ஞாயிறு மாலை தனுஷ்கோடியில் இருந்து மதுரை வழியாக, ஆனந்தக் குளியலை முடித்து விட்டு நெல்லை திரும்பிய நாங்கள், வண்ணாரப் பேட்டையில் இறங்கி, நெல்லையின் தெருக்களை உலா வரத் தொடங்கினோம். உலாவில் புறாக்கள் கண்ணில் சிக்கா விட்டாலும் நல்ல சாலையோர உணவுகள் சிக்கின.
வ.உ.சி மைதானம் அருகில் இருக்கும் கையேந்தி பவன்களை நோக்கி படையெடுத்தோம். முதலில் சுவைத்தது பிரட் ப்ரைதான், ஒரு பிரட்டை முக்கோண வடிவில் பாதியாக வெட்டி, அதன் நடுவில் உருளை கிழங்கு கலந்த மசாலாவை வைத்து பொறித்திருந்தனர். சூடாக சுவைக்க அருமையாக இருந்தது. முட்டை காளான் என்று ஒரு ஐடெம் இருப்பதாக கூறினர், நான் இதுவரை சென்னையில் வெறும் காளான் மட்டும் தான் சுவைத்ததுண்டு, இதையும் சுவைக்கலாம் என்று ஆர்டர் கொடுத்தேன். என் நண்பன் முட்டை பூரி ஆர்டர் செய்தான். இரண்டிலும் உப்பும் மசாலாவும் சற்று குறைவுதான் என்றாலும் பசியின் விளைவால் அந்த பிளேட் சில நொடிகளில் மாயமானது.
என் நண்பன் சூப் குடித்தே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று, ஆட்டுக்கால் சூப் உடன் ஈரலையும் சேர்த்து உள் இறக்கினான். மற்ற நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குல்பி வாங்கி சூட்டை தனித்து, பன்னீர் போஞ்ச் தேடி பாளையங்கோட்டை நோக்கி சென்றோம். நெல்லை ஜங்ஷனில் இருந்து பாளையங்கோட்டை ஐந்து நிமிட பேருந்து பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு நெல்லை சென்றிருந்த பொழுது தான் முதல் முறை சுவைத்தது இந்த பன்னீர் போஞ்ச். Love at first sip! எளிதாக சொல்லவேண்டுமானால் நீருக்கு பதில் பன்னீர் சேர்த்து உருவாகும் எலுமிச்சை ஜூஸ். ஒன்றுக்கு இரண்டாக நான் அருந்தியதை வட நாட்டு நண்பர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். பாளை மார்க்கெட் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரூட்ஸ் & ஜூஸ்' என்ற கடை தான் என் நெல்லை நண்பனும் நானும் உங்களுக்கு பரிந்துறைப்பது.
பயணத்தை தொடங்கும் முன், நம் கோவை ஆவி, ஆவி பறக்க சிங்கம்-2 படத்துக்கு எழுதிய விமர்சனத்தைப் படித்தேன். ஆவியின் சிங்கம்-2 விமர்சனம். மனதில் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே பயணத்தை தொடர்ந்தேன். என்னுடன் வந்த சென்னை நண்பனும் என் கருத்தை வழிமொழிய, என் நெல்லை நண்பன் மட்டும், வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தான். முதல் காரணம் அவனுக்கு படத்தின் கதை தெரிந்துவிட்டது, படத்தை திரையரங்கில் பார்க்க எதுவும் இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டிருந்தான். இரண்டாவது காரணம், பொதுவாக முப்பது ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் மூன்றாவது நாள் என்பதால் 150, 200 என விற்கப்படும் அபாயம்.
எங்கள் பிடிவாதத்தால் அவனை வலுக் கட்டாயமாக கடத்திக் கொண்டு சிங்கம்-2 காண ராம் திரையரங்கம் நோக்கி புறப்பட்டோம். ஆட்டோவில் செல்லாம் என்று முடிவு எடுத்து, ஒரு ஆட்டோவை மடக்கினோம். என் நெல்லை நண்பனின் வீடு இருப்பது, பாளை- தெற்கு பஜார்- சிவன் கோவில் தெரு, அங்கிருந்து ராம் திரையரங்கம் சுமார் எட்டு கிலோ மீட்டருக்கு கூடுதலான தொலைவிலேயே தான் இருக்கும்.நாங்கள் மடக்கிய ஆட்டோக்காரன் எங்களிடம் கேட்டது நூறு ரூபாய் மட்டும். சின்ன ஆட்டோ கூட இல்லை, பெரிய மஞ்சள் நிற ஷேர் ஆட்டோ. நெல்லை ஆட்டோ ஓட்டுனர்களே நீங்கள் சென்னை ஆட்டோ அண்ணாத்தைங்களிடம் டியுஷன் படிக்க வேண்டும்.
முப்பது ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய் கொடுத்து வாங்க வைத்த எங்களைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்திய நண்பனின் வயிற்றை நிரப்ப, உணவகம் தேடி ஜங்ஷன் நோக்கி நடந்தோம். நெல்லையில் இருக்கும் பல 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்களில் முதலில் வந்த ஒன்றில் உணவு அருந்திவிட்டு, சிங்கத்தை காண திரையரங்கம் திரும்பினோம்.
தமிழ் தெரிந்து, எந்த வித கொடுமையையும் தாங்கும் உறுதி கொண்ட நாங்கள் நால்வர் மட்டும் ராம் திரையரங்கத்தினுள் மற்ற நெல்லை வாசிகளுடன் நுழைய,உள்ளிருந்த கொசுக்கள் எங்கள் காதுகளில் ஒய்யாரமிட்டு வரவேற்றன. முதல் முறையாக ஒரு திரையரங்கினுள் லேசெர் ஷோ கண்டது இங்குதான். விளம்பரங்கள் தொடங்கும் முன் ஐந்து நிமிட லேசெர் ஷோவை கொசுக்களின் கடியுடன் ரசித்தோம். பின் சிங்கம் தொடங்க, திரையில் சூர்யா தோன்றும் காட்சியில், ஒரு பக்கம் விசில் பறந்தாலும், மறு புறம் திரையின் அருகில் சுவரில் இரு புறங்களிலும் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று வண்ணங்கள், டிஸ்கோ போல் மின்னின.
இந்த வண்ண மின்னல்கள், படத்தில் குத்து பாடல்கள் வரும் போதும், பஞ்ச் வசனங்கள் வரும் போதும், திரை அருகில் சுவரில் தோன்றி மறைந்து எங்களை ஆச்சரியப் படுத்தியது. படத்தில் இருக்கும் ஒரு சில கவர்ச்சிகளை எனது முன் சீட்டில் இருந்த மாமிச மலை மறைக்க, அவனில் இருந்து வலது புறம் நான்காவது சீட்டில் இருந்த ஒருவர் விட்ட குறட்டை சூர்யாவின் வசனங்களுடன் போட்டியிட்டது. என்னுடன் வந்த ஒரு நண்பன் படம் முடிந்தவுடன், 'சூர்யா ஏன் இவன அர்ரெஸ்ட் பண்ணான்?' என்று கேட்ட பொழுது தான் தெரிந்தது நம்ம பையன் குறட்டை இன்றி தூங்கும் திறமைசாலி என்று.
இரண்டு நாட்கள் தொடர் பயணங்களுக்கு பின், திங்கட் கிழமை மதியம் ஒரு மணிக்கு சூரியனுக்கு குட் மார்னிங் சொல்லி விழித்தோம். நேராக பாளை மார்கெடில் இருக்கம் ஒரிஜினல் ருசிக்கு சென்று, கோழி, ஆடு, காடை முதலிய ஜீவன்களுக்கு சாப விமோட்சனம் கொடுத்து விட்டு, பயணத்தின் முக்கிய காரணமான அல்வாவை தேடி சென்றோம். நெல்லை எக்ஸ்பிரஸ்சை பிடிக்க வேண்டும் என்பதால், இருட்டு கடை செல்ல முடியவில்லை, ஜங்ஷன் அருகில் இருக்கும் பல 'சாந்தி ஸ்வீட்ஸ்' கடைகளில் நெல்லை நண்பன் உதவியுடன் ஒரிஜினலை கண்டு பிடித்து, ஐந்து கிலோ வாங்கி, எதிரில் இருந்த லக்ஷ்மி ஸ்வீட்ஸில் பால்கோவா வாங்கிக் கொண்டோம்.
வழக்கம் போல் பெயர் பட்டியல் தந்த ஏமாற்றத்துடன், சிங்கார சென்னை நோக்கி விரைந்த நெல்லை எக்ஸ்பிரஸில் அல்வாவையும்,ரயிலில் வாங்கிய கோவில்பட்டி கடலை மிட்டாயையும் ருசித்துக் கொண்டே சென்னை திரும்பினோம். அடுத்த பதிவில் பார்டர் பரோட்டவுடன் சேர்ந்து ருசி பரோட்டாவும் உங்கள் நாவிற்கு விருந்தாகும் என்பதை அன்புடன் கூறி விடைபெறுகிறேன்.
*********************************************************************************************************
பதிவர் திருவிழா தேதி மற்றும் இடம் அறிவிப்பு : இங்கு சொடுக்கவும்
*********************************************************************************************************
*********************************************************************************************************
பதிவர் திருவிழா தேதி மற்றும் இடம் அறிவிப்பு : இங்கு சொடுக்கவும்
*********************************************************************************************************
Tweet | ||