Monday, January 28, 2013

தொ(ல்)லைபேசி


                           காலை ஆறு மணிக்கு என்னைத்  தட்டி எழுப்பினார் சீழ்காழி, பக்கத்து தெரு கோயில் ஒலிபெருக்கி வாயிலாக. மார்கழி மாதம் வந்தால் கோயில்கள் இல்லாத தெருவுக்கு   குடியேறுவது உசிதம்.

கதையத் தொடர்வதுக்கு  முன்  நான் யாருன்னு சொல்லிடறேன்.

பெயர்       :  குமார்
சாதனை : பத்தாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு  வரை  ஐந்து ஆண்டுகள்
வேலை  : ஒரு பிரபல கைபேசி கடையில்  'சேல்ஸ்  மேன்'

கடையின் பெயர் கதையில் மிக முக்கியம் என்பதால் 'சக்தி மொபைல்ஸ ' என பெயர் சூட்டிவிடலாம் ( சில பொதுநல காரணங்களுக்காக கடையின் உண்மையான பெயரை பயன்படுத்தப் போவதில்லை ).

மணி 06:20
 காலை ஒன்பது மணிக்கு கடையில் இருக்க வேண்டும். நான் தங்கியுள்ள விடுதியில் மொத்தம் ஐம்பதுபேர் ,ஐந்து பொது கழிவறைகள். ஐந்து என் வாழ்வில் இன்றியமையாத எண். என் அறை இலக்கம்ஐந்து,என்னுடன் இருக்கும் ஓரறைத்தோழர்கள் ஐந்து ,  என் காதல் தோல்விகளும் ஐந்து .

 'Q' வரிசையில் நின்று காலைக்கடன்களை முடிக்கும் போது மணி 08 : 30.
 விளைவு : காலை உணவு இன்றும்  ரத்து .Bachelor வாழ்கை என்றால், என்றுமே காலை  உணவு என்பது கிடையாது. இன்றும் அப்படித்தான் .அவசர ஓட்டம் பிடித்து பைக்கில் பறக்க முயன்றால், திருவிழா போல் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து இருந்தன.

பல சந்துகளில் புகுந்து, கடைக்கு செல்லும் போது மணி 09:15. நுழைவு வாயிலில் எனக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தார்  என் இனிய மேலாளர்  (பெண்பாலர் ). தன்  கரு விழிகளால் முதலில் என்னைச் சுட்டுவிட்டு, பின் நாவினால் என் மனதைச்  சுட்டாள். என் நாள்  இனிதே தொடங்கியது .

மணி 10:00
 கடை தொலைபேசி ஒலித்தது. மற்றவர்கள்  கடைக்கு வந்த நுகர்வோரை கவனித்திருந்தமையால், நான் பேச வேண்டிய கட்டாயம்.

"ஹலோ! சக்தி ஹோட்டெல்லா "

"இல்லைங்க, இது சக்தி  மொபைல்ஸ"

"அப்படியா. சாரி "

மணி 10:06
 மீண்டும் அதே தொலைபேசி, அதே கட்டாயம்,  அதே உரையாடல்.

மணி 10:10
 மீண்டும் அதே தொலைபேசி, அதே கட்டாயம்.

"ஹலோ. சக்தி ஹோட்டெல்லா "

"ஐயா, இது மொபைல் விக்கற கடை, தயவு செய்து நம்பர்அ  சரி பார்த்து டயல் பண்ணுங்க "

" இல்ல தம்பி இந்த telephone directoryல இந்த நம்பர் தான் இருக்கு "

" ஐயா அது எங்க தவறு இல்ல "
 இணைப்பை துண்டித்தேன் .

மணி 10:20
 தொ(ல்)லைபேசி மீண்டும் ஒலித்தது. உயிரை எடுக்கிறான், என்ன  கொடும சார்  இது !

"ஹலோ. சக்தி ஹோட்டெல்லா "

" வணக்கம் சொல்லுங்க "

" ஐம்பது பேருக்கு மத்திய சாப்பாடு, home delivery வேணும் "

" address சொல்லுங்க "

" 20, காந்தி தெரு, அண்ணா நகர் "

"ஒரு மணிக்கு கொடுத்துடுறோம் "

" நன்றி "

தொல்லை ஒழிந்தது. நான் என் வேலையை வழக்கம்போல் பார்க்க தொடங்கினேன்.

மணி 18:00 
என் வேலை நேரம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி உள்ளது. கடை வாசலில் காவல்துறை  வாகனம் வந்து நின்றது. இருவர் கடைக்குள் நுழைந்து மேலாளருடன்  பேசினர். காற்று பதனாக்கி  பொருந்திய அறையில் மேலாளர்  கண் மை வியர்வையால் கலையக் கண்டேன்.

பின்பு கடையில் வேலை பார்க்கும் அனைவரும் மேல் மாடிக்கு வர உத்தரவு வந்தது. நாங்கள் அனைவரும் நின்றுகொண்டு மேலாளர்  வாயையே பார்த்தோம் (lipstick கொஞ்சம் அதிகம்தான் ). ஒரு புயல் அடிப்பதற்கு முன் இருக்கும்  அமைதி.

மணி 18: 40 
போலீஸ் காரர் , " நான் இங்க ஒரு புகார  விசாரிக்க வந்திருக்கேன் . இங்க காலைல யாரோ சாப்பாடு ஆர்டர் எடுத்து இருக்காங்க. யாருன்னு நீங்களே சொல்லிட்டா  நல்லது , இல்லன எல்லாரையும் விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்க வேண்டி இருக்கும்"

எனக்குள் புயல் அடித்தது. சொல்லலாமா வேணாமா !
எனக்குள் ஒரு பொறி கிளம்பியது, "அது நான் தான் ".

" தம்பி , நீ என் கூட வா "

பின்தொடர்ந்து சென்றேன். எனக்குள் ஒரு தைரியம் 'கொலையா செய்த குமாரு, சம்மாளிச்சிடலாம் '. வண்டியில் ஏறினேன். யாரும் பேசவில்லை. ஐந்து நிமிட பயணத்துக்குப் பின் வண்டி தலப்பாக்கட்டு ஹோட்டல் முன் நின்றது. என்னை உள்ளே அழைத்துச் சென்றார் அந்த இன்ஸ்பெக்டர்.


மணி 19:15 
"தம்பி பிரியாணி சாப்புடு. என்ன நடந்துச்சு சொல்லு  "


இது புதிய முறை விசாரணை போலும். எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி, அவருக்கும் ஒரு சிக்கன் பிரியாணி கூடவே ஒரு சிக்கன்-65.

" wrong நம்பர் சார். எவளவோ சொன்னேன் கேக்கல . திரும்ப திரும்ப call பண்ணாங்க, அதுதான் order எடுத்துட்டேன் "

" என்னையா நீ. அது தெவஷம் வீடு  போல, அவங்க ஹோட்டல்கே நேர போய்ச்  சண்ட போட்டுருக்காங்க, ஹோட்டல் காரன் complaint கொடுத்துட்டான்."

" சாரி சார். தெரியாம விளையாடிட்டேன். இப்ப நான்  என்ன பண்ணனும்  "

" நாளைக்கு stationகு வந்து ஒரு 1000 ரூபாய்  கொடுத்துடு நான் பார்துக்குரேன் "

" சரி சார் "

" ஆனா சின்ன பையனா இருந்துட்டு முன்னாடி வந்த பாரு, உன் நேர்மை எனக்குப்  பிடிச்சிருக்கு. எந்த signalல மாட்டனாலும் எனக்கு போன் பண்ணு தம்பி "

மணி 20:20
சாப்பாடு பில் - 420 என் கையில் .
வாய்மையே வெல்லும் ( சட்டைப்  பையில்  காசு இருந்தால் ) என்று வீடு திரும்பினேன்.


பின் குறிப்பு :

கதை கரு : அந்த அதிகாரி சொல்லியதுபோல் ,  என் நண்பனுக்கு பின் ஒரு நாள், signalல  இலவசமாக உதவியபின் எழுதப்பட்ட கதை.

ஊக்கம் : விகடன் 'வட்டியும் முதலும்' ஆசிரியர் ராஜீ முருகன்  மேடை பேச்சைக்  கேட்ட பொது, அவர் கூறிய 'மக்களைப் படி' , என்னுள்  எழுத்து ஆர்வத்தைத்  தூண்டியது.