Wednesday, December 17, 2014

The Virgin Husband (சிறுகதை 21+ )

ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால்  ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது. இந்த நொடி என் வாழ்க்கை மாறுவதற்கான வினைகள் நியூட்டனின் விதிப்படி மூன்று மாதங்களுக்கு முன்பு, நான் என் நண்பன் ஒருவனை சந்தித்த பொழுதே தொடங்கிவிட்டது. 

அது ஒரு ஞாயிற்று கிழமையின் மதிய வேளை, சென்னையின் சமீபத்திய அடையாளங்களான மால்களில் ஒன்றான பினிக்ஸ் மாலில் என் நண்பன் மதனை சந்திக்க காத்திருந்தேன். மதன் கல்லூரியில் எனக்கு அறிமுகமாகி, குறைந்த காலத்தில் மிகவும் நெருங்கியவன். கல்லூரி முடிந்த பின் அவன் பெங்களூரு சென்றுவிட, கிட்ட தட்ட ஆறு வருடங்களுக்கு பின் அவனை சந்திக்கப் போகும் மனவெழுச்சியுடன் காத்திருந்தேன்.     

வாழ்வில் மிக சில மனிதர்களை  எத்தனை காலம் கடந்து சந்தித்தாலும், எந்தவித இடைவெளியுமின்றி விட்ட இடத்தில் இருந்து உறவை மீண்டும் அதே பொலிவுடன் தொடரமுடியும். மதனும் எனக்கு அப்படிப் பட்ட ஒரு சூழலை ஏற்படுத்த எங்கள் உரையாடல் பொழுதுபோக்கு, தொழில், அரசியல், சமூகம் என்று தொடங்கி ​ பல அந்தரங்களையும் வெளிக்கொணர்ந்தது.
  
'என்னடா சொல்ற!! கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் உன் பொண்டாட்டி உன்ன நெருங்க விடலையா?' என்று அதிர்ந்து போனான் மதன்.

'அவளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து, எங்க எப்ப போகவும் முழு சுகந்திரம் கொடுத்து, மொத்த அன்பையும் செலுத்தியும்,  நான் அவள நெருங்கினா, 'நீங்க தாலி  கட்டனதுனால உங்க கூட படுக்கணுமா விபச்சாரியா?' அப்படின்னு ஒரு கேள்வி கேட்பா பாரு, அந்த நிமிஷம் ஊசி வச்சி கூத்தன பலூன் மாதிரி என் நெஞ்சு போசுங்கிடும்' என்று சொல்லும் போதே என் கண்ணில் இருந்து வர யோசித்த நீரை விரலால் துடைத்துக்கொண்டேன்.   

'ஒரு முறை நீயே அவல போர்ஸ் ' என்று மதன் முடிபதற்குள் 'பாலியல் வல்லுறவுல  எனக்கு உடன்பாடு இல்ல. அது ஒரு மென்மையான உணர்வு, ரெண்டு பேருக்கும் அது ஒரு சுகானுபவமா இருக்கணும்னு விரும்பறேன்' என்று கூறி அவனை மேலும் பேச விடாமல் தடுத்தேன்.     

அடுத்த ஐந்து நிமிடம் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. மதனும் ஆழ்ந்த சிந்தனைக்குள் இருப்பவன் போல் தென்பட, எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன்.

'என்னதான் இப்படி நல்லவன் போல பேசினாலும். எனக்குள் இருக்கற காம மிருகத்த இப்பயெல்லாம்  கட்டுப்படுத்த முடியல. எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும் எனக்குள்ள ஒரு இச்சை உணர்வு ஊருது. ஒரு முறை ஆசை தீர உடலுறவு கொண்டா தான் இந்த நரக வேதனையில் இருந்து என்னால வெளியவரமுடியும்னு தோணுது. காசுகொடுத்து போகலாம்னா எதாவது நோய் வந்துடுமோன்னு பயமா இருக்குடா' என்று என் மனதில் உள்ளதை உள்ளபடி அவனிடம் உடைத்தேன்.

மதனோ சற்றும் தயங்காமல் 'நீ நினைக்கற மாதிரி ஒரு முறைன்னு தான் நான் காமத்தின் உள்ள போனேன், ரெண்டு வருஷங்கள் முடிந்தும் வெளிய வர முடியல. வாரத்துல நாலு நாலாவது காமம் கழிக்கலனா தூக்கம் வராது. அது ஒரு வகையான இன்பம் தரும் இம்சை. அடக்க முடியா அவஸ்தை. என்னால உனக்கு ஒரு வழி செய்ய முடியும். ஆனா இந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி, காமம் உன்னை ஒரு மோக அடிமையா மாத்திடும்ங்கரத மனசுல நிறுத்திக்கோ' என்று என் பதில் வர காத்திருந்தான்.

அந்த நொடி எனது காம அவஸ்தையை அழிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் மனதில் இருந்தது, எதுவானாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று, 'என்ன வழி அது சொல்லு' என்றேன். அதற்கு பின் என்னை அவன் சீருந்தில் அழைத்துக்கொண்டு, ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத முட்டு சந்திற்கு அழைத்துச்சென்று, அந்த தகவல்களை கூறினான். முதலில் ஆச்சரியமாகவும் நம்ப முடியாதபடி இருந்தாலும் அவனது சொந்த அனுபவங்கள் என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை. எல்லா விதிமுறைகளை சொல்லி அவன் 'சம்மதமா?' என்று கேட்க, நானும் சம்மதித்து விட்டு, முன்பணமும் செலுத்திவிட்டேன்.

அன்று இரவு வழக்கம் போல் என் மனைவி அவள் தாய் இல்லத்திலேயே தங்கி விட்டாள். ஒரு மாதத்தில் சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் அவள் என்னுடன் தங்கினாலே அதிசயம். தனிமையில், மதன் சொல்லிய தகவல்களை என் மனம் அசைபோடத் தொடங்கியது. அந்த அமைப்பின் பெயர் 'ஆனந்த பரவசம்'. அவர்களுக்கு முகம் முகவரி இரண்டுமே கிடையாது. திருமணமாகி கணவனால் இன்பம் கிடைக்காத பெண்களையும், மனைவியால் இன்பம் கிடைக்காத ஆண்களையும் காம இச்சைக்காக இணைப்பது தான் அந்த அமைப்பின் செயல்பாடு. மிகவும் அந்தரங்கமாக, நம்பகமான சில பணம் கொழுத்த உறுபினர்களை மட்டுமே வைத்து அவர்கள் செயல்படுகின்றனர். அனைத்து உறுப்பினர்களின் அடையாளமும் ரகிசயமாக பாதுகாக்கப்படுவது தான் அந்த அமைப்பின் வெற்றி. அதில் உறுப்பினராக, ஏற்கனவே இருக்கும் ஒரு உறுப்பினரின் சிபாரிசுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் தேவை.

மேலும் புதிதாய் சேருபவரின் பூர்வீகம் வரை அனைத்தையும் ஆராய்ந்தே அவரை சேர்த்துக்கொள்கின்றனர். உறுபினர்களாக ஏற்றுக்கொண்டவுடன், போலி ஆவணங்களுடன் வாங்கிய சிம் கார்டுடன் ஒரு ப்ளாக்பெர்ரி கைபேசி கொடுக்கப்படும். எல்லா உறுபினர்களுக்கும் மாதாந்திர மருத்துவ சோதனையும் நடத்தப்படும், ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அந்த நபரை அமைப்பில் இருந்து நீக்கி விடுவர். ஒவ்வொரு வேளைக்கும் இரு பாலாரிடமும் இருந்து தலா ஐயாயிரம் ரூபாய் வாசூலிக்கப் படும். பெரிய ஸ்டார்  விடுதிகளில் ரூம் புக் செய்யப்பட்டு, அதற்கான தகவல்கள் இரண்டு மணி நேரம் முன்பு குறுந்தகவலாக வரும். பணம் காசோலையாக எந்த இடத்தில செலுத்த வேண்டும் என்ற தகவலும் குறுந்தகவலில் தான். இந்த அமைப்பின் பின் யார் செயல்படுகிறார்கள் என்றும், சக உறுப்பினர் யார் என்ற அடையாளமும் எந்த ஒரு உறுப்பினருக்கும் தெரியாதபடி ரகசியமாக இன்றுவரை உள்ளது. காசு கொடுத்து, மிருகங்கள் போல் காமம் கழித்து வாழ்வதே இவர்களின் அந்தரங்க வாழ்க்கை.

பணம் செலுத்தி, மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, ஒரு மாதத்திற்கு பின் எனக்கு முதல் குறுந்தகவல் வந்தது. சென்னையின் பிரபல ஸ்டார் விடுதியில் அன்று இரவு எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்பொழுதும் போல் அன்றும் என் மனைவி அவள் தாய் வீட்டில் இருக்க, எனக்கு செல்வது எளிமையாகிப் போனது. இருந்தும் மனைவிக்கு துரோகம் செய்யும் குற்ற உணர்ச்சி என்னை அரிக்க வந்த பொழுது, என்னுள் இருக்கும் காம மிருகம் அதைக் கொன்றுவிட்டது. ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால்  ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது.

'இதையும் ஒருமுறை' என்று அறையினுள் நுழைந்தவுடன், எனக்கு முன்னமே அந்தப் பெண் வந்து காத்திருந்ததை உணர்ந்தேன். படுக்கைக்கு அருகில் இருந்த மேசை விளக்கின் மங்கிய ஒளியில் அந்தப் பெண்ணின் உருவம் மட்டும் தெரிந்தது. மதன் சொன்ன, 'அறிமுகம் எதுவும் வேண்டாம். பேசாமல் இருப்பது நலம்' என்ற எச்சரிக்கைகளை எண்ணிக்கொண்டே படுக்கைக்கு அருகில் நகர்ந்தேன். அவளை நெருங்கியவுடன் என்னை கட்டி படுக்கையில் இழுத்தாள், விளக்கின் ஒளி அவள் மேல் பட்ட நிமிடம் எனது உச்சச்ந்தலையில் ஆணி வைத்து அடித்தது போல் இருந்தது.

இரண்டு ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தாமல் எனக்கு மனைவியாக வாழும் அந்த சனியனின் முகம். என்னை சற்றும் எதிர் பாராத அவள் அதிர்ச்சியில் அசைவின்றி உறைந்துபோனாள். ஒரு ஆணுக்கே உரிய எனது கர்வம் அந்த நிலையில் ஏமாற்றப்பட்டதன் வலி, ஆத்திரமாக உருமாறி, வெறியாக தலைக்கு ஏறி, அருகில் இருந்த விளக்கை எடுத்து  அவள் முகத்தை நோக்கி அடித்தேன். அந்த விளக்கு அவள் கழுத்தை கிழித்ததில், ரத்தம் வேகமாக வடிய, அவள் உயிரற்ற சடலமானாள். ரத்தம் முழுவதும் வடியும் வரை அந்த அறையிலேயே காத்திருந்தேன். ஏமாற்றியது அவள் தவறா இல்லை ஏமார்ந்து போனது என் தவறா?                                                  

கொட்டும் அடை மழையில், சாலையின் விதிகளை புறக்கணித்து, சீருந்தின் வேகத்தை கூட்டி, ஆத்திரம் என் அறிவை மறைக்க, என்னுள் இருக்கும் மிருகம் அந்த உயிரை, என் வாழ்க்கையை நாசம் செய்த அந்த சனியனை, வதைத்தும் அடங்காமல் என்னை செலுத்திக்கொண்டிருக்க, பயங்கர சத்தத்துடன் கண்ணைக் கூசும் சோடியம் வெளிச்சம் என் எதிரில்......

9 comments:

  1. நல்ல கதை ! ஆனால் நடுவிலேயே படிப்பவர்களுக்கு கிளைமேக்ஸ் தெரிந்துவிடுவதுபோன்றதொரு உணர்வு ஜீ ! அதில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும் !!!

    ReplyDelete
  2. கதையின் முடிவை முன்பே யூகிக்க முடிந்தாலும் அப்படி இருந்துவிடக் கூடாதே என்று படிப்பவரை நினைக்க/பதறச் செய்வதுதான் கதையின், எழுதியவனின் வெற்றி. அதற்காக ஒரு சபாஷ் ரூபக்.

    ReplyDelete
  3. கணேஷ் சொல்வது போல் முடிவை ஊகிக்க முடிந்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை.நலந்தானே ரூபக்?

    ReplyDelete
  4. கதை நன்று...

    அவன் மனைவி வழிமாறி போக, காரணத்தை கொஞ்சம் சொல்லியிருந்தால் தேவலை... அல்லது அது readers choice என்று விட்டுவிட்டீர்களா??

    ReplyDelete
  5. கதையை ஊகிக்க முடிந்தது. சரி..அந்தப் பெண் எதனால் இப்படிச் சென்றால் என்பதற்கு வலுவான காரணம் எதுவும் இல்லையே..ஆனா கதையைக் கொண்டு சென்ற விதம் மிகவும் அருமை ரூபக்!

    ReplyDelete