏற்பட, அந்த மலை வழியில் தண்ணீரை நோக்கி இல்லாத பாதையை தேடி நடந்து, ஒரு வீட்டின் முன் சென்றோம். அந்த வீட்டில் இருந்தவர்கள் 'அருவிக்கு போக வழியில்லை இது தனியார் இடம்' என்று எங்களை விரட்ட, ஏமாற்றத்துடன் மீண்டும் பிகோவை நோக்கி மலையேறினோம். அப்பொழுது எங்களுக்கு எதிரில் வந்த தமிழர்கள் எங்கள் எச்சரிக்கையையை நம்பாமல் அந்த அருவியை தேடி நடக்க, சில நிமிடங்களில் நாய்கள் குறைக்கும் சத்தம் எங்களுள் ஒரு நைய்யாண்டியை தூண்டியது.

பாலொழுகும் அருவி 

அருவியில் இருந்து திரும்பும் வழியில் இருந்தது 'மொட்டக்குன்னு', நம் ஊரில் சொல்லும் மொட்டை மலை போல் ஒரு மரம் கூட இல்லாமல் மொத்தம் புல்வெளி படர்ந்து இருந்தது. அந்த இடத்தில மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்க, பிகோவை நிறுத்த இடம் கிடைக்காது என்பது உறுதியாக எங்களுக்கு பட்டது. பல சினிமா பாடல்களில் கண்ட இடம் என்பதால் பெரிதும் வருத்தம் இல்லாமல், அடுத்து பைன் பாரஸ்ட் சென்றோம். கொடைக்கானலில் இருப்பதைப் போல் ஒரு அடர்ந்த பைன் மறக்காடு.

வெற்றிக் கூட்டணி 

நம் நாட்டில் எங்கும் இல்லாத ஒரு வகை மரத்தை, ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டில் இருந்து வரவழைத்து குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் அவற்றை வளர்த்து, ரயில் தடங்கள் அமைக்க பயன்படுத்திய அந்தப் பைன் மரங்கள் தற்காலத்தில் சுற்றுலா காட்சிப் பொருளாக உள்ளது. வந்ததிற்கு சில பழம்பொறிகளை உண்டுவிட்டு அடுத்து சூசைட் பாயிண்ட் நோக்கி நகர, அங்கு பாரா கிளைடிங் இருப்பதாக சில விளம்பரங்களைக் கண்டு ஆர்வத்துடன் சென்றோம். பிகோவை நிறுத்திவிட்டு, பாராச்சூட் தெரிந்த அந்த மலைக் குன்றின் மேல் வேகமாக ஏறினோம். மேலே ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெறிச்சோடி இருக்க, ஏறிய களைப்பில் பேசமுடியாமல் மூவரும் அப்படியே சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். நீரும் காரிலே இருக்க, வந்த வழியே திரும்பலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கோம் போது, கண்ணில் தென்பட்ட மூன்று வாலிபர்களிடம் நாங்கள் பாரா கிளைடிங் பற்றி விசாரிக்க அவர்கள் அடுத்து இருக்கும் மலையில் தான் அது இருப்பதை எங்களுக்கு சுட்டிக்காட்டினார். மேலும் இந்தப் பயணத்தில் எங்கள் மூவருக்கும் சேர்த்து ஆகும் செலவின் அளவிற்கு அதில் ஒருவரின் கட்டணம் என்று அவர்கள் சொல்லிய பின் அந்த திசை நோக்கி செல்வோமா என்ன.

வாகமானில் அடுத்து எங்கு செல்வதென்று அந்த வரைபடத்தை ஆராய்ந்து வேறு இடங்கள் இல்லாமல் நாங்கள் விழிக்கும் பொழுது மணி ஒன்று. அடுத்து மதிய உணவுதானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மீண்டும் சில பழம்பொறிகளை வாங்கிச் சுவைக்கும் பொழுதுதான் அந்த வரைபடத்தில் 'வாகமான் இடுக்கி மாவட்டம்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது நினைவிற்கு வர, 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் வரும் 'இடுக்கி' பாட்டு எனது  மண்டையில் ஒலிக்க 'நாம் ஏன் இடுக்கி செல்லக்கூடாது' என்று நான் கேட்க, பிரபாகர் 'எனக்கு புட்டும் கடலைக்கறியும் கிடைத்தால் போதும் எங்கு வேண்டுமானலும் செல்லலாம்', ரெஜித் 'எனக்கு எங்கனாலும் ஒகே',  என்று அவர்கள் இருவரும் உடனே சம்மதிக்க, இடுக்கி நோக்கி பிகோவை செலுத்தினோம். அந்த வினாடி நாங்கள் எடுத்த அந்த முடிவு தான் இந்த பயணத்தை எங்கள் மூவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பயணமாக மாற்றும் என்பது அந்த நொடி எங்கள் யாருக்கும் தெரியவில்லை.

                                                                                                                                   - பயணம் தொடரும்!

****************************************************************************************************************
அடுத்த பகுதி படிக்க இங்கு செல்லவும்
ஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி
****************************************************************************************************************

3 comments:

  1. மறக்க முடியாதா பயணம்.... எதிர்பார்ப்புடன் நானும் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  2. மறக்க முடியாத பயணமா? என்ன அது? தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. Players could place a pairs wager by placing a wager on one or both of two designated betting areas on the table structure. These betting areas are recognized as player pair and banker pair, and are positioned on either facet of the betting space for the tie hand. Hard Rock Casino Northern Indiana is proud to offer a tempting array of table video games, with loads of ways to win massive. You’ll discover 80 completely different tables to strive your luck at, including blackjack, roulette, craps and so much more. SPLIT – when delivered a pair on 카지노 사이트 the first 2 cards (except ten value cards), the player can split with out making an additional wager. The supplier will place a particular “Free Bet” button to the proper of the original guess and deal the sport usually.

    ReplyDelete