Monday, October 21, 2013

சாப்பாட்டு ராமன் - அம்மு கௌசோ கடை(தஞ்சை)

சென்னையில் நண்பர் வீட்டில் முதல் முறை (அவர் சித்தி சமைத்த) பர்மா வகை உணவுகளை சென்ற ஆண்டு உண்ட போதே ராமனுக்கு மிகவும் பிடித்து விட்டது. இம்மாதம் தஞ்சை சென்றபோது அவர் கடையிலேயே பர்மா வகை உணவுகளை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.தஞ்சையில் பர்மா காலனியில் பர்மா வகை உணவுக் கடைகள் மிகவும் பிரபலம். இதில் நம் நண்பரின் 'அம்மு கௌசோ கடை' இருப்பது அன்பு நகர், பூக்கார விளார் ரோடு. 


இந்த உணவு வகைகளை தயார் செய்ய காலை ஒன்பது மணிக்கு துவங்கினால் கடை திறக்கும் மாலை ஆறு மணி வரை வேலை சரியாக இருக்கும். மைதா மாவு கொண்டு நூடுல்ஸ் பிழிந்து அதை ஆவியில் வேக வைப்பது,தேவையான காய் கறிகளை நறுக்குவது, மசாலா கலவைகளை தயார் செய்வது என்று பல செய்முறைகளை நேரில் காணும் வாய்ப்பும் கிடைத்தது.



ராமன் தன் கணக்கை துவங்கியது முதலில் அத்தோவுடன்.மேல் கூறிய வேகவைத்த மைதா மாவு நூடுல்ஸுடன் ( அதன் பர்மா பெயர் கௌசோ), மெலிதாக நறுக்கிய முட்டை கோஸ், பச்சை வெங்காயம், பொன்னிறமாக வருத்த வெங்காயம், பூண்டு எண்ணெய், புளி கரைசல் இறுதியாக அவரவர் விருப்பத்திற்கேற்ப காரம் சேர்த்து பரிமாறும் கலவை தான் அத்தோ. இதில் பொறிக்கப் பட்ட உணவு எதுவுமே இல்லாதது கூடுதல் சிறப்பு.

அத்தோ 
உள்ளூர் வாசிகள் இந்த கௌசோவுடன் பர்மா முறையில் சமைக்கப் படும் வாழைத் தண்டு குழம்பை ஊற்றியும் உண்கின்றனர். மேலும் அந்த வாழைத் தண்டு குழம்பை சூப் போலவும் பருகுகின்றனர். அந்த வாழைத் தண்டு குழம்பில் பொறிக்கப் பட்ட வெங்காயம், வேகவைத்த முட்டை, சிறிது கொத்தமல்லி, மசால் வடை சேர்த்து குடித்தால் கிடைக்கும் சுவையே தனி.வாழைத் தண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லவே தேவையில்லை.

வறுக்கப் படும் உணவுப் பிரியர்களுக்ககவே செய்யப் படும் உணவு வகை தான் சீஜோ. கெளசோவுடன் முட்டை கோஸ், வெங்காயம்,மசாலா வகைகள் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, கடாயில் வறுத்து, இறக்கியவுடன் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து, கொத்தமல்லி தூவி உருவாகுவது சீஜோ. 


இதையெல்லாம் முடித்து இறுதியில் எண்ணெய் முட்டை என்று ஒரு வகை உண்டு. வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி, அதற்கு இடையில் எண்ணெயில் பொறிக்கப் பட்ட வெங்காயம், புளி கரைசல், எலுமிச்சை சாறு, பூண்டு பொறிக்கப் பட்ட எண்ணெய், இவற்றை வைத்து, அப்படியே வாயினுள் (பாணி பூரி போல்) இறக்க வேண்டும். இந்த கலவைகள் முட்டையுடன் இணைந்து, சுவை அரும்புகளுக்கு ஒரு உன்னத சுவை அனுப்பும், அதை நினைத்தால் இந்த கணமும் நாவில் உமிழ் நீர் சுரக்கிறது. இந்த எண்ணெய் முட்டை மேல் ராமன் தீராக் காதல் கொண்டதால், மீண்டும் சுவை அரும்புகள் நடனமாடும் அந்த நொடியை எதிர் நோக்கி காத்திருக்கிறான். 

இந்த வகை உணவு மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். இத்தனை ஆண்டுகள் சென்னையில் இருந்து இதை தவற விட்டது சிறிது வருத்தமே. மலிவான விலையில் உடல் நலனுக்கு ஏற்ற உணவை நீங்களும் உண்டு மகிழுங்கள். 

ராமன்ஸ் காம்போ
இந்த தஞ்சை பயணத்தில் ராமனுக்கு அறிமுகமாகிய ஒரு சிறிந்த காம்போ உங்களுக்காக. ஐந்து ரூபாய்க்கு தஞ்சையில் கிடைக்கும் நான் ரொட்டியின் மேல் தேனை நன்கு தடவி, அதை மெத்தை போல் சுருட்டி, வாயில் கடிக்கும் பொழுது, 'ஆஹா... அமிர்தத்தின் சுவை இப்படித் தான் இருக்குமா' என்று எண்ணத் தோன்றியது. உங்கள் வட்டாரத்தில் கிடைக்கும் ரொட்டியை வாங்கி இதேபோல் சுவைத்து பாருங்கள், என்னைப் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் பிடித்துவிடும்.