Sunday, March 31, 2013

மாத்தியோசி

திங்கட்கிழமை காலை புதுச்சேரி பேருந்துநிலையத்தில் சென்னை செல்லும் ECR வழி பேருந்தில் ஏறி அமரும்போது, சூப்பர் ஸ்டார் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த மன நிறைவு கிடைக்கும். நான் செல்வது என் நண்பன் குமாரின் குழந்தையைக் காண்பதற்கு. அண்ணா நகரில் உள்ள SMF (சுந்தரம் மெடிக்கல் பௌன்டேஷன் )இல் நேற்று காலைப் பிறந்தான். நான்கு மணிநேரப் பயணம். நின்று கொண்டிருப்பவர்கள் 'நீ எப்ப இறங்குவ' என்ற ஏக்கத்துடன் என்னை பார்க்க, கண்களை மூடி (நான் இறங்கமாட்டேன் என்பதன் சைகை), என் நினைவுகளை மனதில் அசைப்போட ஒரு சரியானத் தருணம்.

ஆறு வருடங்களுக்கு முன்பு…

நானும் எல்லாரையும் போல் இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தேன். தற்போது இரண்டாம் ஆண்டு. குமாரை எனக்கு கல்லூரி வந்தபின்தான் தெரியும். கடைசி இருக்கை பழக்கம். சன்னல் ஒர இருக்கை.  வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது பல உலக நடப்புகளைப் பற்றிபேசி ஆராய்வோம். ஆசியா மற்றும் ஐரோப்பா என்னுடையது. அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அவனுடையது.

'போன வாரம் எங்க மாமா கல்யாணத்துக்கு போய் இருந்தேன் இல்ல. மாப்பிளைக்கு இருபது பவுன் நகை , பொண்ணுக்கு நூற்று ஐம்பது சவரன் நகை, ஒரு 'audi' கார் வரதட்சணையா கொடுத்தாங்க.  நான் ஆடிப்போயிட்டேன்.   என்னதான் உழைச்சாலும் நம்ம பெரிய மனிஷன் ஆக ஐம்பது வயசுக்கு மேல ஆயிடும். படத்துல எல்லாம் காட்டற மாதிரி வாழ்கைல சீக்கரம் முன்னேற இதுதான் சுலபமான வழி.'

'நீயே சம்பாதிச்சு கால் வயறு நெரஞ்சாலும், அதுல கெடைக்கற சந்தோஷம் உனக்கு இதுல கிடைக்காது. பகல் கனவு காணாத'  

"நீ காதல் பண்ணற, இப்படித்தான் பேசுவ. எங்களுக்கு எல்லாம் வீட்டுல எதாச்சு ஒன்னு பார்த்து வச்சாதன கல்யாணம்னு ஒன்னு நடக்கும் "

"நான் எப்பவமே இப்படிதான் இருப்பேன். உழைப்பே உயர்வு."

"உன் காதலுக்கு வீட்டுல ஒத்துகுட்டான்களா ?"

"வாய்ப்பே இல்ல "

"அப்பறம் ஓடிப்போய் .......?"

"நீயும் இப்படி பேசர. நான் சொல்றதக்கேளு. பாக்கியராஜ் படம், 'தாவணிக் கனவுகள்' பார்த்திருக்கியா ?"

" பார்த்திருக்கேன். அதுக்கு என்ன "

"அதுல முதல் காட்சி எப்படி ஆரம்பிப்பாரு? அப்படித்தானே இருக்கு நம்ம சமுதாயம் இன்னமும். தெரியாத ஒருத்தி கூட சேர்த்துவைப்பாங்களாம் ஆனா பழகன ஒருத்தி கூட சேர கூடாதாம். கேட்டா, சொந்த பந்தம் என்ன சொல்லும்னு கேக்கறாங்க. நம்ம நல்லா வாழ்ந்தா, பார்த்து பொறாமை படற இந்த சொந்தங்களோட விருப்பம்தான் முக்கியமா? இல்ல வாழப்போறவங்க விருப்பம் முக்கியமா? நீயே சொல்லு."

"நீ ஒரே பையன். ஊர் கூட்டி, சொந்த பந்தம் வாழ்த்த, உன் கல்யாணத்த நடத்தனும்னு அவங்களுக்கு ஆசை இருக்காதா ? "

"ஊர்ல இருக்கரவன எல்லாம் கூப்டு வச்சு கல்யாணம் பண்ணா, கூட்டு சரி இல்ல, சாம்பார்ல உப்பு இல்லன்னு தான் சொல்லுவானுங்க. யாராவது வாழ்த்த வராங்களா. ஒரு கடமைக்காக வரும் சில பேர், தற்பெருமை பீத்திக்க வரும் சில பேர், சாதிக்காக வரும் சில பேர், கூட்டம் சேர்க்க வரும் சில பேர், வெட்டி கதை பேச வரும் சில பேர், சாப்ட வரும் பல பேர் (கல்யாண சமையல் சாதம்......). சாப்பாடு பந்தி தொறந்த உடனே சத்தரம் காலி ஆயிடும். "

குமார் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட, அவன் குரல் ஆசிரியரைத்தாக்க, இருவரும் வகுப்பை விட்டு வெளியேற்றப் பட்டோம்.

'வெளிய வந்ததும் வந்துட்டோம், பசிக்குது போய் எதாச்சு சாப்டுவோம்' என்று நான் அவனை எங்க கல்லூரி சிற்றுண்டியகம் அழைத்து சென்றேன்.

'நம்ம கல்யாணத்துல வீடியோ, போட்டோ எல்லாம் எடுக்கராங்களே, அதை எல்லாம் யாராச்சு வருஷா வருஷம் பார்க்கறதா பார்த்திருக்கியா இல்ல கேள்விதான் பட்டிருக்கியா ?'

எங்க காலேஜ் சமோசாவ கடிச்சிகுட்டே ‘தெரியாத்தனமா இவன் வாய கெளரிட்டேன்’,இல்லைனு தலையாட்டினேன்.



'எப்படி முடியும். ஒரு மொக்கபடத்த ஒருவாட்டி கூட பார்க்க முடியாது. அந்த வீடியோவ ஒரு வருகைப் பதிவேடா பயன்படுத்தனா அப்படித்தான் இருக்கும்'

'நீ என்னதான் சொன்னாலும், கல்யாணம் வாழ்கைல ஒரு நாள் விழா, செலவு பண்றதுல தப்பில்ல'

'கணக்கு இல்லாம மத்தவுங்களுக்குகாக செலவு பண்ற காச எங்க பேர்ல வங்கிலபோட்டா காலம் பூரா நாங்க சந்தோஷமா இருப்போம்'

'அப்ப உன் கல்யாணம் பதிவாளர் அலுவலகத்துலையா?'

‘இல்ல. இயற்கை எழில் கொஞ்சும் என் கிராமத்துல.'

முதல் முன்காட்சி பதிவு முடிந்தது.

வண்டி கூவத்துர் அருகில் உள்ள 'செந்தூர் ஹோட்டல்'இல் நின்றது. அரசு பேருந்துகள் நிற்கும் அனைத்து உணவகங்களுமே என்னை இதுவரை சாப்பிட தூண்டியது இல்லை. இன்றும் அப்படித்தான். சாலையின் எதிர் புறத்தில் ஆடவர் மணலை நனைத்து கொண்டிருக்க, நடத்துனர் ஆரி போன மொளகா பஜ்ஜியை தன் டீஇல் நனைத்து கொண்டிருக்க, ஓட்டுனர் தன் ஓசி வாட்டர் பாட்டில்ஐ வாங்கி தன் தொண்டையை நனைக்க, அடுத்த பேருந்து வந்து நின்றது. பதினைந்து நிமிட இடைவேளைக்குப்பிறகு, பேருந்து தன் ஓட்டத்தை தொடர, நாமும் என் நினைவுகளை தொடருவோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ....

கல்லூரி முடித்துவிட்டு வேலையில் சேர கார்த்திருந்த சமயம். வீட்டில் சும்மா இருப்பதை சொந்தமும் நட்பும் கேளி பேசும் சமயம். ஒரு நாள் குமாரிடமிருந்து கல்யாண செய்தி வந்தது. அவன் விரும்பிய பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் கைபிடிக்கப் போகிறான் என்று.

அடுத்த ஞாயிறு அவன் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றேன். பேருந்து நிலையத்தில் இருந்து அவன் தம்பி என்னை அழைத்துச் சென்றான்.

'எல்லாரும் வந்தாச்சு.நீங்கதான் கடைசி. காலையிலயே கோவில்ல தாளி கட்டியாச்சு' என்று கூறி எனக்காக அவன் காத்திருந்த வெறுப்பை வெளிப்படுத்தினான்.


அவன் அழைத்துச் சென்றது ஒரு குளக்கரைக்கு. இரண்டு பனை மரங்கள் ஒரு வேப்ப மரத்துக்கு இரு புறமும் காவல் காக்க, வெள்ளை மணல் மேடுகளுக்கு நடுவில் இருந்தது அந்த தாமரைக்குளம். வெள்ளை நிற அல்லி மலர்களும் இருந்தன. குளத்தின் தலை ஊற்றுக்கு அருகில் ஒரு ஆலமரம் மிக உயரமாக வளர்ந்து படர்ந்து இருந்தது. வலுவான விழுதுகள் மரத்தை தாங்கிக் கொண்டிருந்தன. குமாரின் தம்பி இந்த மரம் சுமார் இருநூறு ஆண்டுகளாக இருப்பதாகச் சொன்னான். இருபது அடி தூரத்தில் வெள்ளைத் துணி ஏற்றிய கம்பங்கள் அங்கும் இங்குமாய் மணலில் நடப்பட்டிருந்தன. கம்பத்தின் மேல் இருந்த கொடி காற்றின் திசையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விழுதுகள் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. மர நிழலில் ஒரு புறம் பாய்கள் விரிக்கப்பட்டு அனைவரும் அதில் வட்டமாய் அமர்ந்திருந்தனர், மற்றொரு புறம் சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விறகு அடுப்பில்.

மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்பார்கள். அதில் பலரும் நண்பர்கள் தான். பல விதமான வேடிக்கை விளையாட்டுகள் நடத்தபட்டன. எங்கும் மகிழ்ச்சி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் கதிரவன் மறையும் வரை. எல்லா நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யபட்டன. இதைத்தான் மலரும் நினைவுகள் என்பார்களோ. இந்த நாளை என்று நினைத்தாலும் மனதில் இன்பம் பொங்கும். அனைவரும் வரிசையாக வந்து புதுதம்பதியரிடம் தங்களுக்கு பிடித்தது பிடிக்காததை பட்டியலிட்டனர். அவர்கள் என்றும் அன்புடன் வாழ ஆசிகளும் தெரிவித்தனர்.

சந்திரன் கதிரவனை அகற்றியபின், பௌர்ணமி நிலவொளியில் குளத்தங்கரையில், நிலா சோறு உண்டு குமாரின் திருமண வைபோகம் முற்றியது.

இரண்டாம் முன்காட்சி பதிவு முடிந்தது.


பேருந்து கோயம்பேடு வந்து சேர்ந்தது. மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்லலாம் என்று எண்ணி


'சுந்தரம் மருத்துவமனை போகனும்.எவ்வளோ?'

'நூறு ருபாய் சார்.'

'இங்க இருந்து இருபது நிமிஷம் கூட ஆகாது இவ்வளோ சொல்றிங்க'

'ஒன் வே சார், சுத்தி சுத்தி போகனும்'

'இல்லனா மட்டும் கம்மியாவா கேப்பிங்க'

'150ரூபா கொடு சார் நம்ம ஆட்டோல போலாம்'னு இன்னொருத்தன் வந்தான்.

'நான் ஒன்பது ரூபா கொடுத்து பஸ்லயே போறேன்'.

பெங்களுருவில் 'ஷேர்ஆட்டோ' என்பதே கிடையாது. காரணம் மக்கள் செல்லும் வகையில் ஆட்டோ கட்டணம் மலிவாக உள்ளது. நான் 2011இல் பெங்களுரு சென்ற போது, மூன்று கிலோ மீட்டர் வரை பதினேழு ரூபாய் தான் கட்டணம். நான் இருபது ரூபாய் கொடுத்து மூன்று ரூபாய் திரும்ப பெற்றபோது 'சென்னைல ஆட்டோகாரங்க பண்ணற அராஜகம் எப்ப ஒழியுமோ?' என்று என்னுள் எண்ணினேன். சென்னையில ஆட்டோக்காரங்களோட சண்ட போடாதவுங்க யாருமே கிடையாது.

கல்யாணத்துக்கு பின் பலமுறை குமாரிடம் பேசியதுண்டு. அவன் உறவினர்கள் அவனை தள்ளி வைத்தனர், அவன் பெற்றோர் நடுத்தர வர்கம். வசதி இல்லை. குமார் arrear வைத்தமையால் அவனுக்கு ஒரு BPOவில் தான் வேலை கிடைத்தது.  ஆறு ஆயிரத்து முன்னூறு ரூபாய்  சம்பளம், தான் சம்பாதித்து தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற கர்வம் கொண்டான். இருவரும் நிறைய கஷ்டப்பட்டார்காள். ஆனால் எப்பொழுது பேசினாலும் ஒரு குறையுமின்றி சந்தோஷமாய் இருப்பதாக   கூறுவான்.

(கடுப்பாகாதிங்க .அடுத்ததுதான் கடைசி பத்தி )

ஒரு வழியாக நடந்து வந்து மருத்துவமனையை அடைந்தேன். மழலை முகத்தை பார்த்தால் என்ன ஒரு ஆனந்தம். குமார் எனக்கு இனிப்பு வழங்கினான், குழந்தைக்கு என்று எண்ணி என் வாயில் லட்டுவை வைத்தபோது 'எனக்கு நல்ல வேல கெடச்சிருக்கு. ஒரு ஆண்டிற்கு 4.79 லட்சம்.'

குமார் என்னிடம் 'உனக்கு எப்படா கல்யாணம்?'

'பார்துகுட்டு இருக்காங்க எதுவும் சரியா அமையல'

'எது அமையல? வரதட்சனையா?' என்று குமார் என் முகத்தில் அறைய, கோபத்துடன் நான் அவனை முறக்கை, அவன் முகம் அரண்டு போய் இருக்க, எங்கள் HOD சன்னல் வழியே என்னை முறைக்க, என் பகல் கனவு நிறைவுற்றது.      

9 comments:

  1. குளக்கரையை விவரித்த விதம் கண்முன் வந்து சென்றது..

    காட்சிகளை இயல்பாக விவரிக்கும் திறமை உன் பிளஸ் என்று நினைக்கிறன்... அருமையான சிறுகதை... தொடர்ந்து பயணிக்கவும் கனவு மெய்ப்பட

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. நல்லது சென்னை அனுபவம் இது மட்டும் நல்லது...

    பல கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என் எல்லா பதிவுகளையும் தவறாமால் படித்து, கருத்துரைகளை பதிவு செய்யும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  3. sila karuthukkal enoda paarvaiyil....

    first part la clarity kammiyaa irunthuchu, compared to u r old stories... also difficult to follow the narration in some places. Apart from these, explaining the scenario like hotel scene,pond,tress etc was a good narration. bangalore auto kaarargal pazhaya maathiri illa nu unaku nalla theriyum rubak...ethirka irukira hotel ku Rs.50 kaeta aalunga angayum irukaanga :) As usual good ending with a twist.I think here is u r uniqueness..

    inum pala sirikathaigal elutha vaalthukkal...

    pinkuripu: ippa nee periya eluthaalanaita...so unoda paeruku munaadi oora sethukanum...ipa elaam apadi thaa panraanga...so indru muthal nee kadapaakam rubak :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா. வீண் புகழ்ச்சி தேவ இல்ல. நான் ஒரு சாதாரணமானவன். நீ பெரிய எழுத்தாளர்கள இன்னும் படிக்கல. நான் இப்பதான் எழுத கத்துக்கறேன். நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கு.

      Delete
  4. நல்லதொரு பதிவு..கடைசி பஞ்ச் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி :)

      Delete