Friday, November 8, 2013

சாப்பாட்டு ராமன் - முட்டை தோசை (வேளச்சேரி)

ஒரு திங்கட் கிழமை, இரவு மணி பதினொன்று இருக்கும். கையில் இருந்த காசை பார்க்கிங் கட்டணமாக ஒரு மாலில் கொடுத்து விட்டு, பணப் பையில் ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களுடனும், வயிற்றில் பசியுடனும், ராமன் தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போலீஸ் கெடுபிடியால் பெரும்பாலான கையேந்தி பவன்கள், இரவு பத்தரை மணி முதலே மூடத் தொடங்கிவிடுமையால், அண்ணா சாலையில் அவனுக்கு எந்தக் கடையும் தென்படவில்லை. வயிற்றில் தொடங்கிய பசி இப்பொழுது காதுகளை அடைக்கச் செய்து கொண்டிருந்தது.        

வேளச்சேரி நூறடி சாலையில், முருகன் கல்யாண மண்டப பேருந்து நிறுத்தத்தின் எதிர் புறத்தில் இருந்த தள்ளு வண்டியை ஆடவர் கூடம் சூழ்ந்திருந்ததை ராமன் கண்டான். நம்  வகுப்பிற்கு அழகான பெண் ஒருத்தி இடையில் வந்து சேர்ந்து அவளும் அழகாக இருந்தால், அந்த அழகை முதல் முறை பார்க்கும் பொழுது ஏற்படும் ஒரு திடீர் உற்சாகம். அந்த உற்சாகத்துடன் நம் ராமன், U வடிவில் திரும்பி, கடையின் அருகே சென்று வண்டியை நிறுத்தினான். முருகன் கல்யாண மண்டபத்தின் மிக அருகில் இருந்த அந்தக் கடையில், இட்லி மற்றும் மூன்று  வகை தோசைகள் மட்டும் இருப்பதை  சில குறிப்பால் உணர்ந்தான்.     

கணவன் மனைவி மற்றும் உதவியாளர் மட்டும் இருந்த அந்தக் கடையில், அந்தக் கணவன் தான் தோசை மாஸ்டர். வீடுகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சிறந்த சமையல் கலை வல்லவர்களாய் ஆண்கள் மட்டுமே விளங்குவதில் ராமனுக்கு ஆச்சரியம் தான். செவ்வக வடிவில் இருந்த   அந்த தோசைக் கல்லில், இரண்டு தோசை மட்டுமே ஊற்ற முடிந்த நிலையிலும், காத்திருப்பவர் வரிசை மாறமால், எந்த வித சலிப்புமின்றி அவர்கள்  கூட்டத்தை சமாளிப்பது சிறப்பு.    

கல்லில் நீர் ஊற்றி, 'உஷ்' என்ற ஓசை கிளம்ப,  தென்னந் தொடப்பத்தின் அடியால் அந்தக் கல்லை கழுவிய பின், டபரா கப்பில் மாவு எடுத்து, முட்டை வடிவில் கல்லில் பரப்பி, நன்கு அடிக்கப் பட்ட முட்டையை அந்த தோசையின் மத்தியில் ஊற்றி, தோசை கரண்டியால் அந்த முட்டையை தோசையின் பரப்பளவு  முழுவதும் பரப்பி, அதன் மேல் மிளகு போடி தூவி, தோசை வெந்தவுடன் சிறிதாக கிள்ளப் பட்ட கொத்தமல்லி இலைகள் தூவப்பட்டு தயாரானது ராமன் ஆர்டர் செய்த முட்டை தோசை.      
படம் : கூகுள்


சட்னி சாம்பார் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, சிக்கன் செர்வையுடன் முட்டை தோசையை உண்ட ராமனுக்கு, அந்த பசியில், அது ஒரு வரப் பிரசாதம் போல் இருந்தது. தோசை உண்ட பின் ஒரு ஹால்ப் பாயிலுடன் தன் கணக்கை ராமன் முடித்தான். நாற்பத்து ஐந்து ரூபாய் (மு.தோசை - 35)  செலுத்தி விட்டு பதினைந்து ரூபாய் மீதம் இருக்க, வயிறு மற்றும் மன நிறைவுடன் ராமன் வீடு திரும்பினான்.         

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு ராமனுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. 'ஒரு வேளை பசியில் சாப்பிட்டதால் தான் அந்த முட்டை தோசை சுவையாக இருந்ததோ?' என்று. இந்த சந்தேகத்தை தீர்க்க கோவை ஆவி மற்றும் சீனுவுடன் ராமன் இரண்டாவது முறை அதே கடைக்கு சென்றான். இறுதி முடிவு என்ன என்பதை அவர்களே கருத்துரையில் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.         

ராமன்ஸ் காம்போ :

நீங்கள் மெலிதாக வலை போல் இருக்கும் இடியாப்பம் உண்டதுண்டா?. சூடான அந்த இடியாப்பத்துடன், தள்ளு வண்டிகளில் கிடைக்கும் சிக்கன் பகோடாவுடன் இணைத்து உண்டு பாருங்கள். ராமன் முதலில் இது போல் உண்டது வேலூர் 'சில்க் மில்' அருகில் இருந்த தள்ளு வண்டிக் கடையில் தான்.  ஆவியில் வெந்த இடியாப்பமும், எண்ணெயில் பொறிக்கப் பட்ட சிக்கனும் உங்கள் நாவில் இணையும் பொழுது அருமையான சுவை தோன்றும்.     

17 comments:

  1. நீங்கள் ஏன் தொலைகாட்சி தொடருக்கு கதை வசனம் எழுதக்கூடாது? :-)

    ReplyDelete
  2. பயங்கர ரசிகரா இருப்பீங்க போல ரூபக்! வித்தியாசமான காம்பினேஷன்ல அசத்தறீங்க..

    ReplyDelete
  3. ஆப்பம், தோசை சுவையா, நீங்கள் சொன்னவிதம் சுவையா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
  4. நான் நிறைய தடவை பார்த்திருக்கிறேன், ஆனால் சாப்பிட்டதில்லை...... சாப்பிடணும் என்று தோன்றவைக்கிறது இந்தப்பதிவு...

    ReplyDelete
    Replies
    1. நம்மளை விட்டுட்டு சீனுவையும், ஆவியையும் கூட்டிட்டுப் போய் சாப்பிட்டிருககான் இந்த ராமன்! இவனோட ‘காய்’ விட்டுறலாம் ஸ்.பை.!

      Delete
    2. ஸ்பை நம்மள ராஜாராணியில விட்டுட்டு பாதியில எழுந்து போனாரே, அன்னைக்கு தான் சார்.. "காய்" விடறதுக்கு பதிலா "சிக்கன்" விடலாமே.. ஒரு யோசனை.. ஹிஹிஹி..

      Delete
  5. முட்டை தோசையை ரசித்து உண்டதுண்டு. காம்பினேஷனாக நீ சொன்ன ஐட்டத்தைச் சேர்த்துச் சாப்பிட்டதில்லையே... அடுத்த முறை ட்ரை பண்ணிப் பாத்துறணும்! இடியாப்பம் + சிக்கன் காம்பினேஷனும் இப்பத்தான் கேள்விப்படறேன். புதுசு புதுசா தினுசு தினுசா சாப்பிட்டுட்டு ரசனையை அறிமுகப்படுத்தற ராமனுக்கு ஒரு ரசிகர் மன்றம் வெச்சுர வேண்டியதுதான்!

    ReplyDelete
  6. //நம் வகுப்பிற்கு அழகான பெண் ஒருத்தி இடையில் வந்து சேர்ந்து அவளும் அழகாக இருந்தால், அந்த அழகை முதல் முறை பார்க்கும் பொழுது ஏற்படும் ஒரு திடீர் உற்சாகம்.// இந்த வரிகள எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே.. ஆஆஆ!! நான் எழுதினது மாதிரியே இருக்கே.. தம்பி, காப்பிரைட் வயலேஷன் ஆக்ட் பாயப் போகுது உங்க மேல.. :-)

    ReplyDelete
  7. //கோவை ஆவி மற்றும் சீனுவுடன் ராமன் இரண்டாவது முறை அதே கடைக்கு சென்றான். // கோர்த்து விட்டுட்டியே பரட்டே..

    ReplyDelete
  8. நல்ல பசியுடன் "பள்ளிக்கு" செல்லும் ஒருவனுக்கு 'முட்டை தோசை' கிடைத்தால் எப்படி ருசித்து சாப்பிடுவானோ அதுபோல் சாப்பிட்டோம் அன்று.. ;-)

    ReplyDelete
    Replies
    1. இது ஏதும் குறியீடா? இந்த மாதிரி குறியீடு எல்லாம் யாராச்சும் சொன்னாதான் எனக்குப் புரியுது....

      Delete
  9. முட்டை தோசை நான் செய்வேன். ஆனா, மிளகுத்தூள் தூவ மாட்டேன். அடுத்த முறை செஞ்சு பார்க்கனும்!

    ReplyDelete
  10. இது போன்ற முட்டை தோசை எங்கள் வீட்டில் எப்பவும் உண்டு... அதென்ன இடியாப்பத்துக்கு சிக்கன்... தேடித் தேடி சுவைக்கிறீர்களோ... ஆமா என்ன எங்க ஜீவாவுக்கு போட்டியா கிளம்பன மாதிரி இருக்கு.?

    ReplyDelete
  11. சகோ உங்களைப்பார்த்த சாப்பாட்டு ராமன் என்று யாரும் சொல்ல மாட்டாங்க. ஆனா சாப்பாட்டு விஷயத்தில் இவ்வளவு தெரிந்திருக்கே. வரப்போறவ பாடு...?

    ReplyDelete
  12. நெய்வேலியில் முட்டை பஜ்ஜி என ஒன்று விற்பார்கள் - முட்டையில் பஜ்ஜி செய்ய ஆரம்பித்த காலம் அது.... அதை சாப்பிடவே நண்பர்கள் கூட்டமாக செல்ல, நானும் உடன் சென்று பாதாம் பால் சுடச் சுட அருந்தி வருவேன் - அது நினைவுக்கு வந்தது! :)

    சாப்பாட்டு ராமன் பலே ராமனா இருக்காரு!

    ReplyDelete
  13. Vellore BMS chicken....romba famous..idiyappam chicken wata combination..5 star hotela kooda kidaikadhu rubak:-)

    ReplyDelete
  14. சூப்பெராக சொல்லப்பட்டிருக்கிறது....வருணனை பிரமாதம் !!!!

    ReplyDelete