Thursday, March 12, 2015

சாப்பாட்டு ராமன் - சீனா பாய் டிபன் சென்டர்

ஹோலி பண்டிகை கொண்டாட ஆசைப் பட்ட ரூபக், சரியான துணை மற்றும் இடம் கிட்டாத காரணத்தால், சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் புழங்கும் சௌகார்பேட்டைக்கு ஹோலி அன்று மாலை சென்றான். யாரேனும் ஒருவராவது தன் மீது வண்ணம் அடிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் மின்ட் ஸ்ட்ரீட்டினுள்  நுழையும் போதே, காவல் துறை போக்குவரத்தை தடுத்து, நடந்து செல்பவர்களை மட்டும் அந்த தெருவினுள் அனுமதிப்பதைக் கண்டு, தன் எண்ணம் ஈடேறும் என்று ரூபக்கிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

அந்தச் சாலையில் என்றும் இயங்கும் கடைகள் அன்று அடைக்கப்படிருந்தன. ஹோலி விளையாடியதற்கு சாட்சியாக, கரும்பலகையில்  பல வண்ணங்கள் கொண்டு வரைந்தது போல், அந்த  தார் சாலை தனது சுய நிறத்தை இழந்து வானவில்லாக ஜொலித்தது. அந்த சாலையில் சற்று தூரம் சென்றவுடன் எதிரில் வந்த புலியாட்டம், தாரை, தப்பட்டை, மற்றும் ஆண்டாள் ஊர்வலம் ஆகியவற்றைக் கண்டவுடன் தான் ரூபக்கிற்கு போக்குவரத்து மாறுதலுக்கான உண்மை காரணம் புரிந்தது. ஹோலி அன்று வடக்கர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆண்டாள் எந்த வித இடையூறும் இன்றி ஊர்வலம் வருவது நம் நாட்டின் ஒற்றுமையை ஓங்கச் செய்தாலும், ஹோலி கொண்டாட முடியாமல் போனது ரூபக்கிற்கு பெரும் ஏமாற்றமே.                

ரூபக் ஏமாந்தாலும், ராமனையாவது குஷிப்படுத்தலாம் என்று பர்மா வகை உணவுகள் கிடைக்கும் பீச் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தோம். சமீப காலத்தில் அவதாரம் எடுக்காமல் அடங்கியே வாழும் ராமனை அந்த வழியில் கண்ட ஒரு கடை விலாசத்தில் இருந்த 'George Town' என்ற வார்த்தை தட்டி எழுப்பியது. சுமார் ஓர் ஆண்டுக்காலமாக  George Town பகுதியில் இருக்கும் சீனா பாய் டிபன் சென்டரில் ஊத்தாப்பம் உண்ணவேண்டும் என்பது அவன் ஆழ் மனதில் பதிந்து இன்றுவரை நிறைவேறாத  எண்ணம். உடனே கூகுள் மேப் துணையுடன் அந்தக் கடை இருக்கும் இடம் அருகில் தான் என்பதை அறிந்து, கூகுள் அம்மணி வழி காட்ட தன் இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அந்த வழி தான் பயணம் தொடங்கிய மின்ட் ஸ்ட்ரீட்டின் தொடக்கத்தை தாண்டி செல்ல வேண்டி இருந்தது. சதுரமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து தொடங்கிய இடத்தை கடந்து தன் இலக்கை நோக்கி நடந்தான். உணவு என்று வந்துவிட்டால் ராமனுக்கு தூரம் ஒரு பெரிய விஷயம் அன்று என்பதை வாசகர்கள் நன்கு அறிந்திருப்பீர்.

இலக்கை நோக்கி செல்லும் போது, இடதுபுறம் ஒரு சீனா பாய் டிபன் சென்டர் வந்தபோதும், கூகுள் அம்மணி இலக்கை அடைய இன்னும் முன்னூறு மீட்டர் என்று சொல்ல, நம் ஊரில் தான் ஒரு பிரபலமான கடையின் பெயரிலேயே பல போலிக்கள் உருவாகுவது வழக்கமாயிற்றே என்று தொடர்ந்து நடந்தான் ராமன்.  முன்பு கண்ட ஆண்டாள் ஊர்வலம், அந்த கோவிலை நோக்கி சென்று கொண்டிருக்க, அந்த கூட்ட நெரிசலை பிளந்துகொண்டு ராமன் முந்தி சென்று பார்த்தால், கூகுள் அம்மணி காட்டிய இலக்கு 'சீனா பாய் ஜூஸ் கடை'. எப்பொழுதும் அந்த அம்மணியை முழுதாய் நம்பவே கூடாது என்று சபதம் கொண்டு, மீண்டும் அந்த ஊர்வலத்தை கடந்து முன்னமே கண்ட சரியான கடைக்கு ராமன் விஜயம் செய்தான்.

கடையின் முன்புறம்
சீனா பாய் டிபன் சென்டர் பொடி வெங்காய ஊத்தாப்பத்திற்கு மிகவும் பெயர் போன கையேந்தி பவன். இரண்டாம் தலைமுறையாக தொடர்ந்து இயங்கி வரும் அந்தக் கடையில் ஊத்தாப்பம் மற்றும் நெய் பொடி இட்லி ஆகிய இரண்டு உணவு வகைகள் தான் உண்டு. 

ஒரே கல்லில், இருபத்து நான்கு தோசைகளை முறுக செய்து கொண்டே, பல மொழிகளில்(நான் இருந்தவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி) சரளமாக புன்முறுவலுடன்  வாடிக்கையாளர்களிடம் பேசி அவர்களுக்கு காத்திருக்கும் அலுப்பு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் உரிமையாளர் சந்தானம். உதவிக்கு மூன்று வடக்கு வாலிபர்கள் இருந்தாலும், ஊத்தாப்பம் இவர் கைவண்ணம் தான். 'வீட்டில் ஏதேனும் விழா நாட்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் கடை 6 30 மணி முதல் இரவு 11 30 வரை இயங்கும்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சந்தானம்.

தோசைகளை தயார் செய்யும் சந்தானம்

இருபத்து நான்கு தோசைகளுக்கு கல்லில் ஒட்டி ஒட்டி மாவு ஊற்றி, அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை தூவி, இட்லி பொடியை அள்ளி வீசி, தோசை நனையும் அளவு எண்ணெய் ஊற்றி, பின் ஒட்டி இருக்கும் தோசைகளை ஜோடி ஜோடியாக வெட்டி, அவற்றை திருப்பி போட்டு, அவர் தாயார் செய்யும் அந்த இருபத்து நான்கு ஊத்தாப்பங்களும், கல்லில் இருந்து எடுக்கப் பட்ட அடுத்த பத்து நொடிகளில் காணாமல் போய் விடுகின்றன.


தக்காளி , புதினா என இரண்டு வகை சட்னிகளுடன், பிளாஸ்டிக் தட்டில் வாழை இலை மேல் ராமனின் கைக்கு வந்த இரண்டு ஊத்தாப்பங்கள் நல்ல மொறுகளாக, சுவையுடன் இருந்தன. தரமும் சுவையும் சேர்ந்து கிடைக்கும் இந்த பொடி ஊத்தாப்பம் ஒன்றின் விலை ரூபாய் இருபது தான். சிலர் இந்த ஊத்தாப்பத்தின் மேல் உளுந்த வடையை உடைத்து தூவியும் உண்கின்றனர். 

ஊத்தாப்பத்தின் பின்புறம்
சரவண பவன் மினி இட்லி அளவில் இருக்கும் இட்லிக்களில், பத்து நெய்யில் குளிப்பாட்டப்பட்டு அவற்றின் மீது மழை சாரல்கள் போல் பொடி தூவப்பட்டு, சூடாக அதே போல் வாழை இலையில் பரிமாறப் படுகின்றன.  இந்த இட்லியுடனும் சிலர் உளுந்த வடையை தூள் செய்து கலந்து உண்கின்றனர். இந்த பொடி இட்லியின் விலை ஐம்பது ரூபாய்.

உளுந்த வடையுடன் நெய் போடி இட்லி

என்றுமே கையேந்தி பவனில் தான் அசல் சுவை உண்டு என்ற ராமனின் கூற்றை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தது சீனா பாய் டிபன் சென்டர். ப்ராட்வே பேருந்து நிலையித்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், பூக்கடை காவல் நிலையத்தை கடந்து, N.S.C. போஸ் சாலையில் கிடைக்கும்   இந்த சுவை மிகுந்த ஊத்தாப்பங்களை அனைவரும் ராமனைப் போல் சுவைத்து மகிழுங்கள்.                                   

10 comments:

  1. ஸ்ஸ்ஸ்ஸ்ச் பாடா......நிச்சயமாக கையேந்தி பவன் உணவுகள் பெரிய ஹோட்டல் உணவுகளை விடச் சுவையாகத்தான் இருக்கும். ம்ம் நிச்சய்மாகச் சாப்பிட வேண்டும்....சான்ஸ் கிடைக்கப் போகுதே....அடுத்த மாதம்.

    ReplyDelete
  2. அடுத்த வாரம் செல்வோமா ரூபக்....?

    ReplyDelete
  3. பொதுவா இந்த உணவக பதிவுகளை தவிர்ப்பதுண்டு .கையேந்தி பவன் என்ற ஒரே காரணத்திற்க்காக படித்தேன். அந்த ஊத்தப்ப வர்ணிப்பில் நிஜமாகவே எச்சில் ஊறுது. கையேந்தி பவன் ,சின்ன சின்ன பட்ஜெட் ஹோட்டல்களை இப்படி அறிமுகப்படுத்தலாம்.

    ReplyDelete
  4. அருமையான படங்களுடன் பதிவு. சாப்பிடத்தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Seena bhai tiffin centre i am a Adit person

    ReplyDelete
  6. I like seena bhai tiffin centre uthappam and gee idly

    ReplyDelete