Saturday, October 4, 2014

தேன் மிட்டாய் - ஆகஸ்ட் 2014 ( தி.நகர் - ஆடி ஸ்பெஷல்)

எனக்கு நினைவு தெரிந்து, நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இருந்தே ஆடித் தள்ளுபடி விற்பனை ஆண்டு தோறும் தமிழகமெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வேலூரில் இருந்த பொழுது ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இந்த ஆடி விற்பனையின் போது தான் அப்பா 'சர்க்கார் ரெடிமேட்ஸ்' என்ற கடைக்கு அழைத்துச் சென்று புதுத் துணிகள் வாங்கித் தருவார். ஆடி மாதம் வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்த காலம் அது. உடலும் பகுத்தறிவும் வளர, இந்த ஆடி மோகம் என்னை விட்டுச் சென்றது. சென்னையில் கல்லூரி சேர வந்த பொழுது  சென்னையின் ஆடைகள் தலைநகரான தியாகராய நகருக்கு செல்லாமல், அண்ணா நகரிலேயே புதுத் துணிகள் வாங்கினோம். கூட்டமாக இருக்கும் கடைக்கு சென்று, அங்கு நசுங்கி கசங்கி துணிகள் வாங்குவதில் எனக்கு என்றுமே ஈடுபாடு கிடையாது என்பதால் எல்லா ஆண்டும் ஆடி விற்பனை என்பது எனக்கு ஒரு கடந்து செல்லும் மேகமாகவே இருந்து விட்டது. இந்த ஆண்டு, சில தவிற்க முடியாத கட்டாயத்தினால், ஆடி மாதத்தில் பல முறை தி.நகர் செல்ல நேர்ந்த பொழுது எனக்கு கிடைத்த அனுபவங்கள் இந்த பதிவிற்கு வித்திட்டன. 

தாம்பரத்தில் இருந்து தி.நகர் செல்ல ரயில் மற்றும் பேருந்து இரண்டுமே இருந்தாலும், நான் எப்பொழுதும் விரும்புவது ரயில் பயணம் தான். இரு சக்கர வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ரயில் ஏறுவது தான் வழக்கம். தாம்பரம் சானடோரியம் டு தி.நகர் - இருபது நிமிட ரயில் பயணம் அது. நமது வாழ்க்கையில் நாம் தினமும் சராசரியாக செய்து கொண்டிருக்கும் ஒரு விசயம் கூட, நாம் சிறிது காலம் செய்யாமல் விட்டு விட்டு மீண்டும் அதன் பக்கம் சென்றால் மாறிவிடுகிறது என்பதை எனக்கு உணர்த்தியது அம்மை தான். மூன்று வாரங்கள் இயல்பு வாழ்கையை விட்டு ஒதுங்கி, மீண்டும் என் வாழ்க்கைக்கு திரும்பிய பொழுது எத்தனை மாற்றங்கள். அந்த மாற்றங்களில் ஒன்று தான் இந்த பைக் பார்க்கிங் கட்டணம், பத்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாயாக உயர்ந்து இருந்தது. தி.நகர் சென்று வர ரிடர்ன் டிக்கெட்டே பத்து ரூபாய் தான் :). இதைவிட கொடுமை என்னவென்றால் என் வீட்டில் இருந்து ரயில் நிலையம் ஆட்டோவில் வந்தால் நாற்பது ரூபாய். எங்கள் ஏரியா ஆட்டோக்களில் மீட்டர் ஓடியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.                       

ரங்கநாதன் தெரு 

ஆடி மாதத்தில் மொத்த ரயில் பயணிகளும் இறங்குவது மாம்பலம் ரயில் நிலையத்தில் தான். ரயில், மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றவுடன், அந்த கூட்டத்தின் மத்தியில் உங்களை நீங்கள் பொருத்திக்கொண்டால் மட்டும் போதும், அடுத்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் ரங்கநாதன் தெருவில் இருப்பீர்கள்.   பீச் பக்கம் இருந்து வரும் மக்கள் கூட்டமும் தாம்பரம் பக்கம் இருந்து வரும் கூட்டமும் சங்கமமாகுவது ரங்கநாதன் தெருவில். 'அங்காடித் தெரு' படத்தில் வருவது போல் மக்கள் கூட்டத்தின் நடுவில் பல சில்லறை வியாபாரிகள் தத்தம் பொருளை வியாபாரம் செய்யக் கூவிக் கொண்டிருப்பர். இரண்டு பக்கமும் இருக்கும் சிறு கடை வியாபாரிகள் மக்களை உள்ளே இழுக்க அவர்களது வியாபாரக் கூவலை ஒரு பக்கம் இசைத்துக் கொண்டிருப்பர். மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து உஸ்மான் வீதியில் வந்து சேரும் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் உள்ள ரங்கநாதன் தெருவில் ஒரு கடையை மட்டும் பெயர் பலகையில் சில மாற்றங்களுடன் திரும்பத்திரும்ப காண முடியும். இம்முறை அந்தக் கடைகளை மட்டும் நான் விரல் விட்டு எண்ணிய பொழுது 'ரங்கநாதன் தெரு' என்ற பெயரை 'சரவணா வீதி' என்று மாற்றுவது தான் உசிதம் என்றுத் தோன்றியது.      

உஸ்மான் சாலை 

ரங்கநாதன் தெருவில் இருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு உஸ்மான் சாலையை அடைந்து, மேம்பாலத்தின் அடியில் போத்தீஸ் நோக்கி நடந்தேன். இந்த மேம்பாலம் கட்டும் முன் இந்த சாலையில் தானே மொத்த வாகன போக்குவரத்தும் நடந்திருக்கும், ஆனால் இப்போது மக்கள் நடப்பதற்கு கூட இங்கு இடம் இல்லை. உஸ்மான் வீதியில் நடக்கும் போது, ஒவ்வொரு பிரம்மாண்டமான கடையை கடக்கும் பொழுதும், உங்கள் வீட்டு ப்ரிட்சை திறக்கும் போது கிடைக்கும் அந்த குளிர்ந்த காற்றின் சுகத்தை  உணர முடியும். அழகு சேர்க்கும் வண்ண விளக்குகளும் தேவைக்கு அதிகமாக இயங்கும் குளிர் சாதனங்களும் இங்கு இருக்க, தமிழகத்தில் பல வீடுகளும் தொழிற்சாலைகளும் இருளில் மூழ்கி தவிக்கின்றன. இந்த வீதியில் பைக் பார்க்கிங் செய்வதே கடினம், பண்டிகை வேளையில் சீருந்தில் வந்துவிட்டால் நீங்கள் பார்க்கிங் தேடி கண்டுபிடிப்பதற்குள் உங்கள் குடும்பம் ஷாப்பிங் செய்து முடித்து விடும். ஏதோ ஒரு கடையின் பார்க்கிங் இடத்தில இடம் இருந்து நீங்கள் உங்கள் வண்டியை நிறுத்தி விட்டாலும், திரும்பி எடுக்கும் பொழுது அந்தக் கடையின் பொருள் வாங்கிய  ரசீது இல்லை என்றால் உங்களிடம் இருந்து ஒரு தொகையை (பெரும்பாலும் நூறு ரூபாய்) அபராதமாக வாங்கிவிடுவர். போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, இந்த இடத்தில் இருக்கும் கட்டிடங்கள் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கட்டப்படாததுதான் காரணம்.              

போத்தீஸ்

போத்தீஸ் கடையின் பார்க்கிங் இடத்தில், குறைந்த இடத்தில நிறைய சீருந்துகளை நிறுத்த, சமீபத்தில்  நவீன முறையில் வடிவமைத்து உள்ளனர். போத்தீஸ் கடையின் வாசலை அடைந்த பொழுது, டாட்டா ace வெள்ளை நிற ஷேர் ஆட்டோ வகைகள் 'போத்தீஸ் டு போத்தீஸ்' என்ற எழுத்துக்களுடன் இருந்தன. இது உஸ்மான் சாலையில் இருக்கும் போத்தீஸில் இருந்து GN. Chetty சாலையில் இருக்கும் போத்தீஸ் boutique வரை செல்ல வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இயக்கும் இலவச சேவை. போத்தீஸ் உள்ளே சென்றால் பெண்கள் கூட்டம் ஏக்க செக்கம். அங்கு இருக்கும் பத்து சதவீத ஆண்கள் பில் செலுத்தவும், துணிகளை தூக்கவும், குழந்தைகளை கண்காணிக்கவும் மட்டுமே பயன்படுத்தப் பட்ட வேதனை தரும் காட்சிகள் கண்டு என் மனம் எதிர்காலத்தை நினைத்து கனத்தது. இங்கு ஐந்து முதல் ஐம்பது சதவீதம் வரை நீங்கள் வாங்கும் துணியின் MRP விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்படுகிறது.

பாண்டி பஜார்

தி.நகர் என்றாலே ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலைக்கு பிறகு ஒரு முக்கிய அங்கம் வகிப்பது பாண்டி பஜார் தான். (இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று அறிந்தவர்கள் சொல்லவும்). பாண்டி பஜாரில் மிகவும் பிரபலமானது நடைபாதையில் இருக்கும் கடைகளும் அங்கு கிடைக்கும் மலிவு விலை பொருள்களும். இதிலும் இருபது கடைகளில் ஒரு கடை மட்டும் தான் ஆண்கள் சம்மந்தமானா பொருட்கள் இருக்கும். அனைத்து கடைகளிலும் பெண்களுக்கு தேவையான உடைகள், காதணிகள், காலணிகள், என குவிந்து கிடக்கும். பனகல் பார்க்கில் நடக்கத் தொடங்கினால் கடைகளை பார்த்துக்கொண்டும் சில அழகுப் பொம்மைகளை ரசித்துக்கொண்டும் சென்றால் நடப்பதின் அலுப்பே தெரியாது. ஆனால் சமீபத்தில் அரசாங்கம் இந்த நடைபாதை கடைகளை அகற்றிவிட்டு, அங்கு இருந்த வியாபாரிகளுக்கு பாண்டி பஜார் பேருந்து நிலையம் அருகில் ஒரு புதிய வணிக வளாகம் கட்டிக்கொடுத்தது. வசந்த காலம் வீசிய பாண்டி பஜார் வீதியை இன்று வெறிச்சோடி காண்பதில் மனம் வலிக்கின்றது.    

சென்னை சில்க்ஸ்

அடுத்து சென்னை சில்க்ஸ் உள்ளே சென்றவுடன் நுழைவு வாயிலில் இருந்த பணியாளர் வரவேற்று 'சார் இங்க புதுசா ஜெவல் செக்ஷன் துறந்திருக்கோம். வந்து பார்கரின்களா' என்று அழைக்க, நான் 'ழே' என்று விழித்ததை கண்ட அவர் 'நீங்க சும்மா பார்த்தா மட்டும் போதும். எதுவும் வாங்கத் தேவையில்லை' என்று புன்னகைத்தார்.  அவர்,  அவரது மேற்பார்வையாளர் காணும் வகையில்  அங்கு இருந்த புதிய வகை நகைகளை எனக்கு விளக்க, நான் அவரை பின் தொடர்ந்தேன். ஒரு இடத்தில இருந்த ஒரு தங்க சங்கிலியும் டாலரும் என்னை நகர விடமால் தடுத்து. எங்கள் வீட்டு நாயை கட்டி வைத்திருக்கும் சங்கிலியை விட அது கனமாக இருந்தது. அந்த டாலரும், ஒரு மூன்று சென்டி மீட்டர் வட்டளவில் தங்கத்தில், நடுவில் ஒரு ஒட்டப்பட்ட படத்துடன் இருந்தது. அந்த படத்திற்கு உரியவர் தமிழக  முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அன்று 'இவ்வளோ காசு கொடுத்து இதயெல்லாம் யாருடா வங்கப் போறாங்க' என்று எண்ணினேன். ஆனால் இன்று மேடையேறிய சில ஒத்திகை பார்க்காத நாடகங்கள் மூலம் இதை வாங்க இங்கு நிறைய கைகள் உண்டு என்பதை உணர்ந்தேன்.  

சென்னை சில்க்ஸில் நடக்கும் தள்ளுபடி சற்று வித்தியாசமாக இருந்தது. உதாரணத்திற்கு இங்கு 15% தள்ளுபடி கொண்ட ஒரு 800 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கினால், உங்களுக்கு    120 ரூபாய் ( 15% of 800) மதிப்புள்ள மூன்று மாத வேலிடிட்டி கொண்ட ஒரு வௌச்சர் கொடுப்பார்கள். அதைக் கொண்டு நீங்கள் அடுத்து சென்னை சில்க்ஸில் வாங்கும் பில்லில் 120 ரூபாயை தள்ளுபடி செய்துகொள்ளலாம்.

புத்தகமும் சிறுமியும்

சென்னை சில்க்சை விட்டு வெளியில் வந்தவுடன், அழுக்கான சட்டையும், அரை பாவடையும், பல நாள் குளிக்காத தலையுடனும் ஒரு எட்டு வயது சிறுமி    தன் கையில் இருந்த கலர் அடிக்கும் புத்தகம் ஒன்றை நீட்டி 'அண்ணா. பத்து ரூபாய் தான். ஒன்னு வாங்கிக்கோங்க' என்றாள். எனது வீட்டில் சிறுவர்கள் குழந்தைகள் யாரும் கிடையாது என்பதால் அந்தப் புத்தகம் வாங்கி எந்தப் பயனும் இல்லை என்று தோன்றவே 'வேண்டாம்' என்று மறுத்து விட்டு. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். நான் வேண்டாம் என்ற போதும் அந்தப் பெண் விடாமல் என்னையே பின் தொடர்ந்து கெஞ்சத் தொடங்கினாள். அவள் என்னை தொட்டு தொட்டு கெஞ்சியது சற்று அறுவெறுப்பாக இருக்க எனக்கு கோவம் அதிகமாகி, 'வேண்டாம் கூட வராத' என்று சற்று கனத்த குரலில் திட்டினேன். அப்பொழுதும் அவள் சலிக்காமல், என்னைக் கெஞ்சிக்கொண்டே தொடர்ந்தாள். எனது பிடிவாதம் என் மனதை மாற விடமால் செய்தது. இப்படியே என்னைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸில் இருந்து தி.நகர் பேருந்து நிலைய சிக்னல் வரை வந்தவள், சட்டேன்று அவள் கையில் இருந்த புத்தகத்தை என் கையில் வைத்து விட்டு, வேகமாக திரும்பி சென்று விட்டாள். அந்த சம்பவம் என்னுள் எதோ ஒரு குற்ற உணர்ச்சியை தூண்டிவிட, அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மனமின்றி  ரயிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.  

'ஆடி தள்ளுபடி' என்று   ஒரு மோக அலையை மக்கள் மனதில் வீசி, மற்ற 335 நாட்களில் நடக்கும் வியாபாரத்தை இந்த 30 நாட்களிலேயே சம்பாதித்து, ஆண்டிற்கு ஒரு புதிய கிளை திறந்து விடுகின்றனர் இந்த ஆடை உலகின் முதலைகள். விலைகளை உயர்த்தி  பின் தள்ளுபடி என்ற பெயரில் விலைகளை குறைத்து விற்கும் உக்திக்கு இந்த மக்கள் எத்தனை காலம் தான் விழுவர் என்று தெரியவில்லை. 

10 comments:

  1. ஹப்பா தி நகரையே அலசிவிட்டீர்கள்! அழகான பதிவு! தேன் மிட்டாய் ரொம்பவே சுவையாக இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசி சார்

      Delete
  2. இறுதி வார்த்தைகள் மிகவும் உண்மை! பார்க்கப்போனால் தள்ளுபடி என்ற வார்த்தையே பொருளாதார பாடத்தைப் பொறுத்தவரை கிடையாது! முதலாளிகள் பைத்தியக்காரர்களா என்ன தள்ளுபடி செய்து விற்க.? ஏமாற்று வேலையே!

    ReplyDelete
  3. பாண்டி பஸார் பெயர் பற்றி எழுதுனது இது. இது ஆக்ச்சுவலா 'அந்தப் பாண்டி'யாக்கும்!

    // பாண்டிபஸாரின் பெயரை மாத்தி இருக்காங்க போல! இப்ப அது சவுந்திர பாண்டியனார் அங்காடி(யாம்!) ஸர். தியாகராயா சாலையும் சவுந்திர பாண்டியனார் சாலையாக இருக்கு. ஓ.... அப்ப இந்தப் பாண்டி... அந்தப் பாண்டியா!!!! அட! இதுவரை பாண்டி பஸார் என்ற பெயர் எப்படி வந்துருக்குமுன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லையே! //

    நம்ம நகர் வலம் இங்கே !
    http://thulasidhalam.blogspot.com/2014/02/blog-post_12.html

    ReplyDelete
    Replies
    1. பெயர் மாற்றி இருக்காங்களா!?

      Delete
  4. //ஏதோ ஒரு கடையின் பார்க்கிங் இடத்தில இடம் இருந்து நீங்கள் உங்கள் வண்டியை நிறுத்தி விட்டாலும், திரும்பி எடுக்கும் பொழுது அந்தக் கடையின் பொருள் வாங்கிய ரசீது இல்லை என்றால் உங்களிடம் இருந்து ஒரு தொகையை (பெரும்பாலும் நூறு ரூபாய்) அபராதமாக வாங்கிவிடுவர்.//

    அடப் பாவிகளா...! இது வேறா?

    //அவள் கையில் இருந்த புத்தகத்தை என் கையில் வைத்து விட்டு, வேகமாக திரும்பி சென்று விட்டாள்.//

    என்ன பயன்?

    ReplyDelete
    Replies
    1. அவளது செயல் எனக்கும் விளங்கவில்லை .

      Delete
  5. பாண்டிபஜாரில் கடைகள் மலிவு விலையா? ஒரு பத்து வருசம் முன்னேயே ஒரு கடையில் சேல்ஸ்வுமன்கள் இப்படி பேசிக்கொண்டார்கள். இன்னிக்கு சரவணா ஸ்டோர் லீவு போல! அதான் அந்த பார்ட்டிங்க எல்லாம் இங்க வந்து உசுர எடுக்குதுங்க! என்றார். என் சென்னை விஜயத்தில் முன்பெல்லாம் தி.நகர் கட்டாயம் இருக்கும். இப்போது சென்னையே போடா வெண்ணை என்று ஒதுக்கி வைத்திருக்கிறேன்! அவ்வளவு தூசு!

    ReplyDelete
  6. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  7. திநகரில் உள்ள பாண்டி பஜாருக்கு அந்த பெயர் ஏன் வந்தது என்று கேட்டிருந்தீர்கள்! மதராஸ் ராஜதானியை நீதிக்கட்சி பிரமுகர்கள் ஆண்டு வந்தபோது அவர்கள் அமைத்த புதிய நகருக்கு பெயர் தியாகராயநகர் என்பதாகும். அது நீதிக்கட்சியின் தலைவர் சர் சி பி தியாகராயர் அவர்களை குறிப்பதாகும். அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த W.P.A. சௌந்தர பாண்டியன் (நாடார்)
    அவர்களின் பெயரில் அமைந்த கடைத்தெருவுக்கு பெயர்தான் "பாண்டி பஜார்" என்று மருவிற்று! தியாகராய நகரில் உள்ள பெரும்பாலான தெருக்கள் அனைத்தும் அந்த காலத்திய நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்களைக் கொண்டே இன்றும் அமைந்திருக்கிறது!
    மேலதிக விவரங்களுக்கு: https://en.m.wikipedia.org/wiki/Justice_Party_(India)

    ReplyDelete