Monday, November 16, 2015

வலி (சிறுகதை)

எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த அரியாபாக்கியம் என்றோ அல்லது  துரதிஷ்டம் என்றோ சொல்ல முடியாத ஒரு நிகழ்வு எனக்கு நேர்ந்தது.  அந்தச் செய்தியை கேட்டு, நள்ளிரவில் தனியாக காட்டு வழியில் செல்லும் வண்டியின் இரு சக்கரத்திலும் காற்று போனது போல், எனது வாழ்க்கை அந்த நொடி ஸ்தம்பித்துப் போனது. பலரும் தவமாய் தவமிருந்து பெரும் அந்த வரம் எனக்கு சாபமாகவே வந்தது. எனது பெற்றோர், கணவர் உற்றார் உறவினர் அனைவரின் முன்பு என் இதழ்கள் போலியாக புன்னகை செய்ய உள்ளம் என் நிலையைக் கண்டு குமுற, 'நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்ற பாடல் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தேன். இப்போது நீங்களே அதை யூகித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், நீங்கள் நினைத்தது சரி தான். நான் கருத்தரித்துள்ளேன். என்னை நீங்கள் திமிரு பிடித்தவள் என்று எண்ணியிருக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை. உங்கள் கோணம் அது, என் கோணம் வேறு.            

பெண்களை படிதாண்ட விடாத ஒரு சமூகத்தில் பிறந்தாலும், பெற்றோரின் துணையுடன், பள்ளி கல்வியில் எங்கள் ஊர் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். நான் பெற்ற மதிப்பெண்களுக்கு சென்னையில் முன்னிலை கல்லூரிகளில் நுழைய வாய்ப்பு கிட்டியபோதும், எனது சமூகத்தை எதிர்த்து என்னால் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் கல்லூரி வரை தான் செல்ல முடிந்தது. நான் பேருந்து ஏறி தினமும் கல்லூரி செல்வதைக் கண்டு பொறுக்க முடியாத என் உறவெனக் கூறிக் கொள்ளும்  பலர் எனது படிப்பை நிறுத்தும்படி என் தந்தைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். என் பிடிவாதத்தால் மட்டுமே, நான்கு ஆண்டுகள் நீடித்தது என் கல்லூரி வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் பொழுதே ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியும் கிட்டியது. பணியிடம் சென்னை. வீட்டில் ஒரு பிரளயம் வெடித்தது.

சினந்தேன், சினுங்கினேன், உருகினேன், அழுதேன், கெஞ்சினேன், கதறினேன். எது பலித்தது என்று தெரியாது, என் அன்னை எனக்கு துணை நிற்க பெரிய கனவுக் கோட்டைகளுடன் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னை என்னை ஏமாற்றவில்லை. என் ஏக்கங்களை தீர்த்தது. பல தரப்பட்ட மக்களை சந்தித்தேன், பல கதைகளை கேட்டேன், நான் இழந்த பருவங்களை எண்ணி வருந்தினேன். கட்டுப்பாடு இல்லாத வாழ்கையில் சகல சந்தோஷங்களுக்கு வாயில் கதவு திறந்தே இருந்தபோதும் ஒரு கணமும் என் நிதானத்தை இழக்கவில்லை நான். அயாரது உழைத்தாலும், பெண்கள் ஆண்களுக்கு கீழ் தான் என்று முகத்தில் அறையாத குறையுடன் அந்த கார்ப்பரேட் சமூகம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.

பல அடிகள் பட்டு, ஒருவழியாக பணியில் முன்னேறும் தருணம் வந்தபொழுது, வீட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சென்னையின் எனது சுதந்திர வாழ்க்கைக்கு முடிவு கட்ட. சில விஷயங்களில் என்னைப் போல் அதிஷ்டக்காரி யாரும் இல்லை. ஏன் தெரியுமா?. சொல்கிறேன். பல மாதங்கள் பல ஆண்டுகளா மாப்பிள்ளைத் தேடியும் வரன் அமையாமல் பலர் தவிக்க, எனக்கு மட்டும் முதல் வரனே கைகூடியது உங்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் தானே.

திருமணத்திற்கு முன்னரே வேலை விட வேண்டி எனது புகுப்போகும் வீட்டார் கட்டளையிட எனது தந்தை அடிபணிந்தார். இது நான் எதிர்பார்த்தது தான், ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. இருப்பினும் ஒரே ஆறுதல் தந்த விசயம் என்னை மணக்கப் போகும் அவர் பணிபுரியும் அயல் நாட்டிற்கு என்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தது தான். கல்யாணம் மற்றும் எல்லாச் சடங்குகளும் என் மாமியாருக்கு பல குறைகளுடன் முடிய, திருமணமாகி இரண்டாம் வாரம் என்னைப் பின் வரச்சொல்லி விட்டு என் கணவர் பறந்து சென்றார்.

சென்னையில் எனக்கு கிடைத்த நடப்புகளைக் கொண்டு எனது வீசா ஏற்பாடுகளை விரைந்து செய்தேன். வீசா நேர்காணலையும் சிக்கலற்று முடித்துவிட்ட மகிழ்ச்சியுடன் மருத்துவ சோதனைக்கு சென்ற பொழுது தான் அந்தச் செய்தி எனக்கு கிடைத்தது. கருவுடன் விமானம் ஏற மருத்துவம் பச்சை கொடி காட்டினாலும், வீசா தர அந்த நாடு மறுத்தது. என்னை தவிர்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், 'கல்யாணம், குழந்தை என்ன வாழ்க்கை இது' என்ற எனது வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு தான் தோன்றியது.                        

கருவுற்று கணவனைப் பிரிந்து தனிமையில் போராடுவதன் வலி எனக்கு புரிந்தது அந்த ஆரம்ப காலங்களில் தான். நீங்கள் மாமியார் கொடுமைகள் பற்றி பல கதைகள் படித்திருபீர், பல தொடர்கள் பார்த்திருப்பீர் ஆனால் அவற்றில் ஒன்றிலும் ஒவ்வாத சம்பவங்கள் தான் எனக்கு அவர் வீட்டில் நடந்தது. எனக்கு பிறக்கப் போவது நிச்சயம் பெயரன் தான் என்று எதோ ஒரு நிமித்தக்காரன் மூலம் முடிவு செய்து கொண்ட என் மாமியார், என்னைக் கையில் வைத்து தாங்கத் தொடங்கினார். இதைப்போய் கொடுமை என்று சொல்லுகிறாயே உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று தானே நினைக்கின்றீர். அளவுக்கு மீறும் போது அன்பும் கொடுமையாகத் தான் மாறியது எனது விஷயத்தில். என்ன புரியலையா?. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம்  தெரியுமா?. நீங்கள் அசைவ பிரியர் என்றால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னால் இதேக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால் 'எனக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மார்த்தாண்டம் தான் தெரியும்' என்று சொல்லியிருப்பேன்.

முட்டை வாசனை என்றாலே பக்கத்து தெரு வரை ஓடும் எனக்கு, பெயரன் வளமுடன் பிறக்க வேண்டும் என்று சகல உயிரினங்கள் மற்றும் தாவரங்களை சமைத்து தினமும் விருந்தளித்தார் என் மாமியார். அந்த அப்பாவி ஆட்டின் எந்த பகுதியையும் உண்ணாமல் விடுவதில்லையா நீங்கள்?. முதல் முறை அந்த மார்கண்டத்தை பற்றி உண்ட பின் தான் அறிந்தேன், உடனே வாந்தியும் எடுத்தேன். பேறு கால வாந்தி என்று அவரே முடிவு செய்து மீண்டும் அதை என் வாயில் திணித்தார் என் கணவரின் அன்பு அன்னை. என் நடையில் தப்பு, அமர்வதில் திருத்தம், படுப்பதில் கவனம் என்று ஒன்றல்ல ரெண்டல்ல அடுக்கிக்கொண்டே போகலாம் அவர் தன் பெயரன் பால் செய்த அன்புத் தொல்லைகளை.        

உனக்கு எதிலும் குறைகள் தானா சந்தோஷம் என்பதே கிடையாதா என்று உங்கள் மனதில் ஓடும் எண்ண அலைகளை என்னால் உணரமுடிகின்றது. என் வயற்றில் இருந்த குழந்தையை, கருப்பு வெள்ளை படமாக கணினி திரையில் மெல்ல அசையக் கண்ட போது எனக்கு கிட்டிய இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. பத்து நாள் தவிர்த்து, கைபேசியில் மட்டுமே கண்ட கணவன், கணவன் இல்லாது மாமியார் வீட்டில் சிறை, என சிதைந்து போன எனது கனவுக் கோட்டைகளை எண்ணி கண்ணீர் பெருகிய பொழுது, 'உனக்கு நான் இருக்கிறேன்' என்பது போல, என் செல்வம் என்னை முதன்முறை வயிற்றில் உதைத்து சைகையால் உணர்த்தினான். அதன்பின் எப்பொழுதெல்லாம்  என் மனம் கணக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அவன் உதைத்தான். இப்படியே இன்பமும் துன்பமும் ஒரு சேர கலந்தோடி ஏழு மாதங்கள் கடந்து, யாரும் எதிர் பாராத ஒரு சிக்கல் உருவானது.      

தலை பிரசவத்திற்கு என்னைத் தாய் வீடு அழைத்துச் செல்ல வந்த என் பெற்றோரை, 'அனுப்ப முடியாது'  என்று விரட்டி அடித்தார் என் மாமியார். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். அவரது பெயரன் நலமுடன் உலகில் அடியெடுக்கும் வரை என்னை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இரு தரப்பினருக்கும் சண்டை வலுத்து, ஊர் பஞ்சாயத்து வரை சென்று, இறுதியில் நான் பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. இதில் வேடிக்கை என்னவென்றால், என் தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளிலும் கடைசி வரை யாருமே என் விருப்பத்தை கேட்டதில்லை. என் மாமியாரின் அன்புதொல்லைக்கும் என் பெற்றோரின் சுய மரியாதைப் போருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமானவள் நான்.  

தாய் வீட்டில் சுகந்திரத்துடன் இருந்தாலும், கர்ப காலத்தின் இறுதி சில வாரங்களில் உடல் எடை கூடி உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல், மிக மெதுவாக நாட்கள் சென்று ஒரு வழியாக மருத்துவர் கொடுத்த கெடு நெருங்கியது.  பொதுவாக அனைவருக்கும் குறித்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வலி வரும் என்பர், எனக்கு என் மாமியார் உருவில் சுனாமியே வந்தது. அவர் என் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கி, வீட்டில் யாரும் யாருடனும் பேசாமல் இருந்த அந்த இரண்டு நாட்கள் நரகம். என் அம்மா ஒன்று சொன்னால் வீம்பிற்கு என்றே இவர் அதற்கு முரணாக ஒன்று சொல்வார். இவர்கள் சண்டையில் எனக்கு மனவேதனை வந்ததே ஒழிய, வரவேண்டிய வலி வரவில்லை. குறித்த தேதி இன்று, மாலை வரை வலி வராததால் மருத்துவமனைக்கு சென்று விட்டோம். மருத்துவர் வலி வர சற்று நேரம் காத்திருக்க வைத்த நேரத்தில், 'என்னிடமே இருந்திருந்தால் இந்நேரம் என் பெயரன் அழும் சத்தம் கேட்டிருக்கும்' என்று என் மாமியார் தொடங்கிய வாசகம், என் அன்னைக்கும் அவருக்கும் பெரும் வாக்குவாதத்தை கிளறியது. என்ன கொடுமை இது இறைவா! என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா?. இல்லை, வேண்டாம்.  இந்த வாசகங்கள் கேட்காதபடி உன் கருணையால் என்னைச் சில நாட்கள்  செவிடாக்கி விடு. 

Saturday, November 14, 2015

அவன் (சிறுகதை)

எல்லாக் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன்.  

நான் எப்பொழுது வட சென்னை  சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல்  தென் சென்னையில்   இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.

பல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் விற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை.   ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது.  

பர்மா பஜாருக்கு அருகில்  அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்கநாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.

              
இன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல்  பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன. 

பரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள் என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது. 

அந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன். 

'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,

 நான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா?' என்று தொடுத்தான். 

நான் 'ஆம்' என்றேன். 

'எந்த தெரு' என்று  கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது.     

அவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது.     

அவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ?' என்று வினவினான். 

இன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன். 

'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.

வேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்?' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்? என்ற அபாய எண்ணமும் தோன்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது.         


வீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டிருக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள்  கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

மறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே', 

நான் 'ஹும்ம்',  

அவன் 'வீடு எதாவது இருக்கா?'      

நான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.

தினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான். 

'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.

'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.

'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா?  என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.

இம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?