Monday, March 24, 2014

சிம்லா ஸ்பெஷல் - நகர்வலம்

அன்று நதியில் துடுப்பு பிடித்ததும், பனியில் விளையாடியதும் உடலுக்கு தந்த சோர்வில் இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் நான்றாக தூங்கிவிட்டேன். மறுநாள் சிம்லா நகரை சுற்றி சில இடங்களுக்கு எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்றார். 

ஜக்ஹூ கோயில் (Jakhoo temple)

நாங்கள் அன்று காலை முதலில் சென்றது இங்கு தான். சிம்லா மலை மீது மற்றொரு மலை ஏறி எங்களை அழைத்துச் சென்றார். இதுவரை நாங்கள் சென்றதில் இதுதான் மிகவும் குறுகலான பாதை. ஒரு சீருந்து செல்லும் அளவு தான் சாலை இருக்க, மலை மேல் ஏறும் வளைவுகள், '<' இப்படித்தான் இருந்தன. அந்த சாலையில் வண்டி ஓட்ட ஒரு அசாத்திய திறமை வேண்டும். ஒரு வழியாக மேலே சென்றோம். இதுவரை பெரிதும் பேசாத எங்கள் ஓட்டுனர் 'குரங்குகள் இங்கு சேட்டை செய்வது அதிகம். மிகவும் ஜாக்கரதையாக இருங்கள்' என்று எச்சரித்தார். அது ஒரு ஆஞ்சநேயர் கோயில் அங்கு ஒரு மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இருந்தது. வழக்கம் போல் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டு எங்கள் சீருந்தை நோக்கி இறங்கினோம்.


வரும் வழியில் அங்கு பிரசாதம் விற்பவர்கள் குரங்குகளை கொம்பு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர். சீருந்தின் அருகில் வந்து, உள்ளே ஹீட்டர் இருப்பதால், எனது ஜாக்கெட்டை கழற்றிவிட்டு, சீருந்தினுள் நுழையும் பொழுது, 'ஐயோ குரங்கு' என்று என் நண்பன் அலற அனைவரும் விரைந்து சீருந்தினுள் குதித்தோம். ஓட்டுனர் வண்டியை ஐம்பது அடி நகர்த்துவதற்குள், என் நண்பன் 'ஐயோ' என் கண்ணாடி?' என்று மீண்டும் அலறினான். ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட, சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்று பார்த்தால், மரத்தின் மேல் ரே-பான் கண்ணாடியுடன் சோக்கா போஸ் கொடுத்தது அந்தக் குரங்கு. 

என்ன செய்வது என்றே எங்களுக்கு புரியவில்லை. சிறு வயதில் படித்த குல்லா கதைதான் நினைவுக்கு வந்தது. அதற்குள் எங்கள் ஓட்டுனர் ஒரு பிரசாத பாக்கெட்டை வாங்கி, மேலே வீச, யுவராஜ் சிங் போல அதை தாவிப் பிடித்தது அந்தக் குரங்கு. மனிதர்கள் போல் இல்லாமல், நேர்மையாக வாழும் அந்தக் குரங்கு, பிரசாதம் கைக்கு வந்தவுடன், கண்ணாடியை அழகாக என் நண்பன் கைக்கு வீசியது. 

ராஷ்ட்ரபதி நிவாஸ்

அடுத்து நாங்கள் சென்றது வெள்ளையர்களின் கோடைக்கால தலைமையகமாக விளங்கிய     ராஷ்ட்ரபதி நிவாஸ் மாளிகைக்கு. இது Indian Institute of Advanced Study நிறுவனத்தின் தற்காலிக கட்டிடமாக இருந்தாலும், வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த இடத்தின் சில பகுதிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர்.



ஆங்கிலேயர்கள் ஹைட்ரோ-எலக்ட்ரிக் முறை மூலம் அந்நாளில் அந்த கட்டிடத்துக்காக தயார் செய்யப் பயன்படுத்திய மின் சாதனங்கள், இன்றளவும் அங்கு மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதை கண்டு வியந்தேன். 

ஜின்னாவின் கோரிக்கையின் படி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை தனி நாடாக பிரிக்க முடிவு செய்த வரலாற்று புகழ் பெற்ற, மவுண்ட் பாட்டன் தலைமையிலான 'சிம்லா கான்பிரன்ஸ்'  நடந்த அறையினுள் அந்த இருக்கைகைளையும் பராமரித்து வருகின்றனர். மாணவர்களின் ப்ராஜெக்ட் காட்சியளிப்பிற்காக இன்று அந்த அறை பயன்படுத்தப் படுகிறதாம். 

அங்கு விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில ஆங்கிலப் பிரபுகளின் படங்கள் இருந்தன. அதில் என்னை மிகவும் கவர்ந்தது மவுண்ட் பாட்டன் பிரபு அவர்களின் மனைவியின் புகைப்படம் தான். அந்த அம்முணி எம்புட்டு அழகு தெரியுமா. அந்த நிமிடமே அவருடன் என் மனதில் ஒரு மதராசபட்டின கனவு அரங்கேறியது.      

Lady Mount Batten

ஸ்ரீ சங்கட் மோச்சன் கோவில் (Shri Sankat Mochan Temple)

மீண்டும் எங்கள் ஓட்டுனர் ஒரு கோவிலுக்கு தான் எங்களை அழைத்துச் சென்றார். அந்தக் கோவில் மலை சரிவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. முதலில் ஹனுமான் கோவிலாக உருவாகி, பின்னர் அனைத்து தெய்வங்களும் அங்கு ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

எனக்கும் கடவுளுக்கும் மிகவும் தூரம் என்பதால், என் நண்பர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அவர்களை உள்ளே தரிசனம் காண அனுப்பிவிட்டு, வெளியில் இருந்த இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து, எனது நண்பனிடம் இருந்து உள்ளே வரச் சொல்லி கைபேசியில் அவசர அழைப்பு வரவே, காலணிகளை ஹனுமான் பொறுப்பில் விட்டு விட்டு உள்ளே சென்றேன். உள்ளே படி வழியாக இறங்கி சென்றால், ஒரு பெரிய மண்டபம் போல் இருந்தது. அங்கு வரிசையாக மக்கள் அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 'நண்பேன் டா!' என்று அவனுக்கு ஒரு சலாம் போட்டு விட்டு, நானும் அமர்ந்தேன். 

வெள்ளை நிறத்தில், பொங்கிய வடிக்கப்பட்ட அரிசி என் இலையில் பார்த்தவுடனே எனது மனம் தமிழகத்தை நோக்கிச் சென்றது. ராஜ்மா குழம்பு, பட்டாணி குழம்பு, மற்றும் ஒரு இனிப்பு என்று அசத்தலாக இருந்தது அந்த அன்னதானம். அந்த ஏழு நாட்களில் நாங்க உண்ட உணவில் மிகவும் சுவையானது அதுதான். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அன்றோ.                                                   
மால் ஸ்ட்ரீட் (Mall Street)

சென்னைக்கு எப்படி பாண்டி பஜார் மற்றும் ரங்கநாதன் தெருவோ அப்படித்தான் சிம்லாவிற்கு இந்த மால் ஸ்ட்ரீட். இங்கு அனைத்து அரசாங்க அலுவலங்களும் உள்ளன. அந்த அலுவலகங்களை தாண்டிச் சென்றால் வரும் பிரதான சாலையில் அனைத்து ரக பிரான்டட் கடைகளும் இருக்கும். அந்த பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் சற்று கீழே இறங்கினால் மலிவு விலைக் கடைகள் அனைத்தும் இருக்கும். 

அப்படி ஒரு சந்தினுள் ஒரே சாப்பாட்டுக் கடைகளாக இருக்க, ஒரு கடையின்  உள்ளே சென்று அமர்ந்தோம். அங்கு சுடச் சுட கிடைத்த சென்னா படுறா(சோலாபூரி) வின் சுவை இன்றும் என் நாவில் உமிழ் நீர் சுரக்ச் செய்கின்றது. 

மால் ஸ்ட்ரீடில் தென்பட்ட பொம்மைகளை ரசித்தபடி இனிதே எங்கள் சிம்லா பயணம் முடிவடைய, மறுநாள் விடியற்காலை கல்கா நோக்கி சென்றோம். ஆறு மணிக்கு கல்காவில் ரயில் என்பதால், நான்கு மணிக்கு சிம்லாவை விட்டு கிளம்பினோம். நான்கு மணிக்கு அந்தக் குளிரில் குளிக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல. சிம்லாவில் இருந்து மலை இறங்கும் அந்தப் பயணம் சந்திர ஒளியில் அழகா இருந்ததை நான் ரசித்துக் கொண்டே வர, என் நண்பர்கள் தூங்கி கொண்டே வந்தனர். சில நேரம் கடந்து தான் எங்களது சீருந்தின் என்ஜின் ஓடாததை உணர்ந்தேன், neutral கியரில் வண்டியை எங்கள் ஓட்டுனர் மலையில் இருந்து கீழு உருட்டிக்கொண்டு வந்தார் என்பதை அறிந்தவுடன் எனக்கு 'குபீர்' என்றானது. அவருக்கு என்னமோ அப்படி ஓட்டிப் பழக்கம் இருந்தாலும், மலையில் இருந்து கீழ் இறங்கும் வரை ஒவ்வொரு முறை அவர் பிரேக் அழுத்தும் பொழுதும் எனது உயிர் சந்திரனை தொட்டு விட்டு பூமி திரும்பியது.                
  
நிசாமுத்தின் ரயில் நிலையத்தில், 3 3௦ மணிக்கு வழக்கமாக வரும் சென்னை செல்லும் MAS-Durronto எக்ஸ்பிரஸ் அன்று மணி ஏழாகியும் வரவில்லை.  

No comments:

Post a Comment