Sunday, January 19, 2014

ஆனந்தக் குளியல் @ Monkey Falls

ஆனை மலையின் அடிவாரத்தில் இருக்கும் அருவியான மங்கி பால்ஸ் சென்ற பொழுது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அனுபவம் மலர்ந்தது. உங்கள் கற்பனைக் குதிரைகளை எட்டு திசைகளிலும் ஓடவிடாமல், நடந்ததை அறிய மேலும் வாசியுங்கள்.    


பொள்ளாச்சி-வால்பாறை சாலையில், ஆனை மலையில் இருக்கும் இந்த அருவி குரங்கின் முகத் தோற்றத்துடன் அமைந்திருப்பதால் தோன்றிய காரணப் பெயர் மங்கி பால்ஸ். குற்றாலம் போல் பெரிய அருவி ஒன்றும் கிடையாது, சற்று சிறிய அருவி தான். கார்த்திகை மாதத்தில் மழைச் சாரலில் என் நண்பன் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.       

நண்பர்களுடன் தோழிகளும் உடன் வந்தமையால் எப்படியும் குளிக்க முடியாது என்று எண்ணிக்கொண்டு மாற்று உடை எதுவுமின்றிதான் சென்றிருந்தோம். என்னுடன் வந்த நண்பர்கள் அங்கு சென்று அருவியைக் கண்டவுடன், நீர் விழுவதைக் கண்டு காதல் கொண்டு, மாற்று உடையைப் பற்றியும் கவலைப் படாமல், ஜீனுடன் அருவியில் குளித்தனர்.       

அவர்கள் குளிபப்தைக் கண்டபொழுது என்னுள்ளும் குளிக்க வேண்டும் என்ற ஆசை பொங்கியது. இருப்பினும் மாற்று துணி இல்லாதது, மாரி இடைவெளி விட்டு மழை பொழிந்தது என்னுள் குளிக்கத் தடை போட்டது. ஜீனுடன் குளித்தால் அதன் ஈரம் காயச் சிறிதளவு கதிரவன் கூட இல்லை, அடுத்து செல்லும் இடங்களில் குளிர் காற்று அடித்தால் அந்த நொடி படும் அவஸ்தையை எண்ணி, என் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு ஒதுங்கி நின்றேன்.      

கூட்டத்துடன் வெளியில் சென்று இதுபோல கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்பவர்களுக்கு என்றே ஒரு பதவி எங்கும் கிடைப்பதுண்டு. சுமைதாங்கி. நண்பர்களின் உடமைகளை பாதுகாக்கும் சுமைதாங்கியாக அவர்களது உள்ளாசக் குளியலை வெறுப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின் எனக்கு கூடுதல் பதவி கிடைத்தது. நிழற்பட பதிவாளராக வேண்டிய கட்டயாம். இந்த முகநூல் பரவி உச்சத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் கொடுக்கும் பல போஸ்களை முகத்தில் புன்னகையுடன் மனதில் சோகத்துடன் கமெராவில் பதிவு செய்தேன்.       

அனைவரும் குளியலை முடித்து விட்டு புறப்படத் தயாராகும் பொழுது, மழை பொழியத் தொடங்கியது. மணி ஒன்றை கடந்துவிட அங்கு அருகில் இருக்கும் பூங்காவில் வீட்டில் இருந்து கொண்டுவந்த கட்டுச்சோறை உண்டபின் அடுத்த இடம் செல்லலாம் என்று முடிவாகி, அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மழை நிற்க காத்திருந்தோம். திடீரென என் மூளையினுள் யோசனை மணி அடித்தது.


உடன் வந்த என் நண்பனை அழைத்துக்கொண்டு, மீண்டும் அருவியை நோக்கிச் சென்றேன். அருகில் இருந்த ஒரு பாறை மறைவில் என் ஆடைகளை அவிழ்த்து அவனிடம் கொடுத்துவிட்டு, இடுப்பில் துண்டுடன் மழைச் சாரலில் நனைந்தபடி அருவியை நோக்கி  நடந்தேன். அங்குக் குளித்துக்கொண்டிருந்த ஒரு சிலரும் மழையின் வேகம் அதிகரிக்க, தங்கள் குளியலை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பத் தொடங்கியிருந்தார்கள்.



இப்பொழுது அந்த இடத்தில இருந்தது நான், மற்றும் நான் தான். ஒருவரும் இல்லாத தனிமையில் அருவியின் அடிவாரத்தில் நான் மட்டும் இருந்தேன். தனிமை என்றாலே ஆனந்தக் குளியல் தான். எனக்கு மட்டும் சொந்தமான அருவி போல் அடுத்த அரை மணி நேரமும், மலை நீருடன் மழை நீர் கலந்து வந்த அந்த அற்புத நீரில் ஆனந்தக் குளியல் தான். அந்த முப்பது நிமிடமும் சொர்கலோகத்தில் இருப்பது போன்ற ஒரு கனவாகவே இந்தக் கணமும் எனக்கு தோன்றிகிறது. ஆனந்தம்! பேரானந்தம்!               

8 comments:

  1. மழையினால் விளைந்த நன்மையா? :)))

    ReplyDelete
  2. ஆணை மலை இல்லப்பா... ஆனைமலை! நல்லவேளை... முப்பது நிமிட உற்சாகத்துல துண்டு நழுவிடாம இருந்துச்சே...! ஹிஹ்ஹிஹ்ஹி...!

    ReplyDelete
    Replies
    1. அது பற்றிய தகவல் இங்கே மறைக்கப் பட்டுவிட்டது..

      Delete
  3. ஆகா... எப்படியோ ஆசை நிறைவேறி விட்டது... மழைக்கு நன்றி...

    ReplyDelete
  4. மங்கி ஃபால்சில்
    ஒரு மங்கியே
    குளிச்சுதே!
    அடடே!!

    ReplyDelete
    Replies
    1. :) :) இன்னைக்கு கலாய்க்கும் பொறுப்பை அக்கா எடுத்துக் கொள்வதால் நாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க முடிவு செய்துள்ளோம்.. :)

      Delete
  5. நான் ஒரு முறை போயிருந்தப்போ அந்த இளநில தண்ணி வரலைங்க .

    ReplyDelete
  6. இரண்டு முறை சென்றிருக்கிறேன் - ஒரு முறை மட்டும் தான் குளிக்க முடிந்தது.... அருவியில் குளிப்பதில் இருக்கும் ஆனந்தம் அலாதியானது தான்......

    ReplyDelete