Saturday, November 14, 2015

அவன் (சிறுகதை)

எல்லாக் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன்.  

நான் எப்பொழுது வட சென்னை  சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல்  தென் சென்னையில்   இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.

பல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் விற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை.   ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது.  

பர்மா பஜாருக்கு அருகில்  அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்கநாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.

              
இன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல்  பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன. 

பரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள் என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது. 

அந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன். 

'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,

 நான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா?' என்று தொடுத்தான். 

நான் 'ஆம்' என்றேன். 

'எந்த தெரு' என்று  கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது.     

அவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது.     

அவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ?' என்று வினவினான். 

இன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன். 

'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.

வேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்?' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்? என்ற அபாய எண்ணமும் தோன்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது.         


வீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டிருக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள்  கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

மறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே', 

நான் 'ஹும்ம்',  

அவன் 'வீடு எதாவது இருக்கா?'      

நான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.

தினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான். 

'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.

'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.

'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா?  என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.

இம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?            

9 comments:

  1. வித்தியாசமான அனுபவம். கேள்விப்பட்ட விஷயத்தை அதன் கோர முகத்துடன் நேரில் பார்க்கையில் சற்று விதிர்த்துப் போவதுதான் நிஜம். இயல்பான நடையில் சொல்லியிருக்கிறாய். நன்று.

    ReplyDelete
  2. நிதர்சமான உண்மை..

    ReplyDelete
  3. சமூகம் எங்கோ தெறிகெட்டு போய்க்கொண்டிருக்கிறது! இயல்பான நடையில் சொன்ன விதம் சிறப்பு!

    ReplyDelete
  4. இப்படி எல்லாம் வேற நடக்குதா?
    தம ​ +1

    ReplyDelete
    Replies
    1. நிறையவே நடக்குது நாம் அறியாமல்

      Delete
  5. பல இடங்களில் இப்பிரச்சனைகள் உண்டு..... சில போராட்டங்களும்....

    ReplyDelete