Friday, February 28, 2014

தேன் மிட்டாய் - பிப்ரவரி 2014

தேன் மிட்டாய்

எனது வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு சுவாரசியமான அனுபவங்களை 'தேன் மிட்டாய்' என்ற தலைப்பில் தொகுத்து எழுதிவருகின்றேன். தேன் மிட்டாய் என்னை குழந்தை பருவத்தில் மிகவும் கவர்ந்த இனிப்பு. நாகரீக மாற்றத்தில் அது காணாமல் போக, அதை நினைவு கூறும் வகையில் தான் இந்த தலைப்பை தேர்வு செய்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. 

அலுவலகத்தில் 'பாலா கேட்டரிங்' என்று ஒரு புதிய உணவகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தின் உள்ளிருக்கும் மற்ற உணவகங்களை விடவும் விலை சற்று மலிவு. ஒரு நாள் இங்கு உணவு வாங்கும் பொழுது ஒரு பச்சை வண்ண பிளாஸ்டிக் கவர் என்னைக் கவர்ந்தது. அருகில் சென்று பார்த்த பொழுது என் கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை. அதில் 'கோவில்பட்டி ஸ்நாக்ஸ்' என்று பதிந்து அதன் கீழ் 'தேன் மிட்டாய்' என்று எழுதியிருந்தது. விடுவேனா?. 15 ரூபாய் கொடுத்து அதை வாங்கிக்கொண்டேன். அதனுள் வெறும் 15 மிட்டாய்கள் மட்டுமே இருந்தாலும், சுவையில் குறைவில்லை.

Fog ரைடர்               

பிப்ரவரி முதல் வாரங்களில் சென்னையில் பின்பனி காலத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த சமயத்தில் ஒரு நாள் அதிகாலை அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். காலை நான்கு மணிக்கு என் ஸ்ப்ளென்டரை கிளப்பிக் கொண்டு அலுவலகம் நோக்கி நகரத் தொடங்கினேன். முழுக்கை சட்டை அணிந்திருந்தாலும், குளிர் என்னுள் ஊடுருவி தன் ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கியது. மெதுவாக சென்றால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்ற எண்ணம் தோன்ற, என் வாகனத்தின் ஓட்டத்தை கூட்டினேன். OMRஐ அடைந்த பொழுது என் வயோதிக ஸ்ப்ளெண்டர் தன் நாடி நரம்புகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு 80 கிலோமீட்டர் வேகத்தை தொடும் சமயம், என் சுவாசக்காற்று வெள்ளைப் புகையாக மாறி எனது ஹெல்மெட் கண்ணாடியில் படிந்தது. 

இலவசப் பயணம்

என் அலவலகத்தில் இருந்து சிப்காட் பேருந்து நிலையம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். இந்த தூரத்திற்கு ஷேர் ஆட்டோ கட்டணம் பதினைந்து ரூபாய் என்பதால், மாநகரப் பேருந்தில் செல்லும்போது யாரிடமாவது லிப்ட் கேட்டுகொண்டு செல்வது என் வழக்கம். காலை ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் பொழுது, அலுவலக வாசலில் யாரிடமாவது லிப்ட் கேட்டுகொண்டு வரும் பொழுது, 'சோழிங்கநல்லூர் வரை போறிங்களா?' என்று கேட்பேன். பெரும்பாலானோர் இல்லை என்று சொல்ல சிப்காட் நுழைவாயிலில் இறங்கிக்கொள்வேன். 

ஒரு நாள் மாலை அலுவலக வாசலில் நெடுநேரம் காத்திருந்தும் வாகனங்கள் எதுவும் வரவில்லை. சற்று நேரம் கடந்து ஒரு ஹோண்டா ஆக்டிவா ஒட்டிக்கொண்டு வந்த ஆடவர் என்னை ஏற்றிக்கொண்டார். ஸ்கூட்டி ஆக்டிவா போன்ற வண்டிகளில் எனது கால்களை மடக்கி ஒட்கார முடியாத காரணத்தாலும், அவை வேகம் குறைவாக செல்லும் காரணத்தாலும் அந்த வாகனங்களில் நான் செல்வதை தவிர்த்து விடுவேன். அன்று வேறு வழியின்றி ஏறிக்கொண்டாலும், எனது வழக்கமான கேள்வியை கேட்காமலே சிப்காட் வாயிலில் இறங்கிவிடலாம் என்று முடிவுசெய்துகொண்டேன். அப்போது லிப்ட் கொடுத்த அண்ணாச்சி 'சோழிங்கநல்லூர் வரை போறேன் வரிங்களா?' என்று கேட்டு என்னை ஆச்சரியப்படுத்தினார்.

வேகம் இருக்கு மனிதனிடம் மனம் இருப்பதில்லை!
மனம் இருக்கும் மனிதனிடம் வேகம் இருப்பதில்லை!

ஒரு பிரபலத்தின் மர்மம்  

என்னுடன் அலுவலத்தில் பணிபுரியும் சக தோழன் ஒருவன், தன் கல்லூரி காலத்தில் இரு சக்கர வாகனத்தில் தன் நண்பனுடன் செல்லும்பொழுது நேர்ந்த விபத்தால், இரு சக்கர வண்டிகளில் பிறருடன் செல்லமாட்டான். ஆனால் என் மேல் அவனுக்கு எதோ நம்பிக்கை தோன்ற என்னுடன் வருவான். நாம் தான் பிறருக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் ஆச்சே. எங்களுடன் பணியாற்றும் ஒரு பிரபலர் மெதுவாகவும் கவனமாகவும் வண்டி ஓட்டுவார், 'நான் இல்லாத சமயங்களில் நீ அவருடன் பயமின்றி போகலாம்' என்று அவனிடம் சொல்லி வைத்திருந்தேன். சில வாரங்கள் கடந்து, என்னிடம் வந்து அவன் 'நீ சொன்னேன்னு அவரோட போனா. அவர் பயங்கர வேகமா போராறே' என்று என்னிடம் கடிந்தான். நான் அவருடன் சென்றபொழுது அவர் அப்படி வேகமாகவே சென்றதுகிடையாதே என்று நான் அவரிடம் கேட்டபொழுது, அந்த பிரபலம் சொல்லிய பதில் 'நீ என்னுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தான் வந்திருக்கிறாய்' என்று கூறி அவருக்கே உண்டான பாணியில் சிரித்தார். பூனை என்று நினைத்தால் அது புலியாக பாய்கிறதே!       

நெடுஞ்சாலை லாரிகள்

மார்ஜியானாவுடன் முதல் முறை நெடுஞ்சாலை சென்றபொழுது தான் சில போக்குவரத்து நெரிசல்களை ஓட்டுனராக சந்தித்த அனுபவம் நேர்ந்தது. பொதுவாக வேகம் குறைவாகவே செல்லும் லாரிகள் சில சாலையின் இடது புறமும் சில சாலையின் வலது புறமும் சென்று நெடுஞ்சாலையில் நெரிசலையையும் வாகன ஒட்டிகளுக்கு சிரமத்தையும் கொடுக்கின்றன. விதிமுறைப்படி கனரக மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் சாலையின் இடது புறம் சென்றால், மற்றவர்களுக்கு நெடுஞ்சாலை பிரயாணம் கூடுதல் சுகம் தரும் என்பதில் ஐயம் இல்லை என்பதை உணர முடிந்தது.   

தினம் ஒரு சீலை 

சேலைகளை மறந்து மேற்கத்திய ஆடைகளுக்கு பெண்கள் மாறிவிட்ட இந்த காலத்தில், எங்கள் IT அலுவலகத்தில் தினமும் சேலை அணியும் பெண் ஒருவர் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? முதலில் என்னாலும் நம்பமுடியவில்லை தான். வலது தோள்பட்டையில் முந்தானை வருவது போல் அவர் வட நாட்டு பாணியில் சேலை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். கையெடுத்து கும்புடறேன் அம்மணி.    

கைபேசியும் நானும் 

என்ன மாயமோ மந்திரமோ தெரியல? இந்தக் கைபேசிகள் என்னிடம் படும் பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. என் முதல் கைபேசி சோனி k550i முதல் நடுவில் பயன்படுத்திய நோக்கியா கைபேசிகள் வரை என்னிடம் இருந்து பலத்த சேதம் அடையாமல் தப்பியது எதுவும் இல்லை. பெசிக் போன்களுக்கு தான் இந்த நிலைமை என்று நினைத்த எனக்கு நான் சமீபத்தில் வாங்கிய S3 கைதவறி கீழே விழுந்து அதன் திரையில் விரிசல் ஏற்பட்ட பொழுது, துக்கப் படுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை. 

திரையில் விரிசல் விழுந்தும் செம்மையாக பணியாற்றும் S3 மொபைலை பார்க்க விரும்புவர்கள் என்னை அணுகலாம். பார்வை கட்டணம் ஐம்பது ரூபாய் மட்டுமே. (கிளாஸ் மாத்த காசு தேவப்படுது மை லார்ட்)        

கட்டாயத் தேர்வு

சில பல அலுவலக காரணங்களுக்காக ஒரு தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் தோன்றியது. பணம் செலுத்தி NIITஇல் பதிவு செய்துகொண்டேன். தேர்விற்கு என்று படித்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே, கொஞ்சம் தட்டுத்தடுமாறி உருண்டுப் புறண்டு படித்து தேர்வுக்கு தயாராகினேன். தேர்வில் தேறிவிட்டால் தேர்வுக்கு செலுத்திய கட்டணம் அலுவகத்தில் இருந்து கிடைத்து விடும். தேர்வு மையம் சென்றபொழுது அங்கு வழக்கத்துக்கு மாறாக கூட்டம் இருக்க காத்திருக்க வேண்டியிருந்தது. 'கணினியில் எழதப்படும் ஆன்லைன் தேர்வு என்பதால், ஆறு மணிக்கு மேல் உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள். தேர்வு இடையில் தடை பட்டால், மீண்டும் பணம் செலுத்தி தான் எழுத முடியும்' என்று அந்த அதிகாரி தெளிவாக சொல்லி பயமுறுத்தினார். ஆனால் அன்றுடன் எனக்கு தேர்வு முடிக்க வேண்டிய கடைசிநாள் என்பதால் 'துணிவே துணை' என்று தேர்வு எழுத தொடங்கினேன். மொத்த 64 கேள்விகளில்  முற்பத்து ஒன்றாவது கேள்விக்கு பதில் கொடுத்து விட்டு 'NEXT' கிளிக் செய்தால், திரை நகர மறுத்தது. 'அவர் சொன்னது போல் நடந்து விட்டதே, தேர்வு கட்டணம் அவ்வளவு தானா?' என்று என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. 

அந்த திக் திக் நொடிகளில் அடுத்து நடந்தது என்ன என்பது அடுத்த தேன் மிட்டாயில். ஹி ஹி ஹி.           

Monday, February 17, 2014

திறந்தவெளி திரையரங்கம் (Prarthana Drive-in Cinemas)

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியில் செல்வேனா மாட்டேனா என்ற குழப்பம் இறுதிவரை இருந்தமையால் எவ்வித முன் ஏற்பாடுகளும் செய்திருக்கவில்லை. மதியம் நான்கு மணி போல் வெளியே போகலாம் என்று முடிவான பின்பு எங்கு செல்வது என்ற குழப்பம் எழுந்தது. காதலர் தினத்தன்று என் ஆசை நாயகி மார்ஜியானா(Honda- city) உடன் வெளியில் செல்வதுதானே நியாயம். இருவருக்கும் உகந்த இடம் தேடி அலைகையில் என் மூளையில் மின்னல் போல ஒளித்த இடம் தான் பிரார்த்தனா, கிழக்கு கடற்கரைக் சாலையில் அமைந்திருக்கும், சென்னையின் ஒரே ஒரு டிரைவ்-இன்  திரையரங்கம்.

கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் செய்வதற்காக பெங்களுரு சென்றிருந்த பொழுது, அங்கு DRDOவில் இருக்கும் ஒரு திறந்தவெளி திரையரங்கில் சினிமா பார்க்கும் அனுபவம் கிட்டியது. கீழ் இருந்து மேல் வரை சாய்வாக சிமெண்ட் பெஞ்சுகள் அமைக்கப்பட்ட கூரை இல்லாத திரையரங்கம் அது. ஒரு உள் விளையாட்டு அரங்கின் பின் சுவரில், வெள்ளை நிறம் தீட்டப் பட்டு, அதையே திரையாக உபயோகித்தனர். படம் சற்று சுமார் என்றாலும் எனக்கு அந்த அனுபவம் புதுமையாக இருந்தது. திரையருகில் பூரண சந்திரன் தோன்றியதும், எங்களுடன் நட்சத்திரங்களும் அந்தப் படத்தை பார்த்த காட்சியும்  இன்றும் என் மனதில் உற்சாகமூட்டுகிறது.

எனது முதல் திறந்தவெளி திரையரங்க அனுபவம் கிடைத்த பின் எனக்கு சென்னையில் இருக்கும் பிரார்த்தனா திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அந்த ஆசை காதலர் தினத்தில் என் மர்ஜியானாவுடன் பூர்த்தியடைய வேண்டும் என்றிருந்திருக்கிறது. மார்ஜியானாவை அழைத்துக்கொண்டு திரையரங்கை அடைகையில் மணி 5 45. அங்கு வாசல் பூட்டப் பட்டு இருக்க, வாசற்காவலன் ஆறு மணிக்கு தான் உள்ளே அனுமதிப்பதாக கூறினான்.அவனிடம் டிக்கெட் மட்டும் வாங்கிக்கொள்கிறேன் என்று கேட்ட பொழுது, ஏராளமான டிக்கெட் உள்ளது என்றும், பொறுமையாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் சொல்லி நகைத்தான். அந்தச் சிரிப்பின் அர்த்தம் பதிவின் முடிவில் தெரியவரும்.

காத்திருந்த அந்த நேரத்தில், என் கைபேசியில் இணையத்தில் டிக்கெட் இருக்கின்றதா என்று பார்க்க செல்லும் பொழுது தான் தெரிந்தது அங்கு திரையாகும் படம் 'இது கதிர்வேலன் காதல்' என்று. எனக்கு உதை (உதயநிதி ஸ்டாலினின் திரையுலக பெயராம்)  மீது  எள்ளவும் ஈர்ப்பு இல்லை என்றாலும், என் மார்ஜியானவை நான் ஏமாற்ற விரும்பாததால்,மனதை திடப் படுத்திக்கொண்டு காத்திருந்தேன். 

இங்கு பிரார்த்தனா, ஆராதனா என்று இரண்டு திரைகள் உண்டு. ஆராதனா வழக்கமான நான்கு காட்சிகள் கொண்ட இன்டோர் திரையரங்கம். பிரார்த்தனா திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்கம், இதுபோல் தமிழகத்தில் வேறு திரையரங்கம் உள்ளதா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை பதியவும்)  இங்கு நாள் ஒன்றிற்கு 7 மற்றும் 1௦ மணி என இரண்டு காட்சிகள் தான். இதன் காரணமும் எளிது, இருட்டிய பின்தான் படத்தை திரையிட முடியும்.

சரியாக ஆறு மணிக்கு வாசல் திறக்கப்பட்டது, சீருந்துகளுக்கு என்று இருந்த வரிசையில், மார்ஜியானாவுடன் மூன்றாவது ஆளாக காத்திருந்தேன். சுங்கச் சாவடி போல் இருந்த டிக்கெட் கவுன்டரை கடந்து, மற்றொரு வாசல் வழியே சென்றால் தான் திரையரங்கை அடையலாம். காரில் நபர் ஒருவருக்கு டிக்கெட் கட்டணம் 12௦ ரூபாய், காருக்கு கட்டணம் 5௦ ரூபாய். பல மால்கள் மற்றும் சில திரையரங்குகளில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான கட்டணமே. எனக்கு 120 மற்றும் மர்ஜியானவுக்கு5௦ ரூபாய் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொண்டு இரண்டாவது வாசலை கடந்தோம். 
             
அடுத்து இருந்த சோதனைச்சாவடியில் எங்கள் டிக்கெட்களை பரிசோதித்த பின்னர் உள்ளே அனுமதித்தனர். வெள்ளை நிற வண்ணம் பூசிய ஒரு பெரிய திரையின் முன்னே விசாலமான மைதானம் போல் இருந்தது அந்த டிரைவ்-இன் திரையரங்கம். A, B, C என மூன்று வரிசிகளுக்கு வழிகாட்ட, மூன்று பலகைகள் இருந்தன. C வரிசைக்கு பின்னே காரில் வராதவர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு என்று சுமார் நூறு  இருக்கைகள் இருந்தன. அங்கு அமர்ந்து பார்பதற்கு கட்டணம் 6௦ ரூபாய். 

மூன்று வரிசைகளையும் பிரிக்க தனித்தனியே,வளைவான 'ராம்ப்'கள் இருந்தன. இந்த ராம்ப்களை ஒரு ராட்சத வேகத்தடைகள் என்றே சொல்லலாம். நாவலூர் சுங்கச் சாவடி முன் இருக்கும் வேகத்தடையை விட சற்று உயரம் அதிகமாக இருந்தது. வரிசைகளை பிரிக்க இந்த ராம்ப்கள், அடுத்த வரிசைக்கு போகவேண்டும் என்றால் பின்னே வந்து தான் செல்ல வேண்டும்.



7 மணி காட்சிக்கு 6 மணிக்கே வந்ததன் பயன், எந்த இடத்தை வேண்டுமானாலும் நாங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மார்ஜியானாவின் விருப்பம் போல், நடு வரிசையான B வரிசைக்குள் சென்று, அதன் நடுவில் திரைக்கு நேர் எதிரே நின்றோம். ராம்ப் மீது ஆங்காங்கே சிவப்பு வண்ணம் தொப்பியுடன் மூன்று அடி உயர கம்பங்கள் இருந்தன. இரண்டு கம்பங்களுக்கு இடையில் இரண்டு கார்கள் நிறுத்த வேண்டும். எங்கள் கம்பத்தின் அருகில், மார்ஜியானாவின் முன்னங்கால் (front wheel) ராம்ப் மேல் பொருந்த நின்றோம். அடுத்த அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார்கள் உள்ளே வரத் தொடங்கின.    
           

காதலர் தினம் என்பதால் அதிகம் ஜோடிகளே இருப்பார்கள் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றம் தான். குட்டி குழந்தைகள் மற்றும் வயோதிகர்களுடன் குடும்பங்களே பெரும்பாலும் காணப்பட்டன. முன் வரிசையில் இருந்த காரின் டிக்கி திறந்தது, அதன் உள்ளிருந்து இரு வெள்ளை நாற்காலிகள் வெளியே எடுக்கப்பட்டன. காரின் முன், 'ராம்ப்'பின் கீழே அதைப் போட்டுக்கொண்டு அமர்ந்தனர். இதையே ஆச்சரியமாக பார்த்த எனக்கு, என் பக்கத்து காரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட பாய் வியப்பை கூட்டியது.     

ராம்ப் முன் தரையில் அந்த பாயை விரித்து, அதன் மேல் ஜமக்காளம் விரித்து, தலையனைகளுடன் தரையில் படுத்துக்கொண்டே படம் பார்க்க தயாரானார்கள்.மார்ஜியானாவிடம் நாற்காலியும், ஜமக்காளமும் இல்லாததால், அவள் மடியிலையே (front seat) அமர்ந்துகொண்டு படத்தை ரசிக்கத் தயாரானேன். சரியாக 7 மணிக்கு கதிரவன் முழுவதும் மறைந்து இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில், 'இது கதிர்வேலனின் காதல்' துவங்கியது.

ஒளிக்கு வெள்ளை நிற சுவர். ஒலிக்கு என்ன என்று நீங்கள் கேட்கவே இல்லையே. முன்பு சொன்னேனே மூன்று அடி உயர கம்பங்கள், அவற்றின் உச்சியில் தான் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு காருக்கும் ஒரு ஸ்பீக்கர் என்று கச்சிதமாக ஒலியில் எந்தக் குறையும் இல்லை. நயன்தாராவை என்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்த சமயம், 'டோக் டோக்' என்ற சத்தம் என் கவனத்தை கவர்ந்தது.


அருகில் ஒருவர் நின்றுகொண்டு, 'பூட் ஆர்டர்' என்று, மெனுவை வேகமாக பட்டியலிட்டார். எனக்கு ரயில் பயணங்கள் தான் நினைவுக்கு வந்தது. சில்லி பரோட்டா மற்றும் கோபி மஞ்சுரியன் ஆர்டர் செய்தேன். சொல்லியதுபோல் சரியாக இடைவேளைக்கு முன் சூடான உணவு கொடுக்கப்பட்டது. இங்கு சாப்பாட்டு ராமன் அவதாரம் எடுக்கும் அளவிற்கு உணவு அருமை என்று சொல்லமுடியாவிட்டாலும், பசிக்கு சுமாராக இருந்தது. வீட்டில் இருந்து உணவு கொண்டுவருவது உசிதம். 

நயன்தாராவை தவிர்த்து படத்தில் என்னை எதுவும் பெரிதும் கவரவில்லை. பலருக்கும் அந்த எண்ணமே என்பது படம் முடியும் முன் வெளியேறிய கார்களின் மூலம் நன்கு தெரிந்தது.தனிமையில் மார்ஜியானாவின் அரவணைப்பில் திறந்தவெளி திரையில் படம் பார்த்த அனுபவம் தந்த ஆனந்தத்தை சொல்ல வார்த்தை இல்லை.அடுத்த முறை பாயுடன் வரவேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.