Sunday, January 12, 2014

வீரத்துடன் ஜில்லா பார்த்த கதை

அஜித் மற்றும் விஜய் படம் ஒரே நாளில் வெளி வருகின்றது என்றால் இரு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பும் மற்றவர்கள் மத்தியில் சற்று பயமும் தோன்றத்தான் செய்கிறது. என் வீட்டில் நிச்சயம் முதல் நாள் படம் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையும் தோன்றியது. காரணம் இரு தரப்பிற்கும் இருக்கும் பழைய மோதல் வரலாறுகள் தான். 

மேலும் தொடரும் முன் எனக்கு என்று எந்த ஒரு தலைவனும் இல்லை நான் ஒரு சினிமா ரசிகன் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன். 

ஒரு சினிமா ரசிகனுக்கு என்ன வேண்டும், மக்கள் வெள்ளத்தில் விசில் பறக்க முதல் நாள் மாஸ் படம் பார்ப்பது தானே அவனது ஆசை. எனக்கும் அதே ஆசை தான். ரஜினி கமல் படம் முதல் நாள் பார்க்கும் அட்டகாசத்தை விட இந்நாளில் அஜித் விஜய் படங்களுக்கு இளவட்டங்கள் இடையே மௌஸ் கூடித் தான் இருக்கின்றது. அலுவலகத்தில் விடுப்பு வாங்கி வீட்டின் எதிர்ப்பை மீறி முதல் நாள், ஜனவரி பத்து, 'வீரம்' மற்றும் 'ஜில்லா' பார்ப்பது என்று முடிவானது.     
   
வீரம் 
மார்கழியின் காலை குளிர் என்னை சற்று நேரம் அலாரம் ஓசையையும் தாண்டி உறங்கச் செய்யவே, எனது body  sprayவை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாற்பத்து ஐந்து நிமிடங்களில் முதல் படம் வீரம் துவங்க இருக்க எனது splendor என் வீட்டு வாசலை விட்டு வெளியேறியது.      

என் வீட்டில் இருந்து நாவலூர் செல்ல இரு வழிகள் உண்டு. ஒன்று நகர்புற மேடவாக்கம் - omr வழி . இரண்டாவது கிராமப்புற சித்தாலப்பாக்கம் - தாழம்பூர் வழி. காலை வேளை  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க   சித்தாலபாக்கம் - தாழம்பூர் வழியில் பலத்த எதிர்பார்ப்புடன் வழக்கத்தை விட அதிக வேகத்தில் விரைந்தேன். சாலையில் வாகன  கூட்டம் சற்று குறைவாக  இருந்தமையால் என் வேகம் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.  

தாழம்பூர் கூட் ரோட்டில் இடது புறம் திரும்பி ஐந்து நிமிடப் பயணத்தில் நாவலூர் வந்துவிடும். முதல் நாள் படம் பார்க்கும் ஆர்வத்துடன் நான் விரைந்துகொண்டிருக்க, ஒருவன் சாலையை இடமிருந்து வலது பக்கம் கடக்க முயன்றான். அவன் தனது இடதுபுறம் மட்டுமே பார்த்துக் கொண்டு சாலையைக் கடந்துகொண்டிருந்தான். அவனது வலதுபுறமிருந்து வந்து கொண்டிருந்த நான் எழுப்பிய ஹோர்ன் சத்தம் அவனுக்கு கேட்கவில்லை. அவனைத் தாண்டி சென்றுவிடலாம் என்று என் மனதில் கணக்கு போட்டு வண்டியை வலது புறம் நகர்த்தவும் அவன் எனக்கு நேர் எதிரே வரவும்,  சடக்கென brake போட்டு வண்டியை நான் நிறுத்த, என் வண்டி சக்கரத்தின் அழுக்கு அவன் காற்சட்டையில் கரையை உண்டாக்கியது.         

என் இதயம் அந்த நொடி அதன் துடிப்பின் உச்சத்திற்கு சென்று திரும்பியது.   ஜிவ்வென ஏறிய கோபத்துடன் 'யோவ் ரெண்டு பக்கம் பார்த்து ரோட கிராஸ் பண்ண மாட்டியா?' என்று நான் கேட்பதற்குள் என்னைச் சுற்றி ஒரு கூட்டம் சூழ்ந்தது. அந்த கூட்டத்தில்  ஒருவன் 'இந்த IT  கம்பனிங்க வந்த அப்பறம் இந்த ரோட்ல எல்லாம் கண்ண மூடிகிட்டு பறக்கறாங்க' என்று குறை கூற ஆரம்பித்தான். எல்லாம் அந்த வட்டது ஆட்கள் போலத் தெரிந்தது, தனியாக சிக்கிக் கொண்டோமே என்று மனதினுள் பீதி கிளம்பினாலும், முகத்தை சற்று முறைப்பாகவே வைத்துக் கொண்டேன்.

கூட்டத்தை விளக்கிக் கொண்டு ஆறு அடி உயரத்தில் வேஷ்டி சட்டையுடன் ஒருவன் உள்ளே நுழைந்தான். வசமாக சிக்கிக் கொண்டோம் என்று என் மனம் துடிக்க, அருகிலே வசிக்கும் நண்பர்கள் யார் என்ற கணக்கை என் மூளை போடத் தொடங்கியது. எனது நண்பனின் போலீஸ் தந்தை என் வரிசையில் முன் நின்றார். உள்ளே வந்தவன் 'என்ன பிரச்சனை. தம்பி எங்க அவசரமா போகுது?' என்று கேட்டான். 

இது வேறு ஒரு சூழ்நிலை என்றால் 'என் அலுவலகம்' என்று சொல்லி இருப்பேன், ஏற்கனவே அந்தக் கூட்டத்தில்  ஒருவன் IT துறை  மீது தன் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்க, சற்று தயக்கத்துடன் 'வீரம் படம் பார்க்க போயிட்டு இருக்கேன் ஷோக்கு டைம் ஆகுது' என்றேன். அவன் முகத்தில் ஒரு பொலிவுடன் 'தல படத்திற்கு போறிங்களா. நான் காலையிலேயே பார்த்துட்டு இப்பதான் வர்றேன். படம் செம மாஸ். தல பட்டய கிளப்பி இருக்காரு. இந்த முட்டாப் பையனுக்கு ரோடு கிராஸ் பண்ணவே தெரியாது' என்று அவன் தலையில் கொட்டி, 'நீ போ தம்பி தல இன்ட்ரோ மிஸ் பண்ணாத' என்று கூட்டத்தை விலக்கினான்.

 'தல படமும்   மலமாடுகளும்' என்று நண்பர் ராம் குமார் எழுதிய அவருடைய அனுபவம் போலவே என் வாழ்விலும் நடந்ததை எண்ணி வியந்து திரையரங்கை அடைந்தேன். 9 20க்கு துவங்க வேண்டிய படம் 9 15 தொடங்க எழுத்து பார்க்க முடியாமல் போனாலும் திரையில் அஜித் தோன்றும் காட்சியில் படி ஏறி திரை அருகே சென்றேன். என்னை போல் தாமதமாக உள்ளே வந்து கொண்டிருந்தவர்களும் இருந்த இடத்தில அப்படியே நின்று ஐந்து நிமிட ஆரவாரதிற்குப் பின்னரே தம் இருக்கையை நோக்கிச் சென்றனர்.                        

ஜில்லா 
அடையாரில் இருக்கும் 'கணபதி ராம்' திரையரங்கில்  நான் பார்க்கும் முதல் மற்றும் இறுதிப் படம் ஜில்லா என்று வரலாற்றில் பதிக்கிறேன். 2 30 மணிக்கு தொடங்கும் படத்திற்கு ஒரு மணிக்கே கிளம்பி திரையரங்கை  1 45 மணிக்கு சென்றடைந்தோம். 60 மற்றும் 80 ரூபாய் டிக்கெட் விலை கொண்ட அந்த திரையரங்கம்  முதல் நாள் ரசிகர்களுடன் காண்பதற்கு உகந்த திரையரங்கம் எனபது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டததில் நன்கு தெரிந்தது. காவல் துறை உதவி கொண்டு கூட்டத்தை வரிசை படுத்தி சீரமைக்க முயன்றும் அந்த முயற்சி பெரும் தோல்வி தான்.

முந்தைய காட்சி முடிவடைய வெளியே காத்துக்கொண்டிருந்தோம். டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்ட நேரம் 2 30, ஆனால் முந்தைய காட்சி முடியவே 2 45 ஆகிவிட்டது.  நுழைவு வாயிலை ஒருவர் செல்லும் அளவிற்கு திறந்து வைத்துக்கொண்டு, அந்தக் காவல் துறை அதிகாரி டிக்கெட்டுக்களை சரி பார்த்து ரசிகர்களை உள்ளே விடத் தொடங்கினார்.    

 வாயில் கதவின் படிகளுக்கு அருகிலேயே நாங்கள் இருந்தாலும் வாயிலை நெருங்க பெரும் போராட்டமாக மாறியது. ரசிகர் கூட்டம் எல்லாத் திசைகளில் இருந்தும் வாயிலை நோக்கி நகர, கூட்டத்தில் நசுங்கத் தொடங்கினேன். மன்னன் படத்தில் கொடுப்பது போல் இங்கு தங்க சங்கிலியும் மோதிரமும் கொடுக்கவில்லை என்றாலும் யார் முதலில் செல்வது என்ற போட்டியில் அந்தக் கூட்டத்தில் ஒழுங்கின்றி பலரும் முந்தத் தொடங்க, மைதா மாவு போல் என்னை பிசைந்தனர். கூட்டத்தில் எந்தப் பக்கமும் விழ வாய்ப்பில்லை என்ற மனதில் உறுதியுடன் வாயிலை நோக்கி முன்னேறினேன்.  

 நாவில் தாகம் தவிக்க, இன்னும் பத்து அடி சென்றால் ஆபத்து விலகிடும் என்று மனம் சொல்ல, உடலை மூலை முன் நோக்கி செயல் படுத்தியது. பெரும் போராட்த்ததிற்குப் பின் ஒரு வழியாக உள்ளே நுழைந்த பொழுது, சட்டை கசங்கி தலை, கலைந்து, செருப்பு கிழிந்து, ஒரு சண்டையில் இருந்து வெளிவந்த 'கைப்புள்ள' போலவே நான் காட்சியளித்தேன். நிதானித்துக் கொண்டு திரையரங்கினுள் நுழைந்து, முந்தைய காட்சிகளில் வான் நோக்கி பறந்து, தற்போது தரையில் குவிந்து கிடக்கும் பேப்பர் குப்பைகளின் மேல் நடந்து சென்று, என் இருக்கையில் அமர்ந்தேன். 

அந்த நெரிசலை சமாளித்து அனைவரும் உள்ளே வர காத்திருந்த அந்த அரை மணி நேரத்தில் மூன்று படங்களின் முன்னோட்டம் போட்டப் பிறகே படம் திரையிடப்பட்டது.  படம் தொடங்கி ஒரு பத்து நிமிடங்கள் சென்றவுடன் எங்களுக்கு முன் மூன்றாவது வரிசையில் ஒரு சலசலப்பு கேட்க எங்கள் கவனம் அங்கு திரும்பியது. 

'நான் நகர மாட்டேன். ...தா ரெண்டு மன்நேரம் இங்கதான் நிப்பேன் என்ன செய்வ?' என்று இருக்கையில் இருந்த ஒருவனைப் பார்த்து நின்று கொண்டிருந்த ஒருவன் சண்டை பிடித்தான். அவன் நண்பன் அவனை சமாதானப் படுத்தியும் 'என்ன திமிரா பேசறான் இவன். என்னால நகர முடியாது. என்னடா பண்ணுவ ...லு' என்று வம்புடன் நின்றான். அமர்ந்திருந்தவன் அமைதி காக்க, இவனது நண்பர்கள் அவனை சமாதனம் செய்து அவனை இருக்கையில் அமர வைக்க ஐந்து நிமிடங்கள் ஆனது. இது போன்ற செயல்களால் தான் முதல் நாள் படம் பார்ப்பது என்பது ஒரு தடை செய்யப்பட்ட செயலாகவே உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. 

இரு படங்களின் விமர்சனத்தை எதிர் பார்த்து வந்தவர்களுக்கு என்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை. இரு தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து என்றாலும்,   இரண்டு படங்களுமே வழக்கமான சண்டை, காதல், குடும்பம், பாட்டு, நகைச்சுவை கலந்த மசாலா படங்கள். முந்தைய flopஆன அஜித்-விஜய் படங்களுடன்  ஒப்பிடுகையில் இவை எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.  இதுபோல மசாலா இல்லாமல் வரும்  இயல்பான படங்களின் மீதே எனக்கு நாட்டம் அதிகமாக உள்ளது.                    

11 comments:

  1. தலைப்பே எந்த படம் பரவாயில்லை என்று சொல்கிறது...

    ReplyDelete
  2. இது விமர்சனம் அல்ல . அடிபட்டு படம் பார்த்த கதை

    ReplyDelete
  3. //'நான் நகர மாட்டேன். ...தா ரெண்டு மன்நேரம் இங்கதான் நிப்பேன் என்ன செய்வ?'//

    அவன் எனக்கு முன்னாடி தானே பாஸ் நின்னுட்டு இருந்தான்?

    ReplyDelete
  4. body sprayக்கு வேலை வைத்துமா கூட்டத்தில் வழி விடல ?

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கூட்டத்தில் பலர் body spray உம் செயல் இழந்து தான் இருந்தது

      Delete
  5. உங்க நிலைமையைப் பாத்தா பாவமா இருக்கு... இப்படி முதல் நாளே படம் பாக்கனுமான்னு தோணுது... கூடவே . வீரம் படம் பார்த்த கதை எழுதலாமான்னு...

    ReplyDelete
  6. ஒரே நாளில் இரண்டு படங்களா...அம்மாடி!

    ReplyDelete
  7. ஜில்லாவை வீரத்துடன் பார்த்ததை சம்மதிக்கனும்ய்யா உம்மை, எனக்கு பொறுமை [[வீரம்]] இல்லாம பாதியிலேயே காறி துப்பிட்டு வந்துட்டேன்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரர்
    நான் அடுத்தடுத்த நாள் பார்த்தேன். வீரத்தின் வேகத்திற்கு ஜில்லா போட்டி கூட போடவில்லை. தங்களின் பகிர்வு அருமை. தொடருங்கள்..
    ---------
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து!

    ReplyDelete