Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Friday, July 19, 2013

ஊர் சுற்றல் - திருநெல்வேலி ராமில் சிங்கம் 2

ஞாயிறு மாலை தனுஷ்கோடியில் இருந்து மதுரை வழியாக, ஆனந்தக் குளியலை முடித்து விட்டு நெல்லை திரும்பிய நாங்கள், வண்ணாரப் பேட்டையில் இறங்கி, நெல்லையின் தெருக்களை உலா வரத் தொடங்கினோம். உலாவில் புறாக்கள் கண்ணில் சிக்கா விட்டாலும் நல்ல சாலையோர உணவுகள் சிக்கின. 

வ.உ.சி மைதானம் அருகில் இருக்கும் கையேந்தி பவன்களை நோக்கி படையெடுத்தோம். முதலில் சுவைத்தது பிரட் ப்ரைதான், ஒரு பிரட்டை முக்கோண வடிவில் பாதியாக வெட்டி, அதன் நடுவில் உருளை கிழங்கு கலந்த மசாலாவை வைத்து பொறித்திருந்தனர். சூடாக சுவைக்க அருமையாக இருந்தது. முட்டை காளான் என்று ஒரு ஐடெம் இருப்பதாக கூறினர், நான் இதுவரை சென்னையில் வெறும் காளான் மட்டும் தான் சுவைத்ததுண்டு, இதையும் சுவைக்கலாம் என்று ஆர்டர் கொடுத்தேன். என் நண்பன் முட்டை பூரி ஆர்டர் செய்தான். இரண்டிலும் உப்பும் மசாலாவும் சற்று குறைவுதான் என்றாலும் பசியின் விளைவால் அந்த பிளேட் சில நொடிகளில் மாயமானது. 

என் நண்பன் சூப் குடித்தே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று, ஆட்டுக்கால் சூப் உடன் ஈரலையும் சேர்த்து உள் இறக்கினான். மற்ற நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குல்பி வாங்கி சூட்டை தனித்து, பன்னீர் போஞ்ச் தேடி பாளையங்கோட்டை நோக்கி சென்றோம். நெல்லை ஜங்ஷனில் இருந்து பாளையங்கோட்டை ஐந்து நிமிட பேருந்து பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு நெல்லை சென்றிருந்த பொழுது தான் முதல் முறை சுவைத்தது இந்த பன்னீர் போஞ்ச். Love at first sip! எளிதாக சொல்லவேண்டுமானால் நீருக்கு பதில் பன்னீர் சேர்த்து உருவாகும் எலுமிச்சை ஜூஸ். ஒன்றுக்கு இரண்டாக நான் அருந்தியதை வட நாட்டு நண்பர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். பாளை மார்க்கெட் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரூட்ஸ் & ஜூஸ்' என்ற கடை தான் என் நெல்லை நண்பனும் நானும் உங்களுக்கு பரிந்துறைப்பது. 

பயணத்தை தொடங்கும் முன், நம் கோவை ஆவி, ஆவி பறக்க சிங்கம்-2 படத்துக்கு எழுதிய விமர்சனத்தைப் படித்தேன். ஆவியின் சிங்கம்-2 விமர்சனம். மனதில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே பயணத்தை தொடர்ந்தேன். என்னுடன் வந்த சென்னை நண்பனும் என் கருத்தை வழிமொழிய, என் நெல்லை நண்பன் மட்டும், வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தான். முதல் காரணம் அவனுக்கு படத்தின் கதை தெரிந்துவிட்டது, படத்தை திரையரங்கில் பார்க்க எதுவும் இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டிருந்தான். இரண்டாவது காரணம், பொதுவாக முப்பது ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் மூன்றாவது நாள் என்பதால் 150, 200 என விற்கப்படும் அபாயம். 
              
எங்கள் பிடிவாதத்தால் அவனை வலுக் கட்டாயமாக கடத்திக் கொண்டு சிங்கம்-2 காண ராம் திரையரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஆட்டோவில் செல்லாம் என்று முடிவு எடுத்து, ஒரு ஆட்டோவை மடக்கினோம். என் நெல்லை நண்பனின் வீடு இருப்பது, பாளை- தெற்கு பஜார்- சிவன் கோவில் தெரு, அங்கிருந்து ராம் திரையரங்கம் சுமார் எட்டு கிலோ மீட்டருக்கு கூடுதலான தொலைவிலேயே தான் இருக்கும்.நாங்கள் மடக்கிய ஆட்டோக்காரன் எங்களிடம் கேட்டது நூறு ரூபாய் மட்டும். சின்ன ஆட்டோ கூட இல்லை, பெரிய மஞ்சள் நிற  ஷேர் ஆட்டோ. நெல்லை ஆட்டோ ஓட்டுனர்களே நீங்கள் சென்னை ஆட்டோ அண்ணாத்தைங்களிடம் டியுஷன் படிக்க வேண்டும். 

முப்பது ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய் கொடுத்து வாங்க வைத்த எங்களைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்திய நண்பனின் வயிற்றை நிரப்ப, உணவகம் தேடி ஜங்ஷன் நோக்கி நடந்தோம். நெல்லையில் இருக்கும் பல 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்களில் முதலில் வந்த ஒன்றில் உணவு அருந்திவிட்டு, சிங்கத்தை காண திரையரங்கம் திரும்பினோம்.

தமிழ் தெரிந்து, எந்த வித கொடுமையையும் தாங்கும் உறுதி கொண்ட நாங்கள் நால்வர் மட்டும் ராம் திரையரங்கத்தினுள் மற்ற நெல்லை வாசிகளுடன் நுழைய,உள்ளிருந்த கொசுக்கள் எங்கள் காதுகளில் ஒய்யாரமிட்டு வரவேற்றன. முதல் முறையாக ஒரு திரையரங்கினுள் லேசெர் ஷோ கண்டது இங்குதான். விளம்பரங்கள் தொடங்கும் முன் ஐந்து நிமிட லேசெர் ஷோவை கொசுக்களின் கடியுடன் ரசித்தோம். பின் சிங்கம் தொடங்க, திரையில் சூர்யா தோன்றும் காட்சியில், ஒரு பக்கம் விசில் பறந்தாலும், மறு புறம் திரையின் அருகில் சுவரில் இரு புறங்களிலும் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்கள், டிஸ்கோ போல் மின்னின.

இந்த வண்ண மின்னல்கள், படத்தில் குத்து பாடல்கள் வரும் போதும், பஞ்ச் வசனங்கள் வரும் போதும், திரை அருகில் சுவரில் தோன்றி மறைந்து எங்களை ஆச்சரியப் படுத்தியது. படத்தில் இருக்கும் ஒரு சில கவர்ச்சிகளை எனது முன் சீட்டில் இருந்த மாமிச மலை மறைக்க, அவனில் இருந்து வலது புறம் நான்காவது சீட்டில் இருந்த ஒருவர் விட்ட குறட்டை சூர்யாவின் வசனங்களுடன் போட்டியிட்டது. என்னுடன் வந்த ஒரு நண்பன் படம் முடிந்தவுடன், 'சூர்யா ஏன் இவன அர்ரெஸ்ட் பண்ணான்?' என்று கேட்ட பொழுது தான் தெரிந்தது நம்ம பையன் குறட்டை இன்றி தூங்கும் திறமைசாலி என்று.

இரண்டு நாட்கள் தொடர் பயணங்களுக்கு பின், திங்கட் கிழமை மதியம் ஒரு மணிக்கு சூரியனுக்கு குட் மார்னிங் சொல்லி விழித்தோம். நேராக பாளை மார்கெடில் இருக்கம் ஒரிஜினல் ருசிக்கு சென்று, கோழி, ஆடு, காடை முதலிய ஜீவன்களுக்கு சாப விமோட்சனம் கொடுத்து விட்டு, பயணத்தின் முக்கிய காரணமான அல்வாவை தேடி சென்றோம். நெல்லை எக்ஸ்பிரஸ்சை பிடிக்க வேண்டும் என்பதால், இருட்டு கடை செல்ல முடியவில்லை, ஜங்ஷன் அருகில் இருக்கும் பல 'சாந்தி ஸ்வீட்ஸ்' கடைகளில் நெல்லை நண்பன் உதவியுடன் ஒரிஜினலை கண்டு பிடித்து, ஐந்து கிலோ வாங்கி, எதிரில் இருந்த லக்ஷ்மி ஸ்வீட்ஸில் பால்கோவா வாங்கிக் கொண்டோம்.

வழக்கம் போல் பெயர் பட்டியல் தந்த ஏமாற்றத்துடன், சிங்கார சென்னை நோக்கி விரைந்த நெல்லை எக்ஸ்பிரஸில் அல்வாவையும்,ரயிலில் வாங்கிய கோவில்பட்டி கடலை மிட்டாயையும் ருசித்துக் கொண்டே சென்னை திரும்பினோம். அடுத்த பதிவில் பார்டர் பரோட்டவுடன் சேர்ந்து ருசி பரோட்டாவும் உங்கள் நாவிற்கு விருந்தாகும் என்பதை அன்புடன் கூறி விடைபெறுகிறேன்.

*********************************************************************************************************
பதிவர் திருவிழா தேதி மற்றும் இடம் அறிவிப்பு : இங்கு சொடுக்கவும்
*********************************************************************************************************

Wednesday, July 17, 2013

ஊர்சுற்றல் - மெட்ராஸ் டு தனுஷ்கோடி via குற்றாலம்.

இதுவரை அரை ட்ரௌசருடன் பயணம் செய்த நான் (டெல்லி வரை நம்ம ட்ரௌசர் போய் இருக்கு), முதல் முறை முழு கால் சட்டையுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் என் பயணத்தை தொடங்கினேன். எப்பொழுதும் தனிமையில் பயணிக்கும் எனக்கு துணை வரும் சுஜாதாவை இம்முறை நிராகரித்தேன், என்னுடன் என் நண்பன் வருவதால், அவன் எழும்பூரில் ரயில் ஏறி தன்னிடம் அடையாள அட்டை இல்லாததால், என் வருகைக்காக TTEயுடன் ஆவலாக காத்திருந்தான். அந்த ரணகளத்தில் கூட, பெயர் பட்டியலை 'F' 20 டு 25 க்காக ஆராய்ந்த எனக்கு ஏமாற்றம் தான். அது எப்படி சார் படத்துல மட்டும் நல்ல அழகான அக்காங்க எல்லாம் ட்ரைன்ல வர்றாங்க, நிஜத்துல வெறும் ஆன்ட்டிக்களும் பாட்டிக்களும் தான் வராங்க.

தனுஷ்கோடி வங்காள வரிகுடா
பயணக் குழு
காலை ஒன்பது மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சந்திப்பில் முதல் பிளாட்பாரத்தில் தரை தட்டியது. நண்பன் வீடு சென்றவுடன் தான் தெரிந்தது நான் அதை மறந்தது. நீங்க எல்லா பயணத்திலும் எதையாவது மறக்கலாம், ஆனால் நான் என்னுடைய எல்லா பயணத்திலும் ஒன்றை மட்டும் தான் மறப்பது வழக்கம். Tooth brush! அங்கிருந்து கிளம்பி நெல்லை ஜங்ஷன் அருகில் இருக்கும் பாரதி பவனில் சிற்றுண்டி முடித்து விட்டு, மணி முத்தாறு அருவி நோக்கி பயணித்தோம். சென்ற ஆண்டு இதே நேரத்தில் மணி முத்தாறு சென்றிருந்த சமயம் எங்க வீட்டு ஷவரில் வருவதை விட குறைவான நீர் அருவியில் வழிந்தது பெரும் ஏமாற்றம், பின் வண்டியை பான தீர்த்த அருவி நோக்கி செலுத்தினோம்.இம்முறை மணி முத்தாறு ஏமாற்றினால் செல்ல பான தீர்த்தமும் இல்லை என்ற அச்சத்துடன் தான் சென்றோம். புலிகளை மனிதர்களிடம் இருந்து காக்க அது மக்கள் பார்வையில் இருந்து மூடப்பட்டதாக கேள்விப்பட்டேன்.


மணி முத்தாறு அருவி - சென்ற ஆண்டு
ஓட்டுனர் அருகில் நான் தான் இருந்தேன், திடீரென்று 'தண்ணி வச்சிருந்தா குடிசிடுங்க தம்பி' ஏன் இவர் இப்படி சொன்னார் என்று யோசிப்பதற்குள் 'செக் போஸ்ட்ல பாட்டில் பார்த்தா வாங்கிட்டு தர மாட்டாங்க' என்றார். நாங்கள் எல்லோரும் அக்மார்க் தங்க கம்பிகள்..சி.. தம்பிகள் என்று புரியவைத்துவிட்டேன். செக் போஸ்டில் எங்கள் பைகளை ஆட்டி ஆட்டி சோதித்த காவலரின் திறமையை கண்டு வியந்தேன்.

மணி முத்தாறு அருவி - இம்முறை
மணி முத்தாறு இம்முறை ஏமாற்ற வில்லை, அருவியில் நீர் நன்றாக கொட்டியது. நாகலாபுரம், கோனே என்று தனிமையில் அருவிகளை ரசித்து குளித்த எனக்கு அந்த கூட்டத்தில் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியாதது வருத்தம்.

அங்கிருந்து குற்றாலம் நோக்கி புறப்பட்டோம், பழைய குற்றாலம் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அங்கு சென்றோம், நீர் பெருக்கெடுத்து ஓட, மக்கள் கூட்டமும் அலை மோத, குளிக்க லைன் நிற்பதைக் கண்டு நொந்து, போட்டோவாச்சு எடுக்கலாம் என்று சென்றால், காவல் துறை விரட்டியது.

பழைய குற்றாலம்
எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு லைனில் நின்று குளிக்க சென்ற என் நண்பன், அவன் அருகில் இருந்த குடிமகன் கத்த, காவல் துறை தடியால் இவனை அடிக்க ஓடி வந்துவிட்டான். இப்படி வரிசையில் நின்று, சில நிமிடங்கள் மட்டுமே குளிக்க முடிவதற்கு என்ன காரணம், மக்கள் தொகை பெருக்கமா இல்லை வெளி ஊர்களில் இருந்து குற்றாலத்தின் மேல் என்னைப் போல் மோகம் கொண்டு வரும் மக்களா?

பழைய குற்றாலம்
அங்கிருந்து ஐந்தருவி சென்றோம் , மாலை ஆறு மணி தாண்டியதால் கூட்டம் குறைவு, லைன் இல்லை என்று நிம்மதியாக குளிக்கச் சென்றேன். என்ன ஒரு அடி! அடிச்சது போலீஸ் இல்லைங்க, அந்த அருவி தான், குளிர்ந்த தூய்மையான நீர், 'குளிச்சா குற்றாலம் ' என்று என் நண்பன் பாட்டு பாட, எங்கள் உள்ளாச குளியல் இனிதே அரங்கேறியது.

அங்கிருந்து புறப்பட்டு, அடம் பிடித்து பார்டர் பரோட்டா சாப்பிட செங்கோட்டை சென்றோம். சாப்பாடு பற்றிய கருத்துகள் தனி பதிவாக வரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின் நெல்லை திரும்பி, பல குழப்பங்களுக்கு பின் ராமேஸ்வரம் நோக்கி பயணிக்க தொடங்கினோம். மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் பேருந்து பிடிப்பதுதான் திட்டம். மூவர் அமரும் சீட்டில், கால் நீட்டி தூங்கி, மூன்று மணி நேரத்தில் மதுரை வந்தோம். மதுரையை ஏன் தூங்காநகரம் என்று சொல்லுகிறர்கள் என்று அன்றுதான் உணர்ந்தேன், நடு ராத்திரி 2:30 மணி, மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சுறுசுறுப்பாக இருந்த பெரியார் பேருந்து நிலையம். கூட்டத்தை கண்டு உடன் வந்த வடக்கு நண்பர்கள் அஞ்ச, வேறு வழி இன்றி டாக்ஸி பிடித்து ராமேஸ்வரம் சென்றோம். அம்மாவசை என்பதால், கோவிலில் கூட்டம் அதிகம் என்று ஓட்டுனர் சொல்ல, நேராக தனுஷ்கோடி தேடி சென்றோம்.

பாம்பன் பாலம்
சென்ற ஆண்டு சீனு எழுதிய பதிவுகளை படித்து எழுந்த ஆர்வம், தனுஷ்கோடி பற்றி அவர் எழுதியதை படியுங்களேன் நாடோடி எக்ஸ்பிரஸ் - தனுஷ்கோடி .அழகாக எழுதி இருப்பார், அதை விட நன்றாக தனுஷ்கோடி பற்றி எழுத முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.



அந்த வண்டியை மறைத்த நாங்கள்
ஒரு மீன் பாடி வண்டியை மாற்றி அமைத்த லாரி போன்ற வாகனத்தில், இருபத்து ஐந்து பேர் தொற்றிக்கொள்ள, நாங்கள் பின்னால் அமர்ந்து, மணலிலும் கடல் நீரிலும் மாறி மாறி சென்ற பயண அனுபவத்தை என்றும் மறக்க முடியாது. ஒரு ரோலர் கோஸ்டரில் கூட அத்தனை த்ரில் கண்டதில்லை. அந்த வண்டி பாதி வழியில் நிற்க, அந்த நேரத்தில் ஒரு நாடகம் அரங்கேற்றி(படங்கள் கீழே), பின் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்து, ஒரே குஷி தாங்க.
பழுதாகி நின்ற வண்டி
தீவிரவாதிகளாக மாறிய எம் நண்பர்கள்
கடல் உப்பு காற்றும், வெய்யிலும் உடலை அறிக்க, குளிக்க நல்ல நீர் தேடி அலைந்தோம். முன்னாள் குற்றாலத்தில் உள்ளாசக் குளியல் நினைவிற்கு வர, இன்றோ நல்ல தண்ணீர் கிடைக்க தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் வரை வந்துவிட்டோம். எங்கள் விடா முயற்சியால் ஒரு கண்மாயை கண்டு பிடித்தோம், அங்கு தான் சார் தனிமை கிட்டியது. புதுப்பிக்க பட்டு, ஆற்று மணல் மெத்து மெத்து என இருக்க, நீர் சில்லென்று இருக்க, ஒரு ஆனந்த குளியல் போட்டதில் ஆனந்தம், பரமானந்தம், பேரானந்தம். அட, ஆனந்த குளியல் தெரியாதா உங்களுக்கு?

ஆனந்தக் குளியல் ! இங்குதான்.
மீண்டும் மதுரை வழியே நெல்லை திரும்பினோம். நெல்லையை அடுத்த பதிவில் சுற்றுவோம். டாட்டா...

பின் குறிப்பு:
நான் எழுதிய சென்ற பதிவு dash boardஇல் தெரியாத காரணத்தால் அதன் இணைப்பை இங்கே பகிர்கிறேன்.காதலிக்கு எழுத நினைத்த காதல்கடிதம்