Monday, March 24, 2014

சிம்லா ஸ்பெஷல் - கண்டனன் பனியை

புது டில்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த சமயம், எனது நண்பனின் அண்ணன், எங்களைப்போல் அங்கு ரயிலுக்காக காத்திருந்த ஒரு குடும்பத்துடன் சிநேகம் பிடித்துக்கொண்டார். அந்த சிநேகம் எங்களுக்கு பின் பேருதவி செய்ய காத்திருக்கும் என்பதை நாங்கள் அப்பொழுது அறியவில்லை. மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் ஒரு வழியாக ரயில் வந்து சேர்ந்தது. மெட்ரோ ரயிலைக் கண்டு வியந்தது போலவே, ஷடாப்தி ரயிலின் உட்புறத்தைக் கண்டு வியந்தேன். மிகவும் சுத்தமாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. 

"'டாய் ரயிலுக்கு இந்த ரயிலுடன் கனெக்சன் இருக்கும். நமக்காக அது காத்திருக்கும்' என்று என் நண்பன் சொல்லிய மொழி சற்று ஆறுதல் தர எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். டிக்கெட் முன்பதிவுடன் காலை உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்தது எனக்கு ரயில் ஏறிய பின் தான் தெரியவந்தது. ரயிலில் ஏறியவுடன் எல்லா இருக்கைகளுக்கும் ஒரு தண்ணீர் பாட்டில், மற்றும் இரு மொழி ( ஹிந்தி & ஆங்கிலம்)   செய்தித்தாள் வழங்கினர். சற்று நேரம் கழித்து, காலை உணவு பரிமாறத் தொடங்கினர். பணியாளர்கள் அனைவரும் சுத்தமான சீருடைகளுடன் ராஜஸ்தான் மாநில சிப்பாய்கள் போல் காட்சியளித்தனர். 

இங்கும் பிரட் ஆம்லெட் மற்றும் வடை பொங்கல் தான். வட இந்திய பொங்கலை உண்ண விருப்பமின்றி, பிரட் ஆம்லெட் வாங்கிக்கொண்டேன். ஒரு ட்ரேயில் இரண்டு துண்டு கோதுமை ரொட்டி, ஒரு ஆம்லெட், அமுல் வெண்ணை, ஒரு பாக்கெட் ஜாம், கத்தி  மற்றும் முள் கரண்டியுடன் (fork) பரிமாறினார். அருகில் அமர்ந்திருந்தவர் ஸ்பூன் வைத்து பொறுமையாக அந்த ஒரு கரண்டி பொங்கலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டே உண்டார். எனக்கு கையில் உண்டுதான் பழக்கம் என்பதால், அந்த உணவை விரைந்து உண்டேன். இந்த இரண்டு துண்டு ரொட்டிகள் காலை உணவா, இதை உண்டு எப்படி உயிர் வாழ்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தபொழுது, நான் புது டில்லி நடைமேடையில் உண்ட பூரி எனது ஏப்பமாக வெளிவந்தது.

சற்று நேரம் கழித்து, அனைவருக்கும் ஒரு பிளாஸ்கில் வெண்ணீர் கொடுத்து, உடன் காப்பி தூள், டீத் தூள், அமுல் பால் பவுடர், சர்க்கரை முதலியவை வழங்கினர். எனக்கு காப்பி டீ குடிக்கும் பழக்கம் இல்லாததால், எனது நண்பனுக்கு டபுள் ஸ்ட்ராங் காப்பி கலந்து கொடுத்தேன். என் வாழ்வில் நான் முதல் முறை தயார் செய்த காப்பியும் அதுவே (ஹி ஹி ஹி ...). சற்றும் பயண அலுப்பே தராத அந்த ஷடாப்தி ரயில் பயணம் கல்கா வந்த பொது முடிந்தது. 

கல்கா ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது, அங்கு டாய் ரயில் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். ஆனால் எங்கள் ஆனந்தம் தொடர வில்லை. டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுது, அனைத்து டிக்கெட்களும் புல் என்று எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். அங்கிருந்து சிம்லா செல்ல வாடகை டாக்ஸி தான் ஒரே வழி என்று வெளியே வந்தால், அங்கு பெருங் கூட்டம் இருந்தது. நண்பனின் அண்ணன் விசாரித்ததில் அங்கு சின்ன கார்கள் அனைத்தும் புக் ஆகி விட்டன என்றும், டெம்போ மட்டும் தான் உள்ளது என்றும் தெரியவந்தது. நால்வர் மட்டும் செல்ல டெம்போ எடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்று நாங்கள் தயங்கி, சிம்லா எப்படி செல்வது என்று விழித்தோம். அடுத்து டாய் ரயில் மறுநாள் காலை புறப்படும் வரை ரயில் நிலையத்தில் தங்குவதுதான் ஒரே வழி என்று நாங்கள் முடிவு செய்யும் சமயம், ஒரு வழி பிறந்தது. 

புது டில்லி ரயில் நிலையத்தில் என் நண்பனின் அண்ணன் சிநேகம் செய்த குடும்பம் எங்களுடன் டெம்போவில் வர சம்மதிக்க, எங்கள் டாக்ஸி செலவு பாதியாக குறைந்து, சிம்லா நோக்கிய எங்கள் டெம்போ பயணம் தொடங்கியது. டாய் ரயிலில் செல்வதை விட டெம்போ விரைந்து சிம்லா சென்றுவிடும் என்று எங்கள் ஏமாற்றத்தை நாங்களே சமாதானம் செய்துகொண்டோம். ரயில் நிலையத்தில் இருந்து, ஊருக்குள் வந்தவுடன், டெம்போ ஒரு கடைக்கு அருகில் நின்றது. டிரைவர் மொழியை அண்ணன் மொழி பெயர்த்து 'சிம்லாவில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் வேண்டும் என்றால் இங்கே வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். 

எனது ஏழாம் வகுப்பு ஆசிரியர் சாம், அடிக்கடி சொல்லும் 'If you can't break the rules, bend them' என்ற வாக்கியம் தான் என் நினைவிற்கு வந்தது. 'நீங்க எல்லாம் நல்லா வருவிங்க சாமி' என்று நான் அந்த டிரைவரை பார்த்து பல் இளிக்க, தமிழ் தெரியாத அவன்,  நான் எதோ அவனைப் புகழ்வது போல் எண்ணிக்கொண்டு பதிலுக்கு அவனும் இளித்தான். டெம்போவில் அந்தக் குடும்பம் பின் இருக்கைகளில் அமர, மலை சாலைகளில் வாகனம் செல்வதை எனக்குப் பார்க்கக் பிடிக்கும் என்பதால் நான் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன்.  

பொதுவாக வகானம் ஓட்டுபவர்கள் கைபேசியில் பேசுவது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவனோ மலைப் பாதையில் ஓட்டும் பொழுது பேசிக்கொண்டே வந்தான். பேச்சு பின் சண்டையாகவும் மாறியது, சண்டையில் வண்டியின் வேகம் அதிகரித்தது, எனக்கோ 'பக் பக்' என்று இதயம் துடித்தது. சிம்லா மண்ணில் கால் வைத்து, வாத்தியார் போல் 'புதிய வானம் புதிய பூமி' என்று பாட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க, ஒரு வழியாக எந்த வித சேதமும் இன்றி எங்களை மலை மீது கொண்டுவந்து சேர்த்தான். சிம்லா நகரில் எங்கும் உறை பனி இல்லாதது கண்டு நான் அஞ்சியபோழுது, பனியைத் தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டினர்.   

முதலில் அந்தக் குடும்பத்தை அவர்கள் தங்கவிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டு பின் நாங்கள் செல்வது என்று முடிவு செய்தோம். அவர்களை இறக்கிவிட்டு நாங்கள் திரும்புகையில் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர்களின் ஒரு பை மட்டும் வண்டியிலேயே தவறவிட்டார்கள் என்று. சிம்லாவில் இருக்கும் சாலைகள் மிக மிக குறுகியவை, அங்கு வாகனத்தை நிறுத்தினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகம். மற்றவர்களுக்கு உதவும் பெரும் குணம் கொண்ட அண்ணன், ஓடும் வண்டியில் இருந்து எதையும் யோசிக்காமல் அவர்கள் பையுடன் இறங்கினார். 

எங்கள் விடுதிக்கு அருகில் இருக்கும் டன்னலில் (tunnel), இடம் தெரியாத அந்த புதிய ஊரில், அவர் வழி தவறாமல் சரியான பாதையில் வர, மொழி தெரியாத நாங்கள் பீதியுடன் காத்திருந்தோம்.      

அண்ணன் வர டன்னலின் அடியில் காத்திருக்கும் பொழுது தான், அங்கு நிலவிய குளிர் என் ஆடைக்குள் ஊடுருவத் தொடங்குவது தெரிந்தது. என் மாமா, அவர் அமெரிக்காவில் இருந்தபொழுது பயன்படுத்திய விண்டர் ஜாக்கெட் மற்றும் க்லவ்ஸ் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அதுதான் எனக்கு அந்தக் குளிருக்கு கவசமாக நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னைக் காத்தது. எங்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல எங்களுடன் சாலைக்கு வந்து காத்திருந்த விடுதிப் பணியாளர் வழி சொல்ல, ஒரு வழியாக அண்ணன் நாங்கள் காத்திருந்த டன்னலை வந்தடைந்தார். 

எங்களிடம் இருந்த மூன்று பளுவான பைகளை, அந்த விடுதிப் பணியாளர் தன் முதுகில் ஒன்றும், இரு கைகளில் ஒன்றுமாக யேந்திக்கொண்டு, ஒற்றையடிப் பாதைப் போல் இருந்த, சிமெண்ட் படிகள் மீது ஏறத் தொடங்கினார். பளு சுமந்த பொழுதும் மலை ஏறிப் பழக்கமான அவர் வேகமாக ஏற, நாங்கள் சற்று பின் தங்கியே தொடர்ந்தோம். மலை மீது ஒரு குட்டி மலையே ஏறி, அதன் பின் ஒரு சரிவில் இறங்கி எங்களது விடுதி முன் வந்து சேர்ந்தோம். இதற்குள் மணி ஏழாகி விட்டது. அன்றைய இரவு அறையில் தான் என்றானது.  'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வீடு போல், மலை உச்சியில் மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட அந்த அறைக்குள் சென்ற பொழுது, இதயம் சற்று 'பக் பக்' என்றே துடித்தது. இரண்டு முறை குதித்து உறுதியை சோதித்து பார்த்த பின்னே அடுத்த அறைக்குள் சென்றேன். 

எங்கள் அறை
குளிர் காலத்தில் சிம்லா சென்றால், குளிரின் உச்சகட்டத்தை உணரலாம் என்பது என் திட்டம். ஆனால் நான் அங்கு உணர்ந்ததோ நான் எதிர் பார்த்ததை விட மிகவும் கடுமையான குளிர். அந்த இரவை கடக்க நிச்சயம் நெருப்பின் துணை தேவை என்று தோன்ற, 'ரூம் ஹீட்டர்'  ஆர்டர் செய்யலாம் என்று நான் முனைய, என் நண்பன் என்னைத் தடுத்து, அலமாரியின் உள் இருந்து பஞ்சு மெத்தையில் பாதி கணம் இருக்கும் ஒரு வெள்ளை நிற ரஜாய் (ஆங்கிலத்தில் comforter என்றும் quilt என்றும் கூறுவார்கள்) எடுத்து கொடுத்தான். இதையா போர்த்திக் கொள்வது என்று முதலில் நான் யோசித்தாலும், வேறு வழியின்றி மெத்தை மேல் அதை விரித்து அதற்கு அடியில் சென்றேன். சற்று நேரமாக, அது எனது உடலின் உஷ்ணத்தை பாதுகாத்து, நல்ல கத கதப்பை தந்தது. அருமையான ஒரு கண்டுபிடிப்பு அது. 

காலையில் குளித்து முடிப்பதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லி மாளாது.  ஹீட்டர் குழாயில் இருந்து வரும் சூடான நீர், வாளியை அடையும் முன், தன் சூட்டை இழந்து விட்டது. ஒரு வழியாக குளித்து முடித்து, தயாராகி, பனியைத் தேடும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். செல்லும் வழியில் ஒரு கோல்ப் மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி, அங்கு சென்று சுற்றிப்பார்க்கும்படி எங்களது ஓட்டுனர் சொல்லினார். முடியவே முடியாது எங்களுக்கு பனிதான் வேண்டும் என்று நாங்கள் மறுத்துவிடவே, எங்களை குப்ரி அழைத்துச் சென்றார். குப்ரி சிம்லாவில் இருக்கும் ஒரு சிகரம். அதன் அடியில் இருந்து உச்சிக்கு செல்வதற்கு குதிரை சவாரி செய்ய வேண்டும். அதில் நிஜ குதிரைகளும் சில போலி குதிரைகளும் உங்கள் அதிர்ஷ்டம் போல் கிடைக்கும். (குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்தது இந்த போலிக் குதிரை. இதை ஆங்கிலத்தில் mule என்பர்)

எனக்கு குதிரை ஏறிப் பழக்கம் இல்லாததால் சற்று பயத்துடன் நான் இருக்க, எனக்கு போலிக் குதிரையே வழங்கினர். எங்கள் நால்வரின் குதிரையையும் ஒரு சேர அழைத்துக்கொண்டு, அதன் பாகன் எங்களுடன் நடந்து வந்தான். அவன் முன்னே வழி காட்டிக்கொண்டு  செல்ல, எனது குதிரை கடைசியில் வந்தது. ஒற்றையடிப் பாதையாக மலை மேல் செல்லவும் இறங்கவும் ஒரே வழிதான். மேலிருந்து குதிரைகள் இறங்கும் பொழுது, எனது குதிரை சற்று பயந்து ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும்பொழுது, எனக்கோ 'எங்கே, குதிரை கால் இடறி  சரிந்து விடுமோ' என்ற பயம் தோன்றும். ஒரு முப்பது நிமிட 'திக் திக்' குதிரை சவாரிக்கு பின் குப்ரி சிகரத்தை அடைந்தோம். சிம்லாவில் இருக்கும் உயர்ந்த சிகரத்தில் நிச்சயம் பனி இருக்கும் என்ற எனது ஆசையில் மண் தான் விழுந்தது. அங்கு சில மேகி(maggi) கடைகளும் ஒரு தீம்(theme) பார்க்கும் தான் இருந்தன. 

தீம் பார்க்கில் சில மொக்கை ரைடுகளை தவிர்த்து ஒரு ரைடு மட்டும் எங்களைக் கவர்ந்தது, நானும் என் நண்பனும் மட்டும் அதில் ஏறினோம். மத்தியில் ஒரு கம்பம், அந்தக் கம்பம் தாங்கும் ஒரு வளைவான சக்கரம், அந்தச் சக்கரத்தில் வட்டமாக ஒருவர் மட்டும் அமரும் ஊஞ்சல். பார்க்க சாதாரண ஊஞ்சல் போல் இருந்தால், அது இருந்தது மலை உச்சியில் என்பதாலும், அது சுற்றிய வேகத்தாலும், ஆகாயத்தில் தூக்கி வீசப் படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. எனது உணவுக் குழாயில் இருந்து வயிறு வரை அனைத்தும் ஒரு சக்சன்(suction) பம்ப் வைத்து உரியப்படுவது போல் ஒரு உணர்வு. ஒரு வழியாக சுற்றி நிற்க, நான் இறங்கலாம் என்று நிதானிக்கும் பொழுது, என் நண்பன் 'ஒன்ஸ் மோர் ப்ளீஸ்' என்று கேட்க, எனது உயிர் மீண்டும் ஊஞ்சல் ஆடியது. 

அங்கு அருகில் ஆப்பிள் தோட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைக்க, இதுவரை வாழ்வில் காணாத ஆப்பிள் மரங்களைத் தேடிச் சென்றோம். சரிவாக செல்லும் பாதையில் நெடுந்தூரம் சென்றும் அங்கு ஆப்பில் மரங்கள் ஏதும் தென்படவில்லை. வழிதவறிவிட்டோம் என்று நாங்கள் உணரும் பொழுது, நாங்கள் மிகவும் எதிர் பார்த்திருந்த தருணம் வந்தது. சாலையில் உறைப்பனி தென்படத் தொடங்கியது. நாங்கள் எதிர்பார்த்து போல் இல்லை. வெள்ளை நிற சோப்பு நுரையை மணலில் கலந்தால் எப்படி இருக்கும், அது போலத் தான் அந்தப் பனி அழுக்காக இருந்தது. கிடைத்த வரை லாபம் என்று அதனுடன் விளையாடத் தொடங்கினோம்.

எனது கையில் பனி!

அந்தப் பனியை கையில் ஏந்தும் பொழுது, பல நாட்களாக டீப் ப்ரீஸ் (deep freeze) ஆகி உறைத்திருக்கும் உங்கள் பிரிட்ஜ் ப்ரீசர் பாக்சில் கை வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அடிக்கும் பொழுது, எப்படியாவது சட்டையினுள் ஊடுருவும் பொழுது அந்தப் பனி உண்டாக்கும் சிலிர்ப்பை சொல்ல வார்த்தை இல்லை. பனியைக் கண்ட ஆனந்தத்தில் சற்று நேரம் கூடுதலாகவே செலவழித்துவிட்டோம். 

இறங்கும் பொழுது மிகவும் எளிதாக இருந்தப் பாதை, ஏறும் பொழுது சற்று கடினமாக மாறியது. அதிக இடங்களில் அமர்ந்து அமர்ந்து செல்லத் தொடங்கினோம். இந்த குளிர் செய்யும் தந்திரம், நமது தாகத்தை அடக்கி, உடலுக்கு தேவையான நீரை நம்மை அருந்தவிடாமல் செய்வதுதான். காலை டிபனும் நான்-ரொட்டி என்பதால் சற்று குறைவாக உண்ண, எனது உடலில் வலு வேகமாக குறைந்தது. எனது நண்பர்களை விட மிகவும் பின் தங்கத் தொடங்கினேன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது, அந்த குளிரிலும் நெற்றி வியர்த்தது. இனி ஒரு அடியும் நகர முடியாத நிலையில், எனது கால்களை பூமியில் என்னால் உணர முடியவில்லை.    

உணர்விழந்து நான் கீழே அமர, சில நொடிகள் என்ன நடந்தது என்ற நினைவு எனக்கு இல்லை. என் நண்பன் மேல் இருந்து கொண்டுவந்த நீரைப் பருகியதும் தான் உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கொஞ்சம் வலு பெற்று மெதுவாக ஒரு கடைக்கு முன் சென்று அங்கு நாற்காலியில் அமர்ந்தேன். ஆளுக்கு ஒரு ப்ளேட் மேகி (maggi) ஆர்டர் செய்தோம். அந்தத் தருணம், அந்தக் குளிருக்கு இதமாக சூடாக சுவைத்த மேகி எனது வாழ்நாளில் வேறு எந்தத் தருணத்திலும் அவ்வளவு சுவையாக இருந்தது இல்லை.

உணவு உண்டபின் கிடைத்த வலுவுடன், மீண்டும் தடைபட்ட எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். என் போலிக் குதிரையின் மேல் ஏறி மலை இறங்கத் தொடங்கினோம். இறங்குவது சற்று பயமின்றி சுலபமாகவே இருந்தது. அங்கிருந்து எங்கள் ஓட்டுனர் எங்களை அடுத்த இலக்கு நோக்கி அழைத்துச் சென்றார். அப்பொழுது சீருந்தில் இருந்த டிஸ்ப்ளே காட்டிய வெப்பம் 4 டிகிரி செல்சியஸ்.     

எங்களை தட்டா பாணி(Tata Paani) என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது சிந்து நதியின் ஒரு பிரிவான சட்லஜ் நதி பாயும் இடம்.  அண்ணன் பேரம் பேச அந்த நதியில் நாங்கள் ராப்டிங்(rafting) செல்ல தயாரானோம். எங்களது காலணிகளை சீருந்திலேயே விட்டு விட்டோம். எங்களது பணப் பை, கேமரா, கைபேசி அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டு கட்டி அந்த பலூன் படகின் ஒரு மூலையில் போட்டார் அந்தப் படகுக் காரர். எங்கள் படகில் படகுக் காரருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர், நதியில் மிதக்கத் தொடங்கினோம். 

என் வாழ்வில் தண்ணீரே பாயாத பாலரைக் கண்டு வளர்ந்த எனக்கு வற்றாத நதிகளைக் கண்டால் கொஞ்சம் போறாமையாகத் தான் இருக்கும். நமது தென்னகத்து நதிகளுக்கு நேர் மாறாக கோடைக் காலத்தில், இமய மலையில் பனி உருகி, அந்த நதிகளில் வெள்ளம் இன்னும் அதிகமாக இருக்குமாம். அந்த நதியின் கரையில் காலை வைக்கும் பொழுதே அந்த நீரின் குளிர்ச்சி புலப் பட்டது. நீங்கள் ஐஸ் கட்டியில் கரைந்து வரும் நீரில் காலை வைத்து பார்த்ததுண்டா? அப்படித்தான் இருந்தது அந்த நீரின் குளுமை. 

படகுக்காரர் சொல்லும் கட்டளைகளை கேட்டு நாங்கள் துடுப்பு விட்டு மறுமுனை செல்ல வேண்டும். துடுப்பு விட பெண்களுக்கு மட்டும் விடுப்பு, அவர்கள் அழகாக மத்தியில் அமர்ந்து படகுச் சவாரியை ரசித்தனர். அந்த நதியில் படகு சீறிப் பாய்ந்து சென்றது. நதியின் சுழல்களுக்கு ஏற்ப அவர் திறமையாக எங்களை துடுப்பு பிடிக்கச் செய்து நதியில் படகை விரைவாக செலுத்திக்கொண்டிருந்தார். நான் மட்டும் நீருக்கு வலிக்காத வண்ணம் சற்று மெதுவாகவே துடுப்பை வலித்துக் கொண்டிருக்க. எனது பாசாங்கை அறிந்து நக்கலாக அவர் ஹிந்தியில் எதோ சொல்ல, அந்தப் பெண்கள் குபீர் என்று சிரித்தனர்.

Rafting in Sutlej
ஒரு வழியாக நதியின் மறுமுனைக்கு திறமையாக வந்து சேர்ந்தோம். படகு செலுத்தும் சுவாரசியத்தில், எனது கால்களை கவனிக்க மறந்தே போனேன். எனது கால், படகினுள் புகுந்த குளிர்ந்த நீரின் சதியால், ரத்தம் செல்லாத வண்ணம் மறத்துப் போயிருந்தது. படகை விட்டு இறங்கி நொண்டிக்கொண்டு கரையை அடையும் பொழுது மற்றொரு அதிசயம் எங்களுக்காக காத்திருந்தது.

கரையின் ஓரங்களில், மணலில் இருந்து சூடான ஆவி கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த ஆவி கிளம்பும் இடங்களில் நீர் வெதவெதவென்று குளிருக்கு இதமாக இருந்தது. எனது கால், மற்றும் நீரில் நனைந்த மற்ற பாகங்களை அந்த சூட்டில் காட்டி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தேன். இப்படி இயற்கையாக உஷ்ணம் தோன்றும் இடங்களை ஆங்கிலத்தில் 'Sulfur Springs' என்று சொல்லுவார்கள். இயற்கையில் தான் எத்தனை விந்தைகள் அடங்கியுள்ளன?. அந்த குளிரில் அந்த சூடான மணலில் அமரும் பொழுது எத்தனை சுகமாக இருந்தது தெரியுமா? ஆனந்தம்! பிரியா விடைபெற்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.        

Sulfur Springs @ Tata Paani

எங்கள் பயணத்தில் நாங்கள் எதிர் பார்த்து வந்த ஆசை நிறைவேறாத வருத்தமும், எதிர்பாராத பல சுவாரசியமான அனுபவங்கள் நிகழ்ந்த சந்தோஷமும், எங்கள் மனதை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது. மலைகளை கடந்து, வளைந்து வளைந்து, மலையை ஒட்டி செல்லும் அழகான சாலைகள் எங்கள் மனதிற்கு குதூகலத்தை தந்தது. ஒரு இடத்தில மரங்களுக்கு நடுவில் சென்று சீருந்தை நிறுத்தி, எங்களை ஒரு மணல் பாதையில் அழைத்துச் சென்றார். பசுவின் பின் செல்லும் கன்றைப் போல அவரை பின் தொடர்ந்து சென்றோம். அந்தப் பாதை சற்று சரிவின் மேல் ஏறியது, எங்கள் உள்ள மகிழ்ச்சியும் இமயத்தின் மேல் ஏறியது. எங்கள் பயண இலட்சியத்தை நாங்கள் அடைந்தது அங்கேதான். எங்கள் கனவு நினைவானது அங்கேதான். அதுதான் நார்க்கண்டா (Narkanda) என்னும் இடம்.

Narkanda
எங்கள் கண் முன் தோன்றிய காட்சி வெள்ளைப் பனி சூழ்ந்த பனி மலை. அங்கு மக்கள் கூட்டம் எறும்புகள் போல் தெரிந்தது. படங்களில் காண்பது போன்ற பனி, என் முட்டி வரை அந்தப் பனியில் புதைந்தது. மீண்டும் மழலைகள் ஆகி, பனிப் பந்தெறிந்து விளையாடினோம். சற்று வளர்ந்து வாலிப வயதை எட்டி, ஜேம்ஸ் பான்ட் படங்களில் வருவது போல் பனி சறுக்கும் செய்தோம். எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். 'மீண்டும் அப்படி ஒரு நாள் வருமா?' என்று மனம் இன்றும் ஏங்குகிறது.        

Myself ice skating 


தொடரும்.... 

No comments:

Post a Comment