Tuesday, May 7, 2013

கையேந்தி பவன் - வசூல் மன்னர்கள் (அனுபவங்கள்)

இரவு பத்து மணி, மனித நடமாட்டம் குறைந்து நாய்கள் வீதிகளை ஆக்ரமிக்கும் நேரம், என் சிறு குடல் பெருங்குடலை விழுங்க தயாராக இருந்தது, பையில் இருந்தது அறுபத்து ஆறு ரூபாய், எங்கும் மினு மினுக்கும் உணவு விடுதிகள், ராஜாவாக அல்ல சாணக்கியனாக சாப்பிட வேண்டிய தருணம், 'மனம் தளராதே இன்னும் தூரம் போ'  என்று என்னுள் ஒருவன் சொல்ல, வண்டியை ஒரு சந்துக்குள் விட்டேன்.


சற்று தூரத்தில் வெள்ளை விளக்கு எரிய, என் தேடல் முடியும் நேரம் வந்தது. நீல நிற வண்ணம் பூசிய நான்கு சக்கர தள்ளு வண்டி, ஒரு அடுப்பின் மேல்  இட்லி குண்டான்,  மற்றொரு அடுப்பின் மேல் தோசை கல், நான்கு பேர் பிளாஸ்டிக் கவர் மூடிய தட்டில் தோசையை பதம் பார்த்துக் கொண்டிருக்க, அந்த தோசை எப்பொழுது கீழே விழும் என்று இரண்டு நாய்கள் காத்துக் கொண்டிருந்தன. மாவு தீர்ந்து விட்டதால் கடை முதலாளி தன் கடை சிறுவனை மாவு கொண்டு வர அனுப்பினார். கடை மூடும் சமயம் என்பதால் இட்லியும் இல்லை, மாவு வர காத்திருந்தேன்.         

நான்கு நாட்கள் பின்னே சென்றால், மே ஒன்று உழைப்பாளர் தினம், இரண்டு தமிழ் படங்கள் எதிர்பார்ப்புடன் வெளியாகிய தினம் அது,நான்   அமெரிக்காவுக்கு உழைப்பதால் அன்று எனக்கு விடுமுறை இல்லை, உழைத்து கொண்டே உழைப்பாளர் தினம் கொண்டாடும் பல அடிமைகளில் நானும் ஒருவன், மறுநாள் வியாழன் முதல் தொடங்கியது என் சினிமா வேட்டை.  

எதிர் நீச்சல்: 
(அச்சம் வேண்டாம், இது சினிமா விமர்சனம் இல்லை.)
இந்த படத்தை உடன் பணிபுரிவோருடன் நாவலூர் AGSஇல் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, பைக்கை பார்க் செய்ய சீட்டு வாங்க எப்பவும் போல் இருபது ரூபா தாளை நீட்டினேன், 'முப்பது ரூபா சார்' என்று சொல்லி சுவரில் கட்டண மாற்றம் பற்றி எழுதியிருந்த பலகையை காட்டினான். மூன்று மணி நேரத்திற்கு முப்பது ரூபாய் சற்று அதிகம் தான், என்ன செய்வது வண்டியை வெளியே விட்டால்,போக்குவரத்து காவல் சில பல சித்துவிளையாட்டுக்கள் செய்துவிடுகின்றனர். 'அவன் மட்டும் எப்பவுமே நல்லவன் தான்' என்று என் மனம் சொல்லியது.

சூது கவ்வும்:
இந்த படத்தை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் எஸ்கேப் திரையரங்கில் பார்க்க சந்தர்பம் கிடைத்தது. பைக்கை பார்க் செய்ய செல்லும் போது, ஒரு நான்கு அடி உயர கம்பத்தின் தலையில், பொத்தானை அழுத்தினால் சீட்டு கக்கும் இயந்திரம் இருந்தது, அது வாயால் கக்கிய என் சீட்டை பையில் போட்டு உள்ளே சென்றேன். படம் முடிந்து வண்டியை சற்று சிரமத்துடன் கண்டுபிடுத்து வெளியே வரும்போது, வசூல் அதிகாரி என் சீட்டை கேட்டான், கொடுத்தேன். சீட்டில் இருந்த பார் கோடை ஸ்கேன் செய்தவுடன் 'நூற்று இருபத்து ஐந்து ரூபாய்' என்று அவன் திரையில் காட்டியது, நான் அவ்வளோ ரூபாய்க்கு பெட்ரோல் கூட போடவில்லையே என்று கேட்ட போது, வெளியில் இருந்த கட்டண பட்டியலை காட்டினான்.

அதில் வார நாட்களுக்கு ஒரு கட்டணம் என்றும்  சனி-ஞாயிறுக்கு ஒரு கட்டணம் என்றும் பிரித்து எழுதி இருந்தது. மேலும்  முதல் ஒரு மணி நேரம் ஒரு குறிப்பிட்ட கட்டணம் என்றும், அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூடுதல் கட்டணம் என்றும் எழுதி இருந்தது.  முக்கியமான குறிப்பு ஒன்று, அந்த இயந்திரம் கக்கிய சீட்டை தொலைத்தால் நூற்று எழுபது ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். இரண்டு சக்கரத்துக்கே இந்த நிலைமை என்றால், நான்கு சக்கரம் கொண்டு வருபவர்களின் நிலை, அப்பப்பா! கணக்கு போடவே தலை சுற்றுகிறது, பேருந்தில் செல்வது உசிதமென்ற நிலையை அடைந்தாலும், 'அவன் மட்டும் எப்பவுமே நல்லவன் தான்' என்று என் மனம் சொல்லியது.            

அயர்ன் மேன் - 3:
ஊரில் இருந்த அந்த ஒரு நல்லவனைத் தேடி போன பொழுது, இப்படமும் சேர்த்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பல ஆண்டுகளாக பத்து ரூபாய் மட்டுமே பார்க்கிங் கட்டணமாக வசூல் செய்து கொண்டிருந்த சத்யம் திரையரங்கில். ஆனால் எனக்கு அங்கும் ஏமாற்றம் தான், சமீப காலமாக இங்கும் பார்கிங் கட்டணம் இருபது ரூபாயாக மாறி இருந்தது. 'அவன் மட்டும் எப்பவுமே நல்லவன் தான்' என்பதை இனி சொல்ல முடியாது. காரணம்- இருந்த ஒரு நல்லவனையும் மாத்திட்டாங்க, நாடு வாழ்க!

 
சத்யவாக்கு: 
அப்போது தான் நினைவுக்கு வந்தது 'சத்யவாக்கு'நாடகம் சக பதிவர்களுடன் நாரத கான சபாவில் கண்டது.அங்கு பார்கிங் கட்டணம் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே. நாடக விமர்சனம் எழுதிய கணேஷ் சாரின் கருத்துரை மறுமொழியில் 'என்ன அங்க பார்கிங் கட்டணம் எல்லாம் வாங்கனாங்களா?' என்று அதிர்ச்சி கொண்டார். சென்னையில் காசுக்காக அலையாத சில நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று என்னுள் எண்ணி முடித்த பொழுது மாவும் வந்து சேர்ந்திருந்தது.

உடன் உணவருந்தி கொண்டிருந்த ஒரு சீருந்து ஓட்டுனர் என்னிடம் 'முப்பது ரூபாய்க்கு தயிர் சாதம் சாப்டவனும், மூவாயிரம் கொடுத்து சோலா ஓட்டல்ல தயிர் சாதம்  சாப்டவனும் காலயில  கக்கூசுக்கு தான் போகணும் தம்பி.' என்று ஆவேசமாக சொன்னார், அவர் சொல்லியதில் ஒரு உண்மை இருந்தது. அவர் கஸ்டமர் ஒருவர் சோலா ஓட்டலில் சாப்பிட்டு விட்டு தன் காரில் ஏறிய போது தயிர் சாதத்தின் விலையை தன்னிடம் கூறியதாக ஒரு விளக்கமும் தந்தார்.  மாவு தோசையாக மாற, ஆறு தோசை மற்றும்  இரண்டு ஹாப் பாயில் சண்டையில் மடிய, என் குடல்களுக்குள் சமாதான சால்னா பரவ, மனமும் வயிறும் நிறைய மொத்தம் ஐம்பத்து ஆறு ரூபாய்  கொடுத்தேன் கடைக்காரரிடம். ஹாப் பாயில் தொண்டையில் இறங்கும் போது கிடைக்கும் உணர்வு எந்த ஸ்டார் ஓட்டலிலும் கிடைக்காது. 

நான் கொடுத்த காசை எடுத்துக்கொண்டு கடைக்காரர் வேகமாக சென்றார், அவரை என் கண்கள் பின் தொடர, கொஞ்ச தூரத்தில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒரு காக்கிக் சட்டையிடம் இருபது ரூபாய் தாளை அவர் நீட்டியவுடன் காக்கி சட்டை பறந்தது. நான்  அவரை பார்த்து 'என்ன அண்ணே தினமும் இருபதா?' என்றேன். 'அப்படி எல்லாம் கணக்கு கிடையாது தம்பி, அவுக இந்த பக்கம் வர்றப்ப எல்லாம் கைல சொறியனும், காவல் தொர நம்  நண்பர்கள் இல்லையா?' என்று கூறி ஏளனமாய் சிரித்தவரின் மனதில் எத்தனை புரிதல், ஏழையின் சிரிப்பில் எந்த இறைவன் தான் தெரிவார்?

சென்னை வெய்யிலின் தாக்கம் இரவிலும் வாட்டிக் கொண்டிருக்க, வீடு வந்து அடைந்தவுடன்  தண்ணீர் பருக குளிர் சாதனப்பெட்டியை நான் திறக்க, உள்ளே ஒரு கரப்பான் பூச்சி தன் உவ்ர்ச்சியுறுப்பை என்னை நோக்கி ஆட்டியது. அக்னி நட்சத்திரம் யாரைத்தான் விட்டு வைக்கிறது!  

*******************************************விளம்பரம்****************************************************
காணவில்லை :
 கோலி சோடாவும் அவன் இளைய சகோதரி பன்னீர் சோடாவும்.

காணாமல் போன இடம் : கிழக்கு தாம்பரம்.      

கண்டுபுடிப்போர் இந்த தளத்தில் முகவரி இட்டு செல்லவும். (வெளி நாட்டு கம்பெனி சோடாக்கள் வருகையால் இவர்கள் தற்கொலை செய்திருக்கலாமோ என்று பரவலாக அஞ்சப்படுகிறது.)

16 comments:

  1. சென்னையின் பல ஷாப்பிங் மால்களில் இப்படி பகல்கொள்ளை அடித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்... நான் என்ன ஏது எதற்கு என்று கேள்வி எல்லாம் கேட்காமல் கொடுத்துவிட்டுத்தான் வருகிறேன்....


    சொல்லவரும் செய்தியை தெளிவான எழுத்து நடையில் தேவையான வார்த்தைகளைப் பிரயோகித்து வெளிக்கொணரும் விதம் அருமை... தொடருங்கள்.. நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. சில இடங்களில் இயன்ற வரை கேள்வி கேட்பது அவசியம். விரைவாக முதல் கருத்துரையிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி.

      Delete
  2. பல சமயம் வரும் கோவம் இது... பார்க்கிங் காசு வசூலிக்கலாம் தவறில்லை, அதற்காக அவன் கட்ட வேண்டிய வட்டியும் முதலையும் நம் தலையிலா கட்டுவது... சினிமா, பர்சேஸ் செய்த பில் போன்றவற்றிற்கு சலுகைகள் தரலாம்.. எல்லாருமே காசு கொடுக்க பழகிவிட்டோம் என்னும் நிலையில் அவனும் வாங்கத் தானே செய்வான்...

    கடவுளை மட்டும் திட்டும் பகுத்தறவு திராவிட அரசியல் வியாதிகளுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க எது நேரம்.... ஆனால் சத்யமில் டெம்ப்ரரி பார்கிங் இலவசம். மனதார அந்த ஒரு நல்லவனைப் பாராட்டலாம்....

    போலிஸ் சமுகம் என்று திருந்தப் போகிறது என்று தெரியவில்லை...

    சிந்திக்க வைத்த பதிவு.... அருமை ரூபக்

    ReplyDelete
    Replies
    1. டெம்ப்ரரி பார்கிங் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். நன்றி :)

      சில திராவிட அரசியல் வாதிகளே இது போன்ற இடங்களை பினாமி பெயரில் இயக்குவதாக பரவலான பேச்சும் உண்டு.

      ஒருத்தர் சராசரி ஐம்பது ரூபாய் என்றால், ஒரு இரண்டாயிரம் பேர் தினம் பார்க் செய்தால். பலர் போட மறக்கும் கணக்கு இது.

      Delete
  3. nalla irukunu solli bore adichiduchu rubak. as usual, good description with real time experience.increase in livelihood puts the life of daily wage workers into question.reading this, i can feel how spl our street foods in chennai.adichikka mudiyaathu...veli naadu pona inum puria varum,,,1 euro( INR.70) ku kamiyaa, vayir fulla saapdamudiyuma... chance eh illa ... 18 mani neram kashtapattu ulaikaravangalukku sethu vaikka kooda kaasu illaatha nelama...ithu maara vaaipu irukkaa nu nenaikara nerathula, inum mosamaagitu iruku avanga vaazhka... itharku muduve illai......

    ReplyDelete
    Replies
    1. சுயநலமும் சூழ்சியும் ஒழியும் வரை இவர்கள் நிலமையும் மாறாது. The rich get richer and the poor get poorer.

      Delete
  4. இது பகல் கொள்ளை அல்ல... பயங்கர கொள்ளை...

    இருந்த ஒரு நல்லவனையும் இப்படி செய்து விட்டார்களே...

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...ஹா....ஹா... (நன்றி PSV)

    சிந்திக்க சிரிக்க : அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Students-Ability-Part-8.html

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவை படித்து சிந்தித்து, சிரித்து ரசித்தேன்.

      அது என்ன PSV? எனக்கு புரியவில்லை.

      Delete
    2. வசனம் by P.S. வீரப்பா அவர்கள்...

      Delete
    3. நல்ல நியாபக சக்தி சார் உங்களுக்கு. விளக்கத்திற்கு நன்றி.

      Delete
  5. D.D.யின் கருத்து செம. இந்த விஷயத்துல என் வயித்தெரிச்சலயும் கோபத்தயும் எப்படி வெளிக்காட்டறதுன்னே புரியல. ஸேம் பிளட்!

    ReplyDelete
    Replies
    1. அவரரு வசனமா சொல்லிட்டாரு.
      //ஸேம் பிளட்!// ஹா ஹா. எல்லாருமே பாதிக்கபட்டு இருக்கோம்.

      Delete
  6. பார்க்கிங் கட்டணம் 125 ரூபாயா? ஐயோ....

    படங்கள் உடனே உடனே பார்த்து விடும் பழக்கமா...!

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு நன்றி .

      வழக்கம் என்று சொல்ல முடியாது, சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவதில்லை என்று சொல்லலாம்.

      Delete
  7. அருமையான நடை. இனிய பாராட்டுகள்.

    பார்க்கிங் கொள்ளையை நானும் சென்னையில் அனுபவித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்து பாராட்டி, கருத்துரையிட்டமைக்கு மிக்க நன்றி.

      Delete