Showing posts with label தேன் மிட்டாய். Show all posts
Showing posts with label தேன் மிட்டாய். Show all posts

Friday, March 27, 2015

தேன் மிட்டாய் - மார்ச் 2015

விளம்பரப் பலகைகள் 
மார்ச் மாதம் சில பரபலங்களின் அவதாரத் திருநாள் கொண்டாட்டங்களால் சென்னையின் சிங்காரம், பல அரசியல் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகளால் மெருகேறியிருந்தது. முக்கிய சாலைகளில் தொடங்கி, அந்தத் தெருவில் வசிக்கும் மக்கள் தவிர்த்து மற்றவர்கள் செல்லாத முட்டுச் சந்துகள் வரை விளம்பரப் பலகைகள் நிரம்பி வழிந்தன. தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டி மக்கள் முன்னேற்றத்தில் அன்றி விளம்பரப் பலகைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவில் காணப்பட்டது. சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் சுமார் இருநூறு மீட்டர் தூரத்திற்கு நீண்ட விளம்பரப் பலகை ஒன்று என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.  இவற்றை அகற்ற டிராபிக் ராமசாமி என்று ஒரு முதியவர் போராடி, சிறை சென்று திரும்பியது எத்தனை பேருக்கு தெரியும் ? 

இலவசப் பயணம் 

ஒரு சனிக்கிழமை, அலுவலகம் முடித்து விட்டு, என் கிராமத்திற்குச்  செல்ல, அலுவலக வாசலில் பேருந்து வரக் காத்திருந்தேன். பங்குனி வெய்யிலில் இனி தாங்காது என்று, இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்க தொடங்கினேன். யமஹா fz இல், ஆஜானுபாகமான உடலுடன் ஒருத்தன் என் விண்ணப்ப சைகைக்கு இசைந்து வண்டியை நிறுத்த நானும் அவன் வண்டியில் ஏறிக் கொண்டேன். OMR  சாலையை அடைந்தவுடன் நான் செல்லுமிடம் சோழிங்கநல்லூர் என்று அறிந்தவுடன் அங்கேயே என்னை விடுவதாக அவன் கூற, பேருந்தை முந்தி விரைவாக சென்று விடலாம் என்று நானும் அவனுடனே பயணித்தேன். 

ஐந்து நிமிட பயணத்திற்கு பின் அவன் கைபேசி ஒலிக்க, தன் இடக் கையால் அதை எடுத்து பேச முயன்றான். சரியாக கேட்காததால் அழைப்பை துண்டித்தான். மீண்டும் ஒலிக்க, இடக்கையில் கைபேசியை காதின் மேல் சாய்த்துக் கொண்டு, ஒற்றைக் கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே பேசினான். சீருந்தில் ஓட்டுனர்  கைபேசி  பயன்படுத்தினாலே ஆபத்து, இவனோ இரு சக்கர வண்டியில் ஒற்றைக் கையில் மிகவும் சாதரணமாக கைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை செலுத்த என்னுள் திகில் கிளம்பியது. 'வண்டியை நிறுத்தி விட்டு பேசுங்க'  என்று நான் சொல்லிய பொழுது அவன் யானைக் கண்கள் வீசிய அனல் பார்வை அவன் தோற்றத்தை மேலும் கொடூரமாக்கியது. சோழிங்கநல்லூர் வந்தவுடன் வேகமாக இறங்கி சாலையைக் கடந்து ECR  நோக்கி நடந்தேன், இல்லை ஓடினேன் என்றே சொல்லலாம்.        

   
மகளிர் மட்டும் 

ஐந்து நிமிடம் தான் ECR சாலையில் காத்திருந்தேன் என்றாலும், சோழிங்கநல்லூர் சந்திப்பில் அக்கரைபேருந்து நிறுத்தத்தில் நிழழ்குடை இல்லாததாலும் நிழல் தர ஒரு மரமும் இல்லாததாலும், சில வினாடிகளில் சூரியக் கதிர்கள் என் உடலில் ஊடுருவி என்னை வியர்வையில் குளிக்கச் செய்தன. பேருந்து வந்தவுடன் அடித்து பிடித்து முதல் ஆளாக ஏறி, கண்ணில் முதலில் பட்ட ஒரு காலி இருக்கையை நோக்கிச் சென்று, என் மூட்டை முடிச்சிகளை மேலே வைத்து விட்டு அந்த இடத்தில அமர ஆயத்தமானேன். அந்த காலி இருக்கை சாளரத்தின் அருகில் இருக்கவே, அதற்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியை சற்று நகர்ந்து வழி விடச் சொன்னேன். ஆனால் அவரோ, சிறிதும் அசையாமல்  'லேடீஸ் வராங்க அவங்க ஒட்காருவாங்க' என்றார் . கோபம் என் தலைக்கேறி 'இங்க லேடீஸ் சீட்னு எங்கயும் எழுதி இல்லையே' என்று கடிந்தேன். சற்றும் தன் நிலையில் இருந்து மாறாமல் 'லேடீஸ் இருந்தா லேடீஸ் தான் பக்கத்துல உட்காருவாங்க' என்றார். சூரியக் கதிர்களின் உஷ்னத்தை விட பல மடங்கு எனக்குள் கோப ஜுவாலை எரிந்தாலும், சண்டைப் பிடித்து அந்தப் பெண் அருகில் அமர்ந்து எனது பயணத்தை சங்கடத்துடன் தொடர உடன்பாடு இன்றி, அமைதியாக பின்னே வந்த பெண்மணிக்கு வழி விட்டு நகர்ந்தேன். இந்த சம்பாஷனைகள் நடந்து முடிவதற்குள் மீதம் இருந்த காலி இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்துவிட, டிக்கெட் கொடுக்கும் பொழுது நடத்துனர் என்னிடம் மாமல்லபுரத்தில் இடம் காலியாகும் என்று ஆறுதல் அளித்தார். 

அந்த பெண்மணியின் வயது எப்படியும் அறுபதிற்கு அருகில் இருக்கும். அவரது பெயரன் போல் இருக்கும் என்னை அவர் அருகில் அமர விடாமல் தடுத்தது எது. பெண்களுக்கே உண்டான பண்புகளா அல்லது இந்த சமுதாயமா? இந்த ஒன்று மட்டும் எப்பொழுதும் எனக்கு விளங்குவது இல்லை. மாநகரப் பேருந்தில் பெண்கள் எந்த இருக்கையில் அமர்ந்தாலும் அமைதியாகப் போகும் ஆண்கள் ஒரு புறம் இருக்க. பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடது புற வரிசையில் எப்பொழுதும் பெண்களே அமர்ந்தாலும், பேருந்தின் பின் புறம் இருக்கும்  ஒற்றை வரிசையில் ஒரு ஆண் மகன் உட்கார்ந்தாலே சண்டை பிடிக்கும் சில பெண்களும் உண்டு. அப்படி அவர்கள் சண்டை பிடிக்கும் அதே நேரத்தில் ஆண்கள் வரிசையில் சில பெண்களும் அமர்ந்திருப்பதை ஒரு பொருட்டாக மதியாதது தான் விந்தையிலும் விந்தை. அதை என்றுமே எந்த ஆணும் சட்டை செய்வதில்லை. ஆண்கள் இந்த விஷயத்தில் நிச்சயம் தியாகச் செம்மல்கள் தான்.      

பொதுக்கூட்டம் 

கிராமத்திற்கு போகும்போது தான் இப்படி ஒரு கசப்பான அனுபவம் என்றால், சென்னை திரும்புகையில் அதுக்கும் மேல் ஒரு அனுபவம் கிடைத்தது. பொதுவாக, சோழிங்கநல்லூர் ECR இல் இறங்கி, பழைய எண் 'C 51'/ புதிய எண் '99'  கொண்ட வழித்தடப் பேருந்தில் பயணம் செய்தால் நாற்பது நிமிடங்களில் தாம்பரம் சென்றடையலாம். க்ளோபல் ஹாஸ்பிடல் வரை தடையின்றி வந்தப் பேருந்து அதன் பின் ஆமை வேகத்தில் சாலையில் ஊரத் தொடங்கியது. எந்த நேரத்திலும் போக்குவரத்து பெரிதும் தடைப்படாமல், வாகனங்கள் ஒரே சீராக செல்லும் இந்தச் சாலையில், இந்த எதிர்பாரத நெரிசலின் காரணம், மேடவாக்கத்தில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு அரசியல் கூட்டம் என்ற செய்தி காற்றில் வேகமாக பரவியது. பத்து நிமிடங்களில் கடக்க வேண்டிய மேடவாக்கத்தை கடக்க அன்று எழுபத்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகின. பேருந்தில் அமர இடமும் இன்றி, ஜன சமுத்திரத்தில் பலரின் வியர்வையில் முக்க, அது ஒரு துக்க அனுபவமாகவே மாறியது. அந்த அரசியல் கட்சியின் மீது இங்கு எழுத முடியாத பல தகாத வார்த்தை அம்புகளை எய்தும் என் கோபம் தணியவில்லை. 




பேருந்து சாலையில் அந்தப் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தை கடந்த பொழுது, அந்த மேடையில் ஏறி 'கூட்டம் போட பல காலி இடங்கள் இருக்க, இப்படி நடு ரோட்ல....' என்று அவர்கள் சட்டையை பிடித்து பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அப்படி கேட்டால் ஏற்படும் பின் விளைவுகளை உன்னால் சம்மாளிக்க முடியுமா  என்று என் மூளை என்னைக் கேட்க, ஆத்திரத்தை அடிமைத் தனம் வென்றது. பணம் கொடுத்து கூட்டம் கூட்டி பேசினாலும், அன்று அந்த போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் மட்டும் தான் சம்பாதித்தோம் என்பதை அந்தக் கட்சி உணருவதெப்போது?                 

Saturday, October 4, 2014

தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2014 ( தி.நகர் - ஆடி ஸ்பெஷல்)

எனக்கு நினைவு தெரிந்து, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இருந்தே ஆடித் தள்ளுபடி விற்பனை ஆண்டு தோறும் தமிழகமெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வேலூரில் இருந்த பொழுது ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இந்த ஆடி விற்பனையின் போது தான் அப்பா 'சர்க்கார் ரெடிமேட்ஸ்' என்ற கடைக்கு அழைத்துச் சென்று புதுத் துணிகள் வாங்கித் தருவார். ஆடி மாதம் வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த காலம் அது. உடலும் பகுத்தறிவும் வளர, இந்த ஆடி மோகம் என்னை விட்டுச் சென்றது. சென்னையில் கல்லூரி சேர வந்த பொழுது  சென்னையின் ஆடைகள் தலைநகரான தியாகராய நகருக்கு செல்லாமல், அண்ணா நகரிலேயே புதுத் துணிகள் வாங்கினோம். கூட்டமாக இருக்கும் கடைக்கு சென்று, அங்கு நசுங்கி கசங்கி துணிகள் வாங்குவதில் எனக்கு என்றுமே ஈடுபாடு கிடையாது என்பதால் எல்லா ஆண்டும் ஆடி விற்பனை என்பது எனக்கு ஒரு கடந்து செல்லும் மேகமாகவே இருந்து விட்டது. இந்த ஆண்டு, சில தவிற்க முடியாத கட்டாயத்தினால், ஆடி மாதத்தில் பல முறை தி.நகர் செல்ல நேர்ந்த பொழுது எனக்கு கிடைத்த அனுபவங்கள் இந்த பதிவிற்கு வித்திட்டன. 

தாம்பரத்தில் இருந்து தி.நகர் செல்ல ரயில் மற்றும் பேருந்து இரண்டுமே இருந்தாலும், நான் எப்பொழுதும் விரும்புவது ரயில் பயணம் தான். இரு சக்கர வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ரயில் ஏறுவது தான் வழக்கம். தாம்பரம் சானடோரியம் டு தி.நகர் - இருபது நிமிட ரயில் பயணம் அது. நமது வாழ்க்கையில் நாம் தினமும் சராசரியாக செய்து கொண்டிருக்கும் ஒரு விசயம் கூட, நாம் சிறிது காலம் செய்யாமல் விட்டு விட்டு மீண்டும் அதன் பக்கம் சென்றால் மாறிவிடுகிறது என்பதை எனக்கு உணர்த்தியது அம்மை தான். மூன்று வாரங்கள் இயல்பு வாழ்கையை விட்டு ஒதுங்கி, மீண்டும் என் வாழ்க்கைக்கு திரும்பிய பொழுது எத்தனை மாற்றங்கள். அந்த மாற்றங்களில் ஒன்று தான் இந்த பைக் பார்க்கிங் கட்டணம், பத்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாயாக உயர்ந்து இருந்தது. தி.நகர் சென்று வர ரிடர்ன் டிக்கெட்டே பத்து ரூபாய் தான் :). இதைவிட கொடுமை என்னவென்றால் என் வீட்டில் இருந்து ரயில் நிலையம் ஆட்டோவில் வந்தால் நாற்பது ரூபாய். எங்கள் ஏரியா ஆட்டோக்களில் மீட்டர் ஓடியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.                       

ரங்கநாதன் தெரு 

ஆடி மாதத்தில் மொத்த ரயில் பயணிகளும் இறங்குவது மாம்பலம் ரயில் நிலையத்தில் தான். ரயில், மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றவுடன், அந்த கூட்டத்தின் மத்தியில் உங்களை நீங்கள் பொருத்திக்கொண்டால் மட்டும் போதும், அடுத்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் ரங்கநாதன் தெருவில் இருப்பீர்கள்.   பீச் பக்கம் இருந்து வரும் மக்கள் கூட்டமும் தாம்பரம் பக்கம் இருந்து வரும் கூட்டமும் சங்கமமாகுவது ரங்கநாதன் தெருவில். 'அங்காடித் தெரு' படத்தில் வருவது போல் மக்கள் கூட்டத்தின் நடுவில் பல சில்லறை வியாபாரிகள் தத்தம் பொருளை வியாபாரம் செய்யக் கூவிக் கொண்டிருப்பர். இரண்டு பக்கமும் இருக்கும் சிறு கடை வியாபாரிகள் மக்களை உள்ளே இழுக்க அவர்களது வியாபாரக் கூவலை ஒரு பக்கம் இசைத்துக் கொண்டிருப்பர். மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து உஸ்மான் வீதியில் வந்து சேரும் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் உள்ள ரங்கநாதன் தெருவில் ஒரு கடையை மட்டும் பெயர் பலகையில் சில மாற்றங்களுடன் திரும்பத்திரும்ப காண முடியும். இம்முறை அந்தக் கடைகளை மட்டும் நான் விரல் விட்டு எண்ணிய பொழுது 'ரங்கநாதன் தெரு' என்ற பெயரை 'சரவணா வீதி' என்று மாற்றுவது தான் உசிதம் என்றுத் தோன்றியது.      

உஸ்மான் சாலை 

ரங்கநாதன் தெருவில் இருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு உஸ்மான் சாலையை அடைந்து, மேம்பாலத்தின் அடியில் போத்தீஸ் நோக்கி நடந்தேன். இந்த மேம்பாலம் கட்டும் முன் இந்த சாலையில் தானே மொத்த வாகன போக்குவரத்தும் நடந்திருக்கும், ஆனால் இப்போது மக்கள் நடப்பதற்கு கூட இங்கு இடம் இல்லை. உஸ்மான் வீதியில் நடக்கும் போது, ஒவ்வொரு பிரம்மாண்டமான கடையை கடக்கும் பொழுதும், உங்கள் வீட்டு ப்ரிட்சை திறக்கும் போது கிடைக்கும் அந்த குளிர்ந்த காற்றின் சுகத்தை  உணர முடியும். அழகு சேர்க்கும் வண்ண விளக்குகளும் தேவைக்கு அதிகமாக இயங்கும் குளிர் சாதனங்களும் இங்கு இருக்க, தமிழகத்தில் பல வீடுகளும் தொழிற்சாலைகளும் இருளில் மூழ்கி தவிக்கின்றன. இந்த வீதியில் பைக் பார்க்கிங் செய்வதே கடினம், பண்டிகை வேளையில் சீருந்தில் வந்துவிட்டால் நீங்கள் பார்க்கிங் தேடி கண்டுபிடிப்பதற்குள் உங்கள் குடும்பம் ஷாப்பிங் செய்து முடித்து விடும். ஏதோ ஒரு கடையின் பார்க்கிங் இடத்தில இடம் இருந்து நீங்கள் உங்கள் வண்டியை நிறுத்தி விட்டாலும், திரும்பி எடுக்கும் பொழுது அந்தக் கடையின் பொருள் வாங்கிய  ரசீது இல்லை என்றால் உங்களிடம் இருந்து ஒரு தொகையை (பெரும்பாலும் நூறு ரூபாய்) அபராதமாக வாங்கிவிடுவர். போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, இந்த இடத்தில் இருக்கும் கட்டிடங்கள் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கட்டப்படாததுதான் காரணம்.              

போத்தீஸ்

போத்தீஸ் கடையின் பார்க்கிங் இடத்தில், குறைந்த இடத்தில நிறைய சீருந்துகளை நிறுத்த, சமீபத்தில்  நவீன முறையில் வடிவமைத்து உள்ளனர். போத்தீஸ் கடையின் வாசலை அடைந்த பொழுது, டாட்டா ace வெள்ளை நிற ஷேர் ஆட்டோ வகைகள் 'போத்தீஸ் டு போத்தீஸ்' என்ற எழுத்துக்களுடன் இருந்தன. இது உஸ்மான் சாலையில் இருக்கும் போத்தீஸில் இருந்து GN. Chetty சாலையில் இருக்கும் போத்தீஸ் boutique வரை செல்ல வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இயக்கும் இலவச சேவை. போத்தீஸ் உள்ளே சென்றால் பெண்கள் கூட்டம் ஏக்க செக்கம். அங்கு இருக்கும் பத்து சதவீத ஆண்கள் பில் செலுத்தவும், துணிகளை தூக்கவும், குழந்தைகளை கண்காணிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் பட்ட வேதனை தரும் காட்சிகள் கண்டு என் மனம் எதிர்காலத்தை நினைத்து கனத்தது. இங்கு ஐந்து முதல் ஐம்பது சதவீதம் வரை நீங்கள் வாங்கும் துணியின் MRP விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்படுகிறது.

பாண்டி பஜார்

தி.நகர் என்றாலே ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைக்கு பிறகு ஒரு முக்கிய அங்கம் வகிப்பது பாண்டி பஜார் தான். (இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று அறிந்தவர்கள் சொல்லவும்). பாண்டி பஜாரில் மிகவும் பிரபலமானது நடைபாதையில் இருக்கும் கடைகளும் அங்கு கிடைக்கும் மலிவு விலை பொருள்களும். இதிலும் இருபது கடைகளில் ஒரு கடை மட்டும் தான் ஆண்கள் சம்மந்தமானா பொருட்கள் இருக்கும். அனைத்து கடைகளிலும் பெண்களுக்கு தேவையான உடைகள், காதணிகள், காலணிகள், என குவிந்து கிடக்கும். பனகல் பார்க்கில் நடக்கத் தொடங்கினால் கடைகளை பார்த்துக்கொண்டும் சில அழகுப் பொம்மைகளை ரசித்துக்கொண்டும் சென்றால் நடப்பதின் அலுப்பே தெரியாது. ஆனால் சமீபத்தில் அரசாங்கம் இந்த நடைபாதை கடைகளை அகற்றிவிட்டு, அங்கு இருந்த வியாபாரிகளுக்கு பாண்டி பஜார் பேருந்து நிலையம் அருகில் ஒரு புதிய வணிக வளாகம் கட்டிக்கொடுத்தது. வசந்த காலம் வீசிய பாண்டி பஜார் வீதியை இன்று வெறிச்சோடி காண்பதில் மனம் வலிக்கின்றது.    

சென்னை சில்க்ஸ்

அடுத்து சென்னை சில்க்ஸ் உள்ளே சென்றவுடன் நுழைவு வாயிலில் இருந்த பணியாளர் வரவேற்று 'சார் இங்க புதுசா ஜெவல் செக்ஷன் துறந்திருக்கோம். வந்து பார்கரின்களா' என்று அழைக்க, நான் 'ழே' என்று விழித்ததை கண்ட அவர் 'நீங்க சும்மா பார்த்தா மட்டும் போதும். எதுவும் வாங்கத் தேவையில்லை' என்று புன்னகைத்தார்.  அவர்,  அவரது மேற்பார்வையாளர் காணும் வகையில்  அங்கு இருந்த புதிய வகை நகைகளை எனக்கு விளக்க, நான் அவரை பின் தொடர்ந்தேன். ஒரு இடத்தில இருந்த ஒரு தங்க சங்கிலியும் டாலரும் என்னை நகர விடமால் தடுத்து. எங்கள் வீட்டு நாயை கட்டி வைத்திருக்கும் சங்கிலியை விட அது கனமாக இருந்தது. அந்த டாலரும், ஒரு மூன்று சென்டி மீட்டர் வட்டளவில் தங்கத்தில், நடுவில் ஒரு ஒட்டப்பட்ட படத்துடன் இருந்தது. அந்த படத்திற்கு உரியவர் தமிழக  முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அன்று 'இவ்வளோ காசு கொடுத்து இதயெல்லாம் யாருடா வங்கப் போறாங்க' என்று எண்ணினேன். ஆனால் இன்று மேடையேறிய சில ஒத்திகை பார்க்காத நாடகங்கள் மூலம் இதை வாங்க இங்கு நிறைய கைகள் உண்டு என்பதை உணர்ந்தேன்.  

சென்னை சில்க்ஸில் நடக்கும் தள்ளுபடி சற்று வித்தியாசமாக இருந்தது. உதாரணத்திற்கு இங்கு 15% தள்ளுபடி கொண்ட ஒரு 800 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கினால், உங்களுக்கு    120 ரூபாய் ( 15% of 800) மதிப்புள்ள மூன்று மாத வேலிடிட்டி கொண்ட ஒரு வௌச்சர் கொடுப்பார்கள். அதைக் கொண்டு நீங்கள் அடுத்து சென்னை சில்க்ஸில் வாங்கும் பில்லில் 120 ரூபாயை தள்ளுபடி செய்துகொள்ளலாம்.

புத்தகமும் சிறுமியும்

சென்னை சில்க்சை விட்டு வெளியில் வந்தவுடன், அழுக்கான சட்டையும், அரை பாவடையும், பல நாள் குளிக்காத தலையுடனும் ஒரு எட்டு வயது சிறுமி    தன் கையில் இருந்த கலர் அடிக்கும் புத்தகம் ஒன்றை நீட்டி 'அண்ணா. பத்து ரூபாய் தான். ஒன்னு வாங்கிக்கோங்க' என்றாள். எனது வீட்டில் சிறுவர்கள் குழந்தைகள் யாரும் கிடையாது என்பதால் அந்தப் புத்தகம் வாங்கி எந்தப் பயனும் இல்லை என்று தோன்றவே 'வேண்டாம்' என்று மறுத்து விட்டு. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். நான் வேண்டாம் என்ற போதும் அந்தப் பெண் விடாமல் என்னையே பின் தொடர்ந்து கெஞ்சத் தொடங்கினாள். அவள் என்னை தொட்டு தொட்டு கெஞ்சியது சற்று அறுவெறுப்பாக இருக்க எனக்கு கோவம் அதிகமாகி, 'வேண்டாம் கூட வராத' என்று சற்று கனத்த குரலில் திட்டினேன். அப்பொழுதும் அவள் சலிக்காமல், என்னைக் கெஞ்சிக்கொண்டே தொடர்ந்தாள். எனது பிடிவாதம் என் மனதை மாற விடமால் செய்தது. இப்படியே என்னைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸில் இருந்து தி.நகர் பேருந்து நிலைய சிக்னல் வரை வந்தவள், சட்டேன்று அவள் கையில் இருந்த புத்தகத்தை என் கையில் வைத்து விட்டு, வேகமாக திரும்பி சென்று விட்டாள். அந்த சம்பவம் என்னுள் எதோ ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டிவிட, அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மனமின்றி  ரயிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.  

'ஆடி தள்ளுபடி' என்று   ஒரு மோக அலையை மக்கள் மனதில் வீசி, மற்ற 335 நாட்களில் நடக்கும் வியாபாரத்தை இந்த 30 நாட்களிலேயே சம்பாதித்து, ஆண்டிற்கு ஒரு புதிய கிளை திறந்து விடுகின்றனர் இந்த ஆடை உலகின் முதலைகள். விலைகளை உயர்த்தி  பின் தள்ளுபடி என்ற பெயரில் விலைகளை குறைத்து விற்கும் உக்திக்கு இந்த மக்கள் எத்தனை காலம் தான் விழுவர் என்று தெரியவில்லை. 

Wednesday, October 1, 2014

தேன் மிட்டாய் - ஜூன் & ஜூலை 2014

மே மாதத்திற்கு பின் மூன்று மாதங்கள் தேன் மிட்டாய் ஏன் தடை பட்டது என்பதற்கு என்னால் பல காரணங்கள் சொல்ல முடியும். சில சம்பவங்களின் மீது பழி சுமத்தி விட்டு நான் கருணை கோரப் போவதில்லை. எனது பாதையை விட்டு சற்று தடுமாறினேன், மீண்டும் உங்கள் ஆதரவுடன் உற்சாகமாய் எனது எழுத்தை தொடருவேன் என்ற நம்பிக்கையில்....    


தநஉஉஇதசநுகஉ

இது என்ன என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு விடை இந்தப் பதிவின் முடிவில்....


பேருந்து நிழற்குடை 

சென்ற தேன் மிட்டாயில்(மே 2014) நான் OMR சோழிங்கநல்லூரில் பேருந்து நிழற்குடை இல்லாததை பற்றி எழுதியிருந்தேன். அம்மை குணமாகி ஜூன் மாதம் அலுவலகம் செல்லத் தொடங்கிய பொழுது OMR சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் நடப்பதைக் கண்டு வியந்தேன். 'நம்ம தேன் மிட்டாயை யாரோ பெரிய ஆள் படிக்கராங்கப் போல' என்று என்னுள் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. துரைப்பாக்கம் முதல் சிறுசேரி வரை OMR சாலையின் இரு புறமும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரு நிழழ்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் இது வரவேற்கக் கூடிய மாற்றம் என்றாலும், நான்கு கம்பங்களை எழுப்பி நான்கு அடி அகலத்தில் அதன் மேல் தகரத்தை வைத்து விட்டால் மக்களுக்கு நிழல் கிடைக்குமா என்ற கேள்வி வலுக்கிறது. கதிரவன் உச்சியில் இருக்கும் வேளை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த நிழற்குடைகள் தம் பணியை செய்யாதது வருத்தமே.   

டாஸ்மாக் எலைட்       

நாவலூரில் 'கோரமண்டல் பிளாசா' என்று ஒரு மால் உண்டு. ஐந்து மாடிகள் கொண்ட இந்த மாலில் நான்கு ஆண்டுகளாக இயங்கிவருது AGS திரையரங்கம் தான். சில ஆண்டுகளுக்கு முன்  Dominos  மற்றும் சில மாதங்களுக்கு முன் KFC, மற்றும் நான்காவது தளத்தில் உள்ள பூட் கோர்ட்டில் சில பிரபலமாகாத உணவகங்கள் இவை மட்டும் தான் இங்கு இருப்பவை. மீதம் உள்ள கடைகள் அனைத்தும் கட்டுமான வேலை மட்டும் முடிந்த நிலையில் கண்ணாடிக் கதவுகளுடன் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. ஒரு நாள் அலுவலகம் முடித்து விட்டு, படம் பார்க்க அங்கு நுழைவாயிலில் அடி வைத்த பொழுது, நான்கு பெண்கள் ஒரு கடையில் இருந்து வெளியேறுவதைக் கண்டு என் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. அவர்கள் வெளி வந்த வாசலில் 'TASMAC' என்ற எழுத்துக்கள் மின் ஒளியில் ஜொலித்தன. இந்த டாஸ்மாக் தெருமுனையில் இருக்கும் மற்ற டாஸ்மாக்களை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் போல் பல வெளி நாட்டு இறக்குமதி ரக சரக்குகள் அடிக்கி வைக்கப் பட்டிருந்தன. வரிசையாக பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டு விண்டோ ஷாப்பிங் செய்த பொழுது சில வற்றின் விலைகளையும் கவனித்தேன். சற்று அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுது எனக்கு விளங்கியது இது ஏன் 'டாஸ்மாக் எலைட்' என்று. இதே போல் ஒரு கடையை சமீபத்தில் ஸ்பென்சர் பிளாசாவிலும் கண்டேன். வளர்க குடி ! வாழ்க குடிமக்கள்!                 

களவானிகளும் காவல் துறையும்

நண்பர் ஒருவர் தனது குடும்ப விழாவிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் அவரது இல்லம் கொள்ளையடிக்கப்பட்டது. சில ஆயிரம் ரொக்கம் மற்றும் சில சவரன் நகைகள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தன. மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் எதையும் தொட வில்லை. காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சினிமாவில் வருவது போல் அவர்கள் வலை வீசி தேடி கொள்ளையர்களை பிடிப்போம் என்று வசனம் எல்லாம் பேசவில்லை. அடாவடியாக கண்டுபிடிக்க லஞ்சமும் கேட்கவில்லை. 'அவர்கள் பிடிபட்டாலும் உங்கள் பொருள் மற்றும் பணம் கிடைக்காது' என்று நேர்மையாக பதில் சொல்லி விட்டனர். இன்றளவும் அந்த கொல்லையர்கள் பிடிக்கப் படவில்லை. சம்பவம் நடந்த வீடு அந்த வட்டார காவல் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் என்பது குறிப்பிடத்தக்கது.    

உணவு

என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இருக்கும் பண்புகளில் மிகவும் உயர்ந்தது விருந்தோம்பல். மற்றவர்களின் பசியை போக்கும் பொழுது  நமக்கு கிடைக்கும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. எங்கு சென்றாலும் நானாக முன் சென்று பரிமாறும் வேலையை எடுத்துக்கொள்வேன். நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்கு நான் சென்றிருந்த பொழுது அங்கு பந்தியில் பரிமாறும் வாய்ப்பு கிட்டியது. நான் எங்கும் காணாத ஒரு நிகழ்வு அங்கு நடந்தது.   ஒரு 100 பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட ஒரு உணவுக் கூடம். வந்தவர்கள் அனைவரும் உணவருந்தி விட, கடைசி பந்தி நடந்து கொண்டிருந்த வேளை. பந்தியின் எல்லையில் இருவர் மட்டும் அந்தக் கூட்டத்துடன் சற்றும் ஒட்டமால் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதுவும் அசுர வேகத்தில். முதலில் அவர்கள் அங்கு திருமணக் கூடத்தில் பணிபுரிபவர்களாக இருக்கும் என்று எண்ணினேன். கடைக் கண்ணால் அவர்களை கவனிக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆட்களிடம் உணவு வாங்கிக் கொண்டிருந்தனர். ஒரு ஓரமாக நின்றுகொண்டு அவர்களையே கவனித்தேன். அவர்கள் இலைக்கு வந்து உணவில் இரு கை உண்டு விட்டு, மீதம் இருந்த அனைத்தும் அவர்கள் மடியில் இருந்த பழைய டால்டா டின்னிற்குள்  சென்றது. அடுத்து இரண்டு முறை அவர்கள் போதும் என்ற அளவிற்கு நான் பரிமாறினேன். நான் கவினத்ததாக அவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. 

அப்பா ஊட்டு ரோடு 

தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி மார்ஜியானவில் சென்று கொண்டிருந்தேன். பல்லாவரம் கடந்து திருசூலம் அருகில் செல்லும் பொழுது, பழைய ஹீரோ ஹோண்டா CD 100 இல் ஒருவர், வெள்ளை பனியனுடன் அழுக்கான தலை முடியுடன் எனக்கு முன் வந்தார். அவருக்கு முன் ரோட் காலியாக இருந்த பொழுதும் அவர் ஓரம் ஒதுங்காமல் சாலையின் மத்தியிலே சென்றுகொண்டிருக்க, நானும் ஓயாமல் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தேன். வேண்டுமென்றே அந்த ஆசாமி சாலையின் மத்தியில் சென்று கொண்டிருக்க எனக்குள் உஷ்ணம் தலைக்கு ஏறியது. அப்படியே அவனை அடித்து தூக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோபத்தை அடிக்கி நானும் ஒரு வேஷதாரியாக, சாலை சற்று அகலமான பொழுது அவனை முந்தி சீறிப் பாய்ந்தேன்.

கல்வி      

'நான் அந்த காலத்து SSLC தான், ஆனா அது  இந்த காலத்து B.Scக்கு சமம்' என்று என் தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. நீங்களும் எங்காவது சில பெரியவர்கள் இப்படி பேசிக் கேட்டிருக்கலாம். இதன் அர்த்தம் எனக்கு விளங்கியதே இல்லை. சமீபத்தில் ஒரு பத்தாம் வகுப்பு புத்தகத்தை எடுத்து பார்த்த பொழுது நான் படித்ததற்கும் அதில் தற்போது இருப்பதற்கும் எவ்வளோ மாற்றங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி சற்று எளிமையாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. நான் பள்ளி பயின்ற காலத்திலேயே SSLC முறைக்கும்  CBSE கல்வி முறைக்கும் அத்தனை வித்யாசங்கள் இருக்கும். தற்பொழுது இந்த தரத்தை கொண்டு CBSE மாணவர்களுடன் தமிழக மாணவர்கள் போட்டியிடுவது மிகவும் கடினமாகி விடும். இயற்கையாக இருக்கும் மனித ஆற்றலை வளரவிடாமல், மனப்பாடம் செய்து ஒரு மாணவனின் மூளையை சோம்பேறியாக்கும் இந்த கல்வி முறையை பற்றி என்னவென்று சொல்வது. பாடப் புத்தகத்தில் இருக்கும் ஒரு செய்தி தவறு என்று தெரிந்த போதிலும், அந்த தவறான செய்தியையே பொதுத் தேர்வில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் வற்புறுத்தும் கொடுமைகளும் இங்கு உண்டு.   

        
தநஉஉஇதசநுகஉ

இது நான் அலுவலகம் செல்லும்பொழுது கண்ட ஒரு சுமோ ரக வாகனத்தில் நம்பர் ப்ளேட்டில் எழுதியிருந்தவை. சத்தியமா எனக்கு புரியலைங்க. தமிழ் பற்று தேவைதான். அதற்கென்று  இப்படியா?     

Friday, June 13, 2014

தேன் மிட்டாய் - மே 2014

Anniversary:

மிக முக்கியமான தேன் மிட்டாய் எனது உடல் நலக் குறைவால் தாமதமாக வெளியிடுகின்றேன். சென்ற ஆண்டு இதே மே மாதம் தொடங்கியது எனது தேன் மிட்டாய் பகுதி, இந்தப் பதிவுடன் ஓர் ஆண்டுகால சாதனையை நிறைவு செய்கிறது. எனது பார்வையில் எனது வாழ்க்கை அனுபவங்கள் வாசகர்களை எந்த அளவுக் கவரும் என்ற ஒரு சந்தேகத்துடன் தான் 'தேன் மிட்டாயை' தொடங்கினேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழி ஒருவர் சென்ற மாத பதிவை படித்து விட்டு, 'தேன் மிட்டாய் நல்லா இருக்கு நீ எழுதற மத்ததை விட. தேன் மிட்டாய் மட்டுமே நீ எழுதலாம்' என்று கூறியதில் எனக்கும் தேன் மிட்டாய்க்கும் பெரும் வெற்றியே. மற்ற பகுதிகள் அவள் பார்வையில் மொக்கையாக உள்ளன என்ற உள் குத்தையும் அந்த வாசகத்தின் மூலம் நான் அறிவேன். 

ஆயிரத்தில் ஒருவன்:

சமீபத்தில் வாத்தியார் நடித்த ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வடிவில் மீண்டும் திரையில் தோன்றியதை நான் திரையரங்கம் சென்று கண்ட அனுபவத்தை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். அதற்கான நேரம் இது வரை வராததால், இங்கு சிறு குறிப்பாக பதிகின்றேன். வரலாறு மிக முக்கியம் அல்லவா. சத்தியம் திரையரங்கில் Studio-5 திரையில், MGR வெறுக்கும் எனது தோழனுடன் படத்தை காணச் சென்றேன்.

என் நண்பனோ சிவாஜியை போற்றி MGRயை பழிக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன். நானோ என்றும் MGR பக்கம் நிற்கும் குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவன். என்னை  அவன் பல ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்க்கச் செய்த கொடுமைக்கு அவனை பழிவாங்க எனக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பம் இது என்று எண்ணி அகமகிழ்ந்தேன். அவனால் இருக்கையில் அமர முடியவில்லை, MGR திரையில் தோன்றி வீர வசனங்கள் பேசும் பொழுதெல்லாம் நெளிந்து கதறினான்.

எங்களைத் தவிர்த்து உள்ளே இருந்தவர்கள் அனைவரும் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒவ்வொரு பாடல் திரையில் வரும் பொழுதும் எனது அருகில் இருந்தவர்,  பாடத் தொடங்கி விடுவார். 'அதோ அந்த பறவை போல...' என்று TMS குரல் ஒலிக்க, என்னை அறியாமல் எனது உதடுகளும் பாடத் தொடங்கின. ஒரே ஒரு குறை தான். சத்யம் என்பதால் அனைவரும் சற்று அமைதியாகத் தான் படம் பார்த்தார்கள். அடுத்து MGR படம் திரையில் வரும் பொழுது MGR ரசிகர்களுடன் விசில் சத்தம் காதுகளை பிளக்க ஒரு லோக்கல் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறேன்.      

பேருந்து நிழற்குடை

சுட்டெரிக்கும் மதிய வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் சமயம், கருப்பு  லெதர் சூவை லென்ஸ் வைத்து எரிப்பது போல் சூரியன் சுடும் சமயம் பலரை எனது வாய் பழிச் சொல்லால் சபிக்கும். 'அவுங்க நாடு குளிர் நாடு, அவன் சூ, கோட்டு எல்லாம் போட்டு வேல பார்ப்பான். இங்க வெய்யில். எங்களால முடியல சாமி'. கணினி முன் செய்யும் வேலைக்கு முழுக்கை சட்டையும் சூவும் எதற்கு என்று பலமுறை நான் சிந்தித்ததுண்டு. இவை அனைத்தும் பொருளாதார அடிமைத்தனத்தின் உச்சகட்டம். அந்த வட்டத்திற்குள் சென்றால் பல சிக்கல்கள் வரும், நாம் திரும்பிவிடுவோம். 

சோழிங்கநல்லூர் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக வேகமாக மாறிவருகின்றது. அங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் பேருந்துகளை உபயோகிக்கின்றனர். அப்படி இருக்க அங்கு நிழல் தரும் ஒரு மரமும் இல்லை, பேருந்து நிலையமும் இல்லை.   மதிய வேளைகளில் முடியல.

ஒரு பக்கம் பேருந்து நிலையம் இல்லை என்றால், இருக்கும் இடங்களில் 'மாண்புமிகு .............. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில்' என்று ஆரம்பித்து அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பெயர் வரை எழுதிவிடுகின்றனர். ஆனால் அந்தப் பேருந்து நிறுத்தத்தின் பெயர் மட்டும் எங்கு தேடியும் கிடைப்பதில்லை. ஊருக்கு புதிதாய் வருபவர்களின் கதி அதோ கதி தான்.     

Vending Machine
அலுவலகத்தில் புதிதாய் மூன்று Vending Machine களை நிறுவியுள்ளனர். இதில் 5,10,20 ரூபாய் தாள்களை செலுத்தி, item-codeஐ என்டர் செய்தால், நமக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். அதனுள் பெரும்பாலும் இந்த டின் கோக்,பெப்சி வகையறா, lays, haldiraams தின்பண்டங்கள், மற்றும் சாக்லேட்கள் இருக்கும்.   

இதற்கு முன் இந்த இயந்திரங்களை பயன்படுத்திய அனுபவம் எனக்கு கிடையாது என்பதால் எனது தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு அதில் ஏதேனும் வாங்க வேண்டும் என்று சென்றேன்.  முதலில் நாங்கள் செலுத்திய பத்து ரூபாய் தாளை, 'கசங்கிய தாள்' என்று  அது துப்பிவிட்டது. அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு மேலும் நான்கு புதிய பத்து ரூபாய் தாள்களை செலுத்தினோம். தோழி 25 ரூபாய் டின் கோக் வாங்க, நான் 12 ரூபாய் ப்ரூட்டி வாங்கினேன். எனது மனதினுள் '25+12=37. 40-37=3', அப்ப அந்த மூன்று ரூபாய் வராதா என்று ஏங்கிய பொழுது ஒரு அம்மணி அவரசமாக வந்து பத்து ரூபாய் தாளை உள்ளே செலுத்தினார். 'நம்ம மூனு ரூபா போச்சு'  என்று நான் நம்பிக்கை இழக்கும் சமயம், அவர் 10 ரூபாய் lays மட்டும் வாங்க, அடுத்த பத்து நொடிகளில் அந்த இயந்திரம் எனது சில்லறையை துப்பியது. 

வாழைத் தோட்டம்

வழக்கம் போல் அலுவலகம் செல்லும் ஷேர் ஆட்டோ... சி... கேபில் செல்லும் பொழுது மேடவாக்கம் அருகே ஒரு பெண்மணியை பிக் அப் செய்ய சென்ற வழியில், ஒரு பெரிய கிணறுடன் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு வாழைத் தோட்டம் ஒன்றைக் கண்டேன். கான்கிரிட் காடுகளுக்கு மத்தியில் ஒரு வாழைத் தோட்டத்தைக் கண்டது என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. அடுத்த முறை அந்தப்பக்கம் சென்றால் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்.           
Unibrom 

இது எனது பாட்டிக்கு அவரது கண் டாக்டர் புதுவையில் எழுதிக் கொடுத்த சொட்டு மருந்து. அது தீர்ந்து விடவே, சென்னை வந்தப்பொழுது என்னை வாங்கித் தரச் சொன்னார். நானும் பல மருந்துக் கடைகளில் கேட்டு, எங்கும் கிடைக்காததால், எங்கள் வட்டாரத்தில் சற்று பெரிய மருந்துக் கடைக்குச் சென்றேன். அங்கும் கிடைக்கவில்லை. அந்தக் கடை உரிமையாளரிடம் 'இது எங்கு தான் கிடைக்கும்?' என்று வெறுப்புடன் கேட்டேன். அவர் 'இது யார் எழுதியது?' என்று பொறுமையாக கேட்டார். நான் 'புதுவையில் ஒரு டாக்டர்' என்றேன். அவர் சிரித்துக்கொண்டே 'அங்கு மட்டும் தான் கிடைக்கும்' என்றார். 

தனது கிளினிக் உடன் இருக்கும் தனது சொந்த மருந்துக் கடையில் மட்டும் கிடைக்கும் மருந்துகளை மக்களுக்கு எழுதிக் கொடுத்து நல்ல வியாபாரம் பார்க்கும் மருத்துவச் சமுதாயம் பெருகிக் கொண்டுள்ளது.

ஆபாச விளம்பரம் 

IPL விளையாட்டுகள் பார்த்த பொழுது என்னை மிகவும் கோபப்படுத்தியது சில விளம்பரங்கள். மிகவும் குறிப்பாக சில ஆணுறை மற்றும் பாடி ஸ்ப்ரே விளம்பரங்கள் சற்று அதிக அளவில் ஆபாசத்தை தொலைகாட்சித் திரையில் தெளிக்கின்றன. தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு என்று இயங்கும் சென்சார் போர்டின் அளவுகோல் தான் என்ன?   
                 
 கனவில் யார் தெரியுமா?                 

மே மாதம் 23 ஆம் நாள், நோய் வாய்ப்பட்டு குணமான எனது தாத்தாவை எங்களது கிராமத்தில் சென்று விட்டு சென்னை திரும்பிய அந்த வெள்ளி இரவு கடும் ஜுரம். மறு நாளும் ஜுரம் தொடர, எனக்கு சில சூட்டுக் கட்டிகளும் உடன் தோன்றின. எங்கள் வீட்டில் அம்மை வந்த அனுபவம் உள்ள எனது அம்மா மட்டும் 'இது அம்மை' தான் என்று உறுதியாக சொன்ன பொழுதும், சில கட்டிகள் முதுகில் மட்டும் இருக்கவே என்னால் அதை ஏற்க முடியவில்லை. மாலை டாக்டரிடம் சென்றால் அவர் ஒரு கட்டியை பார்த்தவுடனே இது அம்மை தான் என்றார். அம்மைக்கு மருந்து எதுவும் இல்லாததால், ஜுரத்திற்கு மட்டும் மருந்து கொடுத்து அனுப்பினார். 

அம்மை என்றவுடன் 'அம்மன்.சாமி' என்று பல அலப்பறைகள் செய்யத் தொடங்கினர். அது அந்தச் சிறுக்கி varicellaவின் வேலை என்றால் யாரும் கேட்கவில்லை. இவர்கள் பண்ண அலப்பறையுடன் உறங்கிய எனது கனவில், அம்மன் வடிவில் நம்ம ரோஜா ஆண்டி எனது வீட்டிற்கு வந்து என் நெற்றியில் கை வைக்கின்றார்,  சூட்டை குறைக்க.               

Thursday, May 15, 2014

தேன் மிட்டாய் - ஏப்ரல் 2014

சில அலுவல்கள் காரணமாக எழுத்துக்கு நெடுநாள் இடைவெளி விட்டிருந்தேன். மீண்டும் உங்களை உற்சாகத்துடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

சென்ற மாதத்தின் தொடர்ச்சி

பெண்களின் பின் சென்றால் அது எப்போழுதும் ஏமாற்றம் தான் என்பது  பெண்களின் பின்னழகை ரசித்து பின் தொடர்ந்து, முன்னழகைக் கண்டு மனம் புண்ணான பல ஆண்கள் அறிந்த உண்மை என்பதால் அந்த சம்பவத்தை பற்றி மேலும் பேசப் போவதில்லை. 

கல்யாண சீசன்

என்னமோ எதோ தெரியவில்லை, இந்த மாதம் எதிர்பாராத பல கல்யாண சேதிகள் என் காதுக்கு வந்து சேர்ந்தன. ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், மறுபுறம் மனதை ஒரு இனம் தெரியாத சோகம் வந்து சூழ்ந்து கொண்டது. சில திருமணங்கள் முன்பே திட்டமிட்ட பொழுதும் நாட்கள் நெருங்கும் பொழுது தான் பிரிவின் வலி மேலும் அதிகமாகின்றது. 

இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிகின்றது.

1.எத்தனை தமிழ் சினிமாவில் கேலி செய்த பொழுதும், தமிழ் நாட்டில் இன்னும் அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு மௌசு குறையவில்லை.

2.ஆண்-பெண் நட்பு என்பது அந்தப் பெண்ணின் திருமணம் வரையில் தான். எவ்வளவு தான் மனிதர்கள் தாங்கள் நாகரிகமாகவும் மிகவும் 'பிராக்டிகலாகவும்' மாறிவிட்டதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருக்கும் மிருக குணமான சந்தேகம் இன்னும் மாறவில்லை.

மாங்காய் லஞ்சம்

சிப்காட் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு மாமரம் உண்டு என்பதை கவனிக்கும் அளவு கூட நேரம் இல்லாத சாபம் பெற்றவர்கள் சக மென்பொருள் தோழர்கள். ஒரு நாள் பேருந்து வரக் காத்திருக்கும் பொழுது 'தொப்' என்ற சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்த பொழுது மூன்று சிறுவர்கள் தேர்ந்த கல் வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு மாங்கனி ஏற்கனவே இருந்தது. நான் எறிய பேருந்தில் அவர்களும் ஏற, நாங்கள் நால்வரும் ஓட்டுனரின் இடது பக்கம் இருக்கும் சீட்டில் அமர்ந்தோம்.

மூவரில் சற்று உயரமாக இருந்தவன் ' அண்ணா இந்தப் பையன் கிட்ட பாஸ் இல்ல. செக் பண்ணுங்க' என்று சற்று குள்ளமாக இருந்த சிறுவனை ஓட்டுனரிடம் மாட்டிவிட்டான்.

டோல் கேட்டில் வண்டியை நகர்த்திக்  கொண்டே ஓட்டுனர் ' உன் வீடு எங்கடா' என்று கேட்க, அந்தச் சிறுவன் ஒரு வினாடியும் தாமதிக்காமல் 'துபாய்ல', என்று சொல்ல சற்று சத்தமாகவே நான் சிரிக்க, ஓட்டுனர் முகம் காற்று போன சைக்கிள் டுயுப் போல சுருங்கியது.

நாவலூர் - சத்யபாமா பேருந்து நிருந்தங்களுக்கு இடையில் ஒரு மாந்தோப்பு சாலை ஓரமாக உண்டு. அதைக் கடக்கும் பொழுது அந்த சிறுவர்கள் ' பார்ரா எவ்வளோ மாங்கா' என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டு, 'அண்ணா அந்தத் தோப்பு பக்கத்துல ஓரமா நிறுத்துங்க' என்று பணிந்தான்.

ஓட்டுனரோ 'இங்க ஸ்டாப் எல்லாம் இல்ல, அடுத்த ஸ்டாப்ல இறங்கி நடந்து வாங்க' என்று மறுக்க, அந்தச் சிறுவனோ 'நீங்க திரும்பி வரப்ப மாங்கா தர்றேன்' என்று வியாபாரம் பேசத் தொடங்கினான்.

மாங்காய்த் திருட சிறுவர்கள் லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு சமுதாயம் மேலோங்கியுள்ளதைக் கண்டு அகமகிழ்ந்தேன்.

எங்கும் தமிழ்

இந்த மாதம் அதிக நேரம் மருத்துவமணையில் செலவழிக்கும் பொழுது என்னைச் சிந்திக்க வைத்தது ஒரு பெயர் பலகை.
Out-Patients - புறநோயாளிகள்
In-Patients - உள் நோயாளிகள்

புறம் என்பதிற்கு எதிர் அகம் தானே. அப்படியென்றால் அகநோயளிகள் என்றுதானே இருக்க வேண்டும். அல்லது உள் என்பதிற்கு எதிர்மறையாக 'வெளி நோயாளிகள்' என்றல்லவா இருக்க வேண்டும். இது என்னையா குழப்பம்?


சேவை மையம்

இரவு தூங்கப் போகும் பொழுது என் கைபேசியை சார்ஜில் போட்டு விட்டு பத்து மணி நேரம் கடந்த பின்பும் 75% மட்டுமே சார்ஜ் ஏறி இருந்தது. 100% சார்ஜ் பூர்த்தி ஆனாலே ஆறு மணி நேரம் தான் தாங்கும், இப்படி பொறுமையாக சார்ஜ் ஏறினால் என் பாடு அதோ கதிதான் என்பதால் இணையத்தில் தாம்பரத்தில் இருக்கும் சாம்சங் சேவை மையத்தை தேடித் பிடித்து அங்கு சென்றடையும் பொழுது மாலை ஆறு மணி பத்து நிமிடம். சேவை மைய வரவேற்பில் இருந்த அம்மையார் ஆறு மணியுடன் அவர்கள் சேவை முடிந்ததால் நாளை வரச் சொன்னார். நானோ எனக்கு இரவுப் பணி இருப்பதால் சற்று தாமதமாகி விட்டது, நாளை மீண்டும் வருவது கடினம், இன்றே எடுத்துக் கொள்ளுங்கள் என்று போராடினேன். மேலும் பத்து நாட்கள் கடந்தால் எனது வார்ரன்ட்டி காலம் முடிவடையும் என்ற காலக் கெடு வேறு.

அந்த அம்மையார் 'செக் பண்ணி என்ட்ரி போடணும். ஒரு மணி நேரம் ஆகும். நாளைக்கு வாங்க' என்று என் வேண்டுகோளுக்கு இணங்காமல், சக அலுவலரிடம் 'ஆறு மணிக்கு கதவ சாத்த சொன்னன்தான உன்ன' என்றவுடன், எனக்கு மேலும் அங்கு கெஞ்ச பிடிக்காமல் வீடு திரும்பினேன்.

மறுநாள் இரவுப் பணி முடித்து, என் உறக்கத்தை பாதியில் தடைபோட்டு விட்டு, கதிரவன் சுட்டெரிக்கும் நடுப்பகலில் அந்தச் சேவை மையம் சென்றடைந்தேன். அதே அம்மையார். இம்முறை என்னுடைய பெயர் மற்றும் கைபேசி எண்ணை, ஒரு கோடு போட்ட சிறு நோட்டில் குறித்துக் கொண்டு 'பத்து நாள் கழித்து புதுசு வந்தவுடன் கால் பண்ணுவோம்' என்றார் . 'நேத்து என்னமோ செக் பண்ணனும், ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னது' என்று எனக்குள் ஒரு கோவம் எழுந்த போதும், எனது சுபாவம் அதை விழுங்கி விட அமைதியாக வீடு திரும்பினேன்.

பத்து நாட்கள் கழித்து அழைப்பு வர, எனது பழுதடைந்த சார்ஜர், மற்றும் ரசீதின் நகலுடன் சென்றேன். அன்றும் அதே அம்மையார். ஒரு வழியாக எனது சார்ஜரை  திரும்ப வாங்கிக்கொண்டு புதுசு கொடுத்தார். இறுதிவரை அதை அவர் முதல் நாள் சொல்லியது போல் செக் செய்யவே இல்லை. ஆனால் இம்முறை 'ரூபக் சார்! ரூபக் சார்' என்று ஒரே மரியாதைதான். நான் வலையில் எழுதிவிடுவேன் என்ற பயமோ?

கவனம் தேவை

OMR சாலையில் செல்லும் கல்லூரி வாகனங்களில் எழுதி இருக்கும் வாசகம் 'கல்லூரி வாகனம் கவனம் தேவை' . இதற்கு பல நாட்களாக தவறான அர்த்தம் புரிந்து கொண்டிருந்தேன். சமீபத்தில் அந்த கல்லூரி வாகனம் ஒன்று என்னை சாலையில் கடந்த பொழுதுதான் அந்த வாசகத்தின் உண்மையான அர்த்தம் எனக்கு புரிந்தது. கல்லூரி வாகனம் வந்தால் நாம் கவனமாக ஒதுங்கி செல்ல வேண்டும் போல. OMR சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வாசகத்தின் அர்த்தம் புரியாமல் இருக்க முடியாது.

மாத்தி பேசு

சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் C51 ஏறி காலை ஏழு மணிக்கு தாம்பரம் சென்றுகொண்டிருக்கையில், சுங்கச் சாவடிக்கு முன் குடும்பமாக நால்வர் பேருந்தில் ஏறி, ஸ்டேஜ் க்ளோஸ் செய்துகொண்டிருந்த நடத்துனரிடம் அவர்கள் 'தாம்பரம்' என்று சொல்ல, அவர்களை இருக்கையில் அமரும்படி நடத்துனர் சைகை செய்துவிட்டு தன் பணியை தொடர்ந்தார்.

தம் பணியை முடித்து அவர்களிடம் டிக்கெட் கொடுக்க அணுகும் பொழுது நால்வரிடமும் ஏற்கனவே ஒரு நாள் பாஸ் இருந்தது. அவர்கள் நால்வருக்கும் சேர்த்து ஸ்டேஜ் கிளோஸ் செய்த நடத்துனர் சற்றே கோபமுற்று சண்டைப் பிடிக்கத் தொடங்கினார். சண்டை வலுக்க அவர்கள் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டனர்.

புலம்பிக் கொண்டே நடத்துனர் மற்றவர்களிடம் டிக்கெட் கொடுக்கத் தொடங்கினார். ஒருவர் 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்க, நடத்துனரின் முகம் சிவக்க, 'காலையில நோட்டு நோட்டா நீட்டனா. நான் எங்க போறது' என்று அவர் தன் வாயில் வயலின் வாசிக்க தொடங்கும் பொழுது, அந்த 500 ரூபாய் தாளை நீட்டியவர் 'அவங்க அந்த ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஏறிய உடனே காட்டியிருக்கணும்' என்றவுடன் நடத்துனரின் கோபம் மீண்டும் அவர்கள் மேல் திரும்ப, இவருக்கு சில்லரையும் கிடைத்தது.

Octopus
ஒரு தனியார் தொலைகாட்சியில், சமையல் நிகழ்ச்சி ஒன்றில் octopus சீன முறையில் சமையல் செய்யும் காட்சியை பார்த்தது முதல் அந்த உணவை உண்ண வேண்டும் என்று எண்ணும் பொழுதெல்லாம் நாவில் உமிழ் நீர் சுரக்கின்றது. நான் எப்பொழுது சீனா சென்று அதை உண்பது? அது போகட்டும். இந்த octopus என்றால் தமிழில் என்ன? ​

இன்று வாசகர் கூடத்தில் நான் எழுதிய பதிவு - சொர்க்கத் தீவு

Monday, March 31, 2014

தேன் மிட்டாய் - மார்ச் 2014

என் வலைப் பெயரை நீங்கள் கவனித்திருந்தால் அது மாறியிருப்பதை உணரலாம். எனது வலையுலக வாழ்வில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது, புது உற்சாகம் பிறக்க 'கனவு மெய்ப்பட' என இயங்கிவந்த எனது தளம், இனி 'சேம்புலியன்' என்று இயங்கும். பெயர் மாற்றலாம் என்று முடிவு செய்துவிட்டு, யோசனைக்காக ஒரு பிரபல பதிவரை அணுகிய பொழுது, 'சேம்புலிபுரம்' என்னும் எனது கிராமத்தின் பெயரை டிங்கரிங் செய்து அவர் சூட்டிய பெயர் தான் 'சேம்புலியன்'.      

கட்டாயத் தேர்வு 

முந்தைய தேன் மிட்டாயின் தொடர்ச்சி,  மொத்த 64 கேள்விகளில் முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது.

உடனே அந்தத் தேர்வு அறையை விட்டு வெளியேறி, தேர்வு அதிகாரியை அழைத்தேன். அவர் உள்ளே வந்து இரண்டு முறை கிளிக் செய்ய முயன்றும், திரை மந்தமாக எந்த ஒரு மாற்றமும் காட்ட மறுத்தது. என்னிடம் 'எவளோ நேரமா இப்படி இருக்கு' என்று கேட்க, நான் 'ஐந்து நிமிஷமா' என்றேன்.  உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்தார். விண்டோஸ் லோகோ திரையில் உருபெறும் பொழுது எனது இதயம் வழக்கத்தை விட அதிக ரத்தத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. தேர்வு சாப்ட்வேரை லோட் செய்ய, விட்ட இடத்தில் இருந்து தேர்வு தொடர, செலுத்திய  கட்டணம் வீண் போகாது என்று என் மனமும்  ஆறுதல் அடைந்தது.           

ஓர் பிரபலம் 

பல நாட்கள் போராட்டத்திற்குப் பின் த்ரிஷ்யம் திரைப்படத்தை PVR திரையரங்கில் பார்த்துவிட்டு, இரவு பதினோறு மணியளவில் Skywalk மாலை விட்டு, என்னுடன் வந்திருந்த பிரபலத்துடன் வெளியேறினேன். படத்தின் பெருமைகளை பேசிக்கொண்டே நடந்தோம், வாசல் வந்தவுடன் முன்னே சென்ற ஒரு பெண் இடது புறம் திரும்ப அதுதான் வழி என்று நாங்களும் அப்படியே சென்றோம். ஆனால் அந்தக் பக்கம் வழி மூடப் பட்டிருந்தது, எங்களுக்கு முன் சென்ற பெண்ணையும் காணவில்லை. வந்த வழியே திரும்பி சாலையை நோக்கி செல்லும் பொழுது, 'இதுக்குத்தான் பொண்ணுங்க பின்னாடி போகக்கூடாது' என்று சொல்லி, தனது பாணியில் சிரித்தார் அந்த பிரபலம். 

பிரதான சாலையை நாங்கள் அடையும் பொழுது, வெள்ளை நிற சட்டை அணிந்து, நரைத்த முடியுடன் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினார். என்னுடன் இருந்த பிரபலம் 'அவர்தான் சாருநிவேதிதா' என்று அவர் கேட்கும் படி சொல்ல அவரைக் கடந்து சென்றோம்.              

அழியும் பசுமை

நீங்கள் கீழேக் காணும் படம், பத்து ஆண்டுகளுக்கு முன், எனது கிராமத்தில் முப்போகம் நெல் விளைந்த வயல்வெளி. இன்று பிளாட் போடப்பட்டு பாலை நிலம் போல் காட்சி அளிக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் உணவுக்கு என்ன வழி?   



கல்வெட்டுக்கள் 

பல வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களில் மக்கள் தம் பெயரையோ அல்லது காதல் ஜோடிகளின் பெயரை செதுக்கி வைத்திருப்பதை காணும் பொழுது, அவர்கள் பெயர் வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கவும் அவர்கள் காதல் சரித்திரக் காதலாகவும் மாற அவர்கள் அப்படிச் செய்கின்றனர் என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வதுண்டு. ஆனால் எனது கிராமத்தையும் பக்கத்துக்கு கிராமத்தையும் பிரிக்கும் ஓடையின் மேல் அரசாங்கம் கட்டிய பாலத்தில்,(அந்த ஓடை வற்றிய பின் தான் பாலம் கட்டப் பட்டது என்பதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) தன் பெயரை செதுக்கிய இவரை என்ன செய்வது, நியாயன்மார்களே!   



ஆட்டோ மீட்டர் 

ஒரு மாலை வேளையில் உஸ்மான் ரோட்டில் இருக்கும் போத்திஸ் எதிரில் சாலையைக் கடக்கும் பொழுது, ஆட்டோக்களை காவல் துறையினர் நிறுத்தி பிரயாணிகளிடம், 'ஆட்டோ மீட்டர் ஏறும் பொழுது போட்டாங்களா?' என்று விசாரித்துக்கொண்டிருந்தனர். 

பிரதான சாலையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் போட்டு தான் ஓட்டுகின்றனர். எனது தெரு போன்ற உட்புறங்களில் யாருமே மீட்டர் போடுவதில்லை என்பது காவல் துறை அறியுமோ?  அவர்கள் ஏன் எங்கள் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் சோதனை செய்வதில்லை? இது எல்லாம் வெறும் கண்துடைப்பா?

கூலிங் கட்டணம்

நான் உண்ட கோழி எனது உணவுக் குழாயில் சிக்கித் தவிக்க, அதை அடக்கம் செய்ய ஒரு சோடாக் குடிக்க எனது தெருவில் இருக்கும் கடைக்குச் சென்றேன். சோடா இல்லாத காரணத்தால், ஸ்ப்ரைட் வாங்கினேன். 35 ரூபாய் கேட்டார் அந்தக் கடைக்காரர். பாட்டில் மேல் இருந்த mrpயை பார்த்தேன், 34 ரூபாய் என்றிருந்தது. 'ஏன் கூடுதல் கட்டணம்' என்று நான் கேட்க, 'கூலிங் சார்ஜ்' என்றார் அவர். 'நான் என் வீட்டிலேயே கூல் செய்து கொள்கின்றேன்' என்று சாதாரண பாட்டிலை 34 ரூபாய் கொடுத்து வாங்கினேன். பேருந்து நிறுத்தங்களில் பொதுவாக நடக்கும் இந்தக் 'கூலிங் கொள்ளை' நான் வசிக்கும் தெருவிலும் தொடங்கியிருப்பது வருத்தமே.           
    
இலவச இணைப்பு

அந்தக் கடையில் நிற்கும் பொழுது, ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிக்கையுடன் இலவசமாக ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய் இணைத்திருப்பதைக் கண்டேன். சற்றே ஆச்சரியம் தான். இருப்பினும் இவர்கள் பத்திரிக்கையை படிக்க இலவசம் கொடுக்கும் பொழுது, எனது வலைக்கு பிரதிபலனின்றி வந்துப் படிக்கும் வாசகர்களை எண்ணி பெறுமை பட்டுக்கொண்டேன்.    

துக்க விசாரணை 

ஒரு இரங்கலுக்கு சென்றிருந்த பொழுது, அங்கு இறந்தவரின் உற்றார் உறவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க. ஒருவர் மட்டும் வாய் முழுவதும் பல்லாக  ஒரு மூலையில் சிலரின் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.   துக்க வீட்டில் சிலர் தைரியமாக இருப்பது தேவை தான், ஆனால் சற்று கூட அந்த மரணத்தின் பாதிப்பே இல்லாமல் எப்படி சிலாரல் இப்படி கேலியும் கிண்டலும் செய்ய  முடிகின்றது?  

Beat Officer

நான் மதியம் எனது அலுவலகம் செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்லும் பொழுது, திருவள்ளுவர் தெருவில், மெரூன் நிற பல்சரில், பெட்ரோல் டாங்க மீது 'Beat officer' என்று ஆங்கிலத்தில் எழுதிருக்க, அதன் மீது காக்கி நிற சீருடை அணிந்த ஒரு காவல் துறை அதிகாரி, 'Beat officer' என்று ஆங்கிலதில் பதியப்பட்ட ஒரு கருப்பு நிற மேலங்கி அணிந்து கம்பீரமாக இருந்தார். எனது மனதில் பலக் கேள்விகள் தோன்றிய பொழுதும் அவரிடம் சென்று வினவ அந்தச் சமயம் ஏனோ தோன்றவில்லை. இதே போல் ஒரு பீட் ஆபிசரை சோழிங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு வெளியிலும் கண்டேன். 

யார் சாமி இந்த பீட் ஆபீசர்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.      

ஸ்கை ப்ளூ துப்பட்டா 

பீட் ஆபிசரை கடந்து சென்று, இளங்கோவன் தெருவில் திரும்பினால், எனக்கு முன் ஒரு பெண் கருப்பு குடை பிடித்து நடந்து செல்வது தெரிந்தது. வெள்ளை நிற சல்வாருடன் நீல நிற துப்பாட்ட அணிந்திருந்த அவள் பின் இருந்து பார்க்க ஒரு தேவதை போலே காட்சியளித்தாள். அவளது முகத்தை காணவேண்டும் என்று ஆவல் என்னுள் தோன்ற, சுட்டெரிக்கும் மதிய வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணின் குளிர்ச்சியில் நனைய, சற்று வேகமாக அடியெடுத்து வைக்க தொடங்கினேன். எனக்கும் அவளுக்கும் இருக்கும் இடைவெளி விரைவாக குறைந்து வரும் சமயம், அவள் பிரதான சாலையின் மிக அருகில் சென்றுவிட்டாள். அவளும் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் தான் செல்கிறாள் என்று என் மனதில் ஒரு இச்சை தோன்ற, அவளை முந்திக்கொண்டு பேருந்து நிலையம் செல்ல எனது வேகத்தை அதிகரித்தேன். அவளுக்கு மிக அருகில் செல்ல, அவளது சுழல் போன்ற கரிய கூந்தலும், அவளது காது ஜிமிக்கியும் அவள் நடைக்கேற்ப நடனமாட...    தொடரும்...              

Friday, February 28, 2014

தேன் மிட்டாய் - பிப்ரவரி 2014

தேன் மிட்டாய்

எனது வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு சுவாரசியமான அனுபவங்களை 'தேன் மிட்டாய்' என்ற தலைப்பில் தொகுத்து எழுதிவருகின்றேன். தேன் மிட்டாய் என்னை குழந்தை பருவத்தில் மிகவும் கவர்ந்த இனிப்பு. நாகரீக மாற்றத்தில் அது காணாமல் போக, அதை நினைவு கூறும் வகையில் தான் இந்த தலைப்பை தேர்வு செய்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. 

அலுவலகத்தில் 'பாலா கேட்டரிங்' என்று ஒரு புதிய உணவகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தின் உள்ளிருக்கும் மற்ற உணவகங்களை விடவும் விலை சற்று மலிவு. ஒரு நாள் இங்கு உணவு வாங்கும் பொழுது ஒரு பச்சை வண்ண பிளாஸ்டிக் கவர் என்னைக் கவர்ந்தது. அருகில் சென்று பார்த்த பொழுது என் கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை. அதில் 'கோவில்பட்டி ஸ்நாக்ஸ்' என்று பதிந்து அதன் கீழ் 'தேன் மிட்டாய்' என்று எழுதியிருந்தது. விடுவேனா?. 15 ரூபாய் கொடுத்து அதை வாங்கிக்கொண்டேன். அதனுள் வெறும் 15 மிட்டாய்கள் மட்டுமே இருந்தாலும், சுவையில் குறைவில்லை.

Fog ரைடர்               

பிப்ரவரி முதல் வாரங்களில் சென்னையில் பின்பனி காலத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த சமயத்தில் ஒரு நாள் அதிகாலை அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். காலை நான்கு மணிக்கு என் ஸ்ப்ளென்டரை கிளப்பிக் கொண்டு அலுவலகம் நோக்கி நகரத் தொடங்கினேன். முழுக்கை சட்டை அணிந்திருந்தாலும், குளிர் என்னுள் ஊடுருவி தன் ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கியது. மெதுவாக சென்றால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்ற எண்ணம் தோன்ற, என் வாகனத்தின் ஓட்டத்தை கூட்டினேன். OMRஐ அடைந்த பொழுது என் வயோதிக ஸ்ப்ளெண்டர் தன் நாடி நரம்புகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு 80 கிலோமீட்டர் வேகத்தை தொடும் சமயம், என் சுவாசக்காற்று வெள்ளைப் புகையாக மாறி எனது ஹெல்மெட் கண்ணாடியில் படிந்தது. 

இலவசப் பயணம்

என் அலவலகத்தில் இருந்து சிப்காட் பேருந்து நிலையம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். இந்த தூரத்திற்கு ஷேர் ஆட்டோ கட்டணம் பதினைந்து ரூபாய் என்பதால், மாநகரப் பேருந்தில் செல்லும்போது யாரிடமாவது லிப்ட் கேட்டுகொண்டு செல்வது என் வழக்கம். காலை ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் பொழுது, அலுவலக வாசலில் யாரிடமாவது லிப்ட் கேட்டுகொண்டு வரும் பொழுது, 'சோழிங்கநல்லூர் வரை போறிங்களா?' என்று கேட்பேன். பெரும்பாலானோர் இல்லை என்று சொல்ல சிப்காட் நுழைவாயிலில் இறங்கிக்கொள்வேன். 

ஒரு நாள் மாலை அலுவலக வாசலில் நெடுநேரம் காத்திருந்தும் வாகனங்கள் எதுவும் வரவில்லை. சற்று நேரம் கடந்து ஒரு ஹோண்டா ஆக்டிவா ஒட்டிக்கொண்டு வந்த ஆடவர் என்னை ஏற்றிக்கொண்டார். ஸ்கூட்டி ஆக்டிவா போன்ற வண்டிகளில் எனது கால்களை மடக்கி ஒட்கார முடியாத காரணத்தாலும், அவை வேகம் குறைவாக செல்லும் காரணத்தாலும் அந்த வாகனங்களில் நான் செல்வதை தவிர்த்து விடுவேன். அன்று வேறு வழியின்றி ஏறிக்கொண்டாலும், எனது வழக்கமான கேள்வியை கேட்காமலே சிப்காட் வாயிலில் இறங்கிவிடலாம் என்று முடிவுசெய்துகொண்டேன். அப்போது லிப்ட் கொடுத்த அண்ணாச்சி 'சோழிங்கநல்லூர் வரை போறேன் வரிங்களா?' என்று கேட்டு என்னை ஆச்சரியப்படுத்தினார்.

வேகம் இருக்கு மனிதனிடம் மனம் இருப்பதில்லை!
மனம் இருக்கும் மனிதனிடம் வேகம் இருப்பதில்லை!

ஒரு பிரபலத்தின் மர்மம்  

என்னுடன் அலுவலத்தில் பணிபுரியும் சக தோழன் ஒருவன், தன் கல்லூரி காலத்தில் இரு சக்கர வாகனத்தில் தன் நண்பனுடன் செல்லும்பொழுது நேர்ந்த விபத்தால், இரு சக்கர வண்டிகளில் பிறருடன் செல்லமாட்டான். ஆனால் என் மேல் அவனுக்கு எதோ நம்பிக்கை தோன்ற என்னுடன் வருவான். நாம் தான் பிறருக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் ஆச்சே. எங்களுடன் பணியாற்றும் ஒரு பிரபலர் மெதுவாகவும் கவனமாகவும் வண்டி ஓட்டுவார், 'நான் இல்லாத சமயங்களில் நீ அவருடன் பயமின்றி போகலாம்' என்று அவனிடம் சொல்லி வைத்திருந்தேன். சில வாரங்கள் கடந்து, என்னிடம் வந்து அவன் 'நீ சொன்னேன்னு அவரோட போனா. அவர் பயங்கர வேகமா போராறே' என்று என்னிடம் கடிந்தான். நான் அவருடன் சென்றபொழுது அவர் அப்படி வேகமாகவே சென்றதுகிடையாதே என்று நான் அவரிடம் கேட்டபொழுது, அந்த பிரபலம் சொல்லிய பதில் 'நீ என்னுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தான் வந்திருக்கிறாய்' என்று கூறி அவருக்கே உண்டான பாணியில் சிரித்தார். பூனை என்று நினைத்தால் அது புலியாக பாய்கிறதே!       

நெடுஞ்சாலை லாரிகள்

மார்ஜியானாவுடன் முதல் முறை நெடுஞ்சாலை சென்றபொழுது தான் சில போக்குவரத்து நெரிசல்களை ஓட்டுனராக சந்தித்த அனுபவம் நேர்ந்தது. பொதுவாக வேகம் குறைவாகவே செல்லும் லாரிகள் சில சாலையின் இடது புறமும் சில சாலையின் வலது புறமும் சென்று நெடுஞ்சாலையில் நெரிசலையையும் வாகன ஒட்டிகளுக்கு சிரமத்தையும் கொடுக்கின்றன. விதிமுறைப்படி கனரக மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் சாலையின் இடது புறம் சென்றால், மற்றவர்களுக்கு நெடுஞ்சாலை பிரயாணம் கூடுதல் சுகம் தரும் என்பதில் ஐயம் இல்லை என்பதை உணர முடிந்தது.   

தினம் ஒரு சீலை 

சேலைகளை மறந்து மேற்கத்திய ஆடைகளுக்கு பெண்கள் மாறிவிட்ட இந்த காலத்தில், எங்கள் IT அலுவலகத்தில் தினமும் சேலை அணியும் பெண் ஒருவர் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? முதலில் என்னாலும் நம்பமுடியவில்லை தான். வலது தோள்பட்டையில் முந்தானை வருவது போல் அவர் வட நாட்டு பாணியில் சேலை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். கையெடுத்து கும்புடறேன் அம்மணி.    

கைபேசியும் நானும் 

என்ன மாயமோ மந்திரமோ தெரியல? இந்தக் கைபேசிகள் என்னிடம் படும் பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. என் முதல் கைபேசி சோனி k550i முதல் நடுவில் பயன்படுத்திய நோக்கியா கைபேசிகள் வரை என்னிடம் இருந்து பலத்த சேதம் அடையாமல் தப்பியது எதுவும் இல்லை. பெசிக் போன்களுக்கு தான் இந்த நிலைமை என்று நினைத்த எனக்கு நான் சமீபத்தில் வாங்கிய S3 கைதவறி கீழே விழுந்து அதன் திரையில் விரிசல் ஏற்பட்ட பொழுது, துக்கப் படுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை. 

திரையில் விரிசல் விழுந்தும் செம்மையாக பணியாற்றும் S3 மொபைலை பார்க்க விரும்புவர்கள் என்னை அணுகலாம். பார்வை கட்டணம் ஐம்பது ரூபாய் மட்டுமே. (கிளாஸ் மாத்த காசு தேவப்படுது மை லார்ட்)        

கட்டாயத் தேர்வு

சில பல அலுவலக காரணங்களுக்காக ஒரு தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் தோன்றியது. பணம் செலுத்தி NIITஇல் பதிவு செய்துகொண்டேன். தேர்விற்கு என்று படித்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே, கொஞ்சம் தட்டுத்தடுமாறி உருண்டுப் புறண்டு படித்து தேர்வுக்கு தயாராகினேன். தேர்வில் தேறிவிட்டால் தேர்வுக்கு செலுத்திய கட்டணம் அலுவகத்தில் இருந்து கிடைத்து விடும். தேர்வு மையம் சென்றபொழுது அங்கு வழக்கத்துக்கு மாறாக கூட்டம் இருக்க காத்திருக்க வேண்டியிருந்தது. 'கணினியில் எழதப்படும் ஆன்லைன் தேர்வு என்பதால், ஆறு மணிக்கு மேல் உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள். தேர்வு இடையில் தடை பட்டால், மீண்டும் பணம் செலுத்தி தான் எழுத முடியும்' என்று அந்த அதிகாரி தெளிவாக சொல்லி பயமுறுத்தினார். ஆனால் அன்றுடன் எனக்கு தேர்வு முடிக்க வேண்டிய கடைசிநாள் என்பதால் 'துணிவே துணை' என்று தேர்வு எழுத தொடங்கினேன். மொத்த 64 கேள்விகளில்  முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. 

அந்த திக் திக் நொடிகளில் அடுத்து நடந்தது என்ன என்பது அடுத்த தேன் மிட்டாயில். ஹி ஹி ஹி.           

Thursday, January 30, 2014

தேன் மிட்டாய் - ஜனவரி 2014

குழாய் குடிநீர் 

பள்ளி காலத்தில் எனக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. மற்றவர்களை போல் தண்ணீர் குடிக்க பாட்டில் எடுத்துக் கொண்டு செல்ல மாட்டேன். குடிநீர் குழாயை திறந்து, என் இரு கைகளையும் கூப்பி, கையில் தேங்கும் நீரை, மிருக  பாணியில் பருகுவது என் வழக்கம்.  அவ்வாறு நீர் குடிக்கும் பொழுது சொல்ல முடியாத ஒரு நிறைவு என் மனதிலும் வயிறிலும் தோன்றும். கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது நாகரீக நடிப்பில் இந்தப் பழக்கத்தை கைவிட வேண்டிய கட்டாயம் தோன்றி, நாளடைவில் நான் அதை அறவே மறந்துப்போனேன். 

சமீபத்தில் Phoenix மால் சென்ற பொழுது, தாகம் மிகுதியாலும் கொள்ளை விலையில் விற்கப் படும் பாட்டில் நீரை தவிர்க்கவும், குடிநீர் குறியீட்டை தேடி அலைந்து, கீழே உள்ள படத்தில் இருக்கும் இடத்தை அடைந்தேன். 



கீழ் இருக்கும் குமிழை அழுத்தினால், மேலே இருக்கும் குழாயில் இருந்து வரும் நீரை, வாய் வழியாக குடிக்கும் படி வடிவமைக்கப் பட்டிருந்ததைக் கண்டு வியந்தேன். நாகரீகத்தின் சின்னமாக பலர் எண்ணும் இத்தகைய மாலில், நான் மறந்த நீர் பருகும் பழக்கத்தை என் மனதில் உதிக்கச் செய்தது மட்டும் இல்லாமல் என் தகாம் அடங்கும் வரை நீரும் வழங்கிய இந்த நவீன குழாய் ஒரு விந்தை தான்.
              
அருவருப்பு ஏற்படுத்திய தொகுப்பாளர்கள் 

கல்லூரியில் இருந்தே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை விட்டிருந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சில சமயம் சில நிகழ்சிகளை பார்க்க நேரிட்டுவிடும். அப்படி ஒரு சமயம் இந்தப் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தொலைகாட்சி சேனல்களை மாற்றிக் கொண்டே சென்றபொழுது ஒரு தனியார் இசை சேனலில் நான் கண்ட காட்சி என்னை  திடுக்கிடச் செய்தது.

திரை முன் இரு பெண்கள் நேயர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி அது. இசை சேனலில் எல்லா நிகழ்சிகளும் அதே தான் என்பது வேறு விஷயம்.

அன்று பண்டிகை என்பதால் நிகழ்சியை தொகுப்பும் அந்தப்  பெண்கள் சேலை அணிந்திருந்ததை எண்ணி மனம் முதலில் குளிர்ந்தாளும். சற்று நேரத்தில் அந்தக் குளிர்ச்சி என் மனதில் அருவருப்பாக மாறியது. அவர்கள் மேல் பாதி உடம்பில் சேலை-ரவிக்கையும், கீழ் பாதி உடலில் ஜீன்ஸ் பாண்டும் அணிந்திருந்த அந்தக் கர்ண கொடூரத்தை நான் ஏன் பார்த்துத் தொலைத்தேன்?           

மினிமெல்ட் ஐஸ் கிரீம் 

இம்மாத புத்தகக் கண்காட்சி சென்றிருந்த பொழுது, கோவை ஆவி வெளியே இருந்த ஐஸ் கிரீம் வண்டியைக் கண்டவுடன் விரைந்து சென்றவர், அது அமெரிக்காவில் 'future ice cream' என்று அவர் உண்டதாகவும் சுவைக்க நன்றாக இருக்கும் என்றும் பரிந்துரை செய்தார். வழக்கமான ஐஸ் கிரீம் போல் இல்லாமல், அவை ஜெவ்வரிசி போன்ற சிறிய வடிவத்தில் இருந்தன. நாவில் வைத்தவுடன் அந்த சிறிய பந்துகள் விரைந்து உருகி சுவை அரும்புகளுக்கு புத்துணர்ச்சி தந்தன.    


போக்குவரத்து நெரிசல் 

சம்பவம் 1
இம்மாதம் ஒரு நாள் என் splendour இல் தியாகராய நகர் சென்று திரும்புகையில், கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் வழக்கத்துக்கு மாறாக போக்குவரத்து நெரிசல் இருந்தது. இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத வகையில் சாலையை வாகனங்கள் மறைத்துக்கொண்டிருந்தன. சற்றும் நகர முடியாததால்,வண்டி என்ஜினை அணைத்து விட்டு,வழி கிடைக்க காத்திருந்தேன். 

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் வருவது இயல்பு தான், பெரும்பாலும் Pheonix  மாலில் இருந்து  வெளிவரும் வாகனங்களே இதற்குக் காரணம். எப்படி இருந்தாலும் இரு சக்கர வாகனம் செல்ல ஒரு நாளும் இது போல் கடினப் பட்டது கிடையாது, எப்படியாவது சந்துகளில் நுழைந்து செல்லும் வழகத்திற்கு மாறாக இன்ற இந்த கடின நெரிசலுக்கான காரணம் என் என்று என் மனம் சிந்தனை செய்தது. இருபது நிமிட நேரத்திற்கு பின் இரு பேருந்துகளுக்கு இடையில் தோன்றிய இடைவெளியில் என் வாகனத்தை செலுத்தி முந்தத் தொடங்கினேன், அதன் பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டி செல்ல இடம் கிடைத்து முன்னேறினேன்.              

நெரிசலை கடந்த பொழுது தான் அதன் காரணத்தை அறிய முடிந்தது. ஒரு இரங்கல் ஊர்வலம். ஆடம்பரமாக ஜோடிக்கப்பட்ட பாடை, பல நூறு வெடிகள் என சாலையில் ஒரே அமர்க்களம் தான். இறந்தவரை சந்தோஷமாக இடுகாடு கொண்டு செல்வது அவசியம் என்றாலும், இப்படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதை செய்வது நியாயமா?      

சம்பவம் 2
ஒரு வழியாக அந்த வெடிகளில் சிக்காமல் வேளச்சேரியை கடந்து, பள்ளிக்கரணை வழியாக தாம்பரம் நோக்கி செல்லத் தொடங்கினேன். பள்ளிக்கரணை எல்லை முடிந்து மேடவாக்கத்தை நெருங்க இருந்த இடத்திலல் மீண்டும் போக்குவரத்து தடைபட்டது.

முதல் சம்பவம் நடந்த சாலை எப்பொழுதும் பரபரப்பான சாலை , ஆனால் இந்த மேடவாக்கம் நோக்கி செல்லும் சாலையில் அவ்வளவு பரபரப்பு இருக்காது.போக்குவரத்து அதிகமானாலும் குறைவான வேகத்தில் வாகனங்கள் தடையின்றி செல்லும். அந்த நெரிசலில் வழி கண்டறிந்து முன்னேறி சென்ற பொழுது தான் காரணமும் இன்னதென்று புரிந்தது.

மின் விளக்குகள் ஜொலிக்கும் பல்லக்கின் பின்னால் நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். வேதங்களில் சொல்லப்படும் கடவுள் என்பவர் மக்களின் இன்னல்களை போக்கத்தான் வழி செய்வார் என்று தானே சொல்கிறது, ஆனால் இன்றோ கடவுள் பெயரால் ஏற்படும் இத்தகைய இன்னல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.   

http://vasagarkoodam.blogspot.com

அழியும்  பசுமை

அலுவலகம் சென்று வரும் தாம்பரம்-மேடவாக்கம் சாலை சென்னை மாநகரின் புறநகர் சாலை தானா என்று எனக்கு பலமுறை சந்தேகம் வந்ததுண்டு. காரணம்: இரு புறமும் வளர்ந்துள்ள புசுமையான மரங்கள் கதிரவன் சுட்டெரிக்கும் வேளையில் நிழலும்,சந்திரன் பிரகாசிக்கும் வேளையில் குளிர்ந்த காற்றும் வீசி சாலை பயணிகளுக்கு குதூகலத்தை தந்து வந்ததுதான். அந்த சாலையை தற்பொழுது நாலு வழிப் பாதையாக மாற்றும் வேலைகள் நடப்பதால், சாலையோரம் இருந்த அந்த மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன. இப்படியே சென்றால் நகர் புறங்களில் பசுமையை எங்குதான் காண்பது.    

கலங்கரை விளக்கம் 

என் கிராமத்தின் கடற்கரையின் அருகில் புதிதாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தில், பத்து ரூபாய் கட்டணத்துடன் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப் படுகின்றனர். சென்னை கலங்கரை விளக்கத்தின் அளவு உயரம் இல்லை என்றாலும் அதன் உச்சியில் நிற்கும் பொழுது, ஒரு புறம்: பறந்து விரிந்த வங்கக் கடலும், அதன் மேல் மீன் பிடிக் படகுகளும், மறுபுறம்: பசுமையான தென்னை மரங்களும் அவற்றில் இருந்து வீசும் காற்றும் அடங்கிய காட்சிகள் மனதைக் கொள்ளை கொண்டன.            


நாகரீக கொள்ளை

இப்பொழுது எல்லாம் இந்த மால்களுக்கு செல்ல சற்று பயமாகவே உள்ளது. என்னை கதிகலங்கச் செய்வது அங்கு வசூலிக்கப் படும் பார்க்கிங் கட்டணம் தான். இந்த பார்க்கிங் கட்டணங்களை குறித்து நான் எழுதிய முந்தைய பதிவான வசூல் மன்னர்களுடன் இப்பொழுது இணைய விரும்பும் புது உறுப்பினர் வேளச்சேரியில் தோன்றியுள்ள Phoenix மால். 

சீருந்துகளின் பார்க்கிங் கட்டணம்:
       


இரு சக்கர வாகனங்களின் பார்க்கிங் கட்டணம்: 



உங்களுடைய வாகனம் உள்ளே நுழையும் பொழுதே உங்களுக்கு ஒரு சீட்டில் நேரம் அச்சடித்து கொடுக்கப்படும். அதை வைத்துதான் உங்கள் உள்ளிருப்பு நேரம் கணக்கிடப்படும். ஒரு வேளை அந்த சீட்டை தொலைத்து விட்டால், சுளையாக 350 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். 
  
ஒரு கார் நிற்கும் இடத்தில ஆறு பைக்குகளை நிறுத்தலாமே. எல்லா இடங்களிலும் பைக் பார்க்கிங் கட்டணம் குறைவாக இருக்கும் பொழுது இங்கு மட்டும் கார் பார்க்கிங் கட்டணத்தை விட பைக் பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருப்பது  ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.   

Tuesday, December 31, 2013

தேன் மிட்டாய் - டிசம்பர் 2013

திருமண வரவேற்பு

சமீப காலமாக திருமண வரவேற்பு களுக்கு செல்லும் பொழுது ஒரு சோதனை/வேதனை தானாக வந்து சேர்ந்துக் கொள்கிறது.  நாட்டில் இருக்கும் எல்லா மதத் திருமணங்களிலும் இதே நிலை தான். மணப்பெண்ணும் மணப் பையனும் வரக் காத்திருக்கும் மக்கள், அவர்கள் மேடை ஏறியவுடன், வேகமாக மேடையை நோக்கிச் சென்று ஒரு பெரிய வரிசையை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்த வரிசையில் காத்திருந்து, மணமக்களுக்கு பரிசுகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பின் உணவருந்தச் செல்கின்றனர். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் வருபவர்கள் இந்த வரிசையில் நிற்காமல் நேராக மேடை ஏறும்போது சற்று ஆத்திரம் வரத்தான் செய்கிறது. 

குடிமகன் 

செந்தில் நகர் அருகே இருக்கும் நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, என் ஸ்பிளன்டரில் மெயின் ரோடை நோக்கி வந்து கொண்டிருந்தேன். திடீரென இருவர் சாலையில் தோன்ற, ஒரு கணம் தடுமாறி பின் வண்டியை வலதுபுறம் திருப்பி, வேகத்தடையில் தள்ளாடி நிறுத்தினேன். இருவரில் ஒருத்தான் '...தா என்ன பார்த்து வரமாட்டியா' என்று  சண்டைக்கு வந்தான்.அவன் பேசிய அந்த வார்த்தை என்னை கோபப்படுத்தியது, என் ரத்தம் கொதித்தது. என் ஹெல்மெட் கண்ணாடியை மேலே உயர்த்தி, முறைத்த படி அவனை நோக்கினேன், என் மூக்கில் இருந்த சளியையும் ஓரங்கட்டியது அவன் மேல் வீசிய சாராய வாசனை. 'யோவ். ரோட பார்த்து கிராஸ் பண்ணத் தெரியாதா' என்று நானும் சண்டைக்குத் தயார் என்று என் குரலை உயர்த்தினேன்.  ஐநூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் காவல் நிலையம், அவன் குடி போதை இவை இரண்டும் என் பக்கம் வலுவை சேர்க்க, அவனுடன் வந்த மற்றொருவன் 'யாருக்கும் எதுவும் ஆகல. நீங்க போங்க சார். வாடா " என்று அவனை இழுத்துக்கொண்டுச் சென்றான்.

நவீன சரஸ்வதி சபதம் 

பல நாட்களுக்கு பிறகு என் நண்பனை சந்திக்கச் சென்ற பொழுது, அவன் படம் பார்க்க போகலாம் என்று கட்டாயப்படுத்தினான். அதுவும் நவீன சரஸ்வதி சபதம் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். வலையில் ஏற்கனவே அந்தப் படத்தின் விமர்சனத்தை படித்திருந்தபடியால் கெஞ்சினேன் கதறினேன், வேண்டாம் என்று. இருந்தும் அவன் கேட்பதாய் இல்லை. பெரம்பூரில் ஸ்பெக்ட்ரம் மாலில் இருக்கும் சத்யமின் S2 திரையரங்கில் நவீன சரஸ்வதி சபதம் காணச் சென்றாம். படம் துவங்கி பத்து நிமிடத்திற்கு மேலாகவே, டிக்கெட் கவுன்டரில் இருக்கும் பெண் டிக்கெட் கொடுக்க தயங்கினாலும், என் நண்பன் விடவில்லை. உள்ளே சென்றால் மொத்த இருக்கைகளும் காலியாக இருந்தன. சென்னையில் இப்படி காலியாக ஒரு திரையரங்கில் படம் பார்த்ததே இல்லை. சுமாரான படமானாலும், தனியாக பெரிய திரையில் படம் பார்த்த அனுபவம் சுகம் தான். 

தமிழ் ஆட்சி மொழி 

வெறும் 54லட்சம் மக்கள் தொகையைக்கொண்ட சிறு தீவான சிங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதைக்கண்டு பெருமை கொள்வதா, இல்லைத் தாய் தமிழ் நாட்டில் தமிழுக்கு உரிய மரியாதை இல்லாததைக்கண்டு வருந்த்வதா என்று எனக்கு தெரியவில்லை.   

கைபேசி 

என் கிராமத்தில் இருந்து ECR வழியாக அரசுப் பேருந்தில் சென்னை வந்த பொழுது ஓட்டுனருக்கு பின் இருக்கையே எனக்கு கிடைத்தது. கோவலம் தாண்டி மாமல்லபுரம் நோக்கி வண்டி சென்றுகொண்டிருந்த பொழுது, ஓட்டுனர் ஏதோ பேசத் தொடங்க நான் அவரை நோக்க, அவர் ஒரு கையில் கைபேசி இருந்தது என்னுள் திகிலை கிளப்பியது. பேருந்தில் இருக்கும் அறுவது அப்பாவி மக்களின் உயிரை பணய வைத்து பேசும் அந்த உரையாடல் அவசியம்தானா?      
           
சீட் பெல்ட் 

சோழிங்கநல்லூரில் இறங்கி, C51 வரக் காத்திருந்தேன். ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவு சாலையைத் தடுத்து விட்டு, அனைத்து சீருந்துகளையும் போக்குவரத்துக் காவல்துறை 'சீட் பெல்டுக்காக' சோதனை செய்துகொண்டிருந்தது. பல வாகனங்கள் ஓரங்கட்ட்டப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. நானும் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது ஒரு விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தேன். எந்தெந்த சீருந்துகளை காவல் துறை நிறுத்தப் போகிறது என்று என்னை வாகனங்கள் கடக்கும் பொழுதே கணிதுக்கொண்டிருந்தேன். என் கணிப்பும் சரியாகவே இருந்தது. எதிரில் ஒரு வெள்ளை நிற இன்னோவா, ஏதோ ஒரு கட்சிக் கொடி பறக்க வந்தது. ஓட்டுனர் சீட் பெல்ட் போடவில்லை. அந்த வண்டியை போக்குவரத்துக் காவல் துறை நிறுத்துமா ?          

அன்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Saturday, November 30, 2013

தேன் மிட்டாய் - நவம்பர் 2013

திருநங்கை ?

அழகான ஒரு மாலைப் பொழுதில், பௌர்ணமி நிலவை வங்கக் கரையின் அலைகள் வீச பெசென்ட் நகர் கடற்கரையில், மணலில் வானைப் பார்த்தவாறு  படுத்துக் கொண்டு, இயற்கையை  ரசித்து கொண்டிருந்த சமயம், என் கால் அருகில் யாரோ வந்து நிற்பது போல் உணர எழுந்து அமர்ந்தேன். என் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த திருநங்கை என்னிடம் இரவல் கேட்பது போல் கையை நீட்டினாள். யாருக்கும் பிட்சை கொடுப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு விஷயம், இருப்பினும் இந்த திருநங்கைகள் தொட்டு விட்டு ஏற்படும் அருவெறுப்பை தவிர்க்க அவர்களுக்கு மட்டும் உடனே காசு கொடுத்து விடுவேன்.

ரயில் பயணங்கள், சுங்கச் சாவடிகள் என பல இடங்களில் இவர்களால் இம்மாதிரி வழிப்பறி அனுபவித்து உண்டு. கடற்கரையில் இதுவே முதல் முறை. என் பணப்பையை திறந்து ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினேன்.

'என்ன தம்பி நாலு பேரா வந்துட்டு பத்து ரூபா தர, ஆளுக்கு பத்து சேர்த்து நாற்பது ரூபாயா கொடு' என்றாள் அந்த பெண் உடையில் இருந்த திருநங்கை.

என்னுடன் வந்த மூவர் கடற்கரையில் நீரில் சற்று தள்ளி இருக்க, முப்பது  நிமிடங்களுக்கு மேலாக நான் தனியாகத் தான் இருக்கின்றேன், எப்படி இவள் நாங்கள் ஒன்றாக வந்ததை கவனித்தாள் என்ற ஆச்சரியம் ஒரு புறம் இருக்க, 'கடற்கரைக்கு வர இவளுக்கு இது என்ன நுழைவுக் கட்டணமா' என்று என் மனதில் கோவம் எழ 'சில்லறை இல்லை இதை வாங்கிக்கொண்டு போங்க' என்று மீண்டும் நீட்டினேன்.  

அவள் ஏற்க மறுத்து, நாற்பது ரூபாய் தான் வாங்குவேன் என்று பிடிவாதத்துடன் நின்றாள். ஐந்து நிமிட வாக்கு வாதத்திற்கு பிறகு அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் அந்த பத்து ரூபாய் தாளை மீண்டும் என் பணப்பையினுள் சொருகி விடலாம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றிய சமயம் அந்த பத்து ரூபாயை என்னிடம் வாங்கிக்கொண்டு 'நீ நாசமா போய்டுவ' என்ற சபித்து விட்டு சென்றாள்.

என் உதடுகள் இங்கு எழுத முடியாத ஒரு வார்த்தையை முணுமுணுத்ததை அவள் கவனிக்காமல் அடுத்து அருகில் இருந்த காதல் ஜோடியை ஏமாற்றி பணம் பிடுங்க சென்று விட்டாள்.

எதற்காக தோன்றியது இந்தப் பழக்கம். இந்தத் திருநங்கைகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் நம்மை வாழ்த்தினால் நாம் நன்றாக இருப்போம் என்ற வதந்தியை எந்த முட்டாள் பரப்பியது என்ற கோபம் என்னுள் கொழுந்து விட்டு எரிந்தது அந்த நிமிடம். அவர்களால் உழைக்க முடியாதா? ஏன் அரசாங்கம் எவ்வளவு சலுகைகளை கொட்டி கொடுக்கிறது. இப்படி சிலர் செய்யும் அடாவடித்தனத்தால்   அந்த பிரிவினை இந்திய மக்கள் சமூகத்தில்  சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.


தீபாவளித் திருநாள் 

தீபாவளிக்கு முன் தினம் அலுவலகத்தின் உள்ளிருக்கும் சரவணபவனில் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனை நடை பெற்றது. பல நாள் ஒருவரும் தீண்டாமல் எலிகளுக்கு இறையான இனிப்புகள் கூட அன்று மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்தன. 12 மணிக்கு தொடங்கிய விற்பனை ஒரு மணிக்கு முடிந்து விட்ட ஏமாற்றத்தில், அடுத்த நான்கு மணி விற்பனையிலாவது வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடம் இருந்தேன். சூப்பர் ஸ்டார் படத்திற்கு முதல் நாள் டிக்கெட் வாங்க நடப்பது போன்ற அடிதடி நடந்தது, நான்கு மணி விற்பனையில். வியாபாரம் பல மடங்கு லாபம் அன்று. இன்று வாங்க ஆள் இல்லாமல் அந்த இனிப்புகளில் ஈ மொய்த்துக்கொண்டிருந்ததைக் கண்ட பொழுது, என்னுள் எழுந்த கேள்வி  'தீபாவளி அன்று உண்டால் தான் அந்தத் தித்திப்புக்கள் இனிக்குமா என்ன?'    

ஆண்டிராய்டும் கர்ப்பமும்

ஒரு வழியாக நானும் இம்மாதம்  ஆண்டிராய்ட் கைபேசிக்கு மாறிவிட்டேன். கைபேசி கையில் வந்தவுடன் சில appகளை தரவிறக்கிக் கொண்டிருந்தேன். யாருக்கும் கைபேசி வாங்கியதை சொல்லவில்லை. அந்த சில appகளின் உள் நுழைந்துடனே அனைவருக்கும் தெரிந்துவிட்டது நான் ஆண்டிராய்ட் கைபேசி பயன்படுத்துவது. அந்த நிமிடம் தான் ஆண்டிராய்டையும் கர்ப்பத்தையும் மறைக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தேன்.

நாட்டின் நிலைமை 

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் நான் எடுத்த புகைப்படம்.

பூட்டப்பட்ட குப்பைத் தொட்டி !


ஹைதராபாத் 

ஹைதராபாத் சென்றிருந்த பொழுது அங்கு சில விசயங்கள் புதியதாக இருந்தது. எந்தப் பொது இடத்திற்க்குச் சென்றாலும், சத்யம் திரையரங்கில் செய்வது போல், உடல் முழுவதும் தடவி சோதித்த பின்னே உள் அனுமதிக்கின்றனர். சமீபத்தில் நடந்த சில குண்டு விபத்துக்களே இந்த சோதனைகளுக்கு கராணம் என்று உள்ளூர் நண்பர் கூற  அறிந்து கொண்டேன். ஒரு உணவகத்தின் உள்ளே செல்லவும் சோதனை செய்த பொழுதுதான், தமிழகத்தில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர முடிந்தது.    

இரண்டாம் உலகம்

புரியாத மொழியில் படம் எடுக்கும் ஒருவன் எதையோ காட்டி உலகம் என்றும், யாரையோ ஒருவரை காட்டி கடவுள் என்றும் அவன் கற்பனையில் சொன்னால், அதை கை தட்டி ரசித்து ஏற்றுக்கொள்ளும் உலகம்; தமிழ் மொழியில் படம் எடுக்கும் ஒருவன் தன் கற்பனை உலகத்தை உருவாக்கினால் அதில் பல ஓட்டைகள் கண்டுபிடித்து கேள்விகள் கேட்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை?. எனக்கு இரண்டாம் உலகம் பிடிக்கத்தான் செய்தது.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள் 

அலுவல்கள் சற்று அதிகரித்து விட்டதால், மற்ற வலைத் தளங்களுக்கு வந்து கருதுரையிட முடிவதில்லை, அங்கொன்று இங்கொன்றுமாக படிப்பது மட்டும் உண்டு. கூடிய விரைவில் எல்லா வலைப்பூக்களுக்கும் நான் வருகை தரும் வரை மன்னித்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

அக்காமார்களே அண்ணன்மார்களே,மற்றவர்கள் வலைப்பூக்களை கைபேசியயில் படிக்க ஏதுவாக ஆண்டிராய்ட் app ஏதேனும் உள்ளதா ?

Thursday, October 31, 2013

தேன் மிட்டாய் - அக்டோபர் 2013

T151உம் நானும் 

இம்மாதம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது, மூன்று நாள் hat-trick சாதனையாக T151 கிடைத்ததைவிட, மகிழ்ச்சிக்குரிய விசயம் அந்தப் பேருந்தில் இடம் கிடைத்தது தான். அப்படி நான் பேருந்தில் அமர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு லாவகரமான சிந்தனை தோன்றியது. சென்னை மாநகரப் பேருந்துகளில் வலது புறம் ஆண்கள், இடது புறம் மற்றும் இறுதியாக இருக்கும் ஒரு வரிசை பெண்களுக்கு ஒதுக்கப் பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால், குழாய் அடி சண்டை போட ஒரு கூட்டமே உள்ளது, பல முறை நானும் பாதிக்கப் பட்டுள்ளேன். நான் இருந்த பேருந்தில் வலது புறம் ஒன்பது இருக்கைகள் (கை விட்டு எண்ணினேன்) பெண்களால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது. பேருந்து முழுக்க ஆண்கள் கூட்டம் நின்று கொண்டிருந்த பொழுதும் ஒருவர் கூட அவர்களை எழுப்ப வில்லை. ஆண்கள் எவளோ சாதுக்கள் !    

T251 - புதிதாய் 

இது என் அலுவலகத்தில் இருந்து என் வீடு வரை செல்லும் புதிய நேர் பேருந்து. இந்த பேருந்து OMRஇல் செல்லாமல், ஊர் வழியே சித்தாலப்பாக்கம், மாடம்பக்கம் வழியாக தாம்பரம் அடைகிறது.ஒன்பது ரூபாய் பயணச்சீட்டில்,சென்னையின் புறநகரில் ஒழிந்து இருக்கும் கிராமங்களைக் காணும் காட்சி இந்த வழியில் செல்லும் பொழுது கிடைத்தது.     

சாவித்திரி படும் பாடு 

என் தோழி ஒருவர் முகநூலில் பகிர்ந்த ஸ்டேடஸ்:

Men identify only two types of women : the Satya savitri and the Slutty savitri ....But what if u were neither? ?? 
Live happily unnoticed 

Toni & Guy 

முன் ஒரு காலத்தில் முடி திருத்தும் தொழிலில் இருப்பவர்கள் தாழ்வாகவே நடத்தப் பட்டனர். புது யுக மாடர்ன் சலூன்களால் இன்றைய நிலையே வேறு. இங்கிலாந்தின் பிரபல முடி திருத்தும் நிலையமான Toni & Guy சென்னையிலும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு முடி திருத்துவதற்கான விலை, நமது முடியை வெட்டுபவரின் அனுபவத்தை பொருத்து உயரும் ஆச்சரியத்தைக் கண்டேன். ஆண்களுக்கு 400 ரூபாய் முடிதிருத்த கட்டணம் என்று Stylistஇல் துவங்கி Senior Stylist, Style Director, Manager என படிப் படியாக உயர்ந்து ஆயிரம் ரூபாயை தொட்டுவிடுகிறது.

IIT - Chennai

சென்னை வந்திருந்த ஆவியின் உதவியால் முதல் முறை IITயினுள் செல்ல முடிந்தது. சென்னையின் மையப் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டுக்கு உள்ளே ஒரு கல்லூரியும் பல ஆயிரம் மக்களும் வாழ்வது கண்டேன். கல்கியின் கதைகளில் மான்கள் மனிதர்களுடன் உலவுவது போல், இங்கு மான்கள் மிகவும் இயல்பாக வீதிகளில் துள்ளி விளையாடுகின்றன.


கைபேசி 

திடீரென்று கைபேசி வேலை செய்யாமல் போன பொழுது, உலகமே இருண்டது போல் ஆனது. அந்தக் கணம் தான் நாம் கைபேசியிடம் எவ்வளவு அடிமைத்தனமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் கைபேசி இல்லாத பொழுது, சொன்ன இடத்தில சொல்லிய நேரத்தில் நண்பர்களை சந்திப்பது நினைவுக்கு வந்தது, கைபேசி வந்த பின் தான் மனிதர்கள் அசாதாரணமாக நேரம் தவற தொடங்கினரோ என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது.

நான் ரசித்த வசனம் - மூடர் கூடம் 

நூறு மாம்பழம் இருக்கற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேர்பசியோட நின்னாங்கன்னா, அங்க ஆளுக்கு ஒரு பழம் சேரனும்கிறது இயற்கையோட தர்மம்.

ஆனா அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும் பலமும் அதிகமா இருக்கற அஞ்சு பேர், மத்தவங்களவிட ஆளுக்கு அதிகமா அஞ்சு பழம் எடுத்துட்டாங்கன்னா

இருபது பேர் ஒரு பழம் கூட கிடைக்காம பசியில வாடி   வேற வழியே இல்லாம அதிகமா பழம் வச்சிருக்க  அஞ்சு பேர் கிட்ட  பிட்சை கேட்டு நிப்பாங்க.

இப்ப அந்த அதிகமா பழம் வச்சிருக்கவன், இந்த ஒன்னுமே இல்லாதவங்கள வச்சி அஞ்சி மாமரம் நட்டு, ஒவ்வொரு மரத்துல இருந்தும் நூறு நூறு பழங்கல பறிக்க வச்சி

அவங்களுக்கு சம்பளங்கர பேர்ல அவங்க எடுத்து கொடுத்த நூறு பழத்துல இருந்து ஒரு பழத்தை கூலியா எடுத்து கொடுப்பான்.

இதுதான் இங்க நடக்குறது. ஒருத்தன் கிட்ட இருந்து எடுக்கறது மட்டும் திருட்டு தனம் இல்ல, ஒருத்தன எடுக்க விடாம பண்றதும் திருட்டுத்தனம்.      

காணொளி 
சமீபத்தில் நான் கண்டு ரசித்த இரண்டு குறும்படங்களின் இணைப்பை இங்கு பகிர்கிறேன். 


புதியவன் - comedy drama

சல்வார் கமீஸ் vs சுடிதார் 

பல ஆண்டுகளாக சல்வார் கமீஸ் மற்றும் சுடிதார் இரண்டுமே ஒன்று என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில் தான் தெளிவு கிடைத்தது. என்னைப் போல் அனைவருக்கும் தெளிவு கிடைக்க அந்தத் தகவல்களை இங்கு பகிர்கிறேன்.


சல்வார் கமீஸ்: துப்பட்டா, கமீஸ்(மேலாடை), லூசான காற்சட்டை (சல்வார்) இந்த கலவை தான் சல்வார் கமீஸ்.        

சுடிதார்: இறுக்கமான காற்சட்டையுடன் அணிவது தான் சுடிதார். நீளமான காற்சட்டை இறுதியில் சுறுண்டு, சுடி(ஹிந்தி - வளையல்) போல் இருப்பதால் இந்தப் பெயராம்.

தெளிவு வேண்டும் 

ஔவையார் சொன்னார்: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கண்ணதாசன் கேட்கிறார்: என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் ?

யாரைத்தான் பின் பற்றுவது ? குழப்புறாங்க!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

உங்களுக்கு யாரேனும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பொழுது 'Thank you. wish you the same' என்று மறுமொழி சொல்லியதுண்டா?. இந்த 29ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று இருவரிடம் நான் அப்படி மறுமொழி சொல்லியது என் வாழ்வில் ஒரு இனிமையான அனுபவம்.