Monday, September 30, 2013

தேன் மிட்டாய் - செப்டம்பர் 2013

மாறிய செருப்பு

பதிவர் திருவிழாவின் முன்தினம் சென்னைக்கு வந்தப் பதிவர்களை விடுதிகளில் தங்க வைத்து விட்டு, காலை உணவு அருந்தச் செல்லும் பொழுது தான் கவனித்தேன் என் நடையில் எதோ ஒரு மாற்றம் இருப்பதை . உடன் இருந்த சீனுவிடம் காலையில் நான் வீட்டில் இருந்து கிளம்பிய பொழுது இப்படி இல்லை என்று சொல்லிக் கொண்டே சாலையில் நடந்து கொண்டிருந்தோம். யாரிடம் செருப்பு மாறியது, எப்படி கண்டு பிடிப்பது, எல்லோர் காலையுமே பார்க்க வேண்டுமா என்று பல எண்ணங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதுதான் முதல் அனுபவம் , ஹி ஹி ஹி . கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வருவது போல, எதிரே வந்த பிரபு கிருஷ்ணா என்னை நிறுத்தி, மாறிய எங்கள் செருப்பை மாற்றிக் கொண்டார். கிழிந்த செருப்பனாலும், சொந்த செருப்பில் நடப்பது எத்தனை சுகம். 


விநாயகர் பிறந்தநாள் விழா



நாகரீக மாற்றத்தில் மறைந்த பல பழமைகளில் தேரும் ஒன்று. இந்த விநாயகர் சதுர்த்தியின் பொழுது, விநாயகர் இன்டிகாவின் கூரையில் அமர்ந்தே எங்கள் தெருக்களை வலம் வந்தார். 


விநாயகர் சதுர்த்தியன்று மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் விநாயகர் சதுர்த்திக்காக நடந்தது ,வசூல் இல்லை வழிப்பறி என்றே சொல்ல வேண்டும். சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு வசூல் செய்து கொண்டிருந்தனர். நான் நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டேன். என்னை அடுத்து வந்தவர்கள் வண்டியின் முன் ஒருவனை குதிக்கச் செய்து நிறுத்த தொடங்கினர். கடவுள் பேரில் நம் நாட்டில் இப்படி பல அநீதிகள் நடக்கத்தான் செய்கின்றன. 

இருட்டுக்கடை அல்வா 

இதுவரை என் வாழ்வில் இருட்டுக் கடை அல்வா உண்டதே இல்லை என்ற பெரும் குறை இருந்தது. நெல்லை நண்பர் ஒருவர், அவர் நெல்லையில் இருந்து வரும் பொழுது எனக்கு அல்வா வாங்கி வருவது வழக்கம், இம்முறையும் வாங்கி வந்தார். சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பாக் செய்யும் கவர் மாறி இருந்தது. அவரிடம் என் இருட்டுக் கடை அல்வா ஆசையை சொல்லி மிகவும் குறை பட்ட பொழுது, அவர் சொல்லிய பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வெட்கப் பட வைத்தது.

அவர் கூறியது :' நான் போன வாட்டி உங்களுக்கு கொடுத்தது இருட்டுக் கடை அல்வா தான் !' 

நியூ

தமிழ் சினிமா வரலாற்றில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை சமீபத்தில் தான் பார்க்க முடிந்தது, கிட்ட தட்ட வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து. எனக்குள் இரண்டு கேள்விகள் தோன்றின.


கேள்வி ஒன்று : எப்படி இந்த படத்திற்கு 'A' சான்றிதழ் கொடுக்கவில்லை?

கேள்வி இரண்டு : படம் திரையிடப் பட்டு, மக்கள் இந்தப் படத்தை மறந்த  பல மாதங்கள் கழித்து இந்த படத்தை தடை செய்ததன் நோக்கம் என்ன? இன்றும் Youtubeஇல் பார்க்க முடிகிறதே? 

சுயநலம்


அலுவலகம் முடிந்து, பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். காலியாக இருந்த பேருந்தில், நாவலூரில் பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறினார். அட்டக்கத்தி படத்தில் வருவது போல் பாட்டுக்கு மெட்டுக் கட்டி தாளம் போட்டு, ஒரே அராஜகம் பண்ணிக் கொண்டிருந்தனர். மற்றவர்களை பாதிக்கும் படி நாம் இன்பமாய் இருப்பது சரியில்லை என்று எனக்குள் தோன்றிய கோபத்தை அடக்கிக் கொண்டேன். திடீரென்று பேருந்தின் வேகம் குறைய, இவர்கள் பாட்டும் நிற்க, சாலையில் ஒரு இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாயிருந்தது. எதையும் யோசிக்காமல் அந்த இளைஞர்கள் பேருந்தை விட்டு இறங்கி, பாய்ந்து சென்று உதவினர். பேருந்து அவர்களுக்காக நிற்காததை அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சுயநலமற்ற அவர்களின் செயல் என் மனதில் முதலில் தோன்றிய கோபம் மறைந்து, சுயநலவாதியாக 'என் வாழ்கை' என்னும் சிறைக்குள் அடைபட்டிருக்கும் என் மேல் கோபம் திரும்பியது.

நம்ம பவர் 

அலுவலக நண்பர்கள் வட்டம் ஒன்று, நுங்கம்பாக்கம் அருகே செல்கையில், அவரகளுக்கு அருகில் சென்ற சீருந்தில் பவர் ஸ்டாரை கண்டு, சலாம் வைக்க. அவரும் தன் எவர்க்ரீன் புன்னகையில் பதில் சொல்ல, இவர்கள் புகைப் படம் எடுக்க வேண்டும் என்பது போல சைகை செய்ய, மனுஷன் காரை நிறுத்தி இறங்கிட்டாரு. அவருடன் நண்பர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே .


நண்பர் விஜய், ராமராஜனுக்கு போட்டியோ என்று எண்ணி பவர் தன் சீருந்தை விட்டு இறங்கியதாக ஒரு வதந்தியும் உண்டு.

ஆட்டோ கட்டணம் 

புதிதாய் திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் என்ற ஆசையில், ரயில் நிலையம் செல்ல என் வீட்டின் அருகில் இருக்கும் ஸ்டான்ட் ஆட்டோவில் ஏறினேன். அந்த ஆட்டோ டிரைவரோ 'அந்த கட்டணம் வர்றதுக்கு எல்லாம் நாள் ஆகும் சார், ரெண்டு லட்சம் மீட்டர் வெய்டிங்ல இருக்கு' என்று சாதித்து என்னிடம் இருந்து, புதிய கட்டணம் படி 25 ரூபாய் வாங்க வேண்டிய இடத்தில 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். ஏமாற்றப் பட்டேனோ என்ற குழப்பத்தில் இருந்த எனக்கு, பல ஏரியாக்களில் ஸ்டாண்டுகளில் இருக்கும் ஆட்டோக்காரர்கள் இன்னமும் புதிய கட்டணத்திற்கு மாறாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல லோக்கலில் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கொத்து பரோட்டா படித்த பொழுது தான் எனக்கு விளங்கியது. கேட்டால் கிடைக்கும் ASK !

16 comments:

  1. உங்கள் நண்பர் உங்களுக்கு இருட்டுக்கடை அல்வா தராமல் அல்வா தந்துவிட்டார் என்று நினைக்கிறேன் :)

    சமகாலத்தில் வெளிவரும் படங்களை ஒப்பிடும்போது நியூ ஒன்றும் அவ்வளவு ஆபாசமான படமில்லை... இருப்பினும் அந்த காலகட்டத்தில் அது பிரச்சனைக்குரியதாகிவிட்டது... நியூ பட சென்சார் விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யா சென்சார் அதிகாரிகளின் மீது செல்போனை தூக்கி எரிந்து பிரச்சனையாகி பின்னர் டெல்லிக்கு போயி மொழி தெரியாத சென்சார் அதிகாரிகளின் மூலமாக சான்றிதழ் வாங்கி வெளிவந்தது நியூ... இவ்வளவு பிரச்சனையையும் எஸ்.ஜே.சூர்யாவே படத்தின் பப்ளிசிட்டிக்காகவும் அவருக்கான இமேஜ் உருவாக்கத்திற்காக கூட செய்திருக்கலாம்...

    நியூ படம் தடை செய்யப்பட்டதன் மூலம் அதை இனி எந்த காலத்திலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது... கடைகளில் ஒரிஜினல் டி.வி.டி. விற்க முடியாது...

    ReplyDelete
    Replies
    1. ந்யு படம் முதலில் அஜித்-ஜோதிகா நடிக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

      Delete
  2. நியூ படத்துக்கு அப்புறம் சூர்யா அதிகம் சோபிக்க வில்லை....இப்போ ஆளையே காணோம்...!

    ReplyDelete
    Replies
    1. சிங்கம், அவரே இசையமைத்து, கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நடித்து (ஸ்ஷப்பா..) வெளிவர இருக்கும் "ம்யுசிகல் மூவி" - "இசை" பற்றி நீங்க கேள்விப்படலையா?

      Delete
  3. அந்த இளைஞர்கள் பேருந்தை விட்டு இறங்கி, பாய்ந்து சென்று உதவினர். பேருந்து அவர்களுக்காக நிற்காததை அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.//

    எங்கள் பழைய நண்பர்கள் வட்டத்தை நியாபகடுத்துகிறது....!

    ReplyDelete
    Replies
    1. எப்பவுமே உங்கள ரவுண்டு கட்டிடுவாங்களா அண்ணே.. #டவுட்டு# ;-)

      Delete
  4. அல்வாவுக்காக அலைபாய்ந்த விஷயமும், செருப்பு மாறிய சமாச்சாரமும்... ஸேம் பிளட்! அந்த இளைஞர்களை நினைச்சால் மனசில மகிழ்ச்சிவருது. ஆட்டோக்காரங்க விஷயத்துல, அன்னிக்கே வாத்யார் சொன்னதுதான்... "திருடனாப் பாத்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது"



    ReplyDelete
  5. இனிப்பான தேன் மிட்டாய்.....

    ஆட்டோ - இவர்கள் திருந்துவது கடினம்....

    நியூ - அவர் இருக்காரோ பட உலகத்துல இன்னும்?

    ReplyDelete
  6. //என் நடையில் எதோ ஒரு மாற்றம் இருப்பதை// அதுக்கு பேர் தான் ஹேங் ஓவர் தம்பி..

    ReplyDelete
  7. சுவையான தேன் மிட்டாய் தகவல்கள்... எதுவுமே சொந்தம் என்றால் சுகம் தான்... உதவி செய்த இளைஞர்களை பாராட்டுவோம்...

    ReplyDelete
  8. ம்ம்..நன்றாக இருக்கிறது தேன் மிட்டாய்...

    ReplyDelete
  9. இளைஞர்கள் நூத்துக்கு தொண்ணூறு பேர் சுயநலமற்றவர்கள்தான். கலாட்டா, கேலிலாம் அவர்கள் வயசுக்குண்டானது. இது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  10. 1 பல்சுவை நன்று!

    ReplyDelete
  11. //கிழிந்த செருப்பனாலும், சொந்த செருப்பில் நடப்பது எத்தனை சுகம். //

    நல்ல செருப்ப தேடி வந்து மீட்டுட்டு போயிட்டாரேன்னு காண்டுதானே ...! இன்னும் நல்லா யோசிச்சு பாரப்பா அன்னைக்கு செருப்பு போட்டுட்டு போனியா இல்ல சும்மா போனியான்னு ...!

    //நண்பர் விஜய், ராமராஜனுக்கு போட்டியோ என்று எண்ணி பவர் தன் சீருந்தை விட்டு இறங்கியதாக ஒரு வதந்தியும் உண்டு.//
    ....இருக்கலாம் ...!

    ReplyDelete
  12. தேன் மிட்டாய் ரசிக்கவைத்தது..!

    ReplyDelete
  13. சுவையான தேன்மிட்டாய்.... பவர் ஸ்டார் SO SIMPLE....

    ReplyDelete